நாலாயிர திவ்வி பிரபந்தம்
பாடல்கள்
பெரியாழ்வார் திருமொழி






















நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளி செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷா
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
பாண்டிய பட்டர் அருளி செய்தவை
இருவிகற்ப நேரிசை வெண்பா
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம் கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
பாண்டியன்கொண்டாட பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
காப்பு
குறள்வெண்செந்துறை

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்கு பல்லாண்டுகூறுதமே

ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே

எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்கு பல்லாண்டுகூறுதுமே

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்கு பல்லாண்டுகூறுவனே

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்து கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தி திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டுகூறுதுமே

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றி திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போல திருமாலே நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே உன்னைப்பல்லாண்டுகூறுவனே

பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே

பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
முதல் திருமொழி வண்ண மாடங்கள்
கண்ணன் திருவவதார சிறப்பு
கலிவிருத்தம்

வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே

பேணிச்சீருடை பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே

கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்

கையும்காலும்நிமிர்த்து கடாரநீர்
பையவாட்டி பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடை பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே
இரண்டாம் திருமொழி சீதக்கடல்
கண்ணனது திருமேனியழகை பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்துகாணீரே

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்து தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்துகாணீரே

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர் வந்துகாணீரே

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்ச பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர் வந்துகாணீரே

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர் வந்துகாணீரே

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர் வந்துகாணீரே

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர் வந்துகாணீரே

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர் வந்துகாணீரே

அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்துகாணீரே

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்து சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர் வந்துகாணீரே

மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்து சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர் வந்துகாணீரே

வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனா
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர் வந்துகாணீரே

எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர் வந்துகாணீரே

விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரை தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர் வந்துகாணீரே

பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர் வந்துகாணீரே

மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்து திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர் வந்துகாணீரே

அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர் வந்துகாணீரே
தரவு கொச்சகக்கலிப்பா

சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தை தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந தொன்றுவர்தாமே
மூன்றாம் திருமொழி மாணிக்கம் கட்டி
கண்ணனை தொட்டிலிலிட்டு தாலாட்டுதல் தாலப்பருவம்
கலித்தாழிசை

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்கு பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ

உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய் அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே தாலேலோ

என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே தாலேலோ
தேவகிசிங்கமே தாலேலோ

எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே தாலேலோ

ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய் தாலேலோ
சுந்தரத்தோளனே தாலேலோ

கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலை கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே தாலேலோ

கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய் தாலேலோ
நாராயணா அழேல்தாலேலோ

மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே தாலேலோ
தரவு கொச்ச கலிப்பா

வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே
நான்காம் திருமொழி தன் முகத்து
சந்திரனை அழைத்தல் அம்புலிப்பருவம்
கலிநிலைத்துறை

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ

என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ கடிதோடிவா

சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ

தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதி கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ விரைந்தோடிவா

பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்

தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா

மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே
ஐந்தாம் திருமொழி உய்யவுலகு
தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல் செங்கீரைப்பருவம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதி
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழி
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே
ஆள எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

நம்முடைநாயகனே நான்மறையின்பொருளே
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே
அம்ம எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே
கானகவல்விளவின்காயுதிரக்கருதி
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

காயமலர்நிறவா கருமுகில்போலுருவா
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்
ஆய எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுக
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிர
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூழ்
சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே
என்னவலம்களைவாய் ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடை
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே ஆயர்கள்நாயகனே
என்அவலம்களைவாய் ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே
ஆறாம் திருமொழி மாணிக்கக்கிண்கிணி
கைகொட்டி விளையாடுதல் சப்பாணிப்பருவம்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே சப்பாணி

பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாட தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே கொட்டாய்சப்பாணி

பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன் இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே சப்பாணி

தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ சந்திரா வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே சப்பாணி

புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே கொட்டாய்சப்பாணி
பற்பநாபா கொட்டாய்சப்பாணி

தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்பட பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே சப்பானி

பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே சப்பாணி

குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே சப்பாணி

அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே சப்பாணி

அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே சப்பாணி
தரவு கொச்சகக்கலிப்பா

ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே
ஏழாம் திருமொழி தொடர்சங்கிலிகை
தளர் நடை நடத்தல் நடை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்ன தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ

செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ

மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போல கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ

கன்னற்குடம்திறந்தலொத்தூறி கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ

முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவா புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ

ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ

படர்பங்கயமலர்வாய்நெகிழ பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ

பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ

வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ

திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோர தளர்நடைநடவானோ

ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளர தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே
எட்டாம் திருமொழி பொன்னியல்
அணைத்துக்கொள்ள அழைத்தல் அச்சோப்பருவம்
கலித்தாழிசை

பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான் வாராஅச்சோவச்சோ

செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ

பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ

நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய் அச்சோவச்சோ
எம்பெருமான் வாராஅச்சோவச்சோ

கழல்மன்னர்சூழ கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடை துச்சோதனனை
அழலவிழித்தானே அச்சோவச்சோ
ஆழியங்கையனே அச்சோவச்சோ

போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய் செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனி கரும்பெருங்கண்ணனே
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே அச்சோவச்சோ

மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணை துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே அச்சோவச்சோ
சங்கமிடத்தானே அச்சோவச்சோ

என்னிதுமாயம் என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே அச்சோவச்சோ
வேங்கடவாணனே அச்சோவச்சோ

கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ அன்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே அச்சோவச்சோ
மார்வில்மறுவனே அச்சோவச்சோ

துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே அச்சோவச்சோ
அருமறைதந்தானே அச்சோவச்சோ
தரவு கொச்சகக்கலிப்பா

நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாட புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே
ஒன்பதாம் திருமொழி வட்டநடுவே
தன் முதுகை கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்
வெண்டளையால்வந்த கலித்தாழிசை

வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்ன துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்

கிங்கிணிகட்டி கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டு கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்

கத்தக்கதித்து கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்

நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்

வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடி பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான்

சத்திரமேந்தி தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காண காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான்

பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான்

மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடி குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்

கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்
தரவு கொச்சகக்கலிப்பா

ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே

இரண்டாம்பத்து
முதல்திருமொழி மெச்சூது
பூச்சிகாட்டி விளையாடுதல்
கலித்தாழிசை

மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளை திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

காயும்நீர்புக்கு கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாள
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

செப்பிளமென்முலை தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றி தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

தத்துக்கொண்டாள்கொலோ தானேபெற்றாள்கொலோ
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவல
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

பதகமுதலைவா பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா கண்ணா என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்
தரவு கொச்சகக்கலிப்பா

வல்லாளிலங்கைமலங்க சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே
இரண்டாம் திருமொழி அரவணையாய்
கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலிவிருத்தம்

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்து திளைத்துதைத்துப்பருகிடாயே

வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே

தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா நான்சுரந்தமுலையுணாயே

கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே

தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன்முலையுணாயே

மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா முலையுணாயே

பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரை பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா நீமுலையுணாயே

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய் உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே

அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்ப தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே

ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயை பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா நீமுலையுணாயே

வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே
மூன்றாம் திருமொழி போய்ப்பாடு
பன்னிருநாமம் காதுகுத்துதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா உன்னை
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே
கேசவநம்பீ உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன்

வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா

வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே இங்கேவாராய்

வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான் இங்கேவாராய்

சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே நீஇங்கேவாராய்

விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ
கண்ணா என்கார்முகிலே
கடல்வண்ணா காவலனே முலையுணாயே

முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்து
பசுநிரைமேய்த்தாய்
சிலையொன்றுஇறுத்தாய் திரிவிக்கிரமா
திருவாயர்பாடிப்பிரானே
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே

என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே

மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதி
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னை
காணவேகட்டிற்றிலையே
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே

காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா என்தன்கண்ணே

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கி
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே எங்களமுதே
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா இங்கேவாராய்

வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ முன்வஞ்சமகளை
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா இங்கேவாராய்

வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே
நாலாம் திருமொழி வெண்ணெயளைந்த
கண்ணனை நீராட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னை தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே நாரணா நீராடவாராய்

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய் நீபிறந்ததிருவோணம்
இன்று நீநீராடவேண்டும் எம்பிரான் ஓடாதேவாராய்

பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா மஞ்சனமாடநீவாராய்

கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே நீராடவாராய்

அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான் இங்கேவாராய்

எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்து கழகண்டுசெய்யும்பிரானே
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ மஞ்சனமாடநீவாராய்

கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாக பெற்றறியேன்எம்பிரானே
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்

கன்றினைவாலோலைகட்டி கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பை பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா ஓடாதேவாராய்

பூணித்தொழுவினில்புக்கு புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய் நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே மஞ்சனமாடநீவாராய்

கார்மலிமேனி நிறத்து கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே
ஐந்தாம் திருமொழி பின்னைமணாளனை
கண்ணன்குழல் வார காக்கையை வாவெனல்
கலித்தாழிசை

பின்னைமணாளனை பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய்

பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்

திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்

பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானை தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய்

கற்றினம்மேய்த்து கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய்

கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய்

பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய்

உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னை படைத்தவன்
கொந்தக்குழலை குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய்

மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினை பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய்
தரவு கொச்சகக்கலிப்பா

கண்டார்பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாட குறுகாவினைதாமே
ஆறாம் திருமொழி வேலிக்கோல்
காக்கையை கண்ணனுக்கு கோல்கொண்டுவர விளம்புதல்
கலித்தாழிசை

வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தை தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையை பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா

கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா

கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா

ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா

சீரொன்றுதூதா துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டி பெறாதஉரோடத்தால்
பாரொன்றி பாரதம்கைசெய்து பார்த்தற்கு
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா

ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா

பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா

மின்னிடை சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லா சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா

தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா
தரவு கொச்சகக்கலிப்பா

அக்காக்காய் நம்பிக்கு கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே
ஏழாம் திருமொழி ஆனிரை
கண்ணனை பூச்சூட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகி பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே செண்பகப்பூச்சூட்டவாராய்

கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய் உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்
திருவுடையாள்மணவாளா திருவரங்கத்தேகிடந்தாய்
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்

மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்து காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய் நீள்திருவேங்கடத்துஎந்தாய்
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்

தெருவின்கன்இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ உகந்திவைசூட்டநீவாராய்

புள்ளினைவாய்பிளந்திட்டாய் பொருகரியின்கொம்பொசித்தாய்
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்

எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்அம்பி
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே புன்னைப்பூச்சூட்டவாராய்

குடங்களெடுத்தேறவிட்டு கூத்தாடவல்லஎம்கோவே
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்
குடந்தைக்கிடந்தஎம்கோவே குருக்கத்திப்பூச்சூட்டவாராய்

சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்
சாமாறுஅவனைநீயெண்ணி சக்கரத்தால்தலைகொண்டாய்
ஆமாறறியும்பிரானே அணியரங்கத்தேகிடந்தாய்
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய் இருவாட்சிப்பூச்சூட்டவாராய்

அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய் தூமலராள்மணவாளா
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்
கண்டுநான்உன்னையு கருமுகைப்பூச்சூட்டவாராய்

செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே
எட்டாம் திருமொழி இந்திரனோடு
கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே காப்பிடவாராய்

கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய்

செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான் காப்பிடவாராய்

கண்ணில்மணல்கொடுதூவி காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறைநின்றாய் கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமேவேலையதொப்பாய் வள்ளலே காப்பிடவாராய்

பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான் நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய் ஞானச்சுடரே உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்தி சொப்படக்காப்பிடவாராய்

கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே காப்பிடவாராய்

கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே காப்பிடவாராய்

இன்பமதனைஉயர்த்தாய் இமையவர்க்குஎன்றும்அரியாய்
கும்பக்களிறட்டகோவே கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே
செம்பொன்மதிள்வெள்ளறையாய் செல்வத்தினால்வளர்பிள்ளாய்
கம்பக்கபாலிகாண்அங்கு கடிதோடிக்காப்பிடவாராய்

இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சா தேசுடைவெள்ளறைநின்றாய்
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்

போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே
ஒன்பதாம் திருமொழி வெண்ணெய்விழுங்கி
வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னை
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்

வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்து
காகுத்தநம்பீ வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்
அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே

திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ அசோதாய்
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே

கொண்டல்வண்ணா இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய் இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ள
கண்ணபிரான்கற்றகல்விதானே

பாலைக்கறந்துஅடுப்பேறவைத்து
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்

போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா
குன்றெடுத்தாய் குடமாடுகூத்தா
வேதப்பொருளே என்வேங்கடவா
வித்தகனே இங்கேபோதராயே

செந்நெலரிசிசிறுபருப்பு
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே

கேசவனே இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா இங்கேபோதராயே

கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கி
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே

சொல்லிலரசிப்படுதிநங்காய்
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவி
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே

வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே
பத்தாம் திருமொழி ஆற்றிலிருந்து
ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளை கூறி முறையிடுதல்
கலித்தாழிசை

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும்

குண்டலம்தாழ குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்

தடம்படுதாமரை பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்

தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்

ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்க பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்

தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்

மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்

தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்

வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்
தரவு கொச்சகக்கலிப்பா

அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லை புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே

மூன்றாம்பத்து
முதல்திருமொழி தன்னேராயிரம்
யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களை
கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே
அன்னே உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கி குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரை பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலை கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்கு சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னை சுற்றும்தொழநின்றசோதி
பொருட்டாயமிலேன்எம்பெருமான் உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
ஆயா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியை சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கரார்மேனிநிறத்தெம்பிரானை கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே
இரண்டாம் திருமொழி அஞ்சனவண்ணனை
யசோதப்பிராட்டி கண்ணனை கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்
கலிநிலைத்துறை

அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

பற்றுமஞ்சள்பூசி பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே

வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானை கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே

அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்து கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே

மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடி தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே

பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவ புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே

குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடை காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாட புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே
மூன்றாம் திருமொழி சீலைக்குதம்பை
கண்ணன் கன்றுகள்மேய்த்துவர கண்டு யசோதை மகிழ்தல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர் நானோமற்றாருமில்லை

கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா கேசவா பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்க சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா

காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூ
சூடிவரிகின்றதாமோதரா கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான்

கடியார்பொழிலணிவேங்கடவா கரும்போரேறே நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவி கொள்ளாதேபோனாய்மாலே
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான்

பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே
எஞ்சிற்றாயர்சிங்கமே சீதைமணாளா சிறுக்குட்டச்செங்கண்மாலே
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்து கலந்துடன்வந்தாய்போலும்

அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய்

பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே

கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்

திண்ணார்வெண்சங்குடையாய் திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டி பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செ கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு

புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே
நான்காம் திருமொழி தழைகளும்
காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே

வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்தி
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே

சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே

குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே

சுற்றிநின்றுஆயர்தழைகளிட
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணி
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே

சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்து
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ

சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிர
குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே

சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பி
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே

வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டு
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே

விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே
ஐந்தாம் திருமொழி அட்டுக்குவி
கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்க
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரை
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்கு
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கி
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வானத்திலுல்லீர் வலியீர்உள்ளீரேல்
அறையோ வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்து
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

சலமாமுகில்பல்கணப்போர்க்களத்து
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே
ஆறாம் திருமொழி நாவலம்
கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு

நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள் இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே

இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூட
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே

வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழ
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே

தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவி
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே

முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே

செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூத
கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே

புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே

சிறுவிரல்கள்தடவிப்பரிமாற
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டு
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே

திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே

கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே

குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சி
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்து
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகி
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே
ஏழாம் திருமொழி ஐயபுழுதி
திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே

வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலை சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே

பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே

ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர் இவள்மாலுறுகின்றாளே

பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர் இவள்மாலுறுகின்றாளே

காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே

கைத்தலத்துள்ளமாடழி கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம் நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே

பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே

ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே
எட்டாம் திருமொழி நல்லதோர் தாமரை
தலைமகனுடன் சென்ற தலைமகளை குறித்து தாய்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ

ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ

குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறி தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டி தோரணம்நாட்டிடுங்கொலோ

ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ

தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லி செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ

வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயா கொண்டுகுடிவாழுங்கொலோ
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ

அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லி பரிசறஆண்டிடுங்கொலோ
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ

குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ
நடையொன்றும்செய்திலன்நங்காய் நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கி கைதழும்பேறிடுங்கொலோ

வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ

மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லை தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே
ஒன்பதாம் திருமொழி என்னாதன்
க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்
கலித்தாழிசை

என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற

என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற

உருப்பிணிநங்கையை தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையை
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற

மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்ல கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற

பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற

முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்து பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற

காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற

தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடை
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற

மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற

காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற
தரவு கொச்சகக்கலிப்பா

நந்தன்மதலையை காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே
பத்தாம் திருமொழி நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியை கண்டு
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களை
கூறி கணையாழிகொடுத்து களிப்பித்தல்

கலிவிருத்தம்

நெறிந்தகருங்குழல்மடவாய் நின்னடியேன்விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தை சிதைத்ததும்ஓரடையாளம்

அல்லியம்பூமலர்க்கோதாய் அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்

கலக்கியமாமனத்தனளா கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
குலக்குமரா காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம்

வாரணிந்தமுலைமடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்

மானமருமெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போ காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்

சித்திரகூடத்துஇருப்ப சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்

மின்னொத்தண்ணிடையாய் மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்

மைத்தகுமாமலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே

திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம் அனுமான் என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே

வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவை பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே

நான்காம்பத்து
முதல் திருமொழி கதிராயிரம்
ஸர்வேஸ்வரனை காணவேணுமென்று தேடுவார் சிலரும் கண்டார் சிலருமா கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்


கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர்

நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகி கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர்

கொலையானைக்கொம்புபறித்து கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர்

தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர்

நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனைநடுவுபோர்செ சிக்கெனக்கண்டாருளர்

பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்ச புணர்முலைவாய்மடுக்க
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்

வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகி பாரதம்கைசெய்யக்கண்டாருளர்

நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்ப சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர்

மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர்

கரியமுகில்புரைமேனிமாயனை கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே
இரண்டாம் திருமொழி அலம்பாவெருட்டா
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு

கலிநிலைத்துறை

அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்து குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே

வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர தென்திருமாலிருஞ்சோலையே

தக்கார்மிக்கார்களை சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே

ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார்க்கொழி கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே

ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே

ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே

மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே

குறுகாதமன்னரை கூடுகலக்கி வெங்கானிடை
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே

சிந்தப்புடைத்து செங்குருதிகொண்டு பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே

எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவா
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே

மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே
மூன்றாம் திருமொழி உருப்பிணிநங்கை
திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு
கலிநிலைத்துறை

உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே

கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே

மன்னுநரகன்தன்னை சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மை கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே

மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனை குறமாதர்கள் பண்குறிஞ்சி
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே

பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே

பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே

கனங்குழையாள்பொருட்டா கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே

எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே

கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே

ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே

மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே
நான்காம் திருமொழி நாவகாரியம்
முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரை கொண்டாடியும்
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ

குற்றமின்றிக்குணம்பெருக்கி குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினை பெருநோய்செய்வான்பிறந்தார்களே

வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் திருக்கோட்டியூர திருமாலவன்திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்கு கவளமுந்துகின்றார்களே

உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ

ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கி புல்லைத்திணிமினே

பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே

குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனை கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ

நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே

கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே

காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா புருடோ த்தமா கிளர்சோதியாய் குறளா என்று
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே

சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே
ஐந்தாம் திருமொழி ஆசைவாய்
பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம் செய்தல்

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா புருடோ த்தமா என்றும்
கேழலாகியகேடிலீ என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே

சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே

சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே

மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறி
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே

மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்ப
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே

அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்து
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனனைமார்பில்
தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்
சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே

தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றி
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே

கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே

வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே

செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றை
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலை
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தைபெறுவர்தாமே
ஆறாம் திருமொழி காசுங்கறையுடை
பெற்றபிள்ளைகளுக்கு பரமபுருஷனுடைய திருநாமங்களை
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்
கலித்துறை

காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்
செங்கணெடுமால் சிரீதரா என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள் எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா கோவிந்தா என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா கோவிந்தா என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கி குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்

மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்து குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே
ஏழாம் திருமொழி தங்கையைமூக்கும்
தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே

சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வா சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கை கண்டமென்னும்கடிநகரே

அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கை கண்டமென்னும்கடிநகரே

இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே

திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே

வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடி தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே

மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே
எட்டாம் திருமொழி மாதவத்தோன்
திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை
தரவு கொச்சகக்கலிப்பா

மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே

பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே

மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே

கூந்தொழுத்தைசிதகுரைப்ப கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகி கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலை திருவரங்கமென்பதுவே

பெருவரங்களவைபற்றி பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலர குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே

கீழுலகில்அசுரர்களை கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சி தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே

கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களை பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே

வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே

குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே

பருவரங்களவைபற்றி படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே
ஒன்பதாம் திருமொழி மரவடியை
திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும்
திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம்
காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே

தன்னடியார்திறத்தகத்து
தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார்
செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா
மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே

கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே

பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய
துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம்
எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து
இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே

ஆமையாய்க்கங்கையாய்
ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய்
வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார்
சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள்
புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே

மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும்
பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்ச
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே

குறட்பிரமசாரியாய்
மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல்
இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசை
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே

உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே

தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனா
கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு
செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே

செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்
விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாக
திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே

கைந்நாகத்திடர்கடிந்த
கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான்
விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே
பத்தாம் திருமொழி துப்புடையாரை
அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

பையரவினணை பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணி
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே எம்மானே
எஞ்சலிலென்னுடையின்னமுதே
ஏழுலகுமுடையாய் என்னப்பா
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா
மதுரைப்பிறந்தமாமாயனே என்
ஆனாய் நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா
கோநிரைமேய்த்தவனே எம்மானே
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதிமறந்தறியேன்
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே

ஐந்தாம் பத்து
முதல் திருமொழி வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா கருளக்கொடியானே

சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே

நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசி
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே

நெடுமையால்உலகேழுமளந்தாய்
நின்மலா நெடியாய் அடியேனை
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே

தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே

கண்ணா நான்முகனைப்படைத்தானே
காரணா கரியாய் அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே

வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே

வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே மதுசூதா
கண்ணனே கரிகோள்விடுத்தானே
காரணா களிறட்டபிரானே
எண்ணுவாரிடரைக்களைவானே
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே

நம்பனே நவின்றேத்தவல்லார்கள்
நாதனே நரசிங்கமதானாய்
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய் ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே
காரணா கடலைக்கடைந்தானே
எம்பிரான் என்னையாளுடைத்தேனே
ஏழையேனிடரைக்களையாயே

காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே
இரண்டாம் திருமொழி நெய்க்குடத்தை
தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால் நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள் காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே

சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றி தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே

வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்து காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னை
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே

மங்கியவல்வினைநோய்காள் உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே

மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே

உற்றவுறுபிணிநோய்காள் உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள் உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே

கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே

ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே

உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே சங்கே
அறவெறிநாந்தகவாளே அழகியசார்ங்கமே தண்டே
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்
பறவையரையா உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின்

அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோத பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே
மூன்றாம் திருமொழி துக்கச்சுழலையை
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை போகவொட்டேனென்று தடுத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடை திருமாலிருஞ்சோலையெந்தாய்

உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன் இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்

காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய் குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய்

எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா மறுபிறவிதவிர
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்

அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

சென்றுலகம்குடைந்தாடும்சுனை திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே
நாலாம் திருமொழி சென்னியோங்கு
எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளை கூறி உகத்தல்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழநின்றநம்பீ தாமோதரா சதிரா
என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே

பறவையேறுபரம்புருடா நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றி பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே

எம்மனா என்குலதெய்வமே என்னுடையநாயகனே
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ டி தூறுகள்பாய்ந்தனவே

கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ சார்ங்கவிற்சேவகனே

பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா என்னிருடீகேசா என்னுயிர்க்காவலனே

உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ
என்னிடைவந்துஎம்பெருமான் இனியெங்குப்போகின்றதே

பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே

அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்கு கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே

பனிக்கடலில்பள்ளிகோளை பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே

தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே

வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனை கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்







நாலாயிர திவ்வி பிரபந்தம்
பாடல்கள்
பெரியாழ்வார் திருமொழி






















நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளி செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷா
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
பாண்டிய பட்டர் அருளி செய்தவை
இருவிகற்ப நேரிசை வெண்பா
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம் கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
பாண்டியன்கொண்டாட பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
காப்பு
குறள்வெண்செந்துறை

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்கு பல்லாண்டுகூறுதமே

ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே

எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்கு பல்லாண்டுகூறுதுமே

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்கு பல்லாண்டுகூறுவனே

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்து கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தி திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டுகூறுதுமே

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றி திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போல திருமாலே நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே உன்னைப்பல்லாண்டுகூறுவனே

பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே

பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
முதல் திருமொழி வண்ண மாடங்கள்
கண்ணன் திருவவதார சிறப்பு
கலிவிருத்தம்

வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே

பேணிச்சீருடை பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே

கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்

கையும்காலும்நிமிர்த்து கடாரநீர்
பையவாட்டி பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடை பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே
இரண்டாம் திருமொழி சீதக்கடல்
கண்ணனது திருமேனியழகை பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்துகாணீரே

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்து தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்துகாணீரே

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர் வந்துகாணீரே

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்ச பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர் வந்துகாணீரே

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர் வந்துகாணீரே

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர் வந்துகாணீரே

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர் வந்துகாணீரே

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர் வந்துகாணீரே

அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்துகாணீரே

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்து சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர் வந்துகாணீரே

மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்து சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர் வந்துகாணீரே

வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனா
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர் வந்துகாணீரே

எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர் வந்துகாணீரே

விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரை தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர் வந்துகாணீரே

பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர் வந்துகாணீரே

மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்து திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர் வந்துகாணீரே

அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர் வந்துகாணீரே
தரவு கொச்சகக்கலிப்பா

சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தை தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந தொன்றுவர்தாமே
மூன்றாம் திருமொழி மாணிக்கம் கட்டி
கண்ணனை தொட்டிலிலிட்டு தாலாட்டுதல் தாலப்பருவம்
கலித்தாழிசை

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்கு பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ

உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய் அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே தாலேலோ

என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே தாலேலோ
தேவகிசிங்கமே தாலேலோ

எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே தாலேலோ

ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய் தாலேலோ
சுந்தரத்தோளனே தாலேலோ

கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலை கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே தாலேலோ

கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய் தாலேலோ
நாராயணா அழேல்தாலேலோ

மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே தாலேலோ
தரவு கொச்ச கலிப்பா

வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே
நான்காம் திருமொழி தன் முகத்து
சந்திரனை அழைத்தல் அம்புலிப்பருவம்
கலிநிலைத்துறை

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ

என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ கடிதோடிவா

சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ

தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதி கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ விரைந்தோடிவா

பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்

தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா

மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே
ஐந்தாம் திருமொழி உய்யவுலகு
தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல் செங்கீரைப்பருவம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதி
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழி
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே
ஆள எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

நம்முடைநாயகனே நான்மறையின்பொருளே
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே
அம்ம எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே
கானகவல்விளவின்காயுதிரக்கருதி
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

காயமலர்நிறவா கருமுகில்போலுருவா
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்
ஆய எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுக
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிர
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூழ்
சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே
என்னவலம்களைவாய் ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடை
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே ஆயர்கள்நாயகனே
என்அவலம்களைவாய் ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே
ஆறாம் திருமொழி மாணிக்கக்கிண்கிணி
கைகொட்டி விளையாடுதல் சப்பாணிப்பருவம்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே சப்பாணி

பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாட தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே கொட்டாய்சப்பாணி

பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன் இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே சப்பாணி

தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ சந்திரா வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே சப்பாணி

புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே கொட்டாய்சப்பாணி
பற்பநாபா கொட்டாய்சப்பாணி

தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்பட பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே சப்பானி

பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே சப்பாணி

குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே சப்பாணி

அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே சப்பாணி

அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே சப்பாணி
தரவு கொச்சகக்கலிப்பா

ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே
ஏழாம் திருமொழி தொடர்சங்கிலிகை
தளர் நடை நடத்தல் நடை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்ன தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ

செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ

மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போல கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ

கன்னற்குடம்திறந்தலொத்தூறி கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ

முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவா புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ

ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ

படர்பங்கயமலர்வாய்நெகிழ பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ

பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ

வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ

திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோர தளர்நடைநடவானோ

ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளர தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே
எட்டாம் திருமொழி பொன்னியல்
அணைத்துக்கொள்ள அழைத்தல் அச்சோப்பருவம்
கலித்தாழிசை

பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான் வாராஅச்சோவச்சோ

செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ

பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ

நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய் அச்சோவச்சோ
எம்பெருமான் வாராஅச்சோவச்சோ

கழல்மன்னர்சூழ கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடை துச்சோதனனை
அழலவிழித்தானே அச்சோவச்சோ
ஆழியங்கையனே அச்சோவச்சோ

போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய் செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனி கரும்பெருங்கண்ணனே
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே அச்சோவச்சோ

மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணை துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே அச்சோவச்சோ
சங்கமிடத்தானே அச்சோவச்சோ

என்னிதுமாயம் என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே அச்சோவச்சோ
வேங்கடவாணனே அச்சோவச்சோ

கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ அன்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே அச்சோவச்சோ
மார்வில்மறுவனே அச்சோவச்சோ

துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே அச்சோவச்சோ
அருமறைதந்தானே அச்சோவச்சோ
தரவு கொச்சகக்கலிப்பா

நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாட புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே
ஒன்பதாம் திருமொழி வட்டநடுவே
தன் முதுகை கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்
வெண்டளையால்வந்த கலித்தாழிசை

வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்ன துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்

கிங்கிணிகட்டி கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டு கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்

கத்தக்கதித்து கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்

நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்

வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடி பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான்

சத்திரமேந்தி தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காண காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான்

பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான்

மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடி குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்

கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்
தரவு கொச்சகக்கலிப்பா

ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே

இரண்டாம்பத்து
முதல்திருமொழி மெச்சூது
பூச்சிகாட்டி விளையாடுதல்
கலித்தாழிசை

மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளை திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

காயும்நீர்புக்கு கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாள
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

செப்பிளமென்முலை தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றி தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

தத்துக்கொண்டாள்கொலோ தானேபெற்றாள்கொலோ
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவல
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

பதகமுதலைவா பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா கண்ணா என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்
தரவு கொச்சகக்கலிப்பா

வல்லாளிலங்கைமலங்க சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே
இரண்டாம் திருமொழி அரவணையாய்
கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலிவிருத்தம்

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்து திளைத்துதைத்துப்பருகிடாயே

வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே

தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா நான்சுரந்தமுலையுணாயே

கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே

தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன்முலையுணாயே

மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா முலையுணாயே

பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரை பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா நீமுலையுணாயே

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய் உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே

அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்ப தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே

ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயை பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா நீமுலையுணாயே

வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே
மூன்றாம் திருமொழி போய்ப்பாடு
பன்னிருநாமம் காதுகுத்துதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா உன்னை
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே
கேசவநம்பீ உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன்

வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா

வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே இங்கேவாராய்

வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான் இங்கேவாராய்

சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே நீஇங்கேவாராய்

விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ
கண்ணா என்கார்முகிலே
கடல்வண்ணா காவலனே முலையுணாயே

முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்து
பசுநிரைமேய்த்தாய்
சிலையொன்றுஇறுத்தாய் திரிவிக்கிரமா
திருவாயர்பாடிப்பிரானே
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே

என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே

மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதி
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னை
காணவேகட்டிற்றிலையே
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே

காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா என்தன்கண்ணே

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கி
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே எங்களமுதே
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா இங்கேவாராய்

வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ முன்வஞ்சமகளை
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா இங்கேவாராய்

வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே
நாலாம் திருமொழி வெண்ணெயளைந்த
கண்ணனை நீராட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னை தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே நாரணா நீராடவாராய்

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய் நீபிறந்ததிருவோணம்
இன்று நீநீராடவேண்டும் எம்பிரான் ஓடாதேவாராய்

பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா மஞ்சனமாடநீவாராய்

கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே நீராடவாராய்

அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான் இங்கேவாராய்

எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்து கழகண்டுசெய்யும்பிரானே
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ மஞ்சனமாடநீவாராய்

கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாக பெற்றறியேன்எம்பிரானே
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்

கன்றினைவாலோலைகட்டி கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பை பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா ஓடாதேவாராய்

பூணித்தொழுவினில்புக்கு புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய் நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே மஞ்சனமாடநீவாராய்

கார்மலிமேனி நிறத்து கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே
ஐந்தாம் திருமொழி பின்னைமணாளனை
கண்ணன்குழல் வார காக்கையை வாவெனல்
கலித்தாழிசை

பின்னைமணாளனை பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய்

பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்

திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்

பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானை தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய்

கற்றினம்மேய்த்து கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய்

கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய்

பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய்

உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னை படைத்தவன்
கொந்தக்குழலை குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய்

மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினை பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய்
தரவு கொச்சகக்கலிப்பா

கண்டார்பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாட குறுகாவினைதாமே
ஆறாம் திருமொழி வேலிக்கோல்
காக்கையை கண்ணனுக்கு கோல்கொண்டுவர விளம்புதல்
கலித்தாழிசை

வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தை தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையை பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா

கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா

கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா

ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா

சீரொன்றுதூதா துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டி பெறாதஉரோடத்தால்
பாரொன்றி பாரதம்கைசெய்து பார்த்தற்கு
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா

ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா

பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா

மின்னிடை சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லா சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா

தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா
தரவு கொச்சகக்கலிப்பா

அக்காக்காய் நம்பிக்கு கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே
ஏழாம் திருமொழி ஆனிரை
கண்ணனை பூச்சூட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகி பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே செண்பகப்பூச்சூட்டவாராய்

கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய் உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்
திருவுடையாள்மணவாளா திருவரங்கத்தேகிடந்தாய்
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்

மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்து காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய் நீள்திருவேங்கடத்துஎந்தாய்
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்

தெருவின்கன்இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ உகந்திவைசூட்டநீவாராய்

புள்ளினைவாய்பிளந்திட்டாய் பொருகரியின்கொம்பொசித்தாய்
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்

எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்அம்பி
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே புன்னைப்பூச்சூட்டவாராய்

குடங்களெடுத்தேறவிட்டு கூத்தாடவல்லஎம்கோவே
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்
குடந்தைக்கிடந்தஎம்கோவே குருக்கத்திப்பூச்சூட்டவாராய்

சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்
சாமாறுஅவனைநீயெண்ணி சக்கரத்தால்தலைகொண்டாய்
ஆமாறறியும்பிரானே அணியரங்கத்தேகிடந்தாய்
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய் இருவாட்சிப்பூச்சூட்டவாராய்

அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய் தூமலராள்மணவாளா
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்
கண்டுநான்உன்னையு கருமுகைப்பூச்சூட்டவாராய்

செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே
எட்டாம் திருமொழி இந்திரனோடு
கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே காப்பிடவாராய்

கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய்

செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான் காப்பிடவாராய்

கண்ணில்மணல்கொடுதூவி காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறைநின்றாய் கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமேவேலையதொப்பாய் வள்ளலே காப்பிடவாராய்

பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான் நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய் ஞானச்சுடரே உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்தி சொப்படக்காப்பிடவாராய்

கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே காப்பிடவாராய்

கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே காப்பிடவாராய்

இன்பமதனைஉயர்த்தாய் இமையவர்க்குஎன்றும்அரியாய்
கும்பக்களிறட்டகோவே கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே
செம்பொன்மதிள்வெள்ளறையாய் செல்வத்தினால்வளர்பிள்ளாய்
கம்பக்கபாலிகாண்அங்கு கடிதோடிக்காப்பிடவாராய்

இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சா தேசுடைவெள்ளறைநின்றாய்
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்

போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே
ஒன்பதாம் திருமொழி வெண்ணெய்விழுங்கி
வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னை
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்

வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்து
காகுத்தநம்பீ வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்
அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே

திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ அசோதாய்
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே

கொண்டல்வண்ணா இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய் இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ள
கண்ணபிரான்கற்றகல்விதானே

பாலைக்கறந்துஅடுப்பேறவைத்து
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்

போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா
குன்றெடுத்தாய் குடமாடுகூத்தா
வேதப்பொருளே என்வேங்கடவா
வித்தகனே இங்கேபோதராயே

செந்நெலரிசிசிறுபருப்பு
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே

கேசவனே இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா இங்கேபோதராயே

கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கி
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே

சொல்லிலரசிப்படுதிநங்காய்
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவி
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே

வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே
பத்தாம் திருமொழி ஆற்றிலிருந்து
ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளை கூறி முறையிடுதல்
கலித்தாழிசை

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும்

குண்டலம்தாழ குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்

தடம்படுதாமரை பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்

தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்

ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்க பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்

தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்

மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்

தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்

வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்
தரவு கொச்சகக்கலிப்பா

அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லை புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே

மூன்றாம்பத்து
முதல்திருமொழி தன்னேராயிரம்
யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களை
கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே
அன்னே உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கி குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரை பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலை கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்கு சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னை சுற்றும்தொழநின்றசோதி
பொருட்டாயமிலேன்எம்பெருமான் உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
ஆயா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியை சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கரார்மேனிநிறத்தெம்பிரானை கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே
இரண்டாம் திருமொழி அஞ்சனவண்ணனை
யசோதப்பிராட்டி கண்ணனை கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்
கலிநிலைத்துறை

அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

பற்றுமஞ்சள்பூசி பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே

வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானை கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே

அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்து கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே

மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடி தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே

பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவ புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே

குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடை காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாட புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே
மூன்றாம் திருமொழி சீலைக்குதம்பை
கண்ணன் கன்றுகள்மேய்த்துவர கண்டு யசோதை மகிழ்தல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர் நானோமற்றாருமில்லை

கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா கேசவா பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்க சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா

காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூ
சூடிவரிகின்றதாமோதரா கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான்

கடியார்பொழிலணிவேங்கடவா கரும்போரேறே நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவி கொள்ளாதேபோனாய்மாலே
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான்

பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே
எஞ்சிற்றாயர்சிங்கமே சீதைமணாளா சிறுக்குட்டச்செங்கண்மாலே
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்து கலந்துடன்வந்தாய்போலும்

அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய்

பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே

கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்

திண்ணார்வெண்சங்குடையாய் திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டி பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செ கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு

புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே
நான்காம் திருமொழி தழைகளும்
காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே

வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்தி
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே

சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே

குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே

சுற்றிநின்றுஆயர்தழைகளிட
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணி
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே

சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்து
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ

சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிர
குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே

சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பி
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே

வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டு
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே

விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே
ஐந்தாம் திருமொழி அட்டுக்குவி
கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்க
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரை
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்கு
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கி
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வானத்திலுல்லீர் வலியீர்உள்ளீரேல்
அறையோ வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்து
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

சலமாமுகில்பல்கணப்போர்க்களத்து
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே
ஆறாம் திருமொழி நாவலம்
கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு

நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள் இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே

இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூட
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே

வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழ
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே

தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவி
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே

முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே

செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூத
கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே

புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே

சிறுவிரல்கள்தடவிப்பரிமாற
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டு
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே

திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே

கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே

குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சி
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்து
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகி
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே
ஏழாம் திருமொழி ஐயபுழுதி
திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே

வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலை சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே

பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே

ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர் இவள்மாலுறுகின்றாளே

பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர் இவள்மாலுறுகின்றாளே

காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே

கைத்தலத்துள்ளமாடழி கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம் நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே

பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே

ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே
எட்டாம் திருமொழி நல்லதோர் தாமரை
தலைமகனுடன் சென்ற தலைமகளை குறித்து தாய்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ

ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ

குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறி தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டி தோரணம்நாட்டிடுங்கொலோ

ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ

தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லி செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ

வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயா கொண்டுகுடிவாழுங்கொலோ
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ

அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லி பரிசறஆண்டிடுங்கொலோ
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ

குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ
நடையொன்றும்செய்திலன்நங்காய் நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கி கைதழும்பேறிடுங்கொலோ

வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ

மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லை தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே
ஒன்பதாம் திருமொழி என்னாதன்
க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்
கலித்தாழிசை

என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற

என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற

உருப்பிணிநங்கையை தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையை
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற

மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்ல கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற

பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற

முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்து பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற

காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற

தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடை
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற

மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற

காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற
தரவு கொச்சகக்கலிப்பா

நந்தன்மதலையை காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே
பத்தாம் திருமொழி நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியை கண்டு
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களை
கூறி கணையாழிகொடுத்து களிப்பித்தல்

கலிவிருத்தம்

நெறிந்தகருங்குழல்மடவாய் நின்னடியேன்விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தை சிதைத்ததும்ஓரடையாளம்

அல்லியம்பூமலர்க்கோதாய் அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்

கலக்கியமாமனத்தனளா கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
குலக்குமரா காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம்

வாரணிந்தமுலைமடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்

மானமருமெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போ காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்

சித்திரகூடத்துஇருப்ப சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்

மின்னொத்தண்ணிடையாய் மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்

மைத்தகுமாமலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே

திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம் அனுமான் என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே

வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவை பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே

நான்காம்பத்து
முதல் திருமொழி கதிராயிரம்
ஸர்வேஸ்வரனை காணவேணுமென்று தேடுவார் சிலரும் கண்டார் சிலருமா கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்


கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர்

நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகி கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர்

கொலையானைக்கொம்புபறித்து கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர்

தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர்

நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனைநடுவுபோர்செ சிக்கெனக்கண்டாருளர்

பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்ச புணர்முலைவாய்மடுக்க
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்

வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகி பாரதம்கைசெய்யக்கண்டாருளர்

நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்ப சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர்

மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர்

கரியமுகில்புரைமேனிமாயனை கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே
இரண்டாம் திருமொழி அலம்பாவெருட்டா
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு

கலிநிலைத்துறை

அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்து குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே

வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர தென்திருமாலிருஞ்சோலையே

தக்கார்மிக்கார்களை சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே

ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார்க்கொழி கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே

ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே

ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே

மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே

குறுகாதமன்னரை கூடுகலக்கி வெங்கானிடை
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே

சிந்தப்புடைத்து செங்குருதிகொண்டு பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே

எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவா
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே

மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே
மூன்றாம் திருமொழி உருப்பிணிநங்கை
திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு
கலிநிலைத்துறை

உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே

கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே

மன்னுநரகன்தன்னை சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மை கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே

மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனை குறமாதர்கள் பண்குறிஞ்சி
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே

பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே

பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே

கனங்குழையாள்பொருட்டா கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே

எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே

கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே

ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே

மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே
நான்காம் திருமொழி நாவகாரியம்
முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரை கொண்டாடியும்
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ

குற்றமின்றிக்குணம்பெருக்கி குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினை பெருநோய்செய்வான்பிறந்தார்களே

வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் திருக்கோட்டியூர திருமாலவன்திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்கு கவளமுந்துகின்றார்களே

உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ

ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கி புல்லைத்திணிமினே

பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே

குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனை கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ

நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே

கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே

காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா புருடோ த்தமா கிளர்சோதியாய் குறளா என்று
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே

சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே
ஐந்தாம் திருமொழி ஆசைவாய்
பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம் செய்தல்

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா புருடோ த்தமா என்றும்
கேழலாகியகேடிலீ என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே

சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே

சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே

மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறி
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே

மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்ப
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே

அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்து
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனனைமார்பில்
தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்
சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே

தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றி
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே

கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே

வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே

செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றை
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலை
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தைபெறுவர்தாமே
ஆறாம் திருமொழி காசுங்கறையுடை
பெற்றபிள்ளைகளுக்கு பரமபுருஷனுடைய திருநாமங்களை
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்
கலித்துறை

காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்
செங்கணெடுமால் சிரீதரா என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள் எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா கோவிந்தா என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா கோவிந்தா என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கி குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்

மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்து குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே
ஏழாம் திருமொழி தங்கையைமூக்கும்
தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே

சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வா சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கை கண்டமென்னும்கடிநகரே

அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கை கண்டமென்னும்கடிநகரே

இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே

திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே

வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடி தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே

மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே
எட்டாம் திருமொழி மாதவத்தோன்
திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை
தரவு கொச்சகக்கலிப்பா

மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே

பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே

மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே

கூந்தொழுத்தைசிதகுரைப்ப கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகி கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலை திருவரங்கமென்பதுவே

பெருவரங்களவைபற்றி பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலர குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே

கீழுலகில்அசுரர்களை கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சி தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே

கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களை பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே

வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே

குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே

பருவரங்களவைபற்றி படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே
ஒன்பதாம் திருமொழி மரவடியை
திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும்
திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம்
காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே

தன்னடியார்திறத்தகத்து
தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார்
செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா
மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே

கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே

பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய
துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம்
எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து
இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே

ஆமையாய்க்கங்கையாய்
ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய்
வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார்
சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள்
புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே

மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும்
பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்ச
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே

குறட்பிரமசாரியாய்
மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல்
இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசை
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே

உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே

தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனா
கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு
செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே

செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்
விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாக
திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே

கைந்நாகத்திடர்கடிந்த
கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான்
விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே
பத்தாம் திருமொழி துப்புடையாரை
அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

பையரவினணை பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணி
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே எம்மானே
எஞ்சலிலென்னுடையின்னமுதே
ஏழுலகுமுடையாய் என்னப்பா
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா
மதுரைப்பிறந்தமாமாயனே என்
ஆனாய் நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா
கோநிரைமேய்த்தவனே எம்மானே
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதிமறந்தறியேன்
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே

ஐந்தாம் பத்து
முதல் திருமொழி வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா கருளக்கொடியானே

சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே

நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசி
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே

நெடுமையால்உலகேழுமளந்தாய்
நின்மலா நெடியாய் அடியேனை
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே

தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே

கண்ணா நான்முகனைப்படைத்தானே
காரணா கரியாய் அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே

வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே

வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே மதுசூதா
கண்ணனே கரிகோள்விடுத்தானே
காரணா களிறட்டபிரானே
எண்ணுவாரிடரைக்களைவானே
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே

நம்பனே நவின்றேத்தவல்லார்கள்
நாதனே நரசிங்கமதானாய்
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய் ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே
காரணா கடலைக்கடைந்தானே
எம்பிரான் என்னையாளுடைத்தேனே
ஏழையேனிடரைக்களையாயே

காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே
இரண்டாம் திருமொழி நெய்க்குடத்தை
தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால் நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள் காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே

சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றி தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே

வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்து காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னை
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே

மங்கியவல்வினைநோய்காள் உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே

மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே

உற்றவுறுபிணிநோய்காள் உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள் உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே

கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே

ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே

உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே சங்கே
அறவெறிநாந்தகவாளே அழகியசார்ங்கமே தண்டே
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்
பறவையரையா உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின்

அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோத பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே
மூன்றாம் திருமொழி துக்கச்சுழலையை
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை போகவொட்டேனென்று தடுத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடை திருமாலிருஞ்சோலையெந்தாய்

உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன் இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்

காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய் குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய்

எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா மறுபிறவிதவிர
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்

அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

சென்றுலகம்குடைந்தாடும்சுனை திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே
நாலாம் திருமொழி சென்னியோங்கு
எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளை கூறி உகத்தல்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழநின்றநம்பீ தாமோதரா சதிரா
என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே

பறவையேறுபரம்புருடா நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றி பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே

எம்மனா என்குலதெய்வமே என்னுடையநாயகனே
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ டி தூறுகள்பாய்ந்தனவே

கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ சார்ங்கவிற்சேவகனே

பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா என்னிருடீகேசா என்னுயிர்க்காவலனே

உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ
என்னிடைவந்துஎம்பெருமான் இனியெங்குப்போகின்றதே

பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே

அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்கு கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே

பனிக்கடலில்பள்ளிகோளை பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே

தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே

வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனை கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்























நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி
முதற் பத்து

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்

ஆவியே அமுதே எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்

சேமமேவேண்டி தீவினைபெருக்கி
தெரிவைமாருருவமேமருவி
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

வென்றியே வேண்டி வீழ்பொரு கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம்

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம்

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள் கலிகன்றி
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம்

வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்துஅன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனை
பிரிதிசென்றடைநெஞ்சே

கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு
பிரிதிசென்றடைநெஞ்சே

துடிகொள்ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே

மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்துவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திட
கிடந்தருகெரிவீசும்
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே

கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்தோய்த்து
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே

பணங்களாயிரமுடையநல்லவரவணை
பள்ளிகொள் பரமாவென்று
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே

கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படி தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே

இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகை
பிரிதிசென்றடைநெஞ்சே

ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே

கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிடகளிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே

முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல்தள்ளி
மெள்ள இருந்தங்கிளையாமுன்
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான் வதரிவணங்குதுமே

முதுகுபற்றிக்கைத்த
லத்தால் முன்னொருகோலூன்றி
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று மேற்கிளைகொண்டிருமி
இதுவென்னப்பர் மூத்தவா
றென்று இளையவரேசாமுன்
மதுவுண்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே

உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி
நெறியைநோக்கிக்கண்
சுழன்று நின்றுநடுங்காமுன்
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா யாயிரநாமஞ்சொல்லி
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே

பீளைசோரக்கண்ணி
டுங்கி பித்தெழமூத்திருமி
தாள்கள் நோவத்தம்மில்
முட்டி தள்ளிநடவாமுன்
காளையாகிக்கன்று
மேய்த்து குன்றெடுத்தன்றுநின்றான்
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே

பண்டுகாமரான
வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும் வாழ்ந்த
வாறும் ஒக்கவுரைத்திருமி
தண்டுகாலாவூன்றி
யூன்றி தள்ளிநடவாமுன்
வண்டுபாடும்தண்டு
ழாயான் வதரிவணங்குதுமே

எய்த்தசொல்லோடீளை
யேங்கி இயிருமியிளைத்துடலம்
பித்தர்ப்போலச்சித்தம்
வேறா பேசியயராமுன்
அத்தனெந்தையாதி
மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த
மைத்தசோதியெம்பெ
ருமான் வதரிவணங்குதுமே

பப்பவப்பர்மூத்த
வாறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப ஐக்கள்போத
வுந்த உன்தமர்க்காண்மினென்று
செப்புநேர்மென்கொங்கை
நல்லார் தாம்சிரியாதமுன்னம்
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான் வதரிவணங்குதுமே

ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே

புலன்கள்நையமெய்யில்
மூத்து போந்திருந்துள்ளமெள்கி
கலங்கவைக்கள்போத
வுந்தி கண்டபிதற்றாமுன்
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும் வதரிவணங்குதுமே

வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை
கண்டல்வேலிமங்கை
வேந்தன் கலியனொலிமாலை
கொண்டுதொண்டர்ப்பாடி
யாட கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால்மற்ற
வர்க்கு ஓராட்சியறியோமே

ஏனமுனாகியிருநிலமிடந்து
அன்றிணையடியிமையவர்வணங்க
தானவனாகம்தரணியில்புரள
தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்
தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
சென்றுசென்றிறைஞ்சிட பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
இருநிதிக்கிறைவனும் அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த
கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
வெண்துகிற்கொடியெனவிரிந்து
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
பேரருளாளனெம்பெருமான்
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும்
ஆரமும்வாரிவந்து அணிநீர்
மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
பெருமுலைசுவைத்திட பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்து ஒருமறத்தொழில்புரிந்து
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணனெம்பெருமான்
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும்
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தையெம்மடிகளெம்பெருமான்
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன்பொன்னிறத்துரவோன்
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
உகிர்நுதிமடுத்து அயனரனை
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர
குரைகடலுலகுடனனைத்தும்
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த
உம்பருமூழியுமானான்
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
அங்கவனியாளலமர பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணி
கலியன்வாயொலிசெய்தபனுவல்
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
வானவருலகுடன் மருவி
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே

கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்
சிலையும்கணையும்துணையாக
சென்றான்வென்றிச்செறுக்களத்து
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன் தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே

கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே

உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன் வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன் சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான் பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான் தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான் விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்
கடுத்தார்த்தெழுந்தபெருமழையை கல்லொன்றேந்தியினநிரைக்கா
தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே

தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும்
தாயான் காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே

ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்
தானாய் தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே

வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று என்
எந்தாய் சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான் சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே

தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே

தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே

வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன் அதனைப்பிழையெனக்கருதி பேதையேன்பிறவிநோயறுப்பான்
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன் வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கி போக்கினேன் பொழுதினைவாளா
அலம்புரிதடக்கையாயனேமாயா வானவர்க்கரசனே வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையை பாவீ தழுவெனமொழிவதர்க்கஞ்சி
நம்பனே வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால் நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற்கடல்கிடந்தாய்
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா தானவர்க்கென்றும்
நஞ்சனே வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே

அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே

அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே

ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்தவேயுமல்லதில்லா சிங்கவேள்குன்றமே

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று
தெய்வமல்லால்செல்லவொண்ணா சிங்கவேள்குன்றமே

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே

எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்
தினைத்தனையும்செல்லவொண்ணா சிங்கவேள்குன்றமே

நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்
காய்த்தவாகைநெற்றொலிப்ப கல்லதர்வேய்ங்கழைபோய்
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே

நல்லைநெஞ்சே நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்
நெல்லிமல்கிக்கல்லுடை புல்லிலையார்த்து அதர்வா
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே

செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்ற்புலவன்
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே

கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம் பொங்குநீர
செங்கயல்திளைக்கும்சுனை திருவேங்கடமடை நெஞ்சமே

பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்
கன்றிமாரிபொழிந்திட கடிதானிரைக்கிடர் நீக்குவான்
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே

பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே

வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே

எண்டிசைகளுமேழுலகமும்வாங்கி பொன்வயிற்றில்பெய்து
பண்டோ ராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே

பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடை சோருமாமுகில்தோய்தர
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே

அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே

பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று பின்னரும்
பேசுவார்த்தம்மையுய்யவாங்கி பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

செங்கயல்திளைக்கும் சுனை திருவேங்கடத்துறைசெல்வனை
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே

தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே

மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

கொன்றேன்பல்லுயிரை குறிக்கோளொன்றிலாமையினால்
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

தெரியென்பாலகனா பலதீமைகள்செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்
மற்றேலொன்றறியேன் மாயனே எங்கள்மாதவனே
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே

கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்
திண்ணாகம்பிளக்க சரம்செலவுய்த்தாய்
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக்களையாயே

இலங்கைப்பதிக்கு அன்றீறையாய அரக்கர்
குலம்கெட்டவர்மாள கொடிப்புள்திரித்தாய்
விலங்கல்குடுமி திருவேங்கடம்மேய
அலங்கல்துளபமுடியாய் அருளாயே

நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்
சீரார் திருவேங்கடமாமலைமேய
ஆராவமுதே அடியேற்கருளாயே

உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே
விண்தோய்சிகர திருவேங்கடம்மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே

தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கடமாமலைமேய
கோணாகணையாய் குறிக்கொள்ளெனைநீயே

மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி
தன்னாகி தன்னினருள்செய்யும்தலைவன்
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே

மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா
தேனே திருவேங்கடமாமலைமேய
கோனே என்மனம் குடிகொண்டிருந்தாயே

சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள்
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய
ஆயனடியல்லது மற்றறையேனே

வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய் இனியானுன்னை யென்றும் விடேனே

வில்லார்மலி வேங்கடமாமலைமேய
மல்லார்த்திரடோ ள் மணிவண்ணனம்மானை
கல்லார்த்திரடோ ள் கலியன்சொன்னமாலை
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே

வானவர் தங்கள் சிந்தை போலேன்
நெஞ்சமே இனிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்
உகந்தவர் தம்மை மண்மிசை
பிறவி யேகெடு பானது கண்டென் நெஞ்சமென்பாய்
குறவர் மாதர்க ளோடு வண்டு
குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து
அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
ஏத்து வாருற வோடும் வானிடை
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்
வண்டு வாழ்வட வேங்கடமலை
கோயில் கொண்டத னோடும் மீமிசை
அண்ட மாண்டிரு பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே
பண்டு தொண்டுசெய் தாரை மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
வேங்க டமலை யாண்டு வானவர்
ஆவி யாயிரு பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

பொங்கு போதியும் பிண்டி யுமுடை
புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்
எங்கும் வானவர் தான வர்நிறை
தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

துவரி யாடையர் மட்டை யர்சமண்
தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்
கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை
அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே

தருக்கி னால்சமண் செய்து சோறுதண்
தயிரினால்திரளைமி டற்றிடை
நெருக்கு வார்அல கணது கண்டென் நெஞ்சமென்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
கோயில் கொண்டத னோடும் வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

சேயனணியன் சிறியன் பெரிய னென்பது
சிலர்ப்பேச கேட்டிரு
தேஎன் னெஞ்சமென் பாய்என கொன்று சொல்லாதே
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி
வேங்க டமலை கோயில் மேவிய
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்
நெஞ்சமென் பாய் துணிந்துகேள்
பாடி யாடி பலரும் பணிந்தேத்தி காண்கிலா
ஆடு தாமரை யோனு மீசனும்
அமர் கோனும்நின் றேத்தும்வேங்கடத்து
ஆடு கூத்தனு கின்றடி மைத்தொழில் பூண்டாயே

மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க
டமலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி
கன்றி யிந்தமி ழாலு ரைத்த இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே

காசை யாடை மூடியோடி காதல்செய் தானவனூர்
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே

தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சர தாலுருள
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்துஅரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர காகி பெருநிலத்தார்
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே

பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே

பால நாகி ஞாலமேழு
முண்டுபண் டாலிலைமேல்
சால நாளும் பள்ளிகொள்ளும்
தாமரை கண்ணன்எண்ணில்
நீல மார்வண் டுண்டுவாழும்
நெய்தல தண்கழனி
ஏல நாறும் பைம்புறவி
லெவ்வுள் கிடந்தானே

சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டி தொடர்ந்தழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே

திங்க ளப்பு வானெரிகாலாகி திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாக திருந்தவண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே

முனிவன் மூர்த்தி மூவராகி
வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணனண்ணல்
புண்ணியன் விண்ணவர்கோன்
தனியன் சேயன் தானொருவன்
ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான்
எவ்வுள் கிடந்தானே

பந்தி ருக்கும் மெல்விரலாள்
பாவை பனிமலராள்
வந்தி ருக்கும் மார்வன்நீல
மேனி மணிவண்ணன்
அந்த ரத்தில் வாழும் வானோர்
நாயக னாயமைந்த
இந்தி ரற்கும் தம்பெருமா
னெவ்வுள் கிடந்தானே

இண்டை கொண்டு தொண்டரேத்த
எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைபுறவில்
மங்கையர் கோன்கலியன்
கொண்ட சீரால் தண்டமிழ்செய்
மாலையீ ரைந்தும்வல்லார்
அண்ட மாள்வ தாணையன்றே
லாள்வ ரருலகே

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ
செற்றவன் றன்னை புரமெரி செய்த
சிவனுறு துயர்களை தேவை
பற்றலர் வீ கோல்கையில் கொண்டு
பார்த்தன்றன் தேர்முன்நின் றானை
சிற்றவை பணியால் முடிதுற தானை
திருவல்லி கேணிக்கண் டேனே

வேதத்தை வே தின்சுவை பயனை
விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றை
குவல தோர்தொழு தேத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை
அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலை
திருவல்லி கேணிக்கண் டேனே

வஞ்சனை செ தாயுரு வாகி
வந்தபே யலறிமண் சேர
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
நாதனை தானவர் கூற்றை
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
துதிசெ பெண்ணுரு வாகி
அஞ்சுவை யமுத மன்றளி தானை
திருவல்லி கேணிக்கண் டேனே

இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
எழில்விழ வில்பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழைபொழி திடத்தளர்ந்து ஆயர்
அந்தமோ டினவா நிரைதள ராமல்
எம்பெரு மானரு ளென்ன
அந்தமில் வரையால் மழைதடு தானை
திருவல்லி கேணிக்கண் டேனே

இந்துணை பது தலர்மகள் தனக்கும்
இன்பன்நற் புவிதன கிறைவன்
தந்துணை யாயர் பாவைந பின்னை
தனக்கிறை மற்றையோர கெல்லாம்
வன்துணை பஞ்ச பாண்டவர காகி
வாயுரை தூதுசென் றியங்கும்
என்துணை எந்தை தந்தைதம் மானை
திருவல்லி கேணிக்கண் டேனே

அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற்
கிளையவ னணியிழை யைச்சென்று
எந்த குரிமை செய் என தரியாது
எம்பெரு மானருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம்
பெண்டிரு மெய்திநூ லிழப்ப
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானை
திருவல்லி கேணிக்கண் டேனே

பரதனும் தம்பி சத்துரு கனன்னும்
இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற
இராவணா தகனையெம் மானை
குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு
குயிலொடு மயில்கள்நின் றால
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியா
திருவல்லி கேணிக்கண் டேனே

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகி போதவாங் கதனு
கொன்றுமோர் பொறுப்பில னாகி
பிள்ளையை சீறி வெகுண்டுதூண் புடை
பிறையெயிற் றனல்விழி பேழ்வாய்
தெள்ளிய சிங்க மாகிய தேவை
திருவல்லி கேணிக்கண் டேனே

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த
கானமர் வேழம் கையெடு தலற
கராவதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொ டானை
தேனமர் சோலை மாடமா மயிலை
திருவல்லி கேணிக்கண் டேனே

மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடமா ளிகையும்மண் டபமும்
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலை
திருவல்லி கேணிநின் றானை
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலி கன்றி
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
சுகமினி தாள்வர்வா னுலகே

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா
மலர்மங்கையொ டன்பளவிஅவுணர
கென்றானு மிரக்கமி லாதவனுக்கு
குறையுமிட மாவதுஇரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா
லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்
நின்றானிரு தான்கிட தான்நடந்தாற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே

காண்டாவன மென்பதொர் காடமரர
கரையனது கண்டவன் நிற்கமுனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்
அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர
தாண்டான்அவுணனவன் மார்வகலம்
உகிரால்வகி ராகமு னிந்து அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

அலமன்னு மடல்சுரி சங்கமெடு
தடலாழியி னாலணி யாருருவில்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள்
பொறைதீரமு னாளடு வாளமரில்
பலமன்னர் படச்சுட ராழியினை
பகலோன்மறை யப்பணி கொண்டுஅணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

தாங்காததோ ராளரி யாயவுணன்
றனைவீட முனிந்தவ னாலமரும்
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளை
ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்
பாங்காகமுன் ஐவரொ டன்பளவி
பதிற்றைந்திர டிப்படை வேந்தர்பட
நீங்காச்செரு வில்நிறை காத்தவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

மாலுங்கட லாரம லைக்குவடி
டணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெட
படைதொட்டொரு காலம ரிலதிர
காலமிது வென்றயன் வாளியினால்
கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே

பாராருல கும்பனி மால்வரையும்
கடலும்சுட ருமிவை யுண்டும் என
காரா தென நின்றவ னெம்பெருமான்
அலைநீருல குக்கரசாகியஅ
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்
நீரார்ப்பே ரான்நெடு மாலவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

புகராருரு வாகிமுனிந்தவனை
புகழ்வீட முனிந்துயி ருண்டுஅசுரன்
நகராயின பாழ்பட நாமமெறி
ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்
பகராதவ னாயிர நாமமடி
பணியாதவ னைப்பணி யாமலரில்
நிகராயவன் நெஞ்சிட தானவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்
பிணந்தின்மடவாரவர் போல்அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால்
அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்
நச்சிநம னாரடை யாமைந
கருள்செய் எனவுள்குழை தார்வமொடு
நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே

பேசுமள வன்றிது வம்மின்நமர்
பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்
நாசமது செய்திடும் ஆதன்மையால்
அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில்
மனமைந்தொடு நைந்துழல் வார்மதியில்
நீசரவர் சென்றடை யாதவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும்புகழ் மங்கையர் கோன்அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன்
ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்குஉடனே
விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்
எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்
கொடுமாகடல் வையக மாண்டுமதி
குடைமன்னவ ராயடி கூடுவரே

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணை
பாடுகடலி லமுதத்தை பரிவாய்கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானை கொம்பொசித்த போரேற்றினை
புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தை
கண்டதுநான் கடல்மல்லை தலசயனத்தே

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டு
பொய்ந்லை மெய்ந்லென் றென்றுமோதி
மாண்டுஅவத்தம் போகாதே வம்மினெந்தை
என்வணங்க படுவானை கணங்களேத்தும்
நீண்டவத்தை கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தை தொத்தார்சோலை
காண்டவத்தை கனலெரிவா பெய்வித்தானை
கண்டதுநான் கடல்மல்லை தலசயனத்தே

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானைஅன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்
தடம்பருகு கருமுகிலை தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்மல்லை தலசயனத்தே

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னை
பிணைமருப்பில் கருங்களிற்றை பிணைமான்னோக்கின்
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே
கோத்தானை குடமாடு கூத்தன்றன்னை
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்தி
காத்தானை எம்மானை கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

பாய்ந்தானை திரிசகடம் பாறிவீழ
பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்ற
பொய்யறைவா புகப்பெய்த மல்லர்மங
காய்த்தானை எம்மானை கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி
கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின்கொம்பு
பறித்தானை பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை வளைமருப்பி னேனமாகி
இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

பேணாத வலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனை
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாக பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்மல்லை தலசயனத்தே

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானை
பிறையெயிற்றன் றடலரியா பெருகினானை
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை கண்ணார கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

தொண்டாயர் தாம்பரவு மடியினானை
படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர்வேந்தை
விலங்குண்ண வலங்கைவா சரங்களாண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

படநாக தணைக்கிடந்தன் றவுணர்கோனை
படவெகுண்டு மருதிடைப்போ பழனவேலி
தடமார்ந்த கடல்மல்லை தலசயனத்து
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ

நண்ணாத வாளவுண
ரிடைப்புக்கு வானவரை
பெண்ணாகி யமுதூட்டும்
பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லை
தலசயன துறைவாரை
எண்ணாதே யிருப்பாரை
யிறைப்பொழுது மெண்ணோமே

பார்வண்ண மடமங்கை
பனிநன்மா மலர்க்கிழத்தி
நீர்வண்ணன் மார்வகத்தி
லிருக்கையைமுன் நினைந்தவனூர்
கார்வண்ண முதுமுந்நீர
கடல்மல்லை தலசயனம்
ஆரெண்ணும் நெஞ்சுடையா
ரவரெம்மை யாள்வாரே

ஏனத்தி னுருவாகி
நிலமங்கை யெழில்கொண்டான்
வானத்தி லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லை
தலசயன துறைகின்ற
ஞானத்தி னொளியுருவை
நினைவாரென் நாயகரே

விண்டாரை வென்றாவி
விலங்குண்ண மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
அழலேற வெஞ்சமத்து
கண்டாரை கடல்மல்லை
தலசயன துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையா
ரவரெங்கள் குலதெய்வமே

பி சிறுபீலி
சமண்குண்டர் முதலாயோர்
விச்சை கிறையென்னு
மவ்விறையை பணியாதே
கச்சி கிடந்தவனூர்
கடன்மல்லை தலசயனம்
நச்சி தொழுவாரை
நச்சென்றன் நன்னெஞ்சே

புலன்கொள்நிதி குவையோடு
புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெக்கும் நான்றொசிந்து
கலங்களியங் கும்மல்லை
கடல்மல்லை தலசயனம்
வலங்கொள்மன தாரவரை
வலங்கொள்ளென் மடநெஞ்சே

பஞ்சி சிறுகூழை
யுருவாகி மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
அண்ணல்முன் நண்ணாத
கஞ்சை கடந்தவனூர்
கடன்மல்லை தலசயனம்
நெஞ்சில் தொழுவாரை
தொழுவாயென் தூய்நெஞ்சே

செழுநீர் மலர்க்கமலம்
திரையுந்த வன்பகட்டால்
உழுநீர் வயலுழவ
ருழப்பின்முன் பிழைத்தெழுந்த
கழுநீர் கடிகமழும்
கடன்மல்லை தலசயனம்
தொழுநீர் மனத்தவரை
தொழுவாயென் தூய்நெஞ்சே

பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிரு சக்கரத்தெம்
பெருமானார கிடம்விசும்பில்
கணங்களியங் கும்மல்லை
கடன்மல்லை தலசயனம்
வணங்குமன தாரவரை
வணங்கென்றன் மடநெஞ்சே

கடிகமழு நெடுமறுகில்
கடல்மல்லை தலசயனத்து
அடிகளடி யேநினையு
மடியவர்கள் தம்மடியான்
வடிகொள்நெடு வேல்வலவன்
கலிகன்றி யொலிவல்லார்
முடிகொள்நெடு மன்னவர்தம்
முதல்வர்முத லாவாரே

திவளும்வெண் மதிபோல் திருமுக தரிவை
செழுங்கட லமுதினிற் பிறந்த
அவளும்நின் னாக திருப்பது மறிந்தும்
ஆகிலு மாசைவி டாளால்
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
சொல்லுநின் தாள திருந்த
இவளைஉன் மனத்தா லென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

துளம்படு முறுவல் தோழியர கருளாள்
துணைமுலை சாந்துகொண் டணியாள்
குளம்படு குவளை கண்ணிணை யெழுதாள்
கோலநன் மலர்க்குழற் கணியாள்
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த
மாலென்னும் மாலின மொழியாள்
இளம்படி யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

சாந்தமும் பூணும் சந்தன குழம்பும்
தடமுலை கணியிலும் தழலாம்
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்
பொருகடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்
வளைகளும் இறைநில்லா என்தன்
ஏந்திழை யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

ஊழியில் பெரிதால் நாழிகை என்னும்
ஒண்சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலு முறங்கா
தென்றலும் தீயினிற் கொடிதாம்
தோழியோ என்னும் துணைமுலை யரக்கும்
சொல்லுமி னென்செய்கேன் என்னும்
ஏழையென் பொன்னு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள்
உருகும்நின் திருவுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள்
கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்
ஏதலர் முன்னா என்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

தன்குடி கேதும் தக்கவா நினையாள்
தடங்கடல் நுடங்கெயி லிலங்கை
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
வார்த்தைகே டின்புறும் மயங்கும்
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
மென்முலை பொன்ப திருந்த
என்கொடி யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

உளங்கனி திருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்
வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை
மாயனே என்றுவாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது
கவலையோ டவலம்சேர திருந்த
இளங்கனி யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்
கழியுமா லென்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொருநீர புட்குழி பாடும்
போதுமோ நீர்மலை கெ ன்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடுமழை கண்ணி
இலங்கெழில் தோளி கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள்
பொருகயல் கண்துயில் மறந்தாள்
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ
ணங்கினு குற்றநோ யறியேன்
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
வீங்கிய வனமுலை யாளுக்கு
என்கொலாம் குறிப்பி லென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆயஎம் மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர கின்னருள் புரியும்
இடவெந்தை யெந்தை பிரானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறு பாரே

திரிபுர மூன்றெரி தானும்மற்றை
மலர்மிசை மேலய னும்வியப்ப
முரிதிரை மாகடல் போல்முழங்கி
மூவுல கும்முறை யால்வணங்க
எரியன கேசர வாளெயிற்றோ
டிரணிய னாக மிரண்டுகூறா
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

வெந்திறல் வீரரில் வீரரொப்பார்
வேத முரைத்திமை யோர்வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்
தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்
வந்து குறளரு வாய்நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

செம்பொ னிலங்கு வலங்கைவாளி
திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்
உம்ப ரிருசுட ராழியோடு
கேடக மொண்மலர் பற்றியெற்றே
வெம்பு சினத்தடல் வேழம்வீழ
வெண்மரு பொன்று பறித்துஇருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

மஞ்சுயர் மாமணி குன்றமேந்தி
மாமழை காத்தொரு மாயவானை
யஞ்சஅதன்மரு பொன்றுவாங்கும்
ஆயர்கொல் மாய மறியமாட்டேன்
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி
வேதமு னோதுவர் நீதிவானத்து
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

கலைகளும் வேதமும் நீதிநூலும்
கற்பமும் சொற்பொருள் தானும்மற்றை
நிலைகளும் வானவர கும்பிறர்க்கும்
நீர்மையி நாலருள் செய்துநீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்
ஏது மறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
தம்மன வாக புகுந்துதாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயா
போதவிழ் நீலம் புனைந்தமேகம்
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

முழுசிவண் டாடிய தண்டுழாயின்
மொய்ம்மலர கண்ணியும்மேனியஞ்சா
திழிசிய கோல மிருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன் ஓவிநல்லார்
எழுதிய தாமரை யன்னகண்ணும்
ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

மேவியெ பாலும்விண் ணோர்வணங்க
வேத முரைப்பர்மு நீர்மடந்தை
தேவிஅ பாலதிர் சங்கமிப்பால்
சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்
காவியொ பார்க்கட லேயுமொப்பார்
கண்ணும் வடிவும் நெடியராய்என்
ஆவியொ பாரிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி
வாய்திற தொன்று பணித்ததுண்டு
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்
நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்
நீள்முடி மாலை வயிரமேகன்
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி
அட்ட புயகர தாதிதன்னை
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
காமரு சீர்க்கலி கன்றிகுன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே

சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை
யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
பல்லவன் வில்லவ னென்றுல கில்பல
ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
பல்லவன் மல்லையர் கோன்பணிநத பர
மேச்சுர விண்ணக ரமதுவே

கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட
ரும்நில னும்மலை யும்தன்னுந்தி
தார்மன்னு தாமரை கண்ணனி டம்தட
மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி
தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு
வில்திறல் வாட்டிய திண்சிலையோன்
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர
மேச்சுர விண்ணக ரமதுவே

உரந்தரு மெல்லணை பள்ளிகொண் டானொரு
கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்
வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு
வாயி லுகச்செரு வில்முனநாள்
பரந்தவன் பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

அண்டமு மெண்டிசை யும்நில னுமலை
நீரொடு வானெரி கால்முதலா
உண்டவன் எந்தைபி ரானதி டமொளி
மாடங்கள் சூந்தழ காயகச்சி
விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரை
தாரிரி யச்செரு வில்முனைந்து
பண்டொரு கால்வளை தான்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

தூம்புடை திண்கைவன் தாள்களிற் றின்துயர்
தீர்த்தர வம்வெருவமுனநாள்
பூம்புனல் பொய்கைபு கானவ னுக்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசை
பச்செரு மேல்வி தன்றுசென்ற
பாம்புடை பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

திண்படை கோளரி யினுரு வாய்த்திற
லோனக லம்செரு வில்முனநாள்
புண்பட போழ்ந்த பிரானதி டம்பொரு
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
வெண்குடை நீழல்செங் கோல்நட பவிடை
வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த
பண்புடை பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

இலகிய நீண்முடி மாவலி தன்பெரு
வேள்வியில் மாணுரு வாய்முனநாள்
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி
மாமதிள் சூழ்கரு வூர்வெருவ
பலபடை சாயவென் றான்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங்
கைப்படை யாமலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு
வச்செரு வேல்வலங் கைப்பிடித்த
படைத்திறல் பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
முன்னொரு கால்செரு வில்லுருமின்
மறையுடை மால்விடை யேழடர தாற்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்
போல முழங்கும் குரல்கடுவாய்
பறையுடை பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

பார்மன்னு தொல்புகழ பல்லவர் கோன்பணி
தபர மேச்சுர விண்ணகர்மேல்
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை
வன்கலி கன்றிகுன் றாதுரைத்த
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்த்திரு
மாமகள் தன்னரு ளால்உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு
நீருல காண்டு திகழ்வர்களே

மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்
வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை தென்பால்
தூயநான் மறையாளர் சோமு செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம்கொண் டமரர்த்தொழ பணங்கொள்பாம்பில்
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
தாமிருவ ரடிவருடும் தன்மை யானை
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வ
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

கொழுந்தலரு மலர்ச்சோலை குழாங்கொள் பொய்கை
கோள்முதலை வாளெயிற்று கொண்டற்கெள்கி
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி
அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை
எழுந்தமலர கருநீல மிருந்தில் காட்ட
இரும்புன்னை முத்தரும்பி செம்பொன்காட்ட
செழுந்தடநீர கமலம்தீ விகைபோல் காட்டும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

தாங்கரும்போர் மாலிபட பறவை யூர்ந்து
தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை
ஆங்கரும்பி கண்ணீர்சோர தன்பு கூரும்
அடியவர்க காரமுத மானான் றன்னை
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை
குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

கறைவளர்வேல் கரன்முதலா கவந்தன் வாலி
கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்
பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை
மறைவளர புகழ்வளர மாட தோறும்
மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்
குண்டானை கண்டாய்ச்சி யுரலோ டார்க்க
தறியார்ந்த கருங்களிறே போல நின்று
தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு
வியன்கலையெண் தோளினாள் விளங்கு செல்வ
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

இருங்கைம்மா கரிமுனிந்து பரியை கீறி
இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு
வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை
கருங்கமுகு பசும்பாளை வெண்மு தீன்று
காயெல்லாம் மரகதமா பவளங் காட்ட
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலை
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

பாரேறு பெரும்பார தீர பண்டு
பாரதத்து தூதியங்கி பார்த்தன் செல்வ
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
செருக்களத்து திறலழி செற்றான்றன்னை
போரேறொன் றுடையானு மளகை கோனும்
புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வ
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்க கருள்புரியுங் கருத்தி னானை
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல
மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வ
திருக்கோவ லூரதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்
காரணங்க லாலுகங் கலந்தங கேத்த
கரந்தெங்கும் பரந்தானை காண்பர் தாமே
பெரிய திருமொழி மூன்றாம் பத்து

இருந்தண் மாநில மேனம தாய்வளை
மருப்பினி லகத்தொடுக்கி
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி இன்னிசை முரன்றெழும் அளிகுலம்
பொதுளியம் பொழிலூடே
செருந்தி நாண்மலர் சென்றணை துழிதரு
திருவயி திரபுரமே

மின்னு மாழியங் கையவன் செய்யவள்
உறைதரு திருமார்பன்
பன்னு நான்மறை பலபொரு ளாகிய
பரனிடம் வரைச்சாரல்
பின்னு மாதவி பந்தலில் பெடைவர
பிணியவிழ் கமலத்து
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு
திருவயி திரபுரமே

வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்
மெய்தகு வரைச்சாரல்
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட
செய்ய தாமரை செழும்பணை திகழ்தரு
திருவயி திரபுரமே

மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்
மார்பக மிருபிளவா
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்
கொடுத்தவ னிடம்மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை
விசும்புற மணிநீழல்
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்
திருவயி திரபுரமே

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட மளந்து ஆயர்
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்
பொன்மலர் திகழ்வேங்கை
கோங்கு செண்ப கொம்பினில் குதிகொடு
குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு
திருவயி திரபுரமே

கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்
திறத்திளங் கொடியோடும்
கானு லாவிய கருமுகில் திருநிற
தவனிடம் கவினாரும்
வானு லாவிய மதிதவழ் மால்வரை
மாமதிள் புடைசூழ
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய
திருவயி திரபுரமே

மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
விலங்கலின் மிசையிலங்கை
மன்னன் நீண்முடி பொடிசெய்த மைந்தன
திடம்மணி வரைநீழல்
அன்ன மாமல ரரவிந தமளியில்
பெடையொடு மினிதமர
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்
திருவயி திரபுரமே

விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்
வில்லிறுத்து அடல்மழைக்கு
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்
நிலவிய இடம்தடமார்
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு
திருவயி திரபுரமே

வேல்கொள் கைத்தல தரசர்வெம் போரினில்
விசயனு காய்மணித்தேர
கோல்கொள் கைத்தல தெந்தைபெம் மானிடம்
குலவுதண் வரைச்சாரல்
கால்கொள் கண்கொடி கையெழ கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயி திரபுரமே

மூவ ராகிய வொருவனை மூவுல
குண்டுமிழ தளந்தானை
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்
திருவயி திரபுரத்து
மேவு சோதியை வேல்வல வன்கலி
கன்றி விரித்துரைத்த
பாவு தண்டமிழ் பத்திவை பாடிட
பாவங்கள் பயிலாவே

ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு
உடலிற் பிரியா புலனைந்தும் நொந்து
தாம்வாட வாட தவம்செய்ய வேண்டா
தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞை கணமாட மாடே
கயலாடு கானீர பழனம் புடைபோய்
தேனாட மாட கொடியாடு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் கர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா
திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்க புகழோங்கு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

வெம்பும் சினத்து புனக்கேழ லொன்றாய்
விரிநீர் முதுவெள்ள முள்பு கழுந்த
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

அருமா நிலமன் றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
பிறவி துயர்நீங்கு துமென்ன கிற்பீர்
கருமா கடலுள் கிடந்தா னுவந்து
கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்
திருமால் திருமங் கையொடாடு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

கோமங்க வங கடல்வைய மு
குலமன்ன ரங்கம் மழுவில் துணிய
தாமங் கமருள் படைதொட்ட வென்றி
தவமா முனியை தமக்காக்க கிற்பீர்
பூமங்கை தங்கி புலமங்கை மன்னி
புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
துணி பணிகொண் டணியார்ந்துஇலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம்
மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான்
அருமா மறை தணர்சி தைபுக
செவ்வா கிளிநான் மறைபாடு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து
மகரம் சுழல சுழல்நீர் பயந்த
தெய்வ திருமா மலர்மங்கை தங்கு
திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்
தெய்வ புனல்சூழ தழகாய தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

மாவாயி னங்கம் மதியாது கீறி
மழைமா முதுகுன் றெடுத்துஆயர் தங்கள்
கோவாய் நிரைமே துலகுண்ட மாயன்
குரைமா கழல்கூ டும்குறி புடையீர்
மூவா யிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

செருநீல வேற்கண் மடவார் திறத்து
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அருநீல பாவ மகல புகழ்சேர்
அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்
பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்
வித்தும் வயலுள் கயல்பா துகள
திருநீல நின்று திகழ்கின்ற தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

சீரார் பொழில்சூழ தழகாய தில்லை
திருசித்ர கூட துறைசெங்கண் மாலுக்கு
ஆராத வுள்ள தவர்க்கே டுவப்ப
அலைநீ ருலகு கருளே புரியும்
காரார் புயற்கை கலிகன்றி குன்றா
ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்
பாரா ருலக மளந்தா னடிக்கீழ
பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே

வாட மருதிடை போகி
மல்லரை கொன்றொக்க லிட்டிட்டு
ஆடல்நல் மாவுடை தாயர்
ஆநிரை கன்றிடர் தீர்ப்பான்
கூடிய மாமழை காத்த
கூத்த னெனெவரு கின்றான்
சேடுயர் பூம்பொழில் தில்லை
சித்திர கூடத்துள் ளானே

பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
பிள்ளை பரிசிது வென்றால்
மாநில மாமகள் மாதர்
கேள்வ னிவனென்றும் வண்டுண்
பூமகள் நாயக னென்றும்
புலங்கெழு கோவியர் பாடி
தேமலர் தூவ வருவான்
சித்திர கூடத்துள் ளானே

பண்டிவன் வெண்ணெயுண் டானென்
றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க
இணைமரு தூடு நடந்திட்டு
அண்டரும் வான தவரு
மாயிர நாமங்க ளோடு
திண்டிறல் பாட வருவான்
சித்திர கூடத்துள் ளானே

வளைக்கை நெடுங்கண் மடவா
ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப
தளைத்தவிழ் தாமரை பொய்கை
தண்தடம் புக்கண்டர் காண
முளைத்த எயிற்றழல் நாக
துச்சியில் நின்றது வாட
திலைத்தமர் செய்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே

பருவ கருமுகி லொத்து
முட்டுடை மாகட லொத்து
அருவி திரள்திகழ் கின்ற
வாயிரம் பொன்மலை யொத்து
உருவ கருங்குழ லாய்ச்சி
திறத்தின மால்விடை செற்று
தெருவில் திளைத்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே

சிதைந்த திலங்கை
மலங்க வருமழை காப்பான்
பருவரை தாங்கி
ஆநிரை காத்தானென் றேத்தி
வை தெவரும் வணங்க
அணங்கெழு மாமலை போலே
தெய்வப்புள் ளேறி வருவான்
சித்திர கூடத்துள் ளானே

ஆவ ரிவைசெய் தறிவார்
அஞ்சன மாமலை போலே
மேவு சினத்தடல் வேழம்
வீழ முனிந்துஅழ காய
காவி மலர்நெடுங் கண்ணார்
கைதிழ வீதி வருவான்
தேவர் வணங்குதண் தில்லை
சித்திர கூடத்துள் ளானே

பொங்கி யமரி லொருகால்
பொன்பெய ரோனை வெருவ
அங்கவனாக மளைந்தி
டாயிர தோளெழு தாட
பைங்க ணிரண்டெரி கான்ற
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்
சிங்க வுருவில் வருவான்
சித்திர கூடத்துள் ளானே

கருமுகில் போல்வதோர் மேனி
கையன வாழியும் சங்கும்
பெருவிறல் வானவர் சூழ
ஏழுல கும்தொழு தேத்த
ஒருமக ளாயர் மடந்தை
யொருத்தி நிலமகள் மற்றை
திருமக ளோடும் வருவான்
சித்திர கூடத்துள் ளானே

தேனமர் பூம்பொழில் தில்லை
சித்திர கூட மமர்ந்த
வானவர் தங்கள் பிரானை
மங்கையர் கோன்மரு வார்
ஊனமர் வேல்கலி கன்றி
யொண்டமி ழொன்பதோ டொன்றும்
தானிவை கற்றுவல் லார்மேல்
சாராதீவினைதானே

ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி
உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியை சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்
அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை
ஒளிமலர்ச்கே வடியணைவீர் உழுசே யோட
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தை
தொல்குருகு சினையென்ன சூழ்ந்தி யங்க
தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

வையணைந்த திக்கோட்டு வராக மொன்றாய்
மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோ ள்
நேர்ந்தவந்தா ளணைகிற்பீர் நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்
மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்
செய்யணைந்து களைகளையா தேறும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்
பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட
நின்மலந்தா ளணைகிற்பீர் நீல மாலை
தஞ்சுடைய விருள்தழைப்ப தரள மாங்கே
தண்மதியின் நிலாக்காட்ட பவள தன்னால்
செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
திருக்குலத்தி லிறந்தோர்க்கு திருத்தி செய்து
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட
விண்ணவர்க்கோன் தாளணைவீர் விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட
அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாள
படர்வனத்து கவந்தனொடும் படையார்த்திண்கை
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த
விண்ணவர்க்கோன் தாளணைவீர் வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்
துடியிடையார் முகக்கமல சோதி தன்னால்
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்
புற்றுமறி தனபோல புவிமேல் சிந்த
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்
திருவடிசேர துய்கிற்பீர் திரைநீர தெள்கி
மருவிவலம் புரிகைதை கழியூ டாடி
வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
தெருவில்வலம் புரிதரள மீனும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பட்டரவே ரகலல்குல் பவள செவ்வாய்
பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
மரங்கொணர்ந்தா னடியணைவீர் அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு பீன
தெட்டபழம் சிதைந்துமது சொரியும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
கலந்தவந்தா ளணைகிற்பீர் கழுநீர் கூடி
துறைதங்கு கமலத்து துயின்று கைதை
தோடாரும் பொதிசோற்று சுண்ணம்நண்ணி
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

செங்கமல தயனனைய மறையோர் காழி
சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமல தடவயல்சூ ழாலி நாடன்
அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர குழலியர்வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்கமுக தமிழ்மாலை பத்தும் வல்லார்
தடங்கடல்சூ ழுலகுக்கு தலைவர் தாமே

வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும்என்
சிந்தனை கினியாய் திருவே என் னாருயிரே
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
கலந்து அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே

நீல தடவரை மாமணி நிகழ
கிடந்ததுபோல் அரவணை
வேலை தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்
சோலை தலைக்கண மாமயில் நடமாட
மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலை புகைகமழும் அணியாலி யம்மானே

நென்னல்போய் வருமென்றென் றெண்ணி
யிராமையென் மனத்தே புகுந்தது
இம்மை கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்
செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார்
முகத்தெழு வாளைபோய் கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே

மின்னில் மன்னு டங்கிடை மடவார்தம்
சிந்தை மறந்து வந்துநின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்
வாயகன் பணைகள் கலந்தெங்கும்
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே

நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி
தொழுதேத்தும் என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா
பாட லின்னொலி சங்கி நோசை பரந்து
பல்பணை யால்மலிந்து எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே

கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்
சேவடி கைதொழுதெழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகலொட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
ஓதி யோதுவி தாதி யாய்வரும்
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே

உலவுதிரை கடற்பள்ளி கொண்டு வந்துன்
அடியேன் மனம்புகுந்தஅ
புலவ புண்ணிய னேபுகு தாயை போகலொட்டேன்
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்
தண்டாமரை மலரின் மிசைமலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே

சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை
யுள்கிடந்தாய் அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி
இன்னிள வண்டு போய்இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே

ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி
நின்னடை தேற்குஒரு பொருள்
வேதியா அரையாஉரையாய் ஒருமாற்றமெந்தாய்
நீதி யாகிய வேதமா முனியாளர்
தோற்ற முரைத்து மற்றவர
காதியாய் இருந்தாய் அணியாலி யம்மானே

புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
தென்னாலி யொருந்த மாயனை
கல்லின் மன்னு திண்டோ ள் கலிய னொலிசெய்த
நல்ல இன்னிசை மாலை நாலுமோ
ரைந்துமொன் றும்நவின்று தாமுடன்
வல்ல ராயுரை பார்க்கிட மாகும் வானுலகே

தூவிரிய மலருழக்கி
துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும்
பொறிவரிய சிறுவண்டே
தீவிரிய மறைவளர்க்கும்
புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானு
கென்னிலைமை யுரையாயே

பிணியவிழு நறுநீல
மலர்க்கிழி பெடையோடும்
அணிமலர்மேல் மதுநுகரும்
அறுகால சிறுவண்டே
மணிகெழுநீர் மருங்கலரும்
வயலாலி மணவாளன்
பணியறியேன் நீசென்றென்
பயலைநோ யுரையாயே

நீர்வானம் மண்ணெரிகா
லாய்நின்ற நெடுமால்தன்
தாராய நறுந்துளவம்
பெருந்தகையெற் கருளானே
சீராரும் வளர்ப்பொழில்சூழ்
திருவாலி வயல்வாழும்
கூர்வாய சிறுகுருகே
குறிப்பறிந்து கூறாயே

தானாக நினையானேல்
தன்னினைந்து நைவேற்குஓர்
மீனாய கொடிநெடுவேள்
வலிசெய்ய மெலிவேனோ
தேன்வாய வரிவண்டே
திருவாலி நகராளும்
ஆனாயற் கென்னுறுநோ
யறியச்சென் றுரையாயே

வாளாய கண்பனிப்ப
மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து
நைவேற்குஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை
நகராளா வரையெடுத்த
தோளாளா என்றனக்கோர்
துணையாள னாகாயே

தாராய தண்டுளவ
வண்டுழுத வரைமார்பன்
போரானை கொம்பொசித்த
புட்பாக னென்னம்மான்
தேராரும் நெடுவீதி
திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய
கனவளையும் கவர்வானோ

கொண்டரவ திரையுலவு
குரைகடல்மேல் குலவரைபோல்
பண்டரவி னணைக்கிடந்து
பாரளந்த பண்பாளா
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ்
வயலாலி மைந்தாஎன்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
கனவளையும் கடவேனோ

குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்
தண்குடந்தை குடமாடி
துயிலாத கண்ணிணையேன்
நின்னினைந்து துயர்வேனோ
முயலாலு மிளமதிக்கே
வளையிழந்தேற்கு இதுநடுவே
வயலாலி மணவாளா
கொள்வாயோ மணிநிறமே

நிலையாளா நின்வணங்க
வேண்டாயே யாகினும்என்
முலையாள வொருநாளுன்
னகலத்தால் ஆளாயே
சிலையாளா மரமெய்த
திறலாளா திருமெய்ய
மலையாளா நீயாள
வளையாள மாட்டோ மே

மையிலங்கு கருங்குவளை
மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழி
படையானை நெடுமாலை
கையிலங்கு வேல்கலியன்
கண்டுரைத்த தமிழ்மாலை
ஐயிரண்டு மிவைவல்லார
கருவினைக ளடையாவே

கள்வன்கொல் யானறியேன்
கரியானொரு காளைவந்து
வள்ளிமருங் குலென்றன்
மடமானினை போதவென்று
வெள்ளிவளை கைப்பற்ற
பெற்றதாயரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி
யணியாலி புகுவர்க்கொலோ

பண்டிவ னாயன்நங்காய்
படிறன்புகுந்து என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்
நுகர்ந்தானை யுகந்துஅவன்பின்
கெண்டையொண் கண்மிளிர
கிளிபோல்மிழற் றிநடந்து
வண்டமர் கானல்மல்கும்
வயலாலி புகுவர்க்கொலோ

அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்
அரக்கர்க்குல பாவைதன்னை
வெஞ்சின மூக்கரிந்த
விறலோந்திறங் கேட்கில்மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம்
பணைத்தோளி பரக்கழிந்து
வஞ்சி தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ

ஏதுஅவன் தொல்பிறப்பு
இளைய வன்வளை யூதிமன்னர்
தூதுவ னாயவனூர்
சொலுவீர்கள் சொலீரறியேன்
மாதவன் தந்துணையா
நடந்தாள்தடஞ் சூழ்புறவில்
போதுவண் டாடுசெம்மல்
புனலாலி புகுவர்க்கொலோ

தாயெனை யென்றிரங்காள்
தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை
மதித்தென்னை யகன்றைவள்
வேயன தோள்விசிறி
பெடையன்ன மெனநடந்து
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர்க்கொலோ

எந்துணை யென்றெடுத்தேற்
கிறையேனு மிரங்கிற்றிலள்
தன்துணை யாயவென்றன்
தனிமைக்கு மிரங்கிற்றிலள்
வன்துணை வானவர்க்காய்
வரஞ்செற்றரங் கத்துறையும்
இந்துணை வன்னொடும்போ
யெழிலாலி புகுவர்க்கொலோ

அன்னையு மத்தனுமென்
றடியோமு கிரங்கிற்றிலள்
பின்னைதன் காதலன்றன்
பெருந்தோள்நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும்
வென்றிலங்கு மிடையாள்நடந்து
புன்னையும் அன்னமும்சூழ்
புனலாலி புகுவர்க்கொலோ

முற்றிலும் பைங்கிளியும்
பந்துமூசலும் பேசுகின்ற
சிற்றில்மென் பூவையும்வி
டகன்றசெழுங் கோதைதன்னை
பெற்றிலேன் முற்றிழையை
பிறப்பிலிபின் னேநடந்து
மற்றெல்லாம் கைதொழப்போய்
வயலாலி புகுவர்க்கொலோ

காவியங் கண்ணியெண்ணில்
கடிமாமலர பாவையொப்பாள்
பாவியேன் பெற்றமையால்
பணைத்தோளி பரக்கழிந்து
தூவிசே ரன்னமன்ன
நடையாள்நெடு மாலொடும்போய்
வாவி தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ

தாய்மனம் நின்றிரங்க
தனியேநெடு மால்துணையா
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவரென்று
காய்சின வேல்கலிய
னொலிசெய்தமிழ் மாலைபத்தும்
மேவிய நெஞ்சுடையார்
தஞ்சமாவது விண்ணுலகே

நந்தா விளக்கே அளத்தற் கரியாய்
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய் எமக்கே யருளாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்எ திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே
களிவண் டுமிழற் றநிழல் துதைந்து
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

முதலை தனிமா முரண்தீர வன்று
முதுநீர தடத்து செங்கண்வேழ முய்ய
விதலை தலைச்சென் றதற்கே யுதவி
வினைதீர்த்த வம்மானிடம்விண்ணணவும்
பதலை கபோ தொளிமாட நெற்றி
பவள கொழுங்கால் பைங்கால் புறவம்
மதலை தலைமென் பெடைகூடு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
கொடுமா முதலை கிடர்செய்து கொங்கார்
இலைப்புண்ட ரீக தவளின்ப மன்போ
டணைந்திட்ட வம்மானிடம்ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
அணிமுத்தும் வெண்சா மரையோடுபொன்னி
மலைப்பண்ட மண்ட திரையுந்து நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
திசைநான்கும் நான்கு மிரிய செருவில்
கறையார் நெடுவே லரக்கர் மடி
கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்
மறையோர் வணங்க புகழெய்து நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

இழையாடு கொங்கை தலைநஞ்ச முண்டிட்டு
இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து
தழைவாட வந்தாள் குருந்த மொசித்து
தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்
குழையாட வல்லி குலமாடமாடே
குயில்கூவ நீடு கொடிமாட மல்கு
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

பண்ணேர் மொழியா சியரஞ்ச வஞ்ச
பகுவா கழுது கிரங்காது அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும்
உடனே சுவைத்தா நிடம்ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகி
கழுநீரில் மூழ்கி செழுநீர தடத்து
மண்ணே திளமேதி கள்வைகு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

தளைக்க டவிழ்தா மரைவைகு பொய்கை
தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்
இளைக்க திளைத்தி டதனுச்சி தன்மேல்
அடிவைத்த அம்மா னிடம்மாமதியம்
திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்றுமூன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும் முற்றா
விளையார் விளையா டொடுகாதல் வெள்ளம்
விளைவித்த வம்மானிடம்வேல் நெடுங்கண்
முளைவாளெயிற்று மடவார் பயிற்று
மொழிகே டிருந்து முதிராதவின்சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த
விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்
படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்பை தடத்து
பெடையோடு செங்கால வன்னம் துகைப்ப
தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

வண்டார் பொழில்சூழ தழகாய நாங்கூர்
மணிமாட கோயில் நெடுமாலுக்குஎன்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்
கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்
கண்டார் வணங களியானை மீதே
கடல்சூ ழுலகு கொருகா வலராய்
விண்டோ ய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
விரிநீ ருலகாண் டுவிரும் புவரே

சலங்கொண்ட இரணியன
தகல்மார்வம் கீண்டு
தடங்கடலை கடைந்தமுதங்
கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில்போல்
திருமேனி யம்மான்
நாடோ றும் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
சலங்கொண்டு மலர்சொரியும்
மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி
விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

திண்ணியதோ ரரியுருவா
திசையனைத்தும் நடுங்க
தேவரொடு தானவர்கள்
திசைப்பஇரணியனை
நண்ணியவன் மார்வகல
துகிர்மடுத்த நாதன்
நாடோ றும் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
எண்ணில்மிகு பெருஞ்செல்வ
தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்
மண்ணில்மிகு மறையவர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன்
அரன்கொண்டு திரியும்
முண்டமது நிறைத்தவன்கண்
சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
எண்டிசையும் பெருஞ்செந்ந
லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ
டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாட
மயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

கலையிலங்கு மகலல்குல்
அரக்கர்க்குல கொடியை
காதொடுமூ குடனரி
கதறியவ ளோடி
தலையிலங்கை வைத்துமலை
யிலங்கைபுக செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
சிலையிலங்கு மணிமாட
துச்சிமிசை சூலம்
செழுங்கொண்ட லகடிரி
சொரிந்தசெழு முத்தம்
மலையிலங்கு மாளிகைமேல்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

மின்னனைய ண்மருங்குல்
மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன்
றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம்
சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து
கழனிதிகழ தெங்கும்
மன்னுபுகழ் வேதியர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

பெண்மைமிகு வடிவுகொடு
வந்தவளை பெரிய
பேயினது உருவுகொடு
மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற்
சகடமிறு தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
உண்மைமிகு மறையொடுநற்
கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி
னொழிவில்லா பெரிய
வண்மைமிகு மறையவர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

விளங்கனியை யிளங்கன்று
கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள்
வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ்
வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோ றும்
மருவியுறை கோயில்
இளம்படிநற் கமுகுகுலை
தெங்குகொடி செந்நெல்
ஈன்கரும்பு கண்வளர
கால்தடவும் புனலால்
வளங்கொண்ட பெருஞ்செல்வம்
வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

ஆறாத சினத்தின்மிகு
நரகனுர மழித்த
அடலாழி தடக்கையன்
அலர்மகட்கும் அரற்கும்
கூறா கொடுத்தருளும்
திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
மாறாத மலர்க்கமலம்
செங்கழுநீர் ததும்பி
மதுவெள்ள மொழுகவய
லுழவர்மடை யடைப்ப
மாறாத பெருஞ்செல்வம்
வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வங்கமலி தடங்கடலுள்
வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி
மாமலர்கள் தூவி
எங்கள்தனி நாயகனே
எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
செங்கயலும் வாளைகளும்
செந்நெலிடை குதிப்ப
சேலுகளும் செழும்பணைசூழ்
வீதிதொறும் மிடைந்து
மங்குல்மதி யகடுரிஞ்சு
மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

சங்குமலி தண்டுமுதல்
சக்கரமுனேந்தும்
தாமரைக்கண் நெடியபிரான்
தானமரும் கோயில்
வங்கமலி கடலுலகில்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல்
வண்டறையும் பொழில்சூழ்
மங்கையர்தம் தலைவன்மரு
வலர்தமுடல் துணிய
வாள்வீசும் பரகாலன்
கலிகன்றி சொன்ன
சங்கமலி தமிழ்மாலை
பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும்
தன்மைபெறு வாரே

திருமடந்தை மண்மடந்தை
யிருபாலும் திகழ
தீவினைகள் போயகல
அடியவர்க கென்றும்
அருள்நடந்துஇவ் வேழுலக
தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு
கைதைகள்செங கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு
மிடங்கடொறும் திகழ
அருவிடங்கள் பொழில்தழுவி
யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வென்றிமிகு நரகனுர
மதுவழிய விசிறும்
விறலாழி தடக்கையன்
விண்ணவர்கட்கு அன்று
குன்றுகொடு குரைகடலை
கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம்
குலவியுறை கோயில்
என்றுமிகு பெருஞ்செல்வ
தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்
அன்றுலகம் படைத்தவனே
யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

உம்பருமிவ் வேழுலகு
மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன்
கண்டுமகிழ வெய்த
கும்பமிகு மதயானை
மருப்பொசித்து கஞ்சன்
குஞ்சிபிடி தடித்தபிரான்
கோயில்மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம்
பலபுன்னை காட்ட
பலங்கனிகள் தேன்காட்ட
படவரவே ரல்குல்
அம்பனைய கண்மடவார்
மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

ஓடாத வாளரியி
னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த
விரணியனை பற்றி
வாடாத வள்ளுகிரால்
பிளந்தவன்றன் மகனு
கருள்செய்தான் வாழுமிடம்
மல்லிகைசெங் கழுநீர்
சேடேறு மலர்ச்செருந்தி
செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே
ஆடேறு வயலாலை
புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

கண்டவர்தம் மனம்மகிழ
மாவலிதன் வேள்வி
களவில்மிகு சிறுகுறளாய்
மூவடியென் றிரந்திட்டு
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அளந்தபிரா னமருமிடம்
வளங்கொள்பொழி லயலே
அண்டமுறு முழவொலியும்
வண்டினங்க ளொலியும்
அருமறையி னொலியும்மட
வார்சிலம்பி னொலியும்
அண்டமுறு மலைகடலி
னொலிதிகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வாணெடுங்கண் மலர்க்கூந்தல்
மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர
தாணெடுந்தின் சிலைவளைத்த
தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு
கருதுமிடம் தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம்
சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய
வுதிர்ந்தசெழு முத்தம்
வாணெடுங்கண் கடைசியர்கள்
வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

தீமனத்தான் கஞ்சனது
வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத
னாருயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்தகரு
மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல்
துறைதுறைமு துந்தி
நாமனத்தால் மந்திரங்கள்
நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம்
நவின்றுகலை பயின்றுஅங்
காமனத்து மறையவர்கள்
பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

கன்றதனால் விளவெறிந்து
கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன்
காலிகள்முன் காப்பான்
குன்றதனால் மழைதடுத்து
குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள்
மாளிகைகோ புரங்கள்
துன்றுமணி மண்டபங்கள்
சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டி தொழுதியொடு
மிகப்பயிலும் சோலை
அன்றலர்வாய் மதுவுண்டங்
களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வஞ்சனையால் வந்தவள்த
னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு
துண்டுவலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ்
வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிச
தகில்கனக முந்தி
மஞ்சுலவு பொழிலூடும்
வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர்
மாமலர்கள் தூவி
அஞ்சலித்தங் கரிசரணென்
றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

சென்றுசின விடையேழும்
படவடர்த்து பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த
திருமால்தன் கோயில்
அன்றயனு மரன்சேயு
மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர
மமர்ந்தசெழுங் குன்றை
கன்றிநெடு வேல்வலவன்
மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை
யைந்தினொடு மூன்றும்
ஒன்றினொடு மொன்றுமிவை
கற்றுவல்லார் உலக
துத்தமர்க குத்தமரா
யும்பருமா வர்களே
பெரிய திருமொழி நான்காம் பத்து

போதலர்ந்த பொழில்சோலை
புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும்
தடமண்ணி தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம்
வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும்
திருத்தேவ னார்தொகையே

யாவருமா யாவையுமா
யெழில்வேத பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய
மூர்த்தியமர துறையுமிடம்
மாவரும்திண் படைமன்னை
வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
திருத்தேவ னார்தொகையே

வானாடும் மண்ணாடும்
மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான்
தலைவனமர துறையுமிடம்
ஆனாத பெருஞ்செல்வ
தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே

இந்திரனு மிமையவரும்
முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர சதுமுகனும்
கதிரவனும் சந்திரனும்
எந்தையெ கருள் எனநின்
றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே

அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம்
ஓளிமணிச தகில்கனகம்
தெண்டிரைகள் வரத்திரட்டும்
திகழ்மண்ணி தென்கரைமேல்
திண்திறலார் பயில்நாங்கை
திருத்தேவ னார்தொகையே

ஞாலமெல்லா மமுதுசெய்து
நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில்
பள்ளிகொள்ளும் பரமனிடம்
சாலிவளம் பெருகிவரும்
தடமண்ணி தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கை
திருத்தேவ னார்தொகையே

ஓடாத வாளரியி
னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால்
பிளந்தளைந்த மாலதிடம்
ஏடேறு பெருஞ்செல்வ
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
சேடேறு பொழில்தழுவு
திருத்தேவ னார்தொகையே

வாராரு மிளங்கொங்கை
மைதிலியை மணம்புணர்வான்
காரார்திண் சிலையிறுத்த
தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வ
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
சீராரும் மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே

கும்பமிகு மதயானை
பாகனொடும் குலைந்துவிழ
கொம்பதனை பறித்தெறிந்த
கூத்தனமர துறையுமிடம்
வம்பவிழும் செண்பகத்தின்
மணங்கமழும் நாங்கைதன்னுள்
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே

காரார்ந்த திருமேனி
கண்ணனமர துறையுமிடம்
சீரார்ந்த பொழில்நாங்கை
திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன்
கூறுதமிழ் பத்தும்வல்லார்
எரார்ந்த வைகுந
திமையவரோ டிருப்பாரே

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து அரசவன் தம்பிக்கு
அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறி
காளியன் பணவரங்கில்
ஒல்லை வந்துற பாய்ந்தரு நடஞ்செய்த
உம்பர்க்கோ னுறைகோயில்
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
வேள்வியோ டாறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன்
உகந்தினி துறைகோயில்
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
குலமயில் நடமாட
வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

பருங்கை யானையின் கொம்பினை பறித்ததன்
பாகனை சாடிப்புக்கு
ஒறுங்க மல்லரை கொன்றுபின் கஞ்சனை
உதைத்தவ னுறைகோயில்
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

சாடு போய்விழ தாள்நிமிர தீசன்தன்
படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிர தோள்களும்
துணித்தவ னுறைகோயில்
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போ
பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
அலர்கொடு தொழுதேத்த
கங்கை போதர கால்நிமிர தருளிய
கண்ணன்வ துறைகோயில்
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
காட்டமா பதுமங்கள்
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
துரம்பிள துதிரத்தை
அளையும் வெஞ்சின தரிபரி கீறிய
அப்பன்வ துறைகோயில்
இளைய மங்கைய ரிணையடி சிலம்பினோ
டெழில்கொள்ப தடிப்போர்கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

வாளை யார்தட கண்ணுமை பங்கன்வன்
சாபமற் றதுநீங்க
மூளை யார்சிர தையமுன் அளித்தவெம்
முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்
பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

இந்து வார்சடை யீசனை பயந்தநான்
முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசை படைத்தவன்
உகந்தினி துறைகோயில்
குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன்
குருளையை தழுவிப்போய்
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
வண்புரு டோ த்தமத்துள்
அண்ணல் சேவடி கீழடை துய்ந்தவன்
ஆலிமன் அருள்மாரி
பண்ணு ளார்தர பாடிய பாடலி
பத்தும்வல் லார்உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
ரோடும் கூடுவரே

பேரணி துலக தவர்தொழு தேத்தும்
பேரரு ளாளனெம் பிரானை
வாரணி முலையாள் மலர்மக ளோடு
மண்மக ளுமுடன் நிற்ப
சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
காரணி மேகம் நின்றதொ பானை
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னை
பேதியா வின்பவெள் ளத்தை
இறப்பெதிர் கால கழிவுமா னானை
ஏழிசை யின்சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
மறைப்பெரும் பொருளை வானவர் கோனை
கண்டுநான் வாழ்ந்தொழி தேனே

திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
செழுநில துயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை
பங்க தயனவ னனைய
திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

வசையறு குறளாய் மாவலி வேள்வி
மண்ணள விட்டவன் றன்னை
அசைவறு மமர ரடியிணை வணங்க
அலைகடல் துயின்றவம் மானை
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
உயர்மணி மகுடம் சூடிநின் றானை
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

தீமன தரக்கர் திறலழி தவனே
என்றுசென் றடைந்தவர் தமக்கு
தாய்மன திரங்கி யருளினை கொடுக்கும்
தயரதன் மதலையை சயமே
தேமலர பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
காமனை பயந்தான் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
கலங்கவோர் வாளிதொ டானை
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
கண்டுகொண் டல்லல்தீர தேனே

வெஞ்சின களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டிறு தடர்த்தவன் றன்னை
கஞ்சனை காய்ந்த காளையம் மானை
கருமுகில் திருநிற தவனை
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
அஞ்சன குன்றம் நின்றதொ பானை
கண்டுகொண் டல்லல்தீர தேனே

அன்றிய வாண னாயிரம் தோளும்
துணியவன் றாழிதொ டானை
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேதநல் விளக்கை
தென்திசை திலதம் அனையவர் நாங்கை
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழி தேனே

களங்கனி வண்ணா கண்ணணே என்றன்
கார்முகி லே என நினைந்திட்டு
உளங்கனி திருக்கு மடியவர் தங்கள்
உள்ளத்து ளூறிய தேனை
தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழி தேனே

தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
வானவர் கோனை கண்டமை சொல்லும்
மங்கையார் வாட்கலி கன்றி
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
ஒழிவின்றி கற்றுவல் லார்கள்
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
வானவ ராகுவர் மகிழ்ந்தே

மாற்றரசர் மணிமுடியும்
திறலும் தேசும்
மற்றவர்தம் காதலிமார்
குழையும் தந்தை
கால்தளையு முடன்கழல
வந்து தோன்றி
கதநாகம் காத்தளித்த
கண்ணர் கண்டீர்
நூற்றிதழ்கொ ளரவிந்தம்
நுழைந்த பள்ள
திளங்கமுகின் முதுபாளை
பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண்முத்தம்
சிந்து நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

பொற்றொடித்தோள் மடமகள்தன்
வடிவு கொண்ட
பொல்லாத வன்பேய்ச்சி
கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய்போல
மடுப்ப ஆரும்
பேணாநஞ் சுண்டுகந்த
பிள்ளை கண்டீர்
நெல்தொடுத்த மலர்நீலம்
நிறைந்த சூழல்
இருஞ்சிறைய வண்டொலியும்
நெடுங்க ணார்தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும்
மிழற்று நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

படலடைந்த சிறுகுரம்பை
நுழைந்து புக்கு
பசுவெண்ணெய் பதமார
பண்ணை முற்றும்
அடலடர்த்த வேற்கண்ணார்
தோக்கை பற்றி
அலந்தலைமை செய்துழலு
மையன் கண்டீர்
மடலெடுத்த நெடுன்தெங்கின்
பழங்கல் வீழ
மாங்கனிகள் திரட்டுருட்டா
வருநீர பொன்னி
திடலெடுத்து மலர்சுமந்தங்
கிழியு நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

வாராரும் முலைமடவாள்
பின்னை காகி
வளைமருப்பிற் கடுஞ்சினத்து
வன்தா ளார்ந்த
காரார்திண் விடையடர்த்து
வதுவை யாண்ட
கருமுகில்போல் திருநிறத்தென்
கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப்பொழில்கள்
தழுவி யெங்கும்
எழில்மதியை கால்தொடா
விளங்கு சோதி
சீராரு மணிமாடம்
திகழும் நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

கலையிலங்கு மகலல்குல்
கமல பாவை
கதி ர்முத்த வெண்ணகையாள்
கருங்க ணாய்ச்சி
முலையிலங்கு மொளிமணிப்பூண்
வடமும் தேய்ப்ப
மூவாத வரைநெடுந்தோள்
மூர்த்தி கண்டீர்
மலையிலங்கு நிரைச்சந்தி
மாட வீதி
ஆடவரை மடமொழியார்
முகத்து இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண்
டிருக்கும் நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

தான்போலு மென்றெழுந்தான்
தரணி யாளன்
அதுகண்டு தரித்திருப்பா
னரக்கர் தங்கள்
கோன்போலு மென்றெழுந்தான்
குன்ற மன்ன
இருபதுதோ ளுடன்துணித்த
வொருவன் கண்டீர்
மான்போலு மென்னோக்கின்
செய்ய வாயார்
மரகதம் போல் மடக்கிளியை
கைமேல் கொண்டு
தேன்போலு மென்மழலை
பயிற்றும் நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

பொங்கிலங்கு புரிநூலும்
தோலும் தாழ
பொல்லாத குறளுருவா
பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி
யதனுள் புக்கு
மண்ணகலம் குறையிரந்த
மைந்தன் கண்டீர்
கொங்கலர்ந்த மலர்க்குழலார்
கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த
கோல தன்னால்
செங்கலங்கல் வெண்மணல்மேல்
தவழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

சிலம்பினிடை சிறுபரல்போல்
பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்ப
திருவா காரம்
குலுங்க நில மடந்தைதனை
யிடந்து புல்கி
கோட்டிடைவை தருளியவெங்
கோமான் கண்டீர்
இலங்கியநான் மறையனைத்து
மங்க மாறும்
ஏழிசையும் கேள்விகளு
மெண்டி கெங்கும்
சிலம்பியநற் பெருஞ்செல்வம்
திகழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

ஏழுலகும் தாழ்வரையு
மெங்கு மூடி
எண்டிசையு மண்டலமும்
மண்டி அண்டம்
மோழையெழு தாழிமிகும்
ஊழி வெள்ளம்
முன்னகட்டி லொடுக்கியவெம்
மூர்த்தி கண்டீர்
ஊழிதொறு மூழிதொறு
முயர்ந்த செல்வ
தோங்கியநான் மறையனைத்தும்
தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணிமாடம்
திகழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

சீரணிந்த மணிமாடம்
திகழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலை
கூரணிந்த வேல்வலவன்
ஆலி நாடன்
கொடிமாட மங்கையர்கோன்
குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான்
கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து
மைந்தும் வல்லார்
சீரணிந்த வுலகத்து
மன்ன ராகி
சேண்விசும்பில் வானவரா
திகழ்வர் தாமே

தூம்புடை பனைக்கை வேழம்
துயர்கெடு தருளி மன்னு
காம்புடை குன்ற மேந்தி
கடுமழை காத்த எந்தை
பூம்புனல் பொன்னி முற்றும்
புகுந்துபொன் வரண்ட எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர
திருமணி கூட தானே

கவ்வைவா ளெயிற்று வன்பே
கதிர்முலை சுவைத்துஇ லங்கை
வவ்விய இடும்பை தீர
கடுங்கணை துரந்த எந்தை
கொவ்வைவாய் மகளிர் கொங்கை
குங்குமம் கழுவி போந்த
தெய்வநீர் கமழும் நாங்கூர
திருமணி கூட தானே

மாத்தொழில் மடங செற்று
மறுதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்து பின்னை
செவ்வித்தோள் புணர்ந்த எந்தை
நாத்தொழில் மறைவல் லார்கள்
நயந்தறம் பயந்த வண்கை
தீத்தொழில் பயிலும் நாங்கூர
திருமணி கூட தானே

தாங்கருஞ் சினத்து வன்தாள்
தடக்கைமா மருப்பு வாங்கி
பூங்குரு தொசித்து புள்வாய்
பிளந்தெரு தடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்துவண் டிரிய வாழை
தீங்கனி நுகரும் நாங்கூர
திருமணி கூட தானே

கருமக ளிலங்கை யாட்டி
பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை
பெருமகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவி லாத
திருமகள் மருவும் நாங்கூர
திருமணி கூட தனே

கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலு மரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்ல
ஆற்றலு மாய எந்தை
ஓண்டிறல் தென்ன னோட
வடவர சோட்டங் கண்ட
திண்டிற லாளர் நாங்கூர
திருமணி கூட தனே

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு எங்கும்
தென்றல்வ துலவும் நாங்கூர திருமணி கூட தானே

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் தரணி யோம்பும்
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களு மாய