எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
      கலித்தொகை
      -

      . 309
      150 .

      . 2-36
      37-65
      66-100
      101-117
      118-150 .
      2012



      .
      ------------------------------------------------------------------------

      .
      .



      .
      - .
      .
      © 2005


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------
      1 ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
      தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீ மடுத்து
      கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடும் கூளி
      மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி
      படு பறை பல இ பல் உருவம் பெயர்த்து நீ
      கொடுகொட்டி ஆடும்கால் கோடு உயர் அகல் அல்குல்
      கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
      மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
      பண்டரங்கம் ஆடும்கால் பணை எழில் அணை மென்தோள்
      வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ
      கொலை உழுவை தோல் அசைஇ கொன்றைத்தார் சுவல் புரள
      தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால்
      முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ
      என ஆங்கு
      பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
      மாண் இழை அரிவை காப்ப
      ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
      முதலாவது பாலைக்கலி
      ஆசிரியர் பெருங்கொடுங்கோன்
      2 தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக
      அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்
      மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
      கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
      உடன்றக்கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
      சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
      ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர்
      ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை -
      மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய
      இறப்ப துணிந்தனிர் கேண்மின் மற்று ஐய
      தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
      மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் ஆகுமோ
      நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்
      முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
      இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
      கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் ஆகுமோ
      தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள்
      புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
      இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
      கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் ஆகுமோ
      வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
      தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
      என இவள்
      புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல்
      அன்பு அன்று என்று யான் கூற அன்புற்று
      காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்
      யாழ் வரை தங்கியாங்கு தாழ்பு நின்
      தொல்கவின் தொலைதல் அஞ்சி என்
      சொல்வரை தங்கினர் காதலோரே.
      3 அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
      வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் -
      இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க
      பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
      விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி
      உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல
      இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை
      கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை
      அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன.
      வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என
      ஒல்லாங்கு யாம் இரப்பவும் உணர்ந்து ஈயாய் ஆயினை
      செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட
      புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி - தகைப்பன.
      பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
      பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை
      துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அம்மரத்து
      அணி செல வாடிய அம் தளிர் - தகைப்பன.
      என ஆங்கு
      யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை
      ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி
      மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும்
      கானம் - தகைப்ப செலவு.
      4 வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் -
      சுற்றுஅமை வில்லர் சுரி வளர் பித்தையர்
      அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர் தாம்
      கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்
      துள்ளுநர காண்மார் தொடர்ந்து உயிர் வௌவலின்
      புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆர் இடை
      வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்
      உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி
      காழ் விரி கவை ஆரம் மீவரும் இளமுலை
      போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என்
      தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர்
      சூழ்வதை எவன் கொல் அறியேன் என்னும்
      முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை
      கள்ளினும் மகிழ் செயும் என உரைத்தும் அமையார் என்
      ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர்
      உள்ளுவது எவன் கொல் அறியேன் என்னும்
      நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம்
      கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என்
      ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர்
      எண்ணுவது எவன் கொல் அறியேன் என்னும்
      என ஆங்கு
      கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி
      அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒருநாள் நீர்
      பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ
      ஒழிக இனி பெரும நின் பொருள் பிணி செலவே.
      5 பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை
      மாஅல் யானையொடு மறவர் மயங்கி
      தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்
      இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு
      சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்
      நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
      ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை
      கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்
      நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே
      கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்
      புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ
      ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல்
      பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ
      ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள்
      நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ
      என ஆங்கு
      பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
      எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது
      அந்நாள் கொண்டு இறக்கும் இவள் அரும்பெறல் உயிரே.
      6 மரையா மரல் கவர மாரி வறப்ப -
      வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடை செல்வோர்
      சுரை அம்பு மூழ்க சுருங்கி புரையோர் தம்
      உள் நீர் வற புலர் வாடு நாவிற்கு -
      தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம்
      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
      என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
      நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
      அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு
      துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது
      இன்பமும் உண்டோ எமக்கு
      7 வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
      வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம்
      கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று
      உசாவுகோ - ஐய சிறிது
      நீயே செய் வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின்
      கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே
      இவட்கே செய்வுறு மண்டிலம் மையாப்பது போல்
      மை இல் வாள் முகம் பசப்பு ஊருமே
      நீயே வினை மாண் காழகம் வீங கட்டி
      புனை மாண் மரீஇய அம்பு தெரிதீயே
      இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்
      இனை நோக்கு உண் கண் நீர் நில்லாவே
      நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள் வயின் செலீஇய
      வலம் படு திகிரி வாய் நீவுதியே
      இவட்கே அலங்கு இதழ கோடல் வீ உகுபவை போல்
      இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
      என நின்
      செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
      தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள்
      இன் உயிர் தருதலும் ஆற்றுமோ -
      முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே
      8 நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங
      கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
      கடுகுபு கதிர் மூட்டி காய்சினம் தெறுதலின்
      உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
      வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்ற நிலம் சேர
      விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
      சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
      சொல்லுவது உடையேன் கேள்மின் மற்று ஐஇய
      வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
      ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம்
      யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
      மரீஇ தாம் கொண்டாரை கொண்டக்கால் போலாது
      பிரியும்கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம் மாறும்
      திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
      புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை
      வரைவு இன்றி செறும் பொழுதில் கண் ஓடாது உயிர் வௌவும்
      அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ
      என ஆங்கு
      நச்சல் கூடாது பெரும இச்செலவு
      ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று
      மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
      தன் நகர் விழை கூடின்
      இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே.
      9 எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
      உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
      நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
      குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்-
      வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை
      என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
      தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
      அன்னார் இருவரை காணிரோ- பெரும
      காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை
      ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய
      மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
      பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
      மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்
      நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
      சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
      நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
      தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
      ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
      யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்
      சூழும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
      என ஆங்கு
      இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
      சிறந்தானை வழிபடீஇ சென்றனள்
      அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.
      10 வறியவன் இளமை போல் வாடிய சினையவா
      சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
      யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்
      வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
      அலவுற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெ·கி
      கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
      உலகு போல் உலறிய உயர் மர வெஞ்சுரம் -
      இடை கொண்டு பொருள் வயின் இறத்தி நீ என கேட்பின்
      உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள் மன்னோ
      படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
      புடை பெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள்
      முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
      பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள் மன்னோ
      நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
      துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள்
      பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
      மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள் மன்னோ
      இருள் நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்ற நின்
      அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள்
      என ஆங்கு
      வினை வெ·கி நீ செலின் விடும் இவள் உயிர் என
      புனை இழாய் நின் நிலை யான் கூற பையென
      நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை
      செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே
      11 அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
      பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்
      புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என
      பிரிவு எண்ணி பொருள் வயின் சென்ற நம் காதலர்
      வருவர்கொல் வயங்கு இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி
      அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால்
      கடியவே கனம் குழாஅய் காடு -என்றார் அக்காட்டுள்
      துடிஅடி கயம்தலை கலக்கிய சின் நீரை
      பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே
      இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்
      துன்புறூஉம் தகையவே காடு -என்றார் அக்காட்டுள்
      அன்புகொள் மட பெடை அசைஇய வருத்தத்தை
      மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே
      கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்
      துன்னரூஉம் தகையவே காடு - என்றார் அக்காட்டுள்
      இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு
      தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே.
      என ஆங்கு
      இனை நலம் உடைய கானம் சென்றோர்
      புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை வயின்
      பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
      நல்எழில் உண் கண்ணும் ஆடுமால் இடனே.
      12 இடு முள் நெடு வேலி போல கொலைவர்
      கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
      கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி
      உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
      கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு
      வெறி நிரை வேறு ஆக சார சாரல் ஓடி
      நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் -
      சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும்
      நறு நுதல் நீத்து பொருள் வயின் செல்வோய்
      உரன் உடை உள்ளத்தை செய் பொருள் முற்றிய
      வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
      இளமையும் காமமும் நின் பாணி நில்லா -
      இடை முலை கோதை குழைய முயங்கும்
      முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை -
      கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை
      போற்றாய் - பெரும நீ காமம் புகர்பட
      வேற்றுமை கொண்டு பொருள் வயின் போகுவாய்
      கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
      மாற்றுமை கொண்ட வழி.
      13 செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல
      எரி மேய்ந்த கரி வறல் வாய் புகுவ காணாவா
      பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்
      திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட
      மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க
      உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை
      ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது
      சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும்
      புயல் துளி மாறிய போக்கு அரு வெஞ்சுரம் -
      எல் வளை எம்மொடு நீ வரின் யாழ நின்
      மெல் இயல் மேவந்த சீறடி தாமரை
      அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல
      கல் உறின் அவ்வடி கறுக்குந அல்லவோ
      நலம்பெறு சுடர் நுதால் எம்மொடு நீ வரின்
      இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்
      துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை
      விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ
      கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
      தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட
      முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
      வளி உறின் அவ் எழில் வாடுவை அல்லையோ
      என ஆங்கு
      அனையவை காதலர் கூறலின் வினை வயின்
      பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ
      கடுங்குரை அருமைய காடு எனின் அல்லது
      கொடுங் குழாய் துறக்குநர் அல்லர் -
      நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே.
      14 அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள்
      துணை மலர் எழில் நீலத்து ஏந்து
      மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல்
      மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல்
      அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல்
      சில நிரை வால் வளை செய்யாயோ என
      பல கட்டுரை பண்டையின்
      இனிய சொல்லி இன்னாங்கு பெயர்ப்பது
      இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
      பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின்
      மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ
      காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
      ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ
      செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அப்பொருள்
      இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ
      அதனால்
      எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம்
      கவவு கைவிட பெறும் பொருள் திறத்து
      அவவு கைவிடுதல் அது மனும் பொருளே.
      15 அரி மான் இடித்தன்ன அம் சிலை வல் வில்
      புரி நாண் புடையின் புறம் காண்டல் அல்லால் -
      இணை படை தானை அரசோடு உறினும் -
      கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்
      எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
      மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி
      உருத்த கடும் சினத்து ஓடா மறவர்
      பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு
      அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் -
      புரிபு நீ புறம் மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி
      பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -
      செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ
      பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த கால்
      பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
      மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -
      தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம் அம் முகம்
      பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த கால்
      பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
      மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -
      புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா
      திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்கால்
      என ஆங்கு
      அனையவை போற்ற நினைஇயன நாடி காண்
      வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள்
      முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
      இளமையும் தருவதோ இறந்த பின்னே
      16 பாடு இன்றி பசந்தகண் பைதல பனிமல்க
      வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர
      ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
      நாடும்கால் நினைப்பது ஒன்று உடையேன் மன் அதுவும் தான்
      தொல்நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார்
      துன்ன நம் காதலர் துறந்து ஏகும் ஆர் இடை
      கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என
      இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதுவோ
      புனை இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெ·கி
      முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை
      சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என
      கனை கதிர கனலியை காமுறல் இயைவதுவோ
      ஒளி இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள் வயின்
      அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆர் இ¨
      முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என
      வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதுவோ
      என ஆங்கு
      செய் பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன
      தெய்வத்து திறன் நோக்க தெருமரல் - தேமொழி
      வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்
      நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என
      அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே.
      17 படை பண்ணி புனையவும் பா மாண்ட பல அணை
      புடை பெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும்
      உடையதை எவன் கொல் என்று ஊறு அளந்தவர் வயின்
      நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் - நறு நுதால்
      தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ
      வல் வினை வயக்குதல் வலித்திமன் வலிப்பளவை
      நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது
      நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ
      ஆற்றா நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
      தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன் முயல்வளவை
      நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு
      கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ் நாளும் நிலையுமோ
      வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
      பகை அறு பய வினை முயறிமன் முயல்வளவை
      தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின்
      முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ
      என ஆங்கு
      பொருந்தி யான் தான் வேட்ட பொருள் வயின் நினைந்த சொல்
      திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
      மருந்து போல் ஆகி மனன்
      பெரும் பெயர் மீளி - பெயர்ந்தனன் செலவே
      18 அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துர
      பிரிந்து உறை சூழாதி -ஐய - விரும்பி நீ
      என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின்
      மைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்து காண்
      சென்றோர் முக பொருளும் கிடவாது
      ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்
      இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார்
      வளமை விழைதக்கது உண்டோ உள நாள்
      ஒரோஒ கை தம்முள் தழீஇ
      ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
      ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ
      சென்ற இளமை தரற்கு
      19 செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
      பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம்
      பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று - ஐய
      அகல் நகர் கொள்ளா அலர் தலை தந்து
      பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
      மகன் அல்லை மன்ற இனி
      செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்ற
      அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள்
      பண்பும் அறிதிரோ என்று வருவாரை
      என் திறம் யாதும் வினவல் வினவின்
      பகலின் விளங்கு நின் செம்மல் சிதை
      தவல் அரு செய் வினை முற்றாமல் ஆண்டு ஓர்
      அவலம் படுதலும் உண்டு.
      20 பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற
      செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்
      தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும்
      பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்று இனம் தாங்கும்
      மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக
      துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்-
      கிளி புரை கிளவியாய் நின் -அடிக்கு எளியவோ
      தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர்
      வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து
      அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ
      ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
      ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர்
      யாறு நீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
      தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ
      மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும்
      மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர்
      நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும்
      தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலே
      என ஆங்கு
      அணை அரு வெம்மைய காடு என கூறுவீர்
      கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடை
      பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர
      பிணையும் காணிரோ பிரியுமோ அவையே
      21 பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி
      ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல்
      ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்
      பொருள் வயின் பிரிதல் வேண்டும் என்னும்
      அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே
      நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி
      நின்னின் பிரியலென் அஞ்சல் ஓம்பு என்னும்
      நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே
      அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே
      கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான்
      பழ வினை மருங்கின் பெயர்பு
      அன்ன பொருள் வயின் பிரிவோய் - நின் இன்று
      இமைப்பு வரை வாழாள் மடவோள்
      அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே.
      22 உண் கடன் வழிமொழிந்து இரக்கும்கால் முகனும் தாம்
      கொண்டது கொடுக்கும்கால் முகனும் வேறு ஆகுதல்
      பண்டும் இவ் உலகத்து இயற்கை அ·து இன்றும்
      புதுவது அன்றே - புலன் உடை மாந்திர்
      தாய் உயிர் பெய்த பாவை போல
      நலன் உடையார் மொழி கண் தாவார் தாம் தம் நலம்
      தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்கால்
      ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை
      நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
      செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின்
      பறி முறை பாராட்டினையோ - ஐய
      நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
      ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல்
      செய் வினை பாராட்டினையோ - ஐய
      குளன் அணி தாமரை பாசு அரும்பு ஏய்க்கும்
      இளமுலை பாராட்டினாய் மற்று எம் மார்பில்
      தளர்முலை பாராட்டினையோ - ஐய
      என ஆங்கு
      அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட
      சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம் கண்
      படர் கூற நின்றதும் உண்டோ - தொடர் கூர
      துவ்வாமை வந்த கடை
      23 இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
      புலம் கடி கவணையின் பூஞ் சினை உதிர்க்கும்
      விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
      தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல்
      நகுதக்கன்று இவ் அழுங்கல் ஊர்க்கே
      இனி யான்
      உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்
      தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
      வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்
      நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்
      அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்
      கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்.
      சூடினர் இட்ட பூ ஓரன்னர்
      என ஆங்கு
      யானும் நின் அகத்து அனையேன் ஆனாது
      கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
      வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல
      நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
      என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே
      24 நெஞ்சு நடுக்குற கேட்டும் கடுத்தும் தாம்
      அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் -
      இன் தீம் கிளவியாய் - வாய் மன்ற நின் கேள்
      புதுவது பல் நாளும் பாராட்ட யானும்
      இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர
      மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்
      பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல்
      தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
      கடி மனை காத்து ஓம்ப வல்லுவள் கொல்லோ
      இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்
      நெடு மலை வெஞ்சுரம் போக என்றார் ஆய் இழாய்
      தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி
      யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்
      தொய்யில் துறந்தார் அவர் என தம் வயின்
      நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு
      போயின்று சொல் என் உயிர்.
      25 வயக்குறு மண்டிலம் வடமொழி பெயர் பெற்ற
      முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
      ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா
      கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்தாங்கு
      களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா
      முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்
      ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்து தன்
      உள்ளத்து கிளைகளோடு உ போகுவான் போல
      எழு உறழ் தடக்கையின் இனம் காக்கும் எழில் வேழம்
      அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம்
      குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெஞ்சுரம்
      இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீமின்
      மணக்கும்கால் மலர் அன்ன தகையவா சிறிது நீர்
      தணக்கும்கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ
      சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்
      புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்
      ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து ஒரு நாள்
      நீங்கும்கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ
      செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு மற்று
      ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்
      ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து
      பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
      பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அம்
      பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்
      என ஆங்கு
      யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும்
      நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை - வானம்
      துளி மாறு பொழுதின் இவ் உலகம் போலும் - நின்
      அளி மாறு பொழுதின் இவ் ஆய் இழை கவினே.
      26 ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்
      பருதி அம் செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும்
      மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்
      ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்
      ஆன் ஏற்று கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு
      தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல
      போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற
      நோதக வந்தன்றால் இளவேனில் மேதக
      பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து
      தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்
      ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி
      வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்
      திசை தேன் ஆர்க்கும்
      வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்
      நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி
      இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர்
      அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி
      திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்
      ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி
      ஆறு இன்றி பொருள் வெ·கி அகன்ற நாட்டு உறைபவர்
      என நீ
      தெருமரல் வாழி தோழி நம் காதலர்
      பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
      செரு மேம்பட்ட வென்றியர்
      வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே
      27 ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய
      தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த
      பேதுறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
      மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப
      காதலர புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு
      தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெற
      பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு
      ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில்
      நிலம் பூத்த மர மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள
      நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க
      கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செ
      புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார் கொல்
      கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற
      தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க
      ஒன்னாதார கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற
      வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார் கொல்
      மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள
      பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க
      தைஇய மகளிர்தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
      வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார் கொல்
      என ஆங்கு
      நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி
      நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது
      காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என
      ஏமுறு கடும் திண் தேர் கடவ
      நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே.
      28 பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்
      நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல்
      தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்
      தோடு உற தாழ்ந்து துறை கவின்
      செய்யவள் அணி அகலத்து ஆரமொடு
      தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் துவர் மணல்
      வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான்
      விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில்
      பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேதுறூஉம் பொழுது
      அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
      வருந்த நோய் மிகும் ஆயின் - வணங்கு இறை அளி என்னோ
      புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு
      அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர்
      மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
      நுதல் ஊரும் பசப்பு ஆயின் - நுணங்கு இறை அளி என்னோ
      தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை
      மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர்
      பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
      பாயல் நோய் மிகும் ஆயின் - பை தொடி அளி என்னோ
      என ஆங்கு
      ஆய் இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு
      நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும்
      தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்
      பரிந்து எவன் செய்தி - வருகுவர் விரைந்தே
      29 தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்
      அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்
      பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
      புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர
      வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள
      இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார
      மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
      ஆய் இதழ பல் மலர் ஐய கொங்கு உறைத்தர
      மேதக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண்
      சேயார் கண் சென்ற என் நெஞ்சினை - சின் மொழி
      நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்மன் நிறை நீவி
      வாய் விரிபு பனி ஏற்ற விரவு பல் மலர் தீண்டி
      நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம்
      போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை
      சூழ்பு ஆங்கே - சுடர் இழாய் கரப்பென்மன் கை நீவி
      வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி
      யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்
      தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர்உயிர் -
      வடு நீங்கு கிளவியாய் வலிப்பென் மன் வலிப்பவும்
      நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய்விட்ட
      கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம்
      என ஆங்கு
      வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு
      பிரிந்து செய் பொருள் பிணி பின் நோக்காது - ஏகி நம்
      அரும் துயர் களைஞர் வந்தனர் -
      திருந்து எயிறு இலங்கு நின் தேமொழி படர்ந்தே.
      30 அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள
      விரிந்து ஆனா சினை தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி
      புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எவ்வாயும்
      இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் -
      துயில் இன்றி யாம் நீந தொழுவை அம் புனல் ஆடி
      மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான் மன்னோ -
      வெயில் ஒளி அறியாத விரி மலர தண் காவில்
      குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின்
      பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள்
      மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன்னோ -
      ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை
      தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின்
      உறலி யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்
      விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ -
      பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர துருத்தி சூழ்ந்து
      அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின்
      என ஆங்கு
      தணியா நோய் உழந்து ஆனா தகையவள் - தகைபெற
      அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி - பணிபு நின்
      காமர் கழல் அடி சேரா
      நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே
      31 கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற
      நெடும் கயத்து அயல் அயிர் தோன்ற
      வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக
      பிரிந்தவர் நுதல் போல பீர் வீ காதலர
      புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன
      மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
      கையாறு கடைக்கூட்ட கலக்குறூஉம் பொழுதுமன் -
      பொய்யேம் என்று ஆய் இழாய் புணர்ந்தவர் உரைத்ததை
      மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர்
      தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ -
      பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு
      வயங்கு இழை தண்ணென வந்த இவ் அசை வாடை
      தாள் வலம்பட வென்று தகை நல் மா மேல் கொண்டு
      வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ -
      நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு
      தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை
      பகை வென்று திறை கொண்ட பாய் திண்தேர் மிசையவர்
      வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ -
      புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா
      முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி
      என ஆங்கு
      வாளாதி வயங்கு இழாய் வருந்துவள் இவள் என
      நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி
      மீளி வேல் தானையர் புகுதந்தார் -
      நீள் உயர் கூடல் நெடு கொடி எழவே.
      32 எ·கு இடை தொட்ட கார கவின் பெற்ற ஐம்பால் போல் -
      மை அற - விளங்கிய துவர் மணல் அது
      ஐது ஆக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
      அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்
      பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள -
      துணி நீரால் தூ மதி நாளால் அணிபெற -
      ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்
      ஆன்றவர் அடக்கம் போல் அலர செல்லா சினையொடும்
      வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்
      நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும்
      உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்
      புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் -
      நயந்தார்க்கோ நல்லைமன் இளவேனில் எம் போல
      பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம்
      இன் உயிர் செய்யும் மருந்து ஆக பின்னிய
      காதலர் - எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை
      போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் -
      தூது வந்தன்றே தோழி
      துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே
      33 வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
      யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற
      மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல
      பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக
      துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப
      மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வே
      காதலர புணர்ந்தவர் கவவு கை நெகிழாது
      தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம்
      போது எழில் உண் கண் புலம்ப நீத்தவர்
      எரி உரு உறழ இலவம் மலர
      பொரி உரு உறழ புன்கு பூ உதிர
      புது மலர கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப
      தமியார புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து
      ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம்
      போர்ப்பது போலும் பசப்பு
      நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
      உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி
      தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில்
      உகுவன போலும் வளை என் கண் போல்
      இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்
      மிகுவது போலும் இ நோய்
      நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
      இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊ -
      தூது அவர் விடுதரார் துறப்பார் கொல் நோதக
      இரும் குயில் ஆலும் அரோ
      என ஆங்கு
      புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி
      நீல் இதழ் உண் கண்ணாய் நெறி கூந்தல் பிணி விட
      நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்ற
      மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் -
      கால் உறழ் கடு திண் தேர் கடவினர் விரைந்தே.
      34 மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று
      பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின்
      சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற
      முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி கண்
      பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல்
      பல் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
      இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
      விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும்
      பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
      கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி
      எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ
      பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள
      நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
      முறை தளர்ந்த மன்னவன் கீழ குடி போல கலங்குபு
      பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ
      தளை அவிழ் பூஞ் சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும்
      கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன் மறைப்பவும்
      கிளை அழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல் என்று
      வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ
      என ஆங்கு
      நின் உள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம்
      எண்ணிய நாள் வரை இறவாது காதலர்
      பண்ணிய மாவினர் புகுதந்தார்
      கண் உறு பூசல் கை களைந்தாங்கே.
      35 மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ
      படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
      மாயவள் மேனி போல் தளிர் ஈன அம் மேனி
      தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக
      மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப
      அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார
      நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்
      துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ
      வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர
      தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ-
      கண் நிலா நீர் மல கவவி நாம் விடுத்தக்கால்
      ஒள் நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
      மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்
      வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ -
      வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால்
      ஒளி இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
      நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
      புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ-
      பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக்கால்
      சுடர் இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
      என ஆங்கு
      உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி
      எள் அறு காதலர் இயைதந்தார் - புள் இயல்
      காமர் கடும் திண்தேர் பொருப்பன்
      வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே.
      36 கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
      நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர
      வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப
      தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர
      இயன் எழீஇயவை போல எவ்வாய்யும் இம் மென
      கயன் அணி பொதும்பருள் கடி மலர தேன் ஊத
      மலர் ஆய்ந்து வயின் விளிப்ப போல் மரன்
      இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற
      குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
      சீரார் செவ்வியும் வந்தன்று
      வாரார் தோழி நம் காதலோரே
      பாஅ பசந்தன்று
      சாஅ சாஅய் நெகிழ்ந்தன தோள்
      நனி அறல் வாரும் பொழுது என வெய்ய
      பனி அறல் வாரும் என் கண்
      மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு
      முலை இடை கனலும் என் நெஞ்சு
      காதலின் பிரிந்தார் கொல்லோ வறிது ஓர்
      தூதொடு மறந்தார் கொல்லோ நோத
      காதலர் காதலும் காண்பாம் கொல்லோ
      துறந்தவர் ஆண்டு உறைகுவர் கொல்லோ யாவது
      நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின்
      வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி
      நாள் அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து
      கேள்வி அந்தணர் கடவும்
      வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே.
      இரண்டாவது குறிஞ்சி
      ஆசிரியர் கபிலர்
      37 கய மலர் உண் கண்ணாய் காணாய் ஒருவன்
      வய மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட
      கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
      முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
      நோய் உரைக்கல்லான் பெயரும்மன் பல் நாளும்
      பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்
      சேயேன்மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை
      கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்
      பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
      காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என்
      தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர்
      நாண் இன்மை செய்தேன் நறு நுதால் ஏனல்
      இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
      ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
      ஐய சிறிது என்னை ஊக்கி என கூற
      தையால் நன்று என்று அவன் ஊ கை நெகிழ்பு
      பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில் வாய்யா செத்து
      ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்
      மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன் ஆயிடை
      மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென
      ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின்
      அங்கண் உடையன் அவன்
      38 இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
      உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
      ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
      தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அம் மலை
      எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
      உறு புலி உரு ஏ பூத்த வேங்கையை
      கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
      7 நீடு இரு விடர் அகம் சிலம்ப கூ தன்
      கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட கேள்
      ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்
      நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
      கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ
      தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
      இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்
      பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை
      அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும் அவ் அணி
      தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
      மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால்
      அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் வைகறை
      திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும் அ திரு
      புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண்
      என ஆங்கு
      நின் உறு விழுமம் கூற கேட்டு
      வருமே தோழி நல் மலை நாடன் -
      வேங்கை விரிவு இடம் நோக்கி
      வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே.
      39 காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
      தாமரை கண் புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான்
      நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால்
      பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்
      வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
      அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே
      அவனும் தான் ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
      வான் ஊர் மதியம் வரை சேரின் அவ் வரை
      தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும்
      கான் அகல் நாடன் மகன்
      சிறுகுடியீரே
      வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா
      கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
      அல்ல புரிந்து ஒழுகலான்
      காந்தள் கடி கமழும் கண் வாங்கு இரும் சிலம்பின்
      வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
      தாம் பிழையார் கேள்வர தொழுது எழலால் தம் ஐயரும்
      தாம் பிழையார் தொடுத்த
      என ஆங்கு
      அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட
      என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
      அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து
      ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
      இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
      தெருமந்து சாய்த்தார் தலை
      தெரி இழாய் நீயும் நின் கேளும் புணர
      வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
      குரவை தழீஇ யாம் ஆட குரவையுள்
      கொண்டு நிலை பாடி காண்
      நல்லாய் -
      நன்னாள் தலை வரும் எல்லை நமர் மலை
      தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர் கொல்
      புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில்
      நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ
      நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
      கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ
      விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
      பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ
      பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
      கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ
      மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
      கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ
      என்னைமன் நின் கண்ணால் காண்பென்மன் யான்
      நெய்தல் இதழ் உண் கண் நின் ஆக என்
      என ஆங்கு
      நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ
      தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக
      வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்
      மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
      சேய் உயர் வெற்பனும் வந்தனன்
      பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே
      40 அகவினம் பாடுவாம் தோழி - அமர கண்
      நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல்
      தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ
      முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
      வகை சால் உலக்கை வயின்
      பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி
      அகவினம் பாடுவாம் நாம்.
      ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள்
      தேன் நாறு கதுப்பினாய் - யானும் ஒன்று ஏத்துகு
      வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை
      கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்
      எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்
      தொடுத்த தேன் சோர தயங்கும் - தன் உற்றார்
      இடுக்கண் தவிர்ப்பான் மலை
      கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து
      மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -
      தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
      அல்லல் படுவான் மலை
      புரி விரி புதை துதை பூ ததைந்த தாழ் சினை
      தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான்
      அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்
      விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட
      தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே -
      பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும்
      வண்டின் துறப்பான் மலை
      ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
      கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடுஞ் சினை
      தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - உற்றாரின்
      நீங்கலம் என்பான் மலை
      என நாம்
      தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
      மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
      மென் முலை ஆகம் கவின் பெற
      செம்மலை ஆகிய மலை கிழவோனே
      41 பாடுகம் வா - வாழி தோழி வ களிற்று
      கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா
      ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம்
      பாடுகம் வா - வாழி தோழ நல் தோழி
      இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்
      கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து
      பிடியொடு மேயும் புன்செய் யானை
      அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
      நெடு வரை ஆசினி பணவை ஏறி
      கடு விசை கவணையில் கல் கை விடுதலின்
      இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி
      ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிரா
      தேன் செய் இறாஅல் துளைபட போகி
      நறு வடி மாவின் பை துணர் உழக்கி
      குலை உடை வாழை கொழு மடல் கிழியா
      பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை
      பாடுகம் வா - வாழி தோழி நல்
      இலங்கும் அருவித்து
      வானின் இலங்கும் அருவித்தே - தான் உற்ற
      சூள் பேணான் பொய்த்தான் மலை
      பொய்த்தற்கு உரியனோ
      அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ
      குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
      திங்களுள் தீ தோன்றியற்று
      இள மழை ஆடும்
      இள மழை வைகலும் ஆடும் - என் முன்கை
      வளை நெகிழ வாராதோன் குன்று
      வாராது அமைவானோ
      வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன்
      ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து
      நீருள் குவளை வெந்தற்று
      மணி போல தோன்றும்
      மண்ணா மணி போல தோன்றும் - என் மேனியை
      துன்னான் துறந்தான் மலை
      துறக்குவன் அல்லன்
      தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் -
      தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்
      சுடருள் இருள் தோன்றியற்று
      என ஆங்கு
      நன்று ஆகின்றால் -தோழி நம் வள்ளையுள்
      ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி
      மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும்
      மன்றல் வேங்கை கீழ் இருந்து
      மணம் நயந்தனன் அம் மலை கிழவோற்கே.
      42 மறம் கொள் இரும் புலி தொல் முரண் தொலைத்த
      முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி
      கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
      பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன்
      மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு
      சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம்
      கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்.
      வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
      வள்ளை அகவுவம் வா
      காணிய வா - வாழி தோழி வரை
      வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
      நாண் இலி நாட்டு மலை
      ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -
      ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
      அறம் புரி நெஞ்சத்தவன்
      தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
      பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளா
      கொன்னாளன் நாட்டு மலை
      கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ - தன் மலை
      நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு
      தேர் ஈயும் வண் கையவன்
      வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
      மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ
      எவ்வம் உறீஇயினான் குன்று
      எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி -
      அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என்
      நெஞ்சம் பிணிக்கொண்டவன்
      என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
      தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா
      சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர
      ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
      ஆய் இழை மேனி பசப்பு.
      43 வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
      ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
      சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
      ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து இருவாம்
      ஐயனை ஏத்துவாம் போல அணிபெற்ற
      மை படு சென்னி பய மலை நாடனை
      தையலாய் பாடுவாம் நாம்
      தகையவர் கை செறித்த தாள் போல காந்தள்
      முகையின் மேல் தும்பி இருக்கும் - பகை எனின்
      கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு
      தோற்றலை நாணாதோன் குன்று
      வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம்
      இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
      வருடைமான் குழவிய வள மலை நாடனை
      தெருள தெரி இழாய் - நீ ஒன்று பாடித்தை
      நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை
      கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே -
      மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம்
      கூறுதல் தேற்றாதோன் குன்று
      புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
      புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
      வயங்கு எழில் யானை பய மலை நாடனை -
      மணம் நாறு கதுப்பினாய் - மறுத்து ஒன்று பாடித்தை
      கடும் கண் உழுவை அடி போல வாழை
      கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் - இடும்பையால்
      இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்
      தன் மெய் துறப்பான் மலை
      என ஆங்கு
      கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு
      வாடிய மென் தோளும் வீங்கின -
      ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே
      44 கதிர் விரி கனை சுடர கவின் கொண்ட நனம் சாரல்
      எதிர் ஓங்கிய மால் வரை
      அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ
      முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரி வேங்கை
      வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர
      புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
      திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப
      தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை
      என்னையும் மறைத்தாள் என் தோழி - அது கேட்டு
      நின்னை யான் பிறர் முன்னர பழி கூறல் தான் நாணி
      கூரும் நோய் சிறப்புவும் நீ செய்த அருள் இன்மை
      சேரியும் மறைத்தாள் என் தோழி -அது கேட்டாங்கு
      ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி
      நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை
      ஆயமும் மறைத்தாள் என் தோழி - அது கேட்டு
      மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி
      என ஆங்கு
      இனையன தீமை நினைவனள் காத்தாங்கு
      அனை அரு பண்பினான் நின் தீமை காத்தவள்
      அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
      மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே
      45 விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை
      கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை
      அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து
      பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடை கனை பெயல்
      உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி
      நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென
      சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப
      கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
      மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ -
      புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
      பல் இதழ் மலர் உண் கண் பசப்ப நீ சிதைத்ததை
      புகர் மு களிறொடு புலி பொருது உழக்கும் நின்
      அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ -
      கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி
      தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை
      சுடர் உற நீண்ட சுரும்பு இமிர்
      விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ -
      யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
      காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை
      என ஆங்கு
      தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி
      மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்
      பிறை புரை நுதல் அவர பேணி நம்
      உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே.
      46 வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
      மாஅல் அம் சிறை மணி நிற தும்பி
      வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
      ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்
      வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்
      பூம் பொறி யானை புகர் முகம் குறுகியும்
      வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
      நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும்
      அயம் இழி அருவிய அணி மலை நல் நாட
      ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்
      மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப -
      கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி
      பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
      அரும் செலவு ஆர் இடை அருளி வந்து அளி பெறாஅன்
      வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப -
      நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு
      பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
      கனை பெயல் நடுநாள் யான் கண் மாற குறி பெறாஅன்
      புனை இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப -
      துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன்
      அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக
      என ஆங்கு
      கலந்த நோய் கைம்மி கண் படா என் வயின்
      புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை -
      இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை
      சிலம்பு போல் கூறுவ கூறும்
      இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே.
      47 ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
      புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்
      வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
      நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்
      இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
      வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்
      அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை
      சொல்லும் சொல் கேட்டீ - சுடர் இழாய் பல் மாணும்
      நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்
      அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்
      என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ - நறு நுதால்
      அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின்
      தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின்
      அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்
      வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின்
      ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின்
      சூழும்கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல்
      சூழும்கால் நறு நுதால் நம் உளே சூழ்குவம்.
      அவனை
      நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது
      பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன்
      வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
      கூறுவென் போல காட்டி
      மற்று அவன் மேஎவழி மேவாய் நெஞ்சே
      48 ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல
      தே மூசு நனை கவுள் திசை காவல் கொளற்கு ஒத்த
      வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம்
      படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய
      கடி மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும்
      பெரு களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
      இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட
      வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்
      வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ -
      தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல்
      ஊழுறு கோடல் போல் எல் வளை உகுபவால்
      இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ
      நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ -
      இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை
      கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால்
      பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
      பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ -
      இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை -
      மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால்
      என ஆங்கு
      பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு - என நீவி
      பூங் கண் படுதலும் அஞ்சுவல் தாங்கிய
      அரும் துயர் அவலம் தூக்கின்
      மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே
      49 கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
      நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை
      நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
      கனவில் கண்டு கதுமென வெரீஇ
      புதுவது ஆக மலர்ந்த வேங்கையை
      அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி
      பேணா முன்பின் தன் சினம் தணிந்து அம் மரம்
      காணும் பொழுதின் நோக்கல் செல்லாது
      நாணி இறைஞ்சும் நல் மலை
      போது எழில் மலர் உண் கண் இவள் மாட்டு நீ இன்ன
      காதலை என்பதோ இனிது - மற்று இன்னாதே
      மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல்
      இன்னது ஓர் ஆர் இடை ஈங்கு நீ வருவதை
      இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
      அன்பினை என்பதோ இனிது - மற்று இன்னாதே
      மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து
      அணங்கு உடை ஆர் இடை ஈங்கு நீ வருவதை
      இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
      அருளினை என்பதோ இனிது - மற்று இன்னாதே
      ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது
      களிறு இயங்கு ஆர் இடை ஈங்கு நீ வருவதை
      அதனால்
      இரவின் வாரல் ஐய விரவு வீ
      அகல் அறை வரிக்கும் சாரல்
      பகலும் பெறுவை இவள் தட மென் தோளே.
      50 வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல்
      மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி
      தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர்
      வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும்
      இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப
      அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
      உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு
      நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி
      படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
      கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
      நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே
      பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
      அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி
      நல்கூர்ந்தார் செல்வ மகள்.
      நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும்
      தளியின் சிறந்தனை - வந்த புலவர்க்கு
      அளியொடு கைதூவலை
      அதனால்
      கடு மா கடவுறூஉம் கோல் போல் எனைத்தும்
      கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் -
      வழை வளர் சாரல் வருடை நல் மான்
      குழவி வளர்ப்பவர் போல பாராட்டி
      உழையின் பிரியின் பிரியும்
      இழை அணி அல்குல் என் தோழியது கவினே
      51 சுடர் தொடீஇ கேளாய் - தெருவில் நாம் ஆடும்
      மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
      கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி
      நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
      அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
      உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
      அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர் இழாய்
      உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
      தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
      வளை முன்கை பற்றி நலி தெருமந்திட்டு
      அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
      அன்னை அலறி படர்தர தன்னை யான்
      உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும்
      தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
      கடை கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
      செய்தான் அ கள்வன் மகன்
      52 முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து
      மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனை
      குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன்
      நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை
      மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண்
      கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்
      தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை
      நேர் இதழ கோதையாள் செய் குறி நீ வரின்
      மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
      அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே
      ஈர தண் ஆடையை எல்லி மாலையை
      சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்
      ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
      களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே
      ஆர மார்பினை அண்ணலை அளியை
      ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின்
      கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
      புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே
      என ஆங்கு
      விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள்
      புலம் புகழ் ஒருவ யானும் வாழேன்
      அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறை கூறி
      வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
      புதுவை போலும் நின் வரவும் இவள்
      வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே.
      53 வறன் உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
      விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா
      மறம் மிகு வேழம் தன் மாறு கொள் மைந்தினான்
      புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல
      உயர் முகை நறும் காந்தள் நாள் தோறும் புதிது ஈன
      அயம் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும்
      பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப
      மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின்
      இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்மன் -
      அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண்
      கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழாக்கால்
      இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின்
      பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்மன் -
      ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல்
      பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவாக்கால்
      அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின்
      நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்மன் -
      நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்
      கனவினால் அழிவுற்று கங்குலும் ஆற்றாக்கால்
      என ஆங்கு
      விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை
      முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
      தளி பெற தகைபெற்றாங்கு நின்
      அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே
      54 கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற
      பொடி அழல் புறந்தந்த பூவா பூம் பொலன் கோதை
      தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய்
      அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன
      நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி
      பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
      நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
      விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்
      நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரல் போது கொண்டு
      செறாஅ செங் கண் புதைய வைத்து
      பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
      தொய்யில் இள முலை இனிய தைவந்து
      தொய்யல் அம் தடம் கையின் வீழ் பிடி அளிக்கும்
      மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்
      அதனால்
      அல்லல் களைந்தனன் தோழி நம் நகர்
      அரும் கடி நீவாமை கூறின்நன்று என
      நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து
      இன்னது செய்தாள் இவள் என
      மன்னா உலகத்து மன்னுவது புரைமே
      55 மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
      பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு
      போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை
      இன் நகை இலங்கு எயிற்று தேமொழி துவர செவ்வாய்
      நல் நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி
      நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து.
      நுதலும் முகனும் தோளும் கண்ணும்
      இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
      ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று
      மை தீர்ந்தன்று மதியும் அன்று
      வேய் அமன்றன்று மலையும் அன்று
      பூ அமன்றன்று சுனையும் அன்று
      மெல்ல இயலும் மயிலும் அன்று
      சொல்ல தளரும் கிளியும் அன்று
      என ஆங்கு
      அனையன பல பாராட்டி பையென
      வலைவர் போல சோர் பதன் ஒற்றி
      புலையர் போல புன்கண் நோக்கி
      தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான்
      காழ் வரை நில்லா கடும் களிறு அன்னோன்
      தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை
      ஏழை தன்மையோ இல்லை தோழி
      56 ஊர கால் நிவந்த பொதும்பருள் நீர
      கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு
      கழும முடித்து கண் கூடு கூழை
      சுவல் மிசை தாதொடு தாழ அகல் மதி
      தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து
      ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே ஓர்
      வல்லவன் தைஇய பாவை கொல் நல்லார்
      உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல் வெறுப்பினால்
      வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல் - ஆண்டார்
      கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல்
      பல் கலை சில் பூங் கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர்
      நல்கூர்ந்தார் செல்வ மகள்
      இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து
      நல்லாய் கேள்
      ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என
      தூது உண் அம் புறவு என துதைந்த நின் எழில் நலம் -
      மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் - நின் கண்டார
      பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ
      நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை
      முழங்கு நீர புணை என அமைந்த நின் தட மென் தோள் -
      வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் - நின் கண்டார்க்கு
      அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ
      முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
      பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை -
      மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் - நின் கண்டார்
      உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ
      என ஆங்கு
      பேதுற்றா போல பிறர் எவ்வம் நீ அறியாய்
      யாது ஒன்றும் வாய் வாளாது இறந்தீவாய் கேள் இனி
      நீயும் தவறு இலை நின்னை புறங்கடை
      போதர விட்ட நுமரும் தவறு இலர்
      நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு
      பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா
      57 வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்
      மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி -
      ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப
      கொடி என மின் அணங்கு
      தெரிகல்லா இடையின் கண் கவர்பு ஒருங்கு
      வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
      இளமையான் எறி பந்தொடு - இகத்தந்தாய் கேள் இனி
      பூம் தண் தார புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்
      தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண் கண்
      ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்
      சேந்து நீ இனையையால் ஒத்ததோ - சின் மொழி
      பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
      கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன் தலை
      பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
      கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ - கனம் குழாய்
      வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்
      தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்
      மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
      கதவவால் - தக்கதோ காழ் கொண்ட இள முலை
      என ஆங்கு
      இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி
      நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே
      துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்
      மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே
      58 வார் உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்
      பேர் எழில் மலர் உண் கண் பிணை மான்
      கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல்
      கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய்
      நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை
      ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்
      உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக
      இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
      களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம்
      வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
      நடை மெலிந்து அயர்வு உறீஇ நாளும் என் நலியும் நோய்
      மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
      இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
      உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
      அல்லல் கூர்ந்து அழிவுற அணங்கு ஆகி அடரும் நோய்
      சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
      ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
      செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்
      என ஆங்கு
      ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை மற்று இ
      பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய்
      மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி
      நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே
      59 தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடை தாமரை
      முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி
      அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண்
      துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை
      சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
      விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை
      ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
      பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
      என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி
      மருளி யான் மருள் உற இவன் உற்றது எவன் என்னும்
      அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்கா
      வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ
      தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ
      உருள் இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்
      அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்கால்
      பொய்தல மகளையா பிறர் மனை பாடி நீ
      எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ
      ஆய் தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்
      நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்கால்
      சிறு முத்தனை பேணி சோறு மடுத்து
      நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ
      என ஆங்கு
      அனையவை - உளையவும் யான் நினக்கு உரைத்ததை
      இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே இழாய்
      செய்ததன் பயம் பற்று விடாது
      நயம் பற்று விடின் - இல்லை நசைஇயோர்
      60 சுணங்கு அணி வன முலை சுடர் கொண்ட நறு நுதல்
      மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்
      நுணங்கு எழில் ஒள் தித்தி நுழை நொசி மட மருங்குல்
      வணங்கு இறை வரி முன்கை ஆர்ந்த
      கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு
      உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல்
      பெண் அன்று புனை இழாய் என கூறி தொழூஉம் தொழுதே
      கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய்
      என் செய்தான் கொல்லோ இ·து ஒத்தன் தன் கண்
      பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்
      உருகுவான் போலும் உடைந்து
      தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார கண்டு நீ
      வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில
      நீ நின் மேல் கொள்வது எவன்
      அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென
      பேர் அமர் உண் கண் நின் தோழி உறீஇய
      ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
      மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண் தொடீ
      நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்
      நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே
      மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து இழாய்
      என் செய்வாம் கொல் இனி நாம்
      பொன் செய்வாம்
      ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன்
      கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்
      தேறல் எளிது என்பாம் நாம்
      ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று
      சிறிது ஆங்கே - மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என
      நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
      பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம்
      கேண்மை விருப்புற்றவனை எதிர் நின்று
      நாண் அட பெயர்த்தல் நயவரவு இன்றே.
      61 எல்லா இ·து ஒத்தன் என் பெறான் கேட்டை காண்
      செல்வம் கடைகொள சாஅ சான்றவர்
      அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று
      சொல்லுதல் உற்று உரைகல்லாதவர் போல
      பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்
      மெல்ல இறைஞ்சும் தலை
      எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை
      நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்
      என் நீ பெறாதது ஈது
      சொல்லின் மறாது ஈவாள் மன்னோ இவள்
      செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
      சாதலும் கூடுமாம் மற்று
      இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள்
      யாது நீ வேண்டியது
      பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ
      மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
      அருளீயல் வேண்டுவல் யான்
      அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு
      பெண்டிர் அருள கிடந்தது எவன் கொலோ
      ஒண் தொடீ நாண் இலன் மன்ற இவன்
      ஆயின் ஏஎ
      பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி
      மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு நுதல்
      நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் - நாம்
      எள்ளி நகினும் வரூஉம் இடை இடை
      கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது
      கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன்
      உள்ளம் குறைபடா ஆறு.
      62 ஏஎ இ·து ஒத்தன் நாண் இலன் - தன்னொடு
      மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்
      மேவினும் மேவாக்கடையும் அ·து எல்லாம்
      நீ அறிதி யான் அ·து அறிகல்லேன் பூ அமன்ற
      மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான்
      புல் இனிது ஆகலின் புல்லினென் - எல்லா
      தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
      செய்வது நன்று ஆமோ மற்று
      சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்ற கேள்
      வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு
      உண்பவோ நீர் உண்பவர்
      செய்வது அறிகல்லேன் யாது செய்வேன் கொலோ -
      ஐ வாய் அரவின் இடைப்பட்டு நை வாரா
      மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
      வௌவி கொளலும் அறன் என கண்டன்று
      அறனும் அது கண்டற்று ஆயின் திறன் இன்றி
      கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
      வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு
      மாறு உண்டோ நெஞ்சே நமக்கு
      63 நோக்கும்கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
      தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து
      போக்கும்கால் போக்கு நினைந்திருக்கும் மற்று நாம்
      காக்கும் இடம் அன்று இனி
      எல்லா எவன் செய்வாம்
      பூங் குழாய் செல்லல் அவன் உழை கூஉ கூஉய்
      விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல்
      கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக
      இருந்தாயோ என்று ஆங்கு இற
      அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும்
      மருந்து நீ ஆகுதலான்
      இன்னும் கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை உடம்பட்டாள்
      என்னாமை என் மெய் தொடு
      இ·தோ அடங கேள்
      நின்னொடு சூழும்கால் நீயும் நிலம் கிளையா
      என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன்
      தன்னொடு நின்று விடு.
      64 அணி முகம் மதி ஏய்ப்ப அம் மதியை நனி ஏய்க்கும்
      மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின் கண்
      விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
      அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப
      அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும்
      விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு
      பெரும் பொன் படுகுவை பண்டு
      ஏஎ எல்லா மொழிவது கண்டை இ·து ஒத்தன் தொய்யில்
      எழுதி இறுத்த பெரு பொன் படுகம்
      உழுவது உடையமோ யாம்
      உழுதாய்
      சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய் யான் நின்
      திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இ·தோ
      கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே
      துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
      குவளையும் நின் உழவு அன்றோ இகலி
      முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல
      என் உழுவாய் நீ மற்று இனி
      எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு
      முற்று எழில் நீல மலர் என உற்ற
      இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம்
      பெரும் பொன் உண்டு என்பாய் இனி
      நல்லாய் இகுளை கேள்
      ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின்
      வேந்து கொண்டன்ன பல
      ஆங்கு ஆக அத்திறம் அல்லாக்கால் வேங்கை வீ
      முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
      பொய்த்து ஒருகால் எம்மை முயங்கினை சென்றீமோ
      முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம்
      உத்தி எறிந்துவிடற்கு.
      65 திருந்து இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
      பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே
      மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
      அம் துகில் போர்வை அணிபெற தைஇ நம்
      இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக -
      தீர தறைந்த தலையும் தன் கம்பலும்
      கார குறைந்து கறைப்பட்டு வந்து நம்
      சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை
      தோழி நீ போற்றுதி என்றி - அவன் ஆங்கே
      பாரா குறழா பணியா பொழுது அன்றி
      யார் இவண் நின்றீர் என கூறி பையென
      வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
      தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
      பக்கு அழித்து கொண்டீ என தரலும் - யாது ஒன்றும்
      வாய்வாளேன் நிற்ப - கடிது அகன்று கைமாறி
      கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான்
      ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின்
      இவ் ஊர பலி நீ பெறாஅமல் கொள்வேன்
      என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப -
      முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது
      ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே
      கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே
      ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ கடுங்கண்
      இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
      ஏதில் குறு நரி பட்டற்றால் காதலன்
      காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்
      ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
      வாழ்க்கை அது ஆ கொண்ட முது பார்ப்பான்
      வீழ்க்கை பெரும் கரும் கூத்து.
      மூன்றாவது மருதக்கலி
      ஆசிரியர் மருதநிலங்கன்
      66 வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட
      ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு
      ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
      ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான்
      வீங்கு இறை வடு கொள வீழுநர புணர்ந்தவர்
      தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லை
      பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய
      பூம் பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர
      அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ
      மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ -
      பொது கொண்ட கவ்வையுள் பூ அணி பொலிந்த நின்
      வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை
      கனலும் நோ தலையும் நீ கனம் குழை அவரொடு
      புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ -
      தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின்
      ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை
      தணந்ததன் தலையும் நீ தளர் இயல் அவரொடு
      துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ -
      ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்
      களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை
      என ஆங்கு
      அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது
      வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
      நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர்
      பூட்டு விடாஅ நிறுத்து.
      67 கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து
      சீர் முற்றி புலவர் வா சிறப்பு எய்தி இரு நிலம்
      தார் முற்றியது போல தகை பூத்த வையை தன்
      நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார்
      போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் -
      நலம் தகை எழில் உண் கண் நல்லார் தம் கோதையால்
      அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் - எல்லா
      புலப்பேன் யான் என்பேன்மன் அந்நிலையே அவன் காணின்
      கலப்பேன் என்னும் இ கையறு நெஞ்சே
      கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்க
      பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் - எல்லா
      ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவன் காணின்
      கூடுவேன் என்னும் இ கொள்கை இல் நெஞ்சே
      இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
      நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின்- எல்லா -
      துனிப்பேன் யான் என்பேன்மன் அந்நிலையே அவன் காணின்
      தனித்தே தாழும் இ தனி இல் நெஞ்சே
      என ஆங்கு
      பிறை புரை ஏர் நுதால் தாம் எண்ணியவை எல்லாம்
      துறைபோதல் ஒல்லுமோ - தூ ஆகாது ஆங்கே
      அறைபோகு நெஞ்சு உடையார்க்கு
      68 பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
      மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர்
      செது மொழி சீத்த செவி செறு ஆக
      முது மொழி நீரா புலன் நா உழவர்
      புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர
      ஊரன்மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது
      ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி
      களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
      வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ -
      கேள் அலன் நமக்கு அவன் குறுகன்மின் என மற்று எம்
      தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்
      ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர் வயின்
      மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ -
      முகை வாய்த்த முலை பா குழைந்த நின் தார் எள்ள
      வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம்
      சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன்
      தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ -
      ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல்
      பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம்
      என ஆங்கு
      நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் -
      மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட
      இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு
      கனவினான் எய்திய செல்வத்து அனையதே -
      ஐய எமக்கு நின் மார்பு.
      69 போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
      தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு -
      காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
      மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
      ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்
      ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு -
      மேதக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர
      தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின்
      உள்ளம் கொண்டு ஒழித்தாளை குறை கூறி கொள நின்றாய்
      துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என
      பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயன் இல மொழிவாயோ
      பட்டுழி அறியாது பாகனை தேரொடும்
      விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய்
      நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
      வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ
      இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள்
      புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய்
      தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
      செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்து ஈவாயோ
      என ஆங்கு
      தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்புற்று
      தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது
      சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய் -
      வீழ்ந்தார் விருப்பு அற்ற கால்.
      70 மணி நிற மலர பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
      அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென
      கதுமென காணாது கலங்கி அம் மட பெடை
      மதி நிழல் நீர் உள் கண்டு அது என உவந்து ஓடி
      துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி
      பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊ கேள்
      நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின்
      பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால்
      துணை மலர கோதையார் வைகலும் பாராட்ட
      மண மனை ததும்பும் நின் முழ வந்து
      அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண் கண் எம்
      புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால்
      நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர தந்து நின்
      தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
      வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே
      நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால்
      நேர் இழை நல்லாரை நெடு நகர தந்து நின்
      தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே
      என ஆங்கு
      மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல்
      எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
      இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வா
      பாணன் புகுதரா கால்
      71 விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர
      புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி
      வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் -
      துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார
      இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு
      நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல -
      பனி ஒரு திறம் வார பாசடை தாமரை
      தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர
      ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து
      தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் -
      ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
      பாரித்து புணர்ந்த நின் பரத்தைமை காணிய
      மடுத்து அவன் புகு வழி மறையேன் என்று யாழொடும்
      எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் -
      அடுத்து தன் பொய் உண்டார புணர்ந்த நின் எருத்தின் கண்
      எடுத்து கொள்வது போலும் தொடி வடு காணிய
      தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின்
      குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் -
      கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி
      அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய
      என்று நின்
      தீரா முயக்கம் பெறுநர புலப்பவர்
      யார் - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ
      மாரிக்கு அவாவுற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
      ஆரா துவலை அளித்தது போலும் நீ
      ஓர் யாட்டு ஒரு கால் வரவு.
      72 இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
      துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ
      சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி
      ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல
      புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க
      மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி
      கடி க தாமரை கமழ் முகை கரை மாவின்
      வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர
      கண்ணி நீ கடி கொண்டார கனைதொறும் யாம் அழ
      பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ -
      பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்
      மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை
      நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர்
      ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ -
      கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில்
      ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை
      வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
      அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ -
      களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல்
      குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை
      என ஆங்கு
      செறிவுற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று
      அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப
      கழிந்தவை உள்ளாது கண்ட இடத்தே
      அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ -
      இ நோய் உழத்தல் எமக்கு
      73 அகல் துறை அணிபெற புதலொடு தாழ்ந்த
      பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை
      கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்
      தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல
      வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர
      நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல் வழி
      தீது இலேன் யான் என தேற்றிய வருதிமன் -
      ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து
      இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்
      கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி
      மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதிமன் -
      அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
      மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்
      என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல் வழி
      முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதிமன் -
      நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலை கொள்ள
      கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்
      என ஆங்கு
      மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
      தண்டா பரத்தை தலை கொள்ள நாளும்
      புல தகை பெண்டிரை தேற்ற மற்று யாம் எனின்
      தோலாமோ நின் பொய் மருண்டு
      74 பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த
      நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள்
      செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை
      மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம்
      கொய்குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர
      அன்பு இலன் அறன் எனப்படான் என
      நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
      நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு அளி இன்மை
      கண்டுநின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்.
      முன்பகல் தலைக்கூடி நன்பகல் அவள் நீத்து
      பின்பகல் பிறர தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
      என ஆங்கு
      கிண்கிணி மணி தாரொடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி
      பேர் அமர கண்ணார்க்கும் படு வலை இது என
      ஊரவர் உடன் நக திரிதரும்
      தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே
      75 நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
      நேர் இதழ் ஆம்பல் நிரை
      சீர் ஆர் சே இழை ஒலிப்ப ஓடும்
      ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து
      ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி
      உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி
      அமர்க்கண் மகளிர் அலப்பிய அ நோய்
      தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும்
      உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
      புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்
      வதுவை நாளால் வைகலும் அ·து யான்
      நோவேன் தோழி நோவாய் நீ என
      என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென
      எல்லினை வருதி எவன் குறித்தனை என
      சொல்லாதிருப்பேன் ஆயின் ஒல்லென
      விரி உளை கலி மான் தேரொடு வந்த
      விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்
      வாடிய பூவொடு வாரல் எம்மனை என
      ஊடி இருப்பேன் ஆயின் நீடாது
      அச்சு ஆறு ஆக உணரிய வருபவன்
      பொ சூள் அஞ்சி புலவேன் ஆகுவல்
      பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
      இகலியிருப்பேன் ஆயின் தான் தன்
      முதல்வன் பெரும் பெயர் முறை உளி பெற்ற
      புதல்வன் புல்லி பொய் துயில் துஞ்சும்
      ஆங்க
      விருந்து எதிர் கொள்ளவும் பொ சூள் அஞ்சவும்
      அரும் பெறல் புதல்வனை முயங காணவும்
      ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது
      அவ் இடத்தான் அவை
      பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும்
      மாய மகிழ்நன் பரத்தைமை
      நோவென் தோழி கடன் நமக்கு எனவே.
      76 புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும்
      அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும்
      நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இவ் ஊர்
      இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என
      வினவுதி ஆயின் விளங்கு இழாய் கேள் இனி
      செவ் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன்
      பௌவ நீர சா கொழுதி பாவை தந்தனைத்தற்கே -
      கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
      ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை
      ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு
      நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ -
      விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆ
      கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை
      வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி
      தெரி வே தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ -
      புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்
      உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை
      என ஆங்கு
      அரிது இனி ஆய் இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு
      அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே
      தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின் எவன் கொலோ -
      நாம் செயற்பாலது இனி
      77 இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
      துணை இன்றி தளை விட்ட தாமரை தனி மலர்
      திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
      அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்
      தகை மலர பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி
      மிக நனி சேர்ந்த அம் முகை மிசை
      அக இதழ தண் பனி உறைத்தரும் ஊர கேள்
      தண் தளிர தகை பூத்த தாது எழில் நலம் செல
      கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் -
      உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின்
      பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின்
      பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல
      தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் -
      நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள்
      என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின்
      மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங் கூந்தல்
      வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் -
      நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம்மனை
      நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்
      ஆங்க
      கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
      இடையும் நிறையும் எளிதோ - நின் காணின்
      கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
      உடன் வாழ் பகை உடையார்க்கு
      78 பல் மலர பழனத்த பாசடை தாமரை
      இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்ப
      உண் துறை உடைந்த பூ புனல் சா புலந்து ஊடி
      பண்பு உடை நல் நாட்டு பகை தலை வந்தென
      அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்
      பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல - பிறிதும் ஒரு
      பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப
      இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்தாங்கு
      நிறை புனல் நீங்க வந்து அத்தும்பி அம் மலர
      பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர
      நீக்கும்கால் நிறம் சாய்ந்து புணரும்கால் புகழ் பூத்து
      நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் -
      எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார புணர்ந்தமை
      கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை
      சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என்
      தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் -
      அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல்
      மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை
      பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்
      செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான்-
      முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார்
      தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை
      ஆங்க
      ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ
      வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆ கையின்
      முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே
      தண் பனி வைகல் எமக்கு
      79 புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த
      முள் அரை தாமரை முழு முதல் சாய்த்து அதன்
      வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர்
      அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல்
      வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும்
      தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள்
      அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி
      மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்
      தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின்
      சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ
      புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில்
      பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால்
      மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
      பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ
      கண்டே எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி
      வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்
      நண்ணியார காட்டுவது இது என கமழும் நின்
      கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ
      என ஆங்கு
      பூங் கண் புதல்வனை பொய் பல பாராட்டி
      நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி
      ஆங்கே அவர் வயின் சென்றீ - அணி சிதைப்பான்
      ஈங்கு எம் புதல்வனை தந்து.
      80 நயம் தலை மாறுவார் மாறுக மாறா
      கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ
      பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி -
      திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ
      பவழம் புனைந்த பருதி சுமப்ப
      கவழம் அறியா நின் கை புனை வேழம்
      புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி
      அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
      வருக - எம் பாக மகன்
      கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅ
      தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே
      உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
      வளை நெகிழ்பு யாம் காணும் கால்
      ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
      தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே
      உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅ சாஅய்மார்
      எவ்வ நோய் யாம் காணும் கால்
      ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை
      அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே
      நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர்
      அல்குல் வரி யாம் காணும் கால்
      ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்தொறும்
      போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் -
      ஏதிலார் கண் சாய - நுந்தை வியல் மார்பில்
      தாது தேர் வண்டின் கிளை பாட தைஇய
      கோதை பரிபு ஆட காண்கும்.
      81 மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன்
      மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர
      பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்
      நலம்பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர
      உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில்
      அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட
      பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து
      கால் வல் தேர் கையின் இயக்க நடை பயிற்றா
      ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்
      போல வரும் என் உயிர்
      பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்
      பெரு தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற
      திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
      மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா
      பெருந்தகாய் கூறு சில.
      எல் இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
      வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்றற்றா
      நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட
      ஓவாது அடுத்து அத்தத்தா என்பான்
      வேய் மென் தோள் வே திறம் சேர்த்தலும் மற்று இவன்
      வாய் உள்ளின் போகான் அரோ
      உள்ளி உழையே ஒருங்கு படை விட
      கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை
      எள்ளுமார் வந்தாரே ஈங்கு
      ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர்
      கள்வரை காணாது கண்டேம் என்பார் போல
      சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின்
      ஆணை கடக்கிற்பார் யார்
      அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்
      முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி
      உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
      எதிர் வளி நின்றாய் நீ செல்
      இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கை நீவி
      யாது ஒன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்
      மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்
      தாவா விருப்பொடு கன்று யாத்த உழி செல்லும்
      ஆ போல் படர் தக நாம்
      82 ஞாலம் வறம் தீர பெ குணக்கு ஏர்பு
      காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை
      பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை
      புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
      புக்க வழி எல்லாம் கூறு
      கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை
      காயாமை வேண்டுவல் யான்
      காயேம்
      மட குறு மாக்களோடு ஓரை அயரும்
      அடக்கம் இல் போழ்தின் கண் தந்தை காமுற்ற
      தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும்
      மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து -
      பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர்
      சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும்
      வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும்
      மயங்கு நோய் தாங்கி மகன் எதிர் வந்து
      முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே
      நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று
      வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள்
      ஆங்கே அரி மதர் உண் கண் பசப்ப நோய் செய்யும்
      பெருமான் பரத்தைமை ஒவ்வாத என்றாள்
      அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி
      தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
      புல தகை புத்தேள் இல் புக்கான்- அலைக்கு ஒரு
      கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் - எல்லா
      வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும்
      பருந்து எறிந்தற்று ஆ கொள்ளும் கொண்டாங்கே
      தொடியும் உகிரும் படை ஆக நுந்தை
      கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்
      வடுவும் குறித்தாங்கே செய்யும் விடு இனி
      அன்ன பிறவும் பெருமான் அவள் வயின்
      துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ
      ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல
      கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்
      அமைந்தது இனி நின் தொழில்.
      83 பெரு திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை
      பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர
      இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
      விளையாட்டி கொண்டு வரற்கு என சென்றாய்
      உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம்
      நீட்டித்த காரணம் என்
      கேட்டீ -
      பெரு மடல் பெண்ணை பிணர தோட்டு பைங் குரும்பை
      குட வா கொடி பின்னல் வாங்கி தளரும்
      பெரு மணி திண் தேர குறுமக்கள் நாப்பண்
      அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு
      நீல நிரை போது உறு காற்கு உலைவன போல்
      சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
      ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழா
      கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி
      திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால்
      கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு
      ஒண்மை எதிரிய அம் கையும் தண் என
      செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இவ் இரா
      எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால்
      நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த
      புலம்பு எலாம் தீர்க்குவேம்மன் என்று இரங்குபு
      வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத
      கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி
      ஒள் இழாய் யான் தீது இலேன்
      எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
      எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெ கண்
      அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி
      முந்தை இருந்து மகன் செய்த நோ தலை
      வெந்த புண் வேல் எறிந்தற்றால் வடுவொடு
      தந்தையும் வந்து நிலை.
      84 உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
      நறு வடி ஆர் இற்றவை போல் அழி
      கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி
      சுரந்த என் மெல் முலை பால் பழுது ஆக - நீ
      நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா
      கடவுள் கடி நகர் தோறும் இவனை
      வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை
      ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
      யார் இல் தவிர்ந்தனை கூறு
      நீருள் அடை மறை ஆய் இதழ போது போல் கொண்ட
      குடை நிழல் தோன்றும் நின் செம்மலை காணூஉ
      இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா
      மகன் அல்லான் பெற்ற என்று அகல்
      வாயில் வரை இறந்து போத்தந்து தாயர்
      தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர்
      தம் கலங்களுள் கையுறை என்று
      ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர்
      ஈத்தவை கொள்வான் ஆம் இ·து ஒத்தன் சீத்தை
      செறு தக்கான் மன்ற பெரிது
      சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
      மோதிரம் யாவோ யாம் காண்கு
      அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்ப
      சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்
      குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும்
      செறியா பரத்தை இவன் தந்தை மார்பில்
      பொறி ஒற்றி கொண்டு ஆள்வல் என்பது தன்னை
      அறீஇய செய்த வினை
      அன்னையோ இ·து ஒன்று
      முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்
      வெந்த புண் வேல் எறிந்தற்றா இ·து ஒன்று
      தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை கண்
      தந்தார் யார் எல்லாஅ இது
      இ·து ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
      தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை
      இது தொடுக என்றவர் யார்
      அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த
      பூ எழில் உண் கண் அவளும் தவறு இலள்
      வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்
      மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் -
      தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்
      யானே தவறு உடையேன்
      85 காலவை சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு
      பொடி அழல் புறம் தந்த செய்வுறு கிண்கிணி
      உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்
      மை இல் செ துகிர கோவை அவற்றின் மேல்
      தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை
      கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய
      பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி
      பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும்
      செறி கட்டி ஈர் இடை தாழ்ந்த
      பெய் புல மூதா புகர் நிற துகிரின்
      மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்
      சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு
      ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூ காழ் மேல்
      சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூல் ஆக
      அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண
      சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை
      ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின்
      செல்வு உறு திண் தேர் கொடும் சினை கை பற்றி
      பைப தூங்கும் நின் மெல் விரல் சீறடி
      நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ
      செம்மால் நின் பால் உண்ணிய
      பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை
      தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார்
      நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும்
      நுந்தை பால் உண்டி சில
      நுந்தை வாய் மா சூள் தேறி மயங்கு நோய் கைமிக
      பூ எழில் உண் கண் பனி பரப்ப
      ஞாயர் பால் உண்டி சில
      அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென
      தாம் வந்தார் தம் பால் அவரொடு தம்மை
      வருக என்றார் யார் கொல்லோ ஈங்கு
      என் பாலல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை
      பாராட்டை பாலோ சில
      செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும்
      வரிசை பெரு பாட்டொடு எல்லாம் பருகீத்தை
      தண்டுவென் ஞாயர் மாட்டை பால்.
      86 மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
      கை புனை மு காழ் கயம் தலை தாழ
      பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
      நலம் கிளர் ஒள் பூண் நனைத்தரும் அவ் வாய்
      கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் 86-5
      பொலம் புனை செம் பாகம் போர் கொண்டு இமைப்ப
      கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்
      தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த
      தேரை வா கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்
      போர் யானை வந்தீக ஈங்கு
      செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
      நிலை பாலுள் ஒத்த குறி என் வா கேட்டு ஒத்தி
      கன்றிய தெவ்வர கடந்து களம் கொள்ளும்
      வென்றி மாட்டு ஒத்தி பெரும - மற்று ஒவ்வாதி
      ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல்
      மென் தோள் நெகிழ விடல்
      பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா
      கோல் செம்மை ஒத்தி பெரும - மற்று ஒவ்வாதி
      கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல்
      சால்பு ஆய்ந்தார் சாய விடல்
      வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு
      ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி
      மாதர் மெல் நோக்கின் மகளிரை நுந்தை போல். 86-23
      நோய் கூர நோக்காய் விடல்
      ஆங்க
      திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இம்
      மகன் அல்லான் பெற்ற
      மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர்
      ஆய் இழாய் தாவாத எனக்கு தவறு உண்டோ காவாது ஈங்கு
      ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை
      கன்றி அதனை கடியவும் கை நீவி
      குன்ற இறுவரை கோண்மா இவர்ந்தாங்கு
      தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் - அறன் இல்லா
      அன்பு இலி பெற்ற மகன்.
      87 ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் - யாம் நின்னை
      வெரூஉதும் காணும் கடை
      தெரி இழாய் செய் தவறு இல் வழி யாங்கு சினவுவாய்
      மெய் பிரிந்தன்னவர் மாட்டு
      ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய்
      இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி
      நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை
      புலப்பார் உடையர் தவறு
      அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி
      காயும் தவறு இலேன் யான்
      மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
      நாண் இலன் ஆயின் நலிதந்து அவன் வயின்
      ஊடுதல் என்னோ இனி
      இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
      தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா
      பாடு இல் கண் பாயல் கொள
      88 ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
      முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
      தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு
      அடியரோ ஆற்றாதவர்
      கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று
      வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
      மாயம் மருள்வார் அகத்து
      ஆய் இழாய் நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா
      என் கண் எவனோ தவறு
      இ·து ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர் பொதுக்கம் போல்
      வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும்
      ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார்
      சிரறுபு சீற சிவந்த நின் மார்பும்
      தவறு ஆதல் சாலாவோ கூறு
      அது தக்கது வேற்றுமை என் கண்ணோ ஓராதி தீது இன்மை
      தேற்ற கண்டீயாய் தெளிக்கு
      இனி தேற்றேம் யாம்
      தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
      தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர்
      நீ உறும் பொ சூள் அணங்கு ஆகின் மற்று இனி
      யார் மேல் விளியுமோ கூறு.
      89 யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர்
      ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
      வாரல் நீ வந்தாங்கே மாறு
      என் இவை ஓர் உயிர புள்ளின் இரு தலையுள் ஒன்று
      போர் எதிர்ந்தற்றா புலவல் நீ கூறின் என்
      ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
      ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி - எல்லாம் வல்
      பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்தாங்கு
      வருந்தல் நின் வஞ்சம் உரைத்து
      மருந்து இன்று - மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த
      இன் நகை தீதோ இலேன்
      மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
      புறம் சாய்ந்து காண்டைப்பாய் - நெஞ்சே உறழ்ந்து இவனை
      பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன்
      என்று அடி சேர்தலும் உண்டு.
      90 கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொ நகா
      மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின்
      பெண்டிர் உளர் மன்னோ ஈங்கு
      ஒண் தொடி நீ கண்டது எவனோ தவறு
      கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி
      பாடு பெயல் நின்ற பானாள் இரவில் -
      தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும்
      வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா
      ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா
      ஆரா கவவின் ஒருத்தி வந்து - அல்கல் தன்
      சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின்
      போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ
      ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா அவ் எதிர்
      தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ
      மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில்
      நாறு இண பை தார் பரிந்தது அமையுமோ
      தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
      சீறு அடி தோயா இறுத்தது அமையுமோ
      கூறு இனி காயேமா யாம்
      தேறின் பிறவும் தவறு இலேன் யான்
      அல்கல் கனவு கொல் நீ கண்டது
      கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
      கண்ட கனவு என காணாது மாறு உற்று -
      பண்டைய அல்ல நின் பொ சூள் நினக்கு எல்லா -
      நின்றாய் நின் புக்கில் பல
      மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு
      ஏடா குறை உற்று நீ எம் உரையல் - நின் தீமை
      பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ
      நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்
      91 அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம்
      புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த
      தெரி மலர கண்ணியும் தாரும் நயந்தார்
      பொரு முரண் சீற சிதைந்து நெருநையின்
      இன்று நன்று என்னை அணி
      அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன்
      ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை
      தெய்வத்தான் - கண்டீ தெளிக்கு
      மற்று அது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார்
      செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார்
      கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின்
      தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி
      அரி மதர் உண் கண்ணார் ஆரா கவவின்
      பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
      செரு ஒழிந்தேன் சென்றீ இனி
      தெரி இழாய் தேற்றாய் சிவந்தனை - காண்பாய் நீ தீது
      ஆற்றின் நிறுப்பல் பணிந்து
      அன்னதேல் ஆற்றல் காண்
      வேறுபட்டாங்கே கலுழ்தி அகப்படின்
      மாறுபட்டாங்கே மயங்குதி யாது ஒன்றும்
      கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ
      மாணா செயினும் மறுத்து ஆங்கே நின் வயின்
      காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின்
      பேணாய் நீ பெட்ப செயல்
      92 புன வளர் பூங் கொடி அன்னாய் கழி
      கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே
      முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி
      மயங்கி மற்று ஆண்டு ஆண்டு சேறலும் செல்லாது
      உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்
      அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும்
      உரிதின் ஒருதலை எய்தலும் - வீழ்வார
      பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
      தருதல் தகையாதால் மற்று
      நனவினால் போலும் நறு நுதால் அல்கல்
      கனவினால் சென்றேன் - கலி கெழு கூடல்
      வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை
      கரை அணி காவின் அகத்து
      உரை இனி - தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அவ் வழி
      கண்டது எவன் மற்று நீ
      கண்டது - உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும்
      மட நடை மா இனம் அந்தி அமையத்து
      இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்
      இறைகொண்டு இருந்தன்ன - நல்லாரை கண்டேன்
      துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை
      ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
      வேட்டதே கண்டாய் கனா
      கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் - உரை
      இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக
      தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
      பூங் கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே
      சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
      முனை அரண் போல உடைந்தன்று அ காவில்
      துனை வரி வண்டின் இனம்
      மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழி
      காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச
      அவருள்
      ஒருத்தி செயல் அமை கோதை நகை
      ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப
      ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்
      ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க
      ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம்
      ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப
      ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவுற்று
      வண்டு இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன்
      தண் தார் அகலம் புகும்
      ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை
      முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த
      கடி கயம் பாயும் அலந்து
      ஒருத்தி கணம் கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட
      மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
      வணங்கு காழ் வங்கம் புகும்
      ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்
      பறந்தவை மூச கடிவாள் கடியும்
      இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை
      ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா
      கொடி தம்மில் பிணங்கியவை
      தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு
      வண்டலவர் கண்டேன் யான்
      நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர்
      முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பல் மாண்
      கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான்
      செய்வது இல் என்பதோ கூறு
      பொய் கூறேன் - அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
      நல் வாயா காண்டை - நறு நுதால் பல் மாணும்
      கூடி புணர்ந்தீர் பிரியன்மின் நீடி
      பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல
      அரும்பு அவிழ் பூஞ் சினை தோறும் இரும் குயில்
      ஆனாது அகவும் பொழுதினான் மேவர
      நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
      தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்
      ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
      வேனில் விருந்து எதிர்கொண்டு.
      93 வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
      தண்டா தீம் சாயல் பரத்தை வியல் மார்ப
      பண்டு இன்னை அல்லைமன் ஈங்கு எல்லி வந்தீ
      கண்டது எவன் மற்று உரை
      நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டீவாய் ஆயின் -
      உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
      கடவுளர் கண் தங்கினேன்
      சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ
      கடவுண்மை கொண்டு ஒழுகுவார்
      அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீமன்
      முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் பு கால்
      இ போழ்து என்று அது வாய்ப்ப
      அ கடவுள் மற்று -
      நாவுள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
      மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை
      வாய் ஆக யாம் கூற வேட்டீவாய் கேள் இனி
      பெறல் நசை வேட்கையின் நின் குறி வா
      பறி முறை நேர்ந்த நகார் ஆ கண்டார்க்கு
      இறு முறை செய்யும் உருவொடு நும் இல்
      செறி முறை வந்த கடவுளை கண்டாயோ
      நறும் தண் தகரமும் நானமும் நாறும்
      நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப
      நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ
      பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ
      ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து
      சூர் கொன்ற செவ்வேலான் பாடி பல நாளும்
      ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு
      மாரி இறுத்த கடவுளை கண்டாயோ
      கண்ட கடவுளர் தம் உள்ளும் நின்னை
      வெறி கொள் வியல் மார்பு வேறு ஆக செய்து
      குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
      சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய்
      தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல்
      நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
      நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
      முட்டுப்பாடு ஆகலும் உண்டு.
      94 என் நோற்றனை கொல்லோ -
      நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
      ஈங்கு உரு சுருங்கி
      இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை
      அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்
      ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ எம்மை
      வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
      தீண்ட பெறுபவோ மற்று
      மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
      நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னை
      பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
      நீ நல்கின் உண்டு என் உயிர்
      குறிப்பு காண் - வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
      கல்லா குறள கடும் பகல் வந்து எம்மை
      இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின்
      பெண்டிர் உளர் மன்னோ கூறு
      நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
      கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான்
      புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம்
      அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ.
      பக்கத்து புல்ல சிறிது
      போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க
      மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல
      நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை
      புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என்
      பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க
      உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின்
      இழிந்ததோ கூனின் பிறப்பு - கழிந்து ஆங்கே
      யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா
      கூனி குழையும் குழைவு காண்
      யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி
      யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்
      காமர் நடக்கும் நடை காண் - கவர் கணை
      சாமனார் தம் முன் செலவு காண்
      ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர்
      உசாவுவம் கோன் அடி தொட்டேன்
      ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ
      பேயும் துள்ளல் உறும்
      கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்
      தண்டா தகடு உருவ வேறு ஆ காவின் கீழ
      போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் -
      துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
      முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.
      95 நில் ஆங்கு இவர்தரல் -
      நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இவ் வழி
      ஆறு மயங்கினை போறி நீ வந்தாங்கே
      மாறு இனி நின் ஆங்கே சே அடி
      செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த
      குறும்பூழ் போர் கண்டேம் அனைத்தல்லது யாதும்
      அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
      குறும்பூழ போர் கண்டமை கேட்டேன் நீ என்றும்
      புதுவன ஈகை வளம் பாடி காலின்
      பிரியா கவி கை புலையன் தன் யாழின்
      இகுத்த செவி சாய்த்து இனி இனி பட்டன
      ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின்
      தபுத்த புலர்வு இல புண்
      ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய் அல்கல் நின்
      தாரின் வா கொண்டு முயங்கி பிடி மாண்டு
      போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும்
      பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம்
      ஈரம் ஆய் விட்டன புண்
      கொடிற்று புண் செய்யாது மெய்ம் முழுதும் கையின்
      துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும்
      ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே
      கொட்டி கொடுக்கும் குறிப்பு
      ஆயின் ஆய் இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை
      போற்றிய நின் மெய் தொடுகு
      அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று
      அறிகல்லாய் போறி காண் நீ 95-26
      நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
      கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி
      அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள
      அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் - இன்னும்
      விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி -
      விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
      நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ்.
      96 ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்
      பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை
      சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
      யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி
      ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்
      குதிரை வழங்கி வருவல்
      அறிந்தேன் குதிரை தான்
      பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர கொய் சுவல்
      மேல் விரித்து யாத்த சிகழிகை செவ் உளை
      நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ்
      ஞால் இயல் மெல் காதின் புல்லிகை சாமரை
      மத்திகை கண்ணுறை ஆ கவின் பெற்ற
      உத்தி ஒரு காழ் நூல் உத்தரி திண் பிடி
      நேர் மணி மு காழ பல் பல
      தார் மணி பூண்ட தமனிய மேகலை
      நூபுர புட்டில் அடியொடு அமைத்து யாத்த
      வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ
      காதலித்து ஊர்ந்த நின் கா குதிரையை
      ஆய் சுதை மாடத்து அணி நிலா முற்றத்துள்
      ஆதி கொளீஇய அசையினை ஆகுவை
      வாதுவன் வாழிய நீ
      சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
      மதுரை பெரு முற்றம் போல நின் மெ கண்
      குதிரையோ வீறியது
      கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே
      கோரமே - வாழி
      வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்த
      குதிரை உடல் அணி போல நின் மெ கண்
      குதிரையோ கவ்வியது
      சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே
      வியமமே வாழி - குதிரை
      மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை
      பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட
      பரு குதிரையோ அன்று பெரும நின்
      ஏதில் பெரும் பாணன் தூது ஆட ஆங்கே ஓர்
      வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி
      உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை
      பரியாக வாதுவனாய் என்றும் மற்று அச்சார
      திரி குதிரை ஏறிய செல்.
      97 அன்னை கடுஞ் சொல் அறியாதாய் போல நீ
      என்னை புலப்பது ஒறுக்குவென் மன் யான் -
      சிறுகாலை இற்கடை வந்து குறி செய்த
      அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர
      எவ் வழி பட்டாய் சமன் ஆக இவ் எள்ளல்
      முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர்
      புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்
      ஒக்கும்
      அவ் யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்
      அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு -
      ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை
      தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு
      தொய்யகம் தோட்டி குழை தாழ் வடி மணி
      உத்தி பொறித்த புனை பூண் பருமத்து -
      முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து
      நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து
      தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும்
      தொடர் ஆக வலந்து படர்
      மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார்
      நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை
      இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ
      எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி
      தழீஇ கொண்டு ஊர்ந்தாயும் நீ
      குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா
      உவா அணி ஊர்ந்தாயும் நீ
      மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண் கண்
      நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ
      சார சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் 97-28
      சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல
      விடாஅது நீ எம் இல் வந்தாய் அவ் யானை
      கடாஅம் படும் இடத்து ஓம்பு.
      98 யாரை நீ எம் இல் புகுதர்வாய் ஓரும்
      புதுவ மலர் தேரும் வண்டே போல் - யாழ
      வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் -
      மாட்டு ஓடி மகளிர் தர
      பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
      பாட்டு ஆதல் சான்ற நின் மா பரத்தைமை -
      காட்டிய வந்தமை கைப்படுத்தேன் - பண்டு எலாம்
      கேட்டும் அறிவேன்மன் யான்
      தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் -
      பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
      வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை
      செய்யா மொழிவது எவன்
      ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்
      நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக
      மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆ
      கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆக
      நாணு சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
      யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை
      பாணன் புணை ஆக புக்கு
      ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி
      வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி
      குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்தாங்கே
      போர்த்த சினத்தான் புருவ திரை இடா
      ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப
      சீர தக வந்த புது புனல் நின்னை கொண்டு
      ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர்
      ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க
      புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும்
      கரை கண்டதூ உம் இலை
      நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்
      வையை புது புனல் ஆட தவிர்ந்ததை
      தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை
      செய்யா மொழிவது எவன்
      மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மா புது புனல்
      பல் காலும் ஆடிய செல்வுழி ஒல்கி
      களைஞரும் இல் வழி கால் ஆழ்ந்து தேரோடு
      இள மணலுள் படல் ஓம்பு - முளை நேர்
      முறுவலார்க்கு ஓர் நகை செய்து.
      99 நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
      அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
      திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
      குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
      மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
      பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
      இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்
      அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ
      புற நிழல் கீழ பட்டாளோ இவள்
      பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை
      பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செங்கோலின்
      செய் தொழில் கீழ பட்டாளோ இவள்
      காம நோய் கடை கூட்ட வாழும் நாள் முனிந்தாளை
      ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அம் முரசின்
      ஏமத்து இகந்தாளோ இவள்
      வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை
      ஆங்கு
      நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
      வடு காட்ட கண் காணாதற்று ஆக என் தோழி
      தொடி கொட்ப நீத்த கொடுமையை
      கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே
      100 ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
      வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும்
      நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு
      காண்தகு மதி என்ன கதிர் விடு தண்மையும்
      மாண்ட நின் ஒழுக்கத்தால் மறு இன்றி வியன் ஞாலத்து
      யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்
      ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
      பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான்-
      நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
      பல் இதழ் மலர் உண் கண் பனி மல காணும் கால்
      சுரந்த வான் பொழிந்தற்றா சூழ நின்று யாவர்க்கும்
      இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான்-
      கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள்
      இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும் கால்
      உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்
      முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான்-
      அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள்
      பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும் கால்
      ஆங்கு
      தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள்
      இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என
      நின்னை யான் கழறுதல் வேண்டுமோ
      என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே
      நான்காவது முல்லை கலி
      ஆசிரியர் சோழன் நல்லுத்திரன்
      101 தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று
      முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
      களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று
      ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்
      மணி புரை உருவின காயாவும் பிறவும்
      அணி கொள மலைந்த கண்ணியர்- தொகுபு உடன்
      மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்
      சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
      ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு.
      அவ் வழி முழக்கு என இடி முன் சமத்து
      வழக்கு மாறு கொண்டு வருபு
      நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப
      துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
      முறை உளி பராஅ பாய்ந்தனர் தொழூஉ.
      மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண்
      நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி
      கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்-
      அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
      நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்
      வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
      சுடர் விரிந்தன்ன சுரி நெற்றி காரி
      விடர் இயம் கண்ணி பொதுவனை சாடி
      குடர் சொரி குத்தி குலைப்பதன் தோற்றம் காண்-
      படர் அணி அந்தி பசும் கண் கடவுள்
      இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு
      குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
      செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை
      கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி
      நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்-
      ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன்
      தாளின் கடந்து அட்டு தந்தையை கொன்றானை
      தோளின் திருகுவான் போன்ம்
      என ஆங்கு
      அணி மாலை கேள்வன் தரூஉமார் ஆயர்
      மணி மாலை ஊதும் குழல்.
      கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
      விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை
      ஈன்றன ஆய மகள் தோள்.
      பகலிட கண்ணியன் பைதல் குழலன்
      சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது
      கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
      கூந்தல் அணை கொடுப்பேம் யாம்.
      கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆன் உள்
      தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
      கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு
      வேளாண்மை செய்தன கண்.
      ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார்
      நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்
      முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரொடு
      எல்லாம் புணர் குறி கொண்டு.
      102 கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
      தண் நறு பிடவமும் தவழ் கொடி தளவமும்
      வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர கொன்றையும்
      அன்னவை பிறவும் பல் மலர் துதை
      தழையும் கோதையும் இழையும் என்று இவை
      தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும்
      மட மொழி ஆயத்தவருள் இவள் யார்- உடம்போடு
      என் உயிர் புக்கவள் இன்று
      ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்
      திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா
      எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும்
      சொல்லால் தரப்பட்டவள்.
      சொல்லுக பாணியேம் என்றார் அறைக
      மாண் இழை ஆறு ஆக சாறு.
      சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம்
      மிடை பெறின் நேரா தகைத்து.
      தகை வகை மிசை மிசை பாயியர் ஆர்த்து உடன்
      எதிர் சென்றார்
      கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து
      உருத்து எழுந்து ஓடின்று மேல்.
      எழுந்தது துகள்
      ஏற்றனர் மார்பு
      கவிழ்ந்தன மருப்பு
      கலங்கினர் பலர்.
      அவருள் மலர்மலி புகல்எழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ
      எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி
      வருத்தினான் மன்ற அவ் ஏறு.
      ஏறு எவ்வம் காணா எழுந்தார்- எவன் கொலோ-
      ஏறு உடை நல்லார் பகை
      மடவரே நல் ஆயர் மக்கள்- நெருநை
      அடல் ஏற்று எருத்து இறுத்தார கண்டும் மற்று இன்றும்
      உடல் ஏறு கோள் சாற்றுவார்
      ஆங்கு இனி
      தண்ணுமை பாணி தளராது எழூஉக-
      பண் அமை இன் சீர் குரவையுள் தெள் கண்ணி
      திண் தோள் திறல் ஒளி மா போர் மா மேனி
      அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த
      முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி
      மன்றம் பரந்தது உரை
      103 மெல் இணர கொன்றையும் மென் மலர காயாவும்
      புல் இலை வெட்சியும் பிடவும் தளவும்
      குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்-
      கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்
      பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்மார்-
      முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
      பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த
      சொல்லர் சுடரும் கனம் குழை காதினர்
      நல்லவர்- கொண்டார் மிடை
      அவர் மிடை கொள-
      மணி வரை மருங்கின் அருவி போல
      அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும்
      மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
      வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்
      கொலைவன் சூடிய குழவி திங்கள் போல்
      வளையுபு மலிந்த கோடு அணி சேயும்
      பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து-
      அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும்
      பெரு மலை விடர் அகத்து ஒருங்கு உடன் குழீஇ
      படு மழை ஆடும் வரை அகம் போலும்-
      கொடி நறை சூழ்ந்த தொழூஉ.
      தொழுவினுள் புரிபு புக்க
      தெரிபு குத்தின
      ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி
      எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண்
      உருவ மாலை போல
      குருதி கோட்டொடு குடர் வலந்தன
      கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன்
      ஆடி நின்று அக்குடர் வாங்குவான் பீடு காண்-
      செ நூல் கழி ஒருவன் கைப்பற்ற அந்நூலை
      மு நூலா கொள்வானும் போன்ம்
      இகுளை இ·து ஒன்று கண்டை
      கோட்டு இனத்து ஆயர் மகன் அன்றே- மீட்டு ஒரான்-
      போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு
      தார் போல் தழீஇயவன்
      இகுளை இ·து ஒன்று கண்டை
      கோ இனத்து ஆயர் மகன் அன்றே- ஓவான்-
      மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி
      ஊர்வான் போல் தோன்றும் அவன்
      தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை
      ஊற்று களத்தே அடங கொண்டு அட்டு அதன்
      மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை-
      ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு
      சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன் கொல்
      கூற்று என உட்கிற்று என் நெஞ்சு
      இகுளை இ·து ஒன்று கண்டை
      புல் இனத்து ஆயர் மகன் அன்றே- புள்ளி
      வெறுத்த வய வெள் ஏற்று அம்புடை திங்கள்
      மறு போல் பொருந்தியவன்
      ஓவா வேகமோடு உருத்து தன் மேல் சென்ற
      சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும்
      காயாம் பூங் கண்ணி பொதுவன் தகை கண்டை-
      மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
      வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன் கொல்
      மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு
      ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும்
      மாறு உழக்கியாங்கு உழக்கி
      ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்- விட்டாங்கே
      மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழப்-
      பயில் இதழ் மலர் உண் கண்
      மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று
      தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ.
      கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும்
      புல்லாளே ஆய மகள்.
      அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
      நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய- உயிர் துறந்து-
      நைவாரா ஆய மகள் தோள்.
      வளியா அறியா உயிர் காவல் கொண்டு
      நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
      எளியவோ ஆய மகள் தோள்
      விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர்-
      கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின்
      முலை இடை போல புகின்.
      ஆங்கு
      குரவை தழீஇ யாம் மரபுளி பாடி
      தேயா விழு புகழ தெய்வம் பரவுதும்-
      மாசு இல் வான் முந்நீர பரந்த தொல் நிலம்
      ஆளும் கிழமையொடு புணர்ந்த
      எம் கோ வாழியர் இம் மலர் தலை உலகே
      104 மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
      மெலிவு இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்பட
      புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
      வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
      தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
      நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும்-
      வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை கொடி
      பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்
      பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி
      திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்
      மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
      முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
      மா கடல் கலக்குற கொன்ற மடங்கா
      வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ
      பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும்
      உருவ பல் கொண்மூ குழீஇயவை போல
      புரிபு புகுத்தனர்
      அவ் வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்
      வெள் ஏற்று எருத்து அடங்குவான்.
      ஒள் இழை வாருறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின்
      காரி கதன் அந்ஜ்சான் கொள்பவன்- ஈர் அரி
      வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ
      குரூஉ கண் கொலை ஏறு கொள்வான்- வரி குழை
      வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெந்துப்பின்
      சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்- என்று ஆங்கு
      அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால்
      நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை
      பேணி நிறுத்தார் அணி.
      அவ் வழி பறை எழுந்து இசை பல்லவர் ஆர்ப்ப
      குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த-
      நறை வலம் செய விடா இறுத்தன ஏறு.
      அவ் ஏற்றின்
      மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு
      வேல் நுதி புரை விறல் திறன் மருப்பின் மாறு
      பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை
      நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண்-
      பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும்
      நீல் நிற வண்ணனும் போன்ம்.
      இரிபு எழுபு அதிர்பு இகந்து உடன் பலர்
      அரிபு இறுபு குடர் சோர
      கோடு அழி கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும்
      வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை- இ·து ஒன்று-
      வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு
      திரிதரும் கொல் களிறும் போன்ம்.
      தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலை சென்று
      தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து
      கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது
      மீளும் புகர் ஏற்று தோற்றம் காண்- மண்டு அமருள்
      வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும்
      மீளி மறவனும் போன்ம்.
      ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப
      மறுத்து மைந்தர்
      தடி குறை இறுபு தாயின
      இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்பப்-
      பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர்
      கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு-
      புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க
      வரி புனை வல் வில் ஐவர் அட்ட
      பொரு களம் போலும் தொழூஉ.
      தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர்
      வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர்
      ஆங்கண் அயர்வர் தழூஉ.
      பாடுகம் வம்மின்- பொதுவன் கொலை ஏற்று
      கோடு குறி செய்த மார்பு.
      நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்
      செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன்
      பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது
      உற்றீயாள் ஆயர் மகள்.
      தொழீஈ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை
      அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல்
      குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
      தருக்கு அன்றோ- ஆயர் மகன்
      நேர் இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று
      காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
      ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்- அலர் எடுத்த
      ஊராரை உச்சி மிதித்து.
      ஆங்கு
      தொல் கதிர் திகிரியான் பரவுதும்- ஒல்கா
      உரும் உறழ் முரசின் தென்னவற்கு
      ஒரு மொழி கொள்க இவ் உலகு உடன் எனவே.
      105 அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த
      முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்குச்-
      சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என
      பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த
      ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி
      தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்மார்
      வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும்
      தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன்
      வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல
      தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்ற காரியும்
      ஒரு குழையவன் மார்பில் ஒள் தார் போல் ஒளி மிக
      பொரு அற பொருந்திய செம் மறு வெள்ளையும்
      பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
      இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்
      அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
      கணம் கொள் பல் பொறி கடும் சின புகரும்
      வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
      வாலிது கிளர்ந்த வெண் கால் சேயுஉம்
      கால முன்பின் பிறவும் சால
      மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்
      தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
      உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ.
      அவ் வழி
      கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க
      ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க
      நேர் இதழ் நிரை நெறி வெற கோதையர் அணி
      சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர்
      தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த
      ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து.
      மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்
      எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும்
      தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
      நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உற சாடி
      கொள இடம் விடா நிறுத்தன
      கொள்வாரை கோட்டு வாய் சா
      கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா-
      செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி
      உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்
      பாடு ஏற்றவரை பட குத்தி செங் காரி
      கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா-
      நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின்
      முகை சூழும் தும்பியும் போன்ம்
      இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி
      மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா-
      வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு
      போதரும் பால் மதியும் போன்ம்
      ஆங்க ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா
      இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
      பொரு களம் போலும் தொழூஉ
      வெல் புகழ் உயர்நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில்
      நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி
      பாடு இல ஆய மகள் கண்.
      நறு நுதால்- என் கொல்- ஐங்கூந்தல் உளர
      சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
      ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட
      கொல் ஏறு போலும் கதம்
      நெட்டிரும் கூந்தலாய் கண்டை இ·து ஓர் சொல்
      கோட்டு இனத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
      எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
      தம் கண் பொடிவது எவன்
      ஒள் நுதால்
      இன்ன உவகை பிறிது யாது-யாய் என்னை
      கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை
      மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி
      அலர் செய்துவிட்டது இவ் ஊர்
      ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு- ஒள் இழாய்-
      இன்று எவன் என்னை எமர் கொடுப்பது- அன்று அவன்
      மிக்கு தன் மேல் சென்ற செங் காரி கோட்டு இடை
      பு கால் புக்கது என் நெஞ்சு
      என
      பாடு இமிழ் பரப்பு அகத்து அரவணை அசைஇய
      ஆடு கொள் நேமியான் பரவுதும்-நாடு கொண்டு
      இன் இசை முரசின் பொருப்பன் மன்னி
      அமை வரல் அருவி ஆர்க்கும்
      இமையத்து உம்பர் உம் விளங்குக எனவே.
      106 கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்.
      இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
      ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
      வழூஉ சொல் கோவலர் தம் இன
      பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்.
      அவ் வழி
      நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
      மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையா
      துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல - களம் புகும்
      மள்ளர் வனப்பு ஒத்தன.
      தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி எவ் வாயும்
      வை வாய் மருப்பினால் மாறாது குத்தலின்
      மெய் வார் குருதிய ஏறு எல்லாம் - பெய் காலை
      கொண்டல் நிரை ஒத்தன.
      அவ் ஏற்றை
      பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி
      இரு திறனா நீக்கும் பொதுவர் -
      உரு கெழு மா நிலம் இயற்றுவான்
      விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு - ஒத்தனர்.
      அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி
      அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை
      மரத்தை போல் தொட்டன - ஏறு.
      தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி
      தங்கார் - பொதுவர் கடலுள்
      அம்பி ஊர்ந்தாங்கு ஊர்ந்தார் ஏறு.
      ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
      ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ
      ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
      மாலை போல் தூங்கும் சினை.
      ஆங்கு
      தம் புல ஏறு பரத்தர உய்த்த
      அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்
      இன்புற்று அயர்வர் தழூஉ.
      முயங்கி பொதிவேம்
      முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம் -
      கொலை ஏறு சாடிய புண்ணை - எம் கேளே
      பல் ஊழ் தயிர் கடை தாஅய புள்ளி மேல்
      கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குற
      புல்லல் எம் தோளிற்கு அணியோ
      ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்
      காரிகை தோள் காமுறுதலும் இவ் இரண்டும்
      ஓராங்கு சேறல் இலவோ - எம் கேளே
      கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
      சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும்
      செல்வம் எம் கேள்வன் தருமோ -
      ஆங்க
      அரும் தலை ஏற்றொடு காதலர பேணி
      சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்
      ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு
      மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே
      107 எல்லா இ·து ஒன்று - கூறு குறும்பு இவர்
      புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம்
      கொல் ஏறு கோடல் குறை என கோவினத்தார்
      பல் ஏறு பெய்தார் தொழூஉ.
      தொழுவத்து
      சில்லை செவி மறை கொண்டவன் சென்னி குவி முல்லை
      கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
      ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்
      கூழையுள் வீழ்ந்தன்று மன்
      அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது
      கேட்டனள் என்பவோ யாய்
      கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா
      அவன் கண்ணி அன்றோ அது
      பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான்
      கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
      செய்வது இல் ஆகுமோ மற்று
      எல்லா தவறும் அறும்.
      ஓஒ அ·து அறும் ஆறு
      ஆயர் மகன் ஆயின் ஆய மகள் நீ
      நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ
      அன்னை நோதக்கதோ இல்லை மன் - நின் நெஞ்சம்
      அன்னை நெஞ்சு ஆக பெறின்.
      அன்னையோ
      ஆயர் மகனையும் காதலை கைம்மிக
      ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ
      நீ உற்ற நோய்க்கு மருந்து.
      மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் - எல்லா
      வருந்துவேன் அல்லனோ யான்
      வருந்தாதி -
      மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்
      கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா
      தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ
      பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் - தந்தையோடு
      ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.
      108 இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -
      அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி
      நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி
      கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு
      அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்கால்
      நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
      இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான்
      அ·து அவலம் அன்று மன
      ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மி
      காயாம் பூம் கண்ணி கரும் துவர் ஆடையை
      மேயும் நிரை முன்னர கோல் ஊன்றி நின்றாய் ஓர்
      ஆயனை அல்லை பிறவோ அமரர் உள்
      ஞாயிற்று புத்தேள் மகன்
      அதனால் வாய்வாளேன்
      முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
      பல்லும் பணை தோளும் பேர் அமர் உண் கண்ணும்
      நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய
      சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்
      சொல்லாதி
      நின்னை தகைத்தனென் அல்லல் காண்மன்.
      மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே
      கண்ட பொழுதே கடவரை போல நீ
      பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின்
      கொண்டது எவன் - எல்லா
      கொண்டது
      அளை மாறி பெயர் தருவாய் - அறிதியோ
      தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல்
      இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா என் நெஞ்சம்
      களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ
      நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்
      புனத்து உளான் என்னைக்கு புகா உய்த்து கொடுப்பதோ
      இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வதோ
      தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ
      அனைத்து ஆக
      வெண்ணெ தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
      அண்ண அணித்து ஊர் ஆயின் நன்பகல் போழ்து
      கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
      மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
      வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்.
      பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்
      தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
      பனி பூம் தளவொடு முல்லை பறித்து
      தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
      பனி பட செல்வாய் நும் ஊர்க்கு.
      இனி செல்வேம் யாம்
      மா மருண்டன்ன மழை கண் சிற்று ஆய்த்தியர்
      நீ மருட்டும் சொல கண் மருள்வார்க்கு உரை அவை
      ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை
      காமுற்று செல்வாய் ஓர் கண் குத்தி கள்வனை
      நீ எவன் செய்தி பிறர்க்கு
      யாம் எவன் செய்தும் நினக்கு
      கொலை உண் கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி
      இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
      நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
      மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
      தலையினால் தொட்டு உற்றேன் சூள்.
      ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் -
      தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
      வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை
      காஞ்சி தாது உக்கன்ன எரு
      தூங்கும் குரவையுஉள் நின் பெண்டிர் கேளாமை
      ஆம்பல் குழலால் பயிர் - எம்
      காஞ்சி கீழ் செய்தேம் குறி.
      109 கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து
      பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி
      நீர் ஆர் நிழல குடம் சுட்டு இனத்து உள்ளும்
      போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இள பாண்டில்
      தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் -
      பேர் ஊரும் சிற்று கௌவை எடுப்பவள்
      மோரோடு வந்தாள் - தகை கண்டை யாரோடும்
      சொல்லியாள் அன்றே வனப்பு
      பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய
      கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் -
      புண் இல்லார் ஆக நோக்கும் முழு
      கண்ணளோ - ஆய மகள்
      இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி
      வரி கூழ வட்டி தழீஇ அரி குழை
      ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது
      நுண்ணிதா தோன்றும் நுசுப்பு.
      இடை தெரியா ஏஎர் இருவரும் தம்
      உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ
      படை இடுவான் மன் கண்டீர் காமன் - மடை அடும்
      பாலொடு கோட்டம் புகின்
      இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் -
      யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர பெண்டிர்
      மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
      எழு நின் கிளையொடு போக என்று தம்
      கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்
      வாயில் அடைப்ப வரும்.
      110 கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்
      குடி தொறும் நல்லாரை வேண்டுதி - எல்லா
      இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர
      துன்னி தந்தாங்கே நகை குறித்து எம்மை
      திளைத்தற்கு எளியமா கண்டை. அளைக்கு எளியாள்
      வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் - ஒள் நுதால்
      ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக
      அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
      நிச்சம் தடுமாறும் - மெல் இயல் ஆய் மகள்
      மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
      சுற்றி சுழலும் என் நெஞ்சு.
      விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது
      கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்கு சூழும்
      கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும்
      நடுங்கு அஞர் உற்றது - என் நெஞ்சு.
      எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும்
      நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி
      கை தோயல் மாத்திரை அல்லது செய்தி
      அறியாது - அளித்து என் உயிர்.
      அன்னையோ - மன்றத்து கண்டாங்கே சான்றார் மகளிரை
      இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்
      நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும்
      கன்றொடு சேறும் புலத்து.
      111 தீம் பால் கறந்த கலம் மாற்ற கன்று எல்லாம்
      தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த
      பூம் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும்
      முல்லையும் தாய பாட்டம் கால் - தோழி
      புல் இனத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
      ஒருங்கு விளையாட அவ் வழி வந்த
      குருந்தம் பூம் கண்ணி பொதுவன் மற்று என்னை
      முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும்
      சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ
      பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய்
      கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று இழாய்
      தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய
      கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ
      ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக
      பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய்
      ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
      தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர்
      செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது
      மையலை மாதோ விடுக என்றேன். தையலாய்
      சொல்லிய ஆறு எல்லாம் மாறு யான்
      அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ
      ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும்
      யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற
      நோயும் களைகுவை மன்.
      112 யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர்
      பூம் தாமரை போது தந்த விரவு தார
      கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு
      சொல்லல் ஓம்பு என்றார் எமர்.
      எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும்
      நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின்
      விடாஅல் ஓம்பு என்றார் எமர்.
      கடாஅயார் நல்லாரை காணின் விலக்க நயந்து அவர்
      பல் இதழ் உண் கண்ணும் தோளும் புகழ் பாட
      நல்லது கற்பித்தார் மன்ற நுமர். பெரிதும்
      வல்லர் எமர் கண் செயல்.
      ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்
      வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை
      இகழ்ந்தாரே அன்றோ எமர்
      ஒக்கும் அறிவல் - யான் எல்லா
      விடேன் யான் என் நீ குறித்தது - இரும் கூந்தால்
      நின்னை என் முன் நின்று
      சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ
      புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல
      முயங்கு நின் முள் எயிறு உண்கும். எவன் கொலோ
      மா பொதுவன் உரைத்த உரை எல்லாம்
      வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய்
      சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின்
      ஆய் இதழ் உண் கண் பசப்ப தட மென் தோள்
      சாயினும் ஏஎர் உடைத்து.
      113 நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்
      அலமரல் அமர் உண் கண் அம் நல்லாய் நீ உறீஇ
      உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல்.
      பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய்
      யார் - எல்லா நின்னை அறிந்ததூ உம் இல் வழி
      தளிர் இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா
      புல் இனத்து ஆயர் மகனேன் மற்று யான்.
      ஒக்கும் மன்
      புல் இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு
      நல் இனத்து ஆயர் எமர்.
      எல்லா
      நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை மன்
      ஏதம் அன்று எல்லை வருவான் விடு.
      விடேன்
      உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு.
      மெல்லிய ஆதல் அறியினும் மெல்லியால்
      நின் மொழி கொண்டு யானோ விடுவேன் - மற்று என்
      என் நெஞ்சம் ஏவல் செயின்
      நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய
      காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார்
      பொய்ம் மொழி தேறுவது என்
      தெளிந்தேன் தெரி இழாய் யான்.
      பல் கால் யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில்
      அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
      முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை
      இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று
      உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண்
      நல் ஏறு நாகு உடன் நின்றன
      பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.
      114 வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
      ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ...
      புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
      வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
      ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ -
      தோழி - அவன் உழை சென்று
      சென்று யான் அறிவேன் கூறுக. மற்று இனி.
      சொல் அறியா பேதை - மடவை மற்று
      நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
      நினக்கு வருவதா காண்பாய். அனைத்து ஆக
      சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு.
      தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி
      எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும்
      பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய -
      வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த
      திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
      ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும்
      தெருமரல் கைவிட்டு இருக்கோ... அலர்ந்த
      விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
      அரு நெறி ஆயர் மகளிர்க்கு
      இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
      115 தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர
      நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு
      கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம் கண்டாய் நம்
      புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
      முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்லியால்
      கூந்தலுள் பெய்து முடித்தேன் மன் தோழி யாய்
      வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
      அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
      அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ.
      அதனை வினவலும் செய்யாள் சினவலும்
      நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
      நீங்கிப்புறங்கடை போயினாள். யானும் என்
      சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த
      பூம் கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
      பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு எல்லா
      ஈங்கு எவன் அஞ்சுவது
      அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும்
      அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல்
      வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில்
      வதுவையும் ஈங்கே அயர்ப அதுவே யாம்
      அல்கலும் சூழ்ந்த வினை
      116 பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்
      தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
      முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா நீ
      என்னையே முற்றாய் விடு.
      விடேஎன் தொடீஇய செல்வார துமித்து எதிர் மண்டும்
      கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
      நீங்கி சினவுவாய் மற்று.
      நீ நீங்கு கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு
      வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு
      யாய் வருக ஒன்றோ பிறர் மற்று
      கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
      நீ அருளி நல்க பெறின்.
      நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ
      கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
      மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் -
      கலத்தொடு யாம் செல்வுழி நாடி புலத்தும்
      வருவையால் - நாண் இலி நீ.
      117 மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇ
      பேணி துடைத்தன்ன மேனியாய் கோங்கின்
      முதிரா இள முகை ஒப்ப எதிரிய
      தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின்
      கையது எவன் மற்று உரை.
      கையதை - சேரி கிழவன் மகளேன் யான் மற்று இ·து ஓர்
      மாதர புலைத்தி விலை ஆக செய்தது ஓர்
      போழில் புனைந்த வரி புட்டில் - உள் என்
      காண்தக்காய் என் காட்டி காண்.
      காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
      காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை.
      முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்
      எல்லிற்று போழ்து ஆயின் - ஈதோளி கண்டேனால்
      செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு
      மெல்லியது ஓராது அறிவு.
      ஐந்தாவது நெய்தல் கலி
      ஆசிரியர் நல்லாந்துவனார்
      118 வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
      நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த
      தொல் வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் -
      பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர
      ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன்
      ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப
      குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
      இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை
      மாலை நீ - தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த
      போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்
      ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளை விட்ட
      காதலர புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்.
      மாலை நீ - தை என கோவலர் தனி குழல் இசை கேட்டு
      பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்
      செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்
      பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்.
      மாலை நீ - தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர
      பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்
      தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை
      முகை முகம் திறந்தன்ன முறுவலும் கடிகல்லாய்.
      என ஆங்கு
      மாலையும் அலரும் நோனாது எம் வயின்
      நெந்ஜ்சமும் எஞ்சும்மன் தில்ல - எஞ்சி
      உள்ளாது அமைந்தோர் உள்ளும்
      உள் இல் உள்ளம்
      119 அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
      பகல் நுங்கியது போல படு சுடர் கல் சேர
      இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர
      நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர
      கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப
      தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச
      முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த
      சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென
      பறவை தம் பார்ப்பு உள்ள கறவை பதி
      கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர
      மா வதி சேர மாலை வாள் கொள
      அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து
      செந்தீ செவ் அழல் தொடங்க - வந்ததை
      வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
      காலை ஆவது அறியார்
      மாலை என்மனார் மயங்கியோரே
      120 அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான்
      வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய
      இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர -
      உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
      இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம் மாறி
      கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப -
      தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக
      நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலை
      கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை
      மாலை நீ - உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின் கண்
      வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்
      அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ
      மாலை நீ - ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி
      போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல்
      ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ
      மாலை நீ - கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின் கண்
      வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்
      காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ
      என ஆங்கு
      இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
      துனி கொள் துயர் தீர காதலர் துனை தர
      மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை
      ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும்
      நல் இறை தோன்ற கெட்டாங்கு -
      இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே.
      121 ஒள் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது
      தெள் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம்
      தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர
      புள் இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
      வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி
      பள்ளி புக்கது போலும் பரப்பு நீர தண் சேர்ப்ப
      தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம் மாற
      தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே -
      உறையொடு வைகிய போது போல் ஒய்யென
      நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு
      வாராய் நீ புறம் மாற வருந்திய மேனியாட்கு
      ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே -
      கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ் உற்ற கோடல் வீ
      இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு
      இன் துணை நீ நீப்ப இரவின் உள்
      தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே -
      ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
      நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு
      என ஆங்கு
      எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை
      மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு நெறி தாழ்ந்து
      சாயினள் வருந்தியாள் இடும்பை
      பாய் பரி கடு திண் தேர் களையினோ இடனே.
      122 கோதை ஆயமும் அன்னையும் அறிவுற
      போது எழில் உண் கண் புகழ் நலன் இழப்ப
      காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
      சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை
      பலவு நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை
      அலவலை உடையை என்றி - தோழீ
      கேள் இனி
      மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
      காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன் அறியினும்
      பேணி அவன் சிறிது அளித்த கால் என்
      நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்
      இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
      தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன் அறியினும்
      அருளி அவன் சிறிது அளித்த கால் என்
      மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்
      ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
      உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன் அறியினும்
      புல்லி அவன் சிறிது அளித்த கால் என்
      அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்
      அதனால்
      யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த
      காம நோயின் கழீஇய நெஞ்சம் -
      தான் அவர்பால் பட்டது ஆயின்
      நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே
      123 கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்
      சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத
      ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு
      அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்
      பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் -
      காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான்
      மாணா நோய் செய்தான்கண் சென்றாய் மற்று அவனை நீ
      காணவும் பெற்றாயோ - காணாயோ மட நெஞ்சே
      கொல் ஏற்று சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை
      அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய் மற்று அவனை நீ
      புல்லவும் பெற்றாயோ - புல்லாயோ மட நெஞ்சே
      வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான்
      செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய் மற்று அவனை நீ
      அறியவும் பெற்றாயோ - அறியாயோ மட நெஞ்சே
      என ஆங்கு
      எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ்
      அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ
      இரும் கழி ஓதம் போல் தடுமாறி
      வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே
      124 ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை
      பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய
      நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை
      வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப
      ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின்
      கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் -
      காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே
      பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்
      இணைபு இவ் ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்
      புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
      துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி
      அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்
      இன்று இவ் ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்
      நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
      வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி
      நின்று நீர் உ கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால்
      அதனால்
      பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த கால்
      அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர
      புரி உளை கலி மான் தேர் கடவுபு -
      விரி தண் தார் வியல் மார்ப - விரைக நின் செலவே
      125 கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
      தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள்
      நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
      நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
      வண் பரி நவின்ற வய மான் செல்வ
      நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
      அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்
      மகிழ் செய் தே மொழி தொய்யில் சூழ் இள முலை
      முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண் கண்
      அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
      இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ
      இலங்கு ஏர் எல் வளை தழை
      நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅ
      புலந்து அழ புல்லாது விடுவாய்
      இலங்கு நீர சேர்ப்ப கொடியை காண் நீ
      இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால்
      பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
      நுண் வரி வாட வாராது விடுவாய்
      தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ
      என ஆங்கு
      அனையள் என்று அளிமதி பெரும நின் இன்று
      இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி
      பிறை ஏர் சுடர் நுதல் பசலை
      மறை செல்லும் நீ மணந்தனை விடினே.
      126 பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
      தன் மலைந்து உலகு ஏ தகை மதி ஏர்தர
      செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை
      முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்
      எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர தண் சேர்ப்ப
      அணி சிறை இன குருகு ஒலிக்கும்கால் நின் திண் தேர்
      மணி குரல் என இவள் மதிக்கும்மன் மதித்தாங்கே
      உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
      புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே
      நீர் நீவி கஞன்ற பூ கமழும்கால் நின் மார்பின்
      தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன் மதித்தாங்கே
      அலர் பதத்து அசை வளி வந்து ஒல கழி பூத்த
      மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே
      நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த கால்
      தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன் மதித்தாங்கே
      நனவு என புல்லும்கால் காணாளா கண்டது
      கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே
      என ஆங்கு
      பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்
      அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
      மதி மருள் வாள் முகம் விளங்க
      புது நலம் ஏர்தர பூண்க நின் தேரே
      127 தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்
      புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும்
      வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத -
      செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல்
      வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர தண் சேர்ப்ப
      கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர்
      நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ -
      கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண்
      இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை
      குறி இன்றி பல்நாள் நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு
      எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ -
      அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
      செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை
      காண்வர இயன்ற இ கவின் பெறு பனி துறை
      யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ -
      வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்
      வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை
      அதனால்
      இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர
      உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன்
      கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு -
      உரவு நீர சேர்ப்ப - அருளினை அளிமே
      128 தோள் துறந்து அருளாதவர் போல் நின்று
      வாடை தூக்க வணங்கிய தாழை
      ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
      நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது
      அளி இன்று பிணி விளியாது
      கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல
      புதுவது கவினினை என்றி ஆயின்
      நனவின் வாரா நயன் இலாளனை
      கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி
      அலந்தாங்கு அமையலென் என்றானை பற்றி என்
      நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும்
      கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி
      புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் -
      முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என
      நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்
      வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என
      தலையுற முன் அடி பணிவான் போலவும் -
      கோதை கோலா இறைஞ்சி நின்ற
      ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்
      யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே
      பேதையை பெரிது என தெளிப்பான் போலவும்
      ஆங்கு
      கனவினால் கண்டேன் - தோழி
      கனவின் வந்த கானலம் சேர்ப்பன்
      நனவின் வருதலும் உண்டு என
      அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே.
      129 தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
      பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்
      எல் உறு தெறு கதிர் மடங்கி தன்
      நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்
      அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
      மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர
      எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை -
      பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் -
      தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம்
      நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம் போல
      காதல் செய்து அகன்றாரை உடையையோ - நீ.
      மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் -
      நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய
      என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல
      இன் துணை பிரிந்தாரை உடையையோ - நீ.
      பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் -
      இனி வரின் உயரும் மன் பழி என கலங்கிய
      தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல
      இனிய செய்து அகன்றாரை உடையையோ - நீ
      என ஆங்கு
      அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
      பெரும் பேதுறுதல் களைமதி பெரும
      வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
      மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின்
      அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே.
      130 நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
      இவனின் தோன்றிய இவை என இரங்க
      புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட
      அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல்
      நிரை கதிர கனலி பாடொடு பகல் செல
      கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்
      புல் இருள் பரத்தரூஉம் - புலம்பு கொள் மருள் மாலை.
      இம் மாலை
      ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்
      கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்
      இம் மாலை
      இரும் கழி மா மலர் கூம்ப அரோ என்
      அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்
      இம் மாலை
      கோவலர் தீம் குழல் இனைய அரோ என்
      பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும்
      என ஆங்கு
      படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை
      குடி புறங்காத்து ஓம்பும் செம் கோலான் வியன் தானை
      விடுவழி விடுவழி சென்றாங்கு அவர்
      தொடுவழி தொடுவழி நீங்கின்றால் பசப்பே.
      131 பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என்
      திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த
      அரும் துயர் நீக்குவேன் போல்மன் - பொருந்துபு
      பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண் கண்
      நோக்கும்கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி
      இன மீன் இகல் மாற வென்ற சின
      எறி சுறா வான் மருப்பு கோத்து நெறி செய்த
      நெய்தல் நெடு நார பிணித்து யாத்து கை உளர்வின்
      யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப
      தாழாது உறைக்கும் தட மலர தண் தாழை
      வீழ் ஊசல் தூங்க பெறின்.
      மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
      கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள்
      நீத்தான் திறங்கள் பகர்ந்து.
      நாணின கொல் தோழி
      இரவு எலாம் நல்தோழி நாணின - என்பவை 6
      வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்
      ஆனா பரிய அலவன் அளை புகூஉம்...
      கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என்
      மேனி சிதைத்தான் துறை.
      மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
      தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்
      தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
      சேய் உயர் ஊசல்சீர் நீ ஒன்று பாடித்தை.
      பார்த்து உற்றன தோழி
      இரவு எலாம் நல்தோழி பார்த்து உற்றன - என்பவை
      தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல் என
      இன் துணை அன்றில் இரவின் அகவாவே -
      அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என்
      மென்தோள் ஞெகிழ்த்தான் துறை.
      கரை கவர் கொடும் கழி கண்கவர் புள் இனம்
      திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை
      இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும்
      அசை வரல் ஊசல்சீர் அழித்து ஒன்று பாடித்தை.
      அருளின கொல் தோழி
      இரவு எலாம் தோழி அருளின - என்பவை
      கணம் கொள் இடு மணல் காவி வருந்த
      பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் -
      மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
      வணங்கி உணர்ப்பான் துறை.
      என நாம்
      பாட மறை நின்று கேட்டனன் நீடிய
      வால் நீர கிடக்கை வயங்கு நீர சேர்ப்பனை
      யான் என உணர்ந்து நீ நனி மருள
      தேன் இமிர் புன்னை பொருந்தி
      தான் ஊக்கினன் அவ் ஊசலை வந்தே.
      132 உரவு நீர திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
      விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
      இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள் இனம் இறைகொள -
      முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப
      நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல்
      சிதைவு இன்றி சென்றுழி சிறப்பு எய்தி வினை வாய்த்து
      துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப
      புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்
      நல் நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ -
      பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள்
      மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை
      பல்மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்தக்கால்
      சின் மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ -
      வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
      நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்தந்தை
      அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால்
      கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ -
      பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் 8
      மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை
      என ஆங்கு -
      வழிபட்ட தெய்வம்தான் வலி என சார்ந்தார்கண்
      கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல
      பழி பரந்து அலர் தூற்ற என் தோழி
      அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே
      133 மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
      கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்
      சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த
      நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை
      பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்
      ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
      போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
      பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
      அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
      அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
      செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
      நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
      முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
      பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல்.
      ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி
      நல் நுதல் நலன் உண்டு துறத்தல் - கொண்க
      தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்
      நின்தலை வருந்தியாள் துயரம்
      சென்றனை களைமோ பூண்க நின் தேரே
      134 மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
      ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
      கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்
      கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்
      இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல 5
      பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர
      போஒய வண்டினால் புல்லென்ற துறையவா
      பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப
      ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற
      இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை
      தவல் இல் நோய் செய்தவர காணாமை நினைத்தலின் 1
      இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே
      கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி
      அவலம் மெ கொண்டது போலும் - அ·து எவன் கொலோ
      நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின்
      கடும் பனி கைம்மி கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே
      நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி
      இடும்பை நோய்க்கு இகுவன போலும் - அ·து எவன் கொலோ
      வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்
      கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே
      மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
      எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன் கொலோ
      என ஆங்கு
      கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்
      திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்தாங்கு
      விரைவனர் காதலர் புகுதர
      நிரை தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே.
      135 துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
      இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா -
      அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட
      எயில் இடு களிறே போல் மணல் நெடு
      பயில் திரை நடு நன்னாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்
      கடி மலர புன்னை கீழ் காரிகை தோற்றாளை
      தொடி நெகிழ்த்த தோளளா துறப்பாயால் மற்று நின்
      குடிமை கண் பெரியது ஓர் குற்றமா கிடவாதோ
      ஆய் மலர புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை
      நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின்
      வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமா கிடவாதோ
      திகழ் மலர புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
      இகழ் மலர கண்ணளா துறப்பாயால் மற்று நின்
      புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ
      என ஆங்கு
      சொல்ல கேட்டனை ஆயின் வல்லே
      அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து
      மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
      உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
      இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவுமதி விரைந்தே
      136 இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்
      உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி
      தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப
      கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூங் கடல் சேர்ப்ப
      முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால் முன் ஆயம்
      பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் -
      அ திறத்து நீ நீங்க அணி வாடி அவ் ஆயம்
      வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ
      முட தாழை முடுக்கருள் அளித்தக்கால் வித்தாயம்
      இடை தங கண்டவன் மனம் போல நந்தியாள் -
      கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
      உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ
      நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்தக்கால்
      மறு வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் -
      அறிவித்து நீ நீங கருதியாய்க்கு அ பொருள்
      சிறு வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ
      ஆங்கு
      கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்
      தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ
      பாண்டியம் செய்வான் பொருளினும்
      ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே
      137 அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்
      பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே
      பலவே யாமம் பையுளும் உடைய
      சிலவே நம்மோடு உசாவும் அன்றில்
      அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து
      எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின்
      அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே.
      மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம்
      சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை
      வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
      வில்லினான் எய்தலோ இலர்மன் ஆய் இழை
      வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய்.
      நகை முதல் ஆக நட்பினுள் எழுந்த
      தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை
      வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆக
      பகைமையின் நலிதலோ இலர்மன் ஆய் இழை
      பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய்.
      நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம்
      சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை
      பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர
      தீயினால் சுடுதலோ இலர்மன் ஆய் இழை
      தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்.
      ஆங்கு -
      அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு
      இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்
      யாங்கு ஆவது கொல் - தோழி எனையதூஉம்.
      தாங்குதல் வலித்தன்று ஆயின்
      நீங்க அரிது உற்றஅன்று அவர் உறீஇய நோயே.
      138 எழில் மருப்பு வேழம் இகுதரு
      தொழில் மாறி தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு
      அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு
      வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன்
      மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி -
      என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி
      தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன் கொலோ
      மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
      அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து
      மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இ·து ஒத்தன் -
      எல்லீரும் கேட்டீமின் என்று.
      படரும் பனை ஈன்ற மாவும் - சுடர் இழை
      நல்கியாள் நல்கியவை
      பொறை என் வரைத்து அன்றி பூ நுதல் ஈத்த
      நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற
      உப்பு இயல் பாவை உறை உற்றது போல
      உக்கு விடும் என் உயிர்.
      பூளை பொல மலர் ஆவிரை - வேய் வென்ற
      தோளாள் எமக்கு ஈத்த பூ
      உரிது என் வரைத்து அன்றி ஒள் இழை தந்த
      பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த
      நெய்யுள் மெழுகின் நிலையாது பைப
      தேயும் - அளித்து என்
      இளையாரும் ஏதிலவரும் - உளைய யான்
      உற்றது உசாவும் துணை.
      என்று யான் பாட கேட்டு
      அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் -
      துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
      இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் - அன்புற்று
      அடங்குஅரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம்
      உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.
      139 சான்றவிர் வாழியோ
      பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
      சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இவ் இருந்த
      சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற
      துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி
      ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என்
      நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன்
      அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின்
      பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப
      ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து என் எவ்வ நோய்
      தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
      வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது
      பாடுவேன் பாய் மா நிறுத்து.
      யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப
      மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் -
      தே மொழி மாதர் உறாஅது உறீஇய
      கா கடல் அகப்பட்டு.
      உய்யா அரு நோய்க்கு உயவாகும் - மையல்
      உறீஇயாள் ஈத்த இம் மா.
      காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என்
      ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் -
      மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது
      ஆணையால் வந்த படை.
      கா கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் -
      எழில் நுதல் ஈத்த இம் மா.
      அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும்
      வகையினால் உள்ளம் சுடுதரும் மன்னோ -
      முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
      தகையால் தலைக்கொண்ட நெஞ்சு
      அழல் மன்ற காம அரு நோய் நிழல்
      நேர் இழை ஈத்த இம் மா.
      ஆங்கு அதை
      அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம்
      ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
      உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர்
      உயர்நிலை உலகம் உறீஇயாங்கு என்
      துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே.
      140 கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே
      பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது
      மா என்று உணர்மின் மடல் அன்று மற்று இவை
      பூ அல்ல பூளை உழிந்ஞையோடு யாத்த
      புன வரை இட்ட வயங்கு தார பீலி
      பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி
      அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி
      நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு அனைய
      வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
      இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு
      அடியுறை காட்டிய செல்வேன் மடியன்மின்
      அன்னேன் ஒருவனேன் யான்
      என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
      ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ -
      என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக
      நல் நுதல் ஈத்த இம் மா
      திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும்
      தம் காதல் காட்டுவர் சான்றவர் - இன் சாயல்
      ஒண் தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச
      கண்டும் கண்ணோடாது இவ் ஊர்.
      தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
      பாம்பும் அவை படில் உய்யும்ஆம் - பூம் கண்
      வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம்
      உணர்ந்தும் உணராது இவ் ஊர்.
      வெம் சுழி பட்ட மகற்கு கரை நின்றார்
      அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டுஆம் - அம் சீர
      செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம்
      அறிந்தும் அறியாது இவ் ஊர்.
      ஆங்க
      என் கண் இடும்பை அறீஇயினென் நும்
      தெருளுற நோக்கி தெரியும்கால் இன்ன
      மருளுறு நோயொடு மம்மர் அகல
      இருளுறு கூந்தலாள் என்னை
      அருளுற செயின் நுமக்கு அறனும்ஆர் அதுவே.
      141 அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
      வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே
      அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
      திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று -
      அணி நிலை பெண்ணை மடல் ஊர்ந்து ஒருத்தி
      அணி நலம் பாடி வரற்கு.
      ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி நிறை மதி
      நீருள் நிழல்போல் கொளற்கு அரியள் - போருள்
      அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்
      மன்றம் படர்வித்தவள் - வாழி சான்றீர்
      பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை
      மை அறு மண்டிலம் வேட்டனள் - வையம்
      புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு
      இன்னா இடும்பை செய்தாள் - அம்ம சான்றீர்
      கரந்தாங்கே இன்னா நோய் செய்யும் மற்று இ·தோ -
      பரந்த சுணங்கின் பணை தோளாள் பண்பு
      இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும்
      கொடி மின்னு கொள்வேன் என்றன்னள் - வடி நாவின்
      வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர
      கல்லாமை காட்டியவள் - வாழி சான்றீர்
      என்று ஆங்கே
      வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட
      திருந்து இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
      பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
      போல கொடுத்தார் தமர்.
      142 புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை
      அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார் கண்
      செய நின்ற பண்ணின்உள் செவி சுவை கொள்ளாது
      நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும்
      பயன் இன்று மன்ற அம்ம காமம் - இவள் மன்னும்
      ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
      முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
      கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி
      யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல்
      மீ உயர் தோன்ற நகாஅ நக்காங்கே
      பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண் கண்
      ஆய் இதழ் மல்க அழும்.
      ஓஒ அழிதக பாராதே அல்லல் குறுகினம்
      காண்பாம் - கனம் குழை பண்பு.
      என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ
      நல்ல நகாஅலிர் மன் கொலோ - யான் உற்ற
      அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
      புல்லி புணர பெறின்.
      எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை
      செய்தான் இவன் என உற்றது இது
      எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்
      பைதல ஆகி பசக்குவ மன்னோ - என்
      நெய்தல் மலர் அன்ன கண்
      கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று
      நாடுவேன் கண்டனென் சிற்றில்உள் கண்டு ஆங்கே
      ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
      காணான் திரிதரும் கொல்லோ - மணி மிடற்று
      மாண் மலர் கொன்றையவன்
      தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே
      வள்ளியை ஆக என நெஞ்சை வலி உறீஇ
      உள்ளி வருகுவர் கொல்லோ வளைந்து யான்
      எள்ளி இருக்குவேன்மன் கொலோ நள்இருள்
      மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால்
      தோன்றினன் ஆக தொடுத்தேன்மன் யான் தன்னை
      பையென காண்கு விழிப்ப யான் பற்றிய
      கை உளே மாய்ந்தான் கரந்து.
      கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
      அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
      தருகுவை ஆயின் தவிரும் - என் நெஞ்சத்து
      உயிர் திரியா மாட்டிய தீ.
      மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்
      பௌவ நீர தோன்றி பகல் செய்யும் மாத்திரை
      கை விளக்கு ஆ கதிர் சில தாராய் என்
      தொய்யில் சிதைத்தானை தேர்கு.
      சிதைத்தானை செய்வது எவன் கொலோ எம்மை
      நயந்து நலம் சிதைத்தான்.
      மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ
      தொன்று இவ் உலகத்து கேட்டும் அறிதியோ
      மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் -
      நன்று தீது என்று பிற.
      நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என்
      ஆய் இதழ் உள்ளே கரப்பன் - கரந்தாங்கே
      நோய் உறு வெ நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
      வேவது அளித்து இவ் உலகு.
      மெலி பொறுத்தேன் களைந்தீமின் - சான்றீர்
      நலிதரும் காமமும் கௌவையும் என்று இவ்
      வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
      நலியும் விழுமம் இரண்டு.
      என பாடி
      இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள்
      எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா
      நல்கிய கேள்வன் இவன் - மன்ற மெல்ல
      மணிஉள் பரந்த நீர் போல துணிவாம் -
      கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற
      கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள்
      நல் எழில் மார்பனை சார்ந்து
      143 அகல் ஆங்கண் இருள் நீங்க அணி நிலா திகழ்ந்த பின்
      பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
      நல் நுதல் நீத்த திலகத்தள் மின்னி
      மணி பொரு பசும் பொன் கொல் மா ஈன்ற தளிரின் மேல்
      கணிகாரம் கொட்கும் கொல் என்றாங்கு அணி செல
      மேனி மறைத்த பசலையள் ஆனாது
      நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
      அஞ்சா அழாஅ அரற்றா இ·து ஒத்தி
      என் செய்தாள் கொல் என்பீர் - கேட்டீமின்- பொன் செய்தேன்.
      மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
      அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
      பறை அறைந்தாங்கு ஒருவன் நீத்தான் - அவனை
      அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
      நிறை உடையேன் ஆகுவேன் மன்ற - மறையின் என்
      மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
      சென்று சேண் பட்டது என் நெஞ்சு.
      ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே
      உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ
      மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்மின் -
      இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
      என் உயிர் காட்டாதோ மற்று
      பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண்
      கழி கதழ்வை என கேட்டு நின்னை
      வழிபட்டு இரக்குவேன் வந்தேன் - என் நெஞ்சம்
      அழி துறந்தானை சீறும்கால் என்னை
      ஒழிய விடாதீமோ என்று.
      அழிதக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இவ் ஊரார்
      தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப
      ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
      யாஅம் தளிர்க்குவேம் மன்.
      நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
      பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல்
      தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில்
      சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல
      பல வல்லன் - தோள் ஆள்பவன்.
      நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப
      இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற
      சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப
      போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய
      காலன் போல் வந்த கலக்கத்தோடு என் தலை
      மாலையும் வந்தன்று இனி.
      இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய்
      அருள் இலை வாழி - சுடர்
      ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்
      மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
      வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின்
      யாண்டும் உடையேன் இசை.
      ஊர் அலர் தூற்றும் இவ் உய்யா விழுமத்து
      பீர் அலர் போல பெரி பசந்தன -
      நீர் அலர் நீலம் என அவர்க்கு அஞ்ஞான்று
      பேர் அஞர் செய்த என் கண்.
      தன் உயிர் போல தழீஇ உலகத்து
      மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ -
      இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும்
      என் உயிர் காவாதது
      என ஆங்கு
      மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
      பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர
      தென்னவன் தெளித்த தேஎம் போல
      இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே
      144 நல் நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா
      என் உற்றாள் கொல்லோ இ·து ஒத்தி - பல் மாண்
      நகுதரும் - தன் நாணு கைவிட்டு இகுதரும்
      கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
      அன்ன இடும்பை பல செய்து தன்னை
      வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
      தெருளும் மருளும் மயங்கி வருபவள்
      கூறுப கேளாமோ சென்று
      எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார்
      நின் உற்ற அல்லல் உரை என என்னை
      வினவுவீர் தெற்றென கேண்மின் ஒருவன்
      குரல் கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
      உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று
      மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
      மருவு உழி பட்டது என் நெஞ்சு.
      எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள் வழி.
      பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
      திங்கள்உள் தோன்றி இருந்த குறு முயால் -
      எம்கேள் இதன் அகத்து உள்வழி காட்டீமோ
      காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்
      வேட்டுவர் உள் வழி செப்புவேன் ஆட்டி
      மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
      என் அல்லல் தீராய் எனின்.
      என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
      வெள் மழை ஓடி புகுதி சிறிது என்னை
      கண்ணோடினாய் போறி நீ.
      நீடு இலை தாழை துவர் மணல் கானல்உள்
      ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில் தொறும்
      நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்
      ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம்
      கோதை புனைந்த வழி.
      உது காண் - சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும்
      பாவை கொண்டு ஓடியுழி.
      உது காண் - தொய்யில் பொறித்த வழி.
      உது காண் - தையால் தேறு என தேற்றி அறன் இல்லான்
      பைய முயங்கியுழி.
      அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து
      விளியா நோய் செய்து இறந்த அன்புஇல் அவனை
      தெளிய - விசும்பினும் ஞாலத்து அகத்தும்
      வளியே எதிர்போம் - பல கதிர் ஞாயிற்று
      ஒளி உள் வழி எல்லாம் சென்று முனிபு எம்மை
      உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ
      காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்
      கண்ணீர் அழலால் தெளித்து.
      பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் -
      பிறங்கு இரு முந்நீர் - வெறு மணல் ஆக
      புறம் காலின் போக இறைப்பேன் முயலின்
      அறம் புணை ஆகலும் உண்டு.
      துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று
      பாடுவேன் என் நோய் உரைத்து.
      புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் -
      எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன்.
      எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற
      அல்லல் களைவார் இலேன்.
      ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து
      பற்றுவேன் என்று யான் விழிக்கும்கால் மற்றும் என்
      நெஞ்சத்துஉள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
      செய்யும் அறன் இல் அவன்.
      ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள்
      நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இ·தோ
      ஈரம் இல் கேள்வன் உறீஇய கா தீ
      நீர் உள் புகினும் சுடும்.
      ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய்
      உற்று அறியாதாரோ நகுக நயந்தாங்கே
      இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை
      அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு.
      ஆங்கு
      கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
      கெடல் அரும் காதலர் துனை தர பிணி நீங்கி
      அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை
      திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம்
      நல் அவைஉள் பட கெட்டாங்கு
      இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே.
      145 துனையுநர் விழைதக்க சிறப்பு போல் கண்டார்க்கு
      நனவின்உள் உதவாது நள் இருள் வேறு ஆகும்
      கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி
      உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள்
      கயல் புரை உண் கண் அரிப்ப அரி வார
      பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற
      பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து
      துறந்தானை உள்ளி அழூஉம் அவனை
      மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும்
      சிறந்த தன் நாணும் நலனும் நினையாது
      காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண
      நகான்மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது
      மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்
      நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்
      ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி
      வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
      வாழ்வார்கட்கு எல்லாம் வரும்
      தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
      இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி -
      வறந்து என்னை செய்தியோ வானம் - சிறந்த என்
      கண்ணீர கடலால் கனை துளி வீசாயோ
      கொண்மூ குழீஇ முகந்து
      நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம்
      கண் பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த
      பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
      கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே
      எல்லா கதிரும் பரப்பி பகலொடு
      செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின்
      புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை
      கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான்
      செல்லாது நிற்றல் இலேன் .
      ஒல்லை எம் காதலர கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
      போதரின் - காண்குவேன் மன்னோ
      மாலை பகை தாங்கி யான்
      இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி
      ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த
      கள்வன் பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி -
      பெரும் கடல் புல்லென கானல் புலம்ப
      இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற
      விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்
      யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான்
      தான் வேண்டுபவரோடு துஞ்சும் கொல் - துஞ்சாது
      வானும் நிலனும் திசையும் துழாவும் என்
      ஆனா படர் மிக்க நெஞ்சு.
      ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என்
      ஆர் உயிர் எஞ்சும்மன் அங்கு நீ சென்றீ -
      நிலவு உமிழ் வான் திங்காள் ஆய் தொடி கொட்ப
      அளி புறம் மாறி அருளான் துறந்த அ
      காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
      எல்லாரும் தேற்றர் மருந்து
      வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்
      எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
      நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே
      ஏமராது ஏமரா ஆறு.
      கனை இருள் வானம் - கடல் முகந்து என் மேல்
      உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே -
      நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
      இறை பொத்திற்று
      என பாடி
      நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி
      யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு
      ஆர்வுற்ற பூசற்கு அறம் போல எய்தந்தார்
      பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு
      மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர
      ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
      ஆய் இழை உற்ற துயர்.
      146 உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே
      வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை
      அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர
      அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன்
      துன்னி அகல துறந்த அணியளாய்
      நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு
      பேர் அமர் உண்கண் நிறை மல்க அந்நீர் தன்
      கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர
      தேர் வழி நின்று தெருமரும் ஆய் இழை
      கூறுப கேளாமோ சென்று
      எல் இழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று
      உற்றனிர் போல வினவுதிர் மற்று இது
      கேட்டீமின் எல்லீரும் வந்து
      வறம் தெற மாற்றிய வானமும் போலும்
      நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் -
      சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து
      என் மேல் நிலைஇய நோய்.
      நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்
      தக்கவிர் போலும் இழந்திலேன் மன்னோ -
      மிக்க என் நாணும் நலனும்
      அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன
      உக்காண் - இ·தோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக
      செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான்
      நக்கது பல் மாண் நினைந்து.
      கரை காணா நோயுள் அழுந்தாதவனை
      புரை தவ கூறி கொடுமை நுவல்வீர்
      வரைபவன் என்னின் அகலான் - அவனை
      திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்
      நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும்
      உரை கேட்புஉழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான்
      யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று
      மருள் கூர் பிணை போல் மயங்க வெந்நோய் செய்யும்
      மாலையும் வந்து மயங்கி எரி நுதி
      யாமம் தலை வந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
      பாடுவேன் பல்லாருள் சென்று.
      யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர துயிற்றும்
      யாமம் நீ துஞ்சலை மன்.
      எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண்
      முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின்
      கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல்
      ஓடி சுழல்வது மன்.
      பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே
      நீரை செறுத்து நிறைவுற ஓம்புமின்
      கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது
      போலாது என் மெய் கனலும் நோய்.
      இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே
      வருத்துறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்
      அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி
      பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி
      செல்வேன் விழுமம் உழந்து.
      என ஆங்கு பாட அருள் உற்று
      வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
      புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு மற்று தன்
      நல் எழில் மார்பன் முயங்கலின்
      அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே.
      147 ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய
      தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
      வேறு ஒரு பாற்று ஆனது கொலோ சீறு அடி
      சிலம்பு ஆர்ப்ப இயலியாள் - இவள் மன்னோ இனி மன்னும்
      புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் - விலங்கு ஆக
      வேல் நுதி உற நோக்கி வெயில் உருகும்
      தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு
      ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன்
      நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே
      பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்
      ஒள் நுதல் உற்றது உழை சென்று கேளாமோ
      இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரே ஓஒ
      அமையும் தவறிலீர்மன் கொலோ - நகையின்
      மிக்க தன் காமமும் ஒன்று என்ப அம் மா
      புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார்
      மதி மருள நீத்தக்கடை.
      என்னையே மூசி கதுமென நோக்கன்மின் வந்து
      கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர்
      சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை
      விலை வளம் மாற அறியாது ஒருவன்
      வலை அகப்பட்டது - என் நெஞ்சு.
      வாழிய கேளிர்
      பலவும் சூள் தேற்ற தெளித்தவன் என்னை
      முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த
      கொலைவனை காணேன் கொல் யான்
      காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி
      ஆங்கு எதிர் நோக்குவன்- ஞாயிறே - எம் கேள்வன்
      யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல்
      வானத்து எவன் செய்தி நீ
      ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல
      நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அவ்வழி
      தேரை தினப்படல் ஓம்பு.
      நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை
      பல் கதிர் சாம்பி பகல் ஒழி பட்டீமோ -
      செல் கதிர் ஞாயிறே நீ .
      அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும்
      பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான்
      கறாஅ எருமைய காடு இறந்தான் கொல்லோ
      உறாஅ தகை செய்து இவ் ஊர் உள்ளான் கொல்லோ
      செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை
      பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி
      சுறாஅ கொடியான் கொடுமையை நீயும்
      உறாஅ அரைச நின் ஓலை கண் கொண்டீ
      மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று
      அறாஅ தணிக இந்நோய்.
      தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும்
      அன்னவோ - காம நின் அம்பு
      கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால்
      பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன்
      ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல்
      ஒய் என பூசல் இடுவேன்மன் யான் - அவனை
      மெய் ஆ கள்வனோ என்று.
      வினவன்மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் -
      மடாஅ நறவு உண்டார் போல மருள
      விடாஅது உயிரொடு கூடிற்று - என் உண்கண்
      படாஅமை செய்தான் தொடர்பு.
      கனவினான் காணிய கண்படா ஆயின்
      நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின்
      பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன்
      கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு.
      என ஆங்கு
      கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்
      தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள்
      அன்னையோ எல்லீரும் காண்மின் மடவரல்
      மெல் நடை பேடை துனை தர தன் சேர்ந்த
      அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒள் நுதல்
      காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு
      ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை
      நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி
      தகை ஆக தையலாள் சேர்ந்தாள் - நகை ஆக
      நல் எழில் மார்பன் அகத்து
      148 தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு
      வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல்
      கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர
      அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
      மல்லல் நீர திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப
      இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப
      செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை
      மாலை நீ -
      இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்
      அன்புற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய
      துன்புற்றார துயர் செய்தல் தக்கதோ நினக்கு
      மாலை நீ -
      கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்மன்
      நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்
      அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு
      மாலை நீ -
      எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய் துணை அல்லை
      பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி
      திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு
      என ஆங்கு
      ஆய் இழை மடவரல் அவலம் அகல
      பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல
      போய் அவர் மண் வௌவி வந்தனர் -
      சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.
      149 நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆ
      கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக
      அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர சேர்ப்ப கேள்
      கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
      தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
      ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
      எச்சத்துள் ஆயினும் அ·து எறியாது விடாதே காண்
      கேளிர்கள் நெஞ்சு அழுங கெழுவுற்ற செல்வங்கள்
      தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்
      சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்
      வாள் வாய் நன்று ஆயினும் அ·து எறியாது விடாதே காண்
      ஆங்கு
      அனைத்து இனி - பெரும அதன் நிலை நினைத்து
      சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
      வினை வரு பருவரல் போல
      துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.
      150 அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
      இயங்கு எயில் எ பிறந்த எரி போல எவ் வாயும்
      கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ
      மலை பரந்து தலை கொண்டு முழங்கிய முழங்கு அழல்
      மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டென
      விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரும் வெம் சுரம் -
      இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்
      அறம் துறந்து - ஆய் இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
      பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம்
      பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ
      கரி காய்ந்த கவலைத்தா கல் காட்டு
      வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர்
      உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன நின்
      உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ
      கொதித்து உரா குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால்
      ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர்
      புது திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின்
      கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ
      ஆங்கு
      அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
      பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
      பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் -
      மை ஈர் ஓதி மட மொழியோயே
      கலித்தொகை முற்றும்
      -