நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 1- 473
      திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
      நாதமுனிகள் அருளி செய்தது

      குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
      நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
      ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷா
      த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
      பாண்டிய பட்டர் அருளி செய்தவை
      இருவிகற்ப நேரிசை வெண்பா
      மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
      சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
      கிழியறுத்தானென்றுரைத்தோம் கீழ்மையினிற்சேரும்
      வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து
      பாண்டியன்கொண்டாட பட்டர்பிரான்வந்தானென்று
      ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
      வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
      பாதங்கள்யாமுடையபற்று.
      பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமாநுஜாய நம
      பெரியாழ்வார் அருளிச்செய்த
      திருப்பல்லாண்டு
      காப்பு
      குறள்வெண்செந்துறை
      1
      பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
      பலகோடிநூறாயிரம்
      மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
      செவ்வடிசெவ்விதிருக்காப்பு. 2
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1.
      2
      அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
      வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
      வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
      படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. 2
      3
      வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
      கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
      ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
      பாழாளாகப்படைபொருதானுக்கு பல்லாண்டுகூறுதமே. 3
      4
      ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
      கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
      நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
      பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4
      5
      அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
      இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
      தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
      பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5.
      6
      எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
      வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
      அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
      பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6.
      7
      தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
      கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
      மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
      பாய சுழற்றியஆழிவல்லானுக்கு பல்லாண்டுகூறுதுமே. 7.
      8
      நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
      கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
      மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
      பையுடைநாகப்பகைக்கொடியானுக்கு பல்லாண்டுகூறுவனே. 8.
      9
      உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்து கலத்ததுண்டு
      தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
      விடுத்ததிசைக்கருமம்திருத்தி திருவோணத்திருவிழவில்
      படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டுகூறுதுமே. 9.
      10
      எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
      அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
      செந்நாள்தோற்றி திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
      பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10.
      11
      அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
      செல்வனைப்போல திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்
      நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
      பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. 2 11.
      12
      பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
      வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
      நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
      பல்லாண்டும்பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. 2 12.
      ------------------------------------------------------------------------
      பெரியாழ்வார் திருமொழி
      முதற்பத்து
      முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
      கண்ணன் திருவவதார சிறப்பு
      கலிவிருத்தம்
      13
      வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
      கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
      எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட
      கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. 2 1.
      14
      ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
      நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
      பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
      ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.
      15
      பேணிச்சீருடை பிள்ளைபிறந்தினில்
      காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
      ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
      வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3.
      16
      உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
      நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
      செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
      அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.
      17
      கொண்டதாளுறி கோலக்கொடுமழு
      தண்டினர் பறியோலைச்சயனத்தர்
      விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
      அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5.
      18
      கையும்காலும்நிமிர்த்து கடாரநீர்
      பையவாட்டி பசுஞ்சிறுமஞ்சளால்
      ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
      வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6.
      19
      வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
      ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
      பாயசீருடை பண்புடைப்பாலகன்
      மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7.
      20
      பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
      எத்திசையும் சயமரம்கோடித்து
      மத்தமாமலை தாங்கியமைந்தனை
      உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.
      21
      கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
      எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
      ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
      மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.
      22
      செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
      மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
      மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இ
      பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. 2 10.
      இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
      கண்ணனது திருமேனியழகை பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்
      வெண்டளையால் வந்த கலித்தாழிசை
      23
      சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
      கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
      பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
      பாதக்கமலங்கள் காணீரே
      பவளவாயீர். வந்துகாணீரே. 2 1.
      24
      முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
      தத்திப்பதித்து தலைப்பெய்தாற்போல் எங்கும்
      பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
      ஒத்திட்டிருந்தவா காணீரே
      ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.
      25
      பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
      அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
      இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
      கணைக்கால்இருந்தவாகாணீரே
      காரிகையீர். வந்துகாணீரே. 3.
      26
      உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
      இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
      பழந்தாம்பாலோச்ச பயத்தால்தவழ்ந்தான்
      முழந்தாள்இருந்தவாகாணீரே
      முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.
      27
      பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
      உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
      மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
      குறங்குவளைவந்துகாணீரே
      குவிமுலையீர். வந்துகாணீரே. 5.
      28
      மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
      சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
      அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
      முத்தமிருந்தவாகாணீரே
      முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.
      29
      இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
      பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
      நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
      மருங்கும்இருந்தவாகாணீரே
      வாணுதலீர். வந்துகாணீரே. 7.
      30
      வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
      தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
      நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
      உந்திஇருந்தவாகாணீரே
      ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.
      31
      அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
      மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
      பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
      உதரம்இருந்தவா காணீரே
      ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.
      32
      பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
      இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
      குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
      திருமார்புஇருந்தவாகாணீரே
      சேயிழையீர். வந்துகாணீரே. 10.
      33
      நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
      தாளைநிமிர்த்து சகடத்தைச்சாடிப்போய்
      வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
      தோள்கள்இருந்தவாகாணீரே
      சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.
      34
      மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
      செய்த்தலைநீலநிறத்து சிறுப்பிள்ளை
      நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
      கைத்தலங்கள்வந்துகாணீரே
      கனங்குழையீர். வந்துகாணீரே. 12.
      35
      வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனா
      கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
      அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
      கண்டம்இருந்தவாகாணீரே
      காரிகையீர். வந்துகாணீரே. 13.
      36
      எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
      அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
      தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இ
      செந்தொண்டைவாய்வந்துகாணீரே
      சேயிழையீர். வந்துகாணீரே. 14.
      37
      நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
      நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
      வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
      மூக்கும்இருந்தவாகாணீரே
      மொய்குழலீர். வந்துகாணீரே. 15.
      38
      விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
      மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
      திண்கொளசுரரை தேயவளர்கின்றான்
      கண்கள்இருந்தவாகாணீரே
      கனவளையீர். வந்துகாணீரே. 16.
      39
      பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
      திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
      உருவுகரிய ஒளிமணிவண்ணன்
      புருவம்இருந்தவாகாணீரே
      பூண்முலையீர். வந்துகாணீரே. 17.
      40
      மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
      உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
      வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
      திண்ணம்இருந்தவாகாணீரே
      சேயிழையீர். வந்துகாணீரே. 18.
      41
      முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
      சிற்றிலிழைத்து திரிதருவோர்களை
      பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
      நெற்றிஇருந்தவாகாணீரே
      நேரிழையீர். வந்துகாணீரே. 19.
      42
      அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
      கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
      மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
      குழல்கள்இருந்தவாகாணீரே
      குவிமுலையீர். வந்துகாணீரே. 20.
      தரவு கொச்சகக்கலிப்பா
      43
      சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
      திருப்பாதகேசத்தை தென்புதுவைப்பட்டன்
      விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
      உரைப்பார்போய் வைகுந தொன்றுவர்தாமே. 2 21.
      மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
      கண்ணனை தொட்டிலிலிட்டு தாலாட்டுதல் தாலப்பருவம்
      கலித்தாழிசை
      44
      மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
      ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
      பேணிஉனக்கு பிரமன்விடுதந்தான்
      மாணிக்குறளனே. தாலேலோ
      வையமளந்தானே. தாலேலோ. 2 1.
      45
      உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
      இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
      விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
      உடையாய். அழேல்அழேல்தாலேலோ
      உலகமளந்தானே. தாலேலோ. 2.
      46
      என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
      சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
      இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
      தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
      தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3.
      47
      சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
      அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
      அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
      செங்கண்கருமுகிலே. தாலேலோ
      தேவகிசிங்கமே. தாலேலோ. 4.
      48
      எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
      அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
      வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
      தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
      தூமணிவண்ணனே. தாலேலோ. 5.
      49
      ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
      சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
      மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
      சோதிச்சுடர்முடியாய். தாலேலோ
      சுந்தரத்தோளனே. தாலேலோ. 6.
      50
      கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
      வானார்செழுஞ்சோலை கற்பகத்தின்வாசிகையும்
      தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
      கோனே. அழேல்அழேல்தாலேலோ
      குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.
      51
      கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
      உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
      அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
      நச்சுமுலையுண்டாய். தாலேலோ
      நாராயணா. அழேல்தாலேலோ. 8.
      52
      மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
      செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
      வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
      அய்யா. அழேல்அழேல்தாலேலோ
      அரங்கத்தணையானே. தாலேலோ. 9.
      தரவு கொச்ச கலிப்பா
      53
      வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
      அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
      செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
      எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. 2 10.
      நான்காம் திருமொழி - தன் முகத்து
      சந்திரனை அழைத்தல் அம்புலிப்பருவம்
      கலிநிலைத்துறை
      54
      தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
      பொன்முகக்கிண்கிணியார புழுதியளைகின்றான்
      என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
      நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. 2 1.
      55
      என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
      தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
      அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
      மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.
      56
      சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
      எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
      வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
      கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.
      57
      சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
      ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
      தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
      மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.
      58
      அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
      மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
      குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
      புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.
      59
      தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
      கண்துயில்கொள்ளக்கருதி கொட்டாவிகொள்கின்றான்
      உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
      விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6.
      60
      பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
      ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
      மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
      மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7.
      61
      சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
      சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
      சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
      நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8.
      62
      தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
      பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
      ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
      வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.
      63
      மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
      ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
      வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
      எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. 2 10.
      ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
      தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல் செங்கீரைப்பருவம்
      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      64
      உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.
      ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
      பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே.
      பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே.
      செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதி
      செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
      ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2 1.
      65
      கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
      குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
      மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
      மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
      காளநன்மேகமவைகல்லொடு கால்பொழி
      கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
      ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2.
      66
      நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
      நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
      தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
      தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
      விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
      விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
      அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3.
      67
      வானவர்தாம்மகிழவன்சகடமுருள
      வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
      கானகவல்விளவின்காயுதிரக்கருதி
      கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
      தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
      என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
      ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.
      68
      மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
      வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
      ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
      ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
      முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
      முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
      அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5.
      69
      காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
      கானகமாமடுவில்காளியனுச்சியிலே
      தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
      துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
      ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
      அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
      ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6.
      70
      துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
      தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
      நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
      நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
      தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுக
      தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
      அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
      ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.
      71
      உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
      உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
      கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிர
      கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
      மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
      சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
      என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
      ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8.
      72
      பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
      பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
      கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடை
      கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
      நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
      நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
      ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை
      ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9.
      73
      செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
      சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
      தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
      பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
      மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
      மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
      எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
      ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10.
      74
      அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
      ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
      என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
      ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
      அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
      ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
      இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
      எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. 2 11.
      ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
      கைகொட்டி விளையாடுதல் சப்பாணிப்பருவம்
      வெண்டளையால் வந்த கலித்தாழிசை
      75
      மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
      ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
      பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
      காணிகொண்டகைகளால்சப்பாணி
      கருங்குழல்குட்டனே. சப்பாணி. 2 1.
      76
      பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
      தன்னரையாட தனிச்சுட்டிதாழ்ந்தாட
      என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
      மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
      மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2.
      77
      பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
      என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல்
      நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
      அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
      ஆழியங்கையனே. சப்பாணி. 3.
      78
      தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
      வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று
      நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
      கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
      குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4.
      79
      புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
      அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
      சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
      பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி
      பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5.
      80
      தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
      போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
      பாரித்தமன்னர்பட பஞ்சவர்க்கு அன்று
      தேருய்த்தகைகளால்சப்பாணி
      தேவகிசிங்கமே. சப்பானி. 6.
      81
      பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
      இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
      கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
      சரந்தொட்டகைகளால்சப்பாணி
      சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7.
      82
      குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
      நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
      அரக்கர்அவிய அடுகணையாலே
      நெருக்கியகைகளால்சப்பாணி
      நேமியங்கையனே. சப்பாணி. 8.
      83
      அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
      வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
      உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
      பிளந்திட்டகைகளால்சப்பாணி
      பேய்முலையுண்டானே. சப்பாணி. 9.
      84
      அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
      மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
      வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
      கடைந்திட்டகைகளால்சப்பாணி
      கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10.
      தரவு கொச்சகக்கலிப்பா
      85
      ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
      நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
      வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
      வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. 2 11.
      ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
      தளர் நடை நடத்தல் நடை
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      86
      தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்ன தூங்குபொன்மணியொலிப்ப
      படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
      உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
      தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. 2 1.
      87
      செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
      நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
      அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
      தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2.
      88
      மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
      பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
      மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போல கழுத்திணில்காறையொடும்
      தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3.
      89
      கன்னற்குடம்திறந்தலொத்தூறி கணகணசிரித்துவந்து
      முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
      தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
      தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4.
      90
      முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
      பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
      பன்னியுலகம்பரவியோவா புகழ்ப்பலதேவனென்னும்
      தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5.
      91
      ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
      இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
      பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
      கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6.
      92
      படர்பங்கயமலர்வாய்நெகிழ பனிபடுசிறுதுளிபோல்
      இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
      கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
      தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7.
      93
      பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
      அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
      மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
      தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8.
      94
      வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
      தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
      ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
      தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9.
      95
      திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
      திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
      பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
      தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோர தளர்நடைநடவானோ. 10.
      96
      ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
      தாயர்மகிழஒன்னார்தளர தளர்நடைநடந்ததனை
      வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
      மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11.
      எட்டாம் திருமொழி -- பொன்னியல்
      அணைத்துக்கொள்ள அழைத்தல் அச்சோப்பருவம்
      கலித்தாழிசை
      97
      பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
      தன்னியலோசை சலஞ்சலனென்றிட
      மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
      என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
      எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 2 1.
      98
      செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
      பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
      சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
      அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
      ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2.
      99
      பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
      நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
      அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
      அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ
      ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3.
      100
      நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
      தேறிஅவளும் திருவுடம்பில்பூச
      ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
      ஏறவுருவினாய். அச்சோவச்சோ
      எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4.
      101
      கழல்மன்னர்சூழ கதிர்போல்விளங்கி
      எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
      சுழலைப்பெரிதுடை துச்சோதனனை
      அழலவிழித்தானே. அச்சோவச்சோ
      ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5.
      102
      போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
      தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்
      காரொக்கும்மேனி கரும்பெருங்கண்ணனே.
      ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
      ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6.
      103
      மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
      தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
      சுக்கிரன்கண்ணை துரும்பால்கிளறிய
      சக்கரக்கையனே. அச்சோவச்சோ
      சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7.
      104
      என்னிதுமாயம் என்னப்பன்அறிந்திலன்
      முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
      மன்னுநமுசியை வானில்சுழற்றிய
      மின்னுமுடியனே. அச்சோவச்சோ
      வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8.
      105
      கண்டகடலும் மலையும்உலகேழும்
      முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று
      இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
      மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ
      மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9.
      106
      துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
      மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
      பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
      அன்னமதானானே. அச்சோவச்சோ
      அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10.
      தரவு கொச்சகக்கலிப்பா
      107
      நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
      அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
      மச்சணிமாட புதுவைகோன்பட்டன்சொல்
      நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. 2 11.
      ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
      தன் முதுகை கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்
      வெண்டளையால்வந்த கலித்தாழிசை
      108
      வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
      மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
      சொட்டுச்சொட்டென்ன துளிக்கத்துளிக்க என்
      குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
      கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். 2 1.
      109
      கிங்கிணிகட்டி கிறிகட்டி கையினில்
      கங்கணமிட்டு கழுத்தில்தொடர்கட்டி
      தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
      என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
      எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2.
      110
      கத்தக்கதித்து கிடந்தபெருஞ்செல்வம்
      ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
      கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
      அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
      ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3.
      111
      நாந்தகமேந்திய நம்பிசரணென்று
      தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
      வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
      ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
      உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4.
      112
      வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
      கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
      பண்பலபாடி பல்லாண்டிசைப்ப பண்டு
      மண்பலகொண்டான்புறம்புல்குவான்
      வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5.
      113
      சத்திரமேந்தி தனியொருமாணியாய்
      உத்தரவேதியில் நின்றஒருவனை
      கத்திரியர்காண காணிமுற்றும்கொண்ட
      பத்திராகாரன்புறம்புல்குவான்
      பாரளந்தான்என்புறம்புல்குவான். 6.
      114
      பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
      தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
      மெத்தத்திருவயிறார விழுங்கிய
      அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
      ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.
      115
      மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
      கூத்துஉவந்தாடி குழலால்இசைபாடி
      வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
      ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
      எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8.
      116
      கற்பகக்காவு கருதியகாதலிக்கு
      இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
      நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
      உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
      உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9.
      தரவு கொச்சகக்கலிப்பா
      117
      ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
      வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
      ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
      வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. 2 10.
      ------------------------------------------------------------------------
      இரண்டாம்பத்து
      முதல்திருமொழி - மெச்சூது
      பூச்சிகாட்டி விளையாடுதல்.
      கலித்தாழிசை
      118
      மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
      பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
      பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
      அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2 1.
      119
      மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
      பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
      சிலைவளை திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
      அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2.
      120
      காயும்நீர்புக்கு கடம்பேறி காளியன்
      தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
      வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
      ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3.
      121
      இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
      மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாள
      புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
      அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4.
      122
      சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
      ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
      சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
      ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5.
      123
      செப்பிளமென்முலை தேவகிநங்கைக்கு
      சொப்படத்தோன்றி தொறுப்பாடியோம்வைத்த
      துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
      அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6.
      124
      தத்துக்கொண்டாள்கொலோ தானேபெற்றாள்கொலோ
      சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
      கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
      அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7.
      125
      கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவல
      துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
      எங்கும்பரதற்கருளி வன்கானடை
      அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8.
      126
      பதகமுதலைவா பட்டகளிறு
      கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன
      உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
      அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
      அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9.
      தரவு கொச்சகக்கலிப்பா
      127
      வல்லாளிலங்கைமலங்க சரந்துரந்த
      வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
      சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
      வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. 2 10.
      இரண்டாம் திருமொழி - அரவணையாய்
      கண்ணனை முலையுண்ண அழைத்தல்
      கலிவிருத்தம்
      128
      அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே
      இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
      வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
      திருவுடையவாய்மடுத்து திளைத்துதைத்துப்பருகிடாயே. 2 1.
      129
      வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
      இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
      எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
      முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2.
      130
      தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
      வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா.
      உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
      நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3.
      131
      கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
      பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
      அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ
      கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4.
      132
      தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து
      மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா.
      தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
      ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5.
      133
      மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
      இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்
      என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
      என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6.
      134
      பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரை பெறுதுமென்னுமாசையாலே
      கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
      வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
      கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7.
      135
      இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
      திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
      ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
      இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8.
      136
      அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
      செங்கமலமுகம்வியர்ப்ப தீமைசெய்துஇம்முற்றத்தூடே
      அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம
      அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9.
      137
      ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
      பாடிப்பாடிவருகின்றாயை பற்பநாபனென்றிருந்தேன்
      ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
      ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10.
      138
      வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்
      நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
      பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
      சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. 2 11.
      மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
      பன்னிருநாமம் காதுகுத்துதல்
      எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      139
      போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
      பொருதிறல்கஞ்சன்கடியன்
      காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னை
      தனியேபோய்எங்கும்திரிதி
      பேய்ப்பால்முலையுண்டபித்தனே.
      கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த
      ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
      அடைக்காய்திருத்திநான்வைத்தேன். 2 1.
      140
      வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
      மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
      நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
      நாராயணா. இங்கேவாராய்
      எண்ணற்கரியபிரானே. திரியை
      எரியாமேகாதுக்கிடுவன்
      கண்ணுக்குநன்றுமழகுடைய
      கனகக்கடிப்பும்இவையா. 2.
      141
      வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
      மகரக்குழைகொண்டுவைத்தேன்
      வெய்யவேகாதில்திரியையிடுவன்
      நீவேண்டியதெல்லாம்தருவன்
      உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
      ஒண்சுடராயர்கொழுந்தே.
      மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
      மாதவனே. இங்கேவாராய். 3.
      142
      வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
      வார்காதுதாழப்பெருக்கி
      குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
      கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய்
      இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
      இனியபலாப்பழம்தந்து
      சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
      சோத்தம்பிரான். இங்கேவாராய். 4.
      143
      சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய்
      சுரிகுழலாரொடுநீபோய்
      கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
      குணங்கொண்டிடுவனோ நம்பீ.
      பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
      பிரானே. திரியிடவொட்டில்
      வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
      விட்டுவே. நீஇங்கேவாராய். 5.
      144
      விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
      உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
      மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
      மதுசூதனேயென்றிருந்தேன்
      புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
      பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.
      கண்ணா. என்கார்முகிலே.
      கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6.
      145
      முலையேதும்வேண்டேனென்றோடி
      நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
      மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்து
      பசுநிரைமேய்த்தாய்.
      சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா.
      திருவாயர்பாடிப்பிரானே.
      தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
      விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7.
      146
      என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
      என்னைநான்மண்ணுண்டேனாக
      அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
      அனைவர்க்கும்காட்டிற்றிலையே
      வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.
      உன்காதுகள்தூரும்
      துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.
      திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8.
      147
      மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதி
      தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
      கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னை
      காணவேகட்டிற்றிலையே
      செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
      சிரீதரா. உன்காதுதூரும்
      கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
      காரிகையார்சிரியாமே. 9.
      148
      காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்
      காதுகள்வீங்கியெறியில்
      தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
      விட்டிட்டேன்குற்றமேயன்றே
      சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
      பெருக்கித்திரியவும்காண்டி
      ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
      இருடீகேசா. என்தன்கண்ணே. 10.
      149
      கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கி
      கடிகமழ்பூங்குழலார்கள்
      எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
      பெருமானே. எங்களமுதே.
      உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
      நோவாமேகாதுக்கிடுவன்
      பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
      பற்பநாபா. இங்கேவாராய். 11.
      150
      வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
      வலியவேகாதில்கடிப்பை
      நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்
      காதுகள்நொந்திடும்கில்லேன்
      நாவற்பழம்கொண்டுவைத்தேன்
      இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளை
      சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
      தாமோதரா. இங்கேவாராய். 12.
      151
      வார்காதுதாழப்பெருக்கியமைத்து
      மகரக்குழையிடவேண்டி
      சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
      சிந்தையுள்நின்றுதிகழ
      பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
      பன்னிருநாமத்தாற்சொன்ன
      ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
      அச்சுதனுக்குஅடியாரே. 13.
      நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
      கண்ணனை நீராட அழைத்தல்.
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      152
      வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
      திண்ணெனெஇவ்விராஉன்னை தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
      எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
      நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். 2 1.
      153
      கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
      தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
      நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம்
      இன்று நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2.
      154
      பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
      ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
      காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
      வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3.
      155
      கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
      வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே.
      மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
      அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4.
      156
      அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
      சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.
      செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
      சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5.
      157
      எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
      கண்ணைப்புரட்டிவிழித்து கழகண்டுசெய்யும்பிரானே.
      உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
      வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6.
      158
      கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
      பிறந்ததுவேமுதலாக பெற்றறியேன்எம்பிரானே.
      சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
      மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7.
      159
      கன்றினைவாலோலைகட்டி கனிகளுதிரஎறிந்து
      பின்தொடர்ந்தோடிஓர்பாம்பை பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
      நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள்
      நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8.
      160
      பூணித்தொழுவினில்புக்கு புழுதியளைந்தபொன்மேனி
      காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
      நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும்
      மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9.
      161
      கார்மலிமேனி நிறத்து கண்ணபிரானையுகந்து
      வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
      பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
      சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. 2 10.
      ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
      கண்ணன்குழல் வார காக்கையை வாவெனல்
      கலித்தாழிசை
      162
      பின்னைமணாளனை பேரில்கிடந்தானை
      முன்னையமரர் முதல்தனிவித்தினை
      என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
      மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
      மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 2 1.
      163
      பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
      மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
      காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
      தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
      தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2.
      164
      திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
      வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
      அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
      கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
      கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3.
      165
      பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
      கள்ளவசுரன்வருவானை தான்கண்டு
      புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
      பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.
      பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4.
      166
      கற்றினம்மேய்த்து கனிக்குஒருகன்றினை
      பற்றியெறிந்த பரமன்திருமுடி
      உற்றனபேசி நீஓடித்திரியாதே
      அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.
      ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5.
      167
      கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
      அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
      விழிக்குமளவிலே வேரறுத்தானை
      குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.
      கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6.
      168
      பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
      உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
      அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
      வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.
      மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7.
      169
      உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
      சந்தச்சதுமுகன்தன்னை படைத்தவன்
      கொந்தக்குழலை குறந்துபுளியட்டி
      தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.
      தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8.
      170
      மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
      முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
      பொன்னின்முடியினை பூவணைமேல்வைத்து
      பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.
      பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9.
      தரவு கொச்சகக்கலிப்பா
      171
      கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன்
      வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
      விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
      கொண்டாடிப்பாட குறுகாவினைதாமே. 2 10.
      ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
      காக்கையை கண்ணனுக்கு கோல்கொண்டுவர விளம்புதல்
      கலித்தாழிசை
      172
      வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
      தாலிக்கொழுந்தை தடங்கழுத்திற்பூண்டு
      பீலித்தழையை பிணைத்துப்பிறகிட்டு
      காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
      கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. 2 1.
      173
      கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
      எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
      சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
      அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
      அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2.
      174
      கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
      பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
      நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
      சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
      தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3.
      175
      ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
      துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
      சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
      கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
      கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4.
      176
      சீரொன்றுதூதா துரியோதனன்பக்கல்
      ஊரொன்றுவேண்டி பெறாதஉரோடத்தால்
      பாரொன்றி பாரதம்கைசெய்து பார்த்தற்கு
      தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
      தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5.
      177
      ஆலத்திலையான் அரவினணைமேலான்
      நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
      பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
      கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
      குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6.
      178
      பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
      உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அ
      கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
      மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
      மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7.
      179
      மின்னிடை சீதைபொருட்டா இலங்கையர்
      மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
      தன்னிகரொன்றில்லா சிலைகால்வளைத்திட்ட
      மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
      வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8.
      180
      தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
      மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
      என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
      மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
      வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9.
      தரவு கொச்சகக்கலிப்பா
      181
      அக்காக்காய். நம்பிக்கு கோல்கொண்டுவாவென்று
      மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
      ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
      மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10.
      ஏழாம் திருமொழி - ஆனிரை
      கண்ணனை பூச்சூட அழைத்தல்
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      182
      ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
      கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
      பானையில்பாலைப்பருகி பற்றாதாரெல்லாம்சிரிப்ப
      தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். 2 1.
      183
      கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
      உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
      திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.
      மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2.
      184
      மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
      கச்சொடுபட்டைக்கிழித்து காம்புதுகிலவைகீறி
      நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய்.
      பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3.
      185
      தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
      மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
      புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
      உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4.
      186
      புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.
      கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்.
      அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
      தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5.
      187
      எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.
      கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.
      தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
      பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6.
      188
      குடங்களெடுத்தேறவிட்டு கூத்தாடவல்லஎம்கோவே.
      மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.
      இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.
      குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7.
      189
      சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.
      சாமாறுஅவனைநீயெண்ணி சக்கரத்தால்தலைகொண்டாய்.
      ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.
      ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.
      190
      அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.
      தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா.
      உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்.
      கண்டுநான்உன்னையு கருமுகைப்பூச்சூட்டவாராய். 9.
      191
      செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
      எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
      மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
      பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. 2 10.
      எட்டாம் திருமொழி - இந்திரனோடு
      கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      192
      இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
      மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
      சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்.
      அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். 2 1.
      193
      கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
      நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்.
      மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்.
      நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2.
      194
      செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
      அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்.
      முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்.
      இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3.
      195
      கண்ணில்மணல்கொடுதூவி காலினால்பாய்ந்தனையென்றென்று
      எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
      கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய்.
      வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4.
      196
      பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
      எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய்
      நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி
      சொல்லாரவாழ்த்திநின்றேத்தி சொப்படக்காப்பிடவாராய். 5.
      197
      கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
      வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
      மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்.
      அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6.
      198
      கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
      பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
      உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்.
      பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7.
      199
      இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய்.
      கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே.
      செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய்.
      கம்பக்கபாலிகாண்அங்கு கடிதோடிக்காப்பிடவாராய். 8.
      200
      இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
      தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
      திருக்காப்புநான்உன்னைச்சா தேசுடைவெள்ளறைநின்றாய்.
      உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9.
      201
      போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
      மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
      வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
      பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. 2 10.
      ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
      வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்
      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      202
      வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
      வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
      கண்ணபிரான்கற்றகல்விதன்னை
      காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
      புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
      புரைபுரையால்இவைசெய்யவல்ல
      அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
      அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 2 1.
      203
      வருகவருகவருகஇங்கே
      வாமனநம்பீ. வருகஇங்கே
      கரியகுழல்செய்யவாய்முகத்து
      காகுத்தநம்பீ. வருகஇங்கே
      அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
      அஞ்சனவண்ணா. அசலகத்தார்
      பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
      பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2.
      204
      திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
      தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
      உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
      உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
      அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
      தான் வழக்கோ அசோதாய்.
      வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
      வாழவொட்டான்மதுசூதனனே. 3.
      205
      கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே
      கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே
      தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
      திருநாரணா. இங்கேபோதராயே
      உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
      ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
      கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ள
      கண்ணபிரான்கற்றகல்விதானே. 4.
      206
      பாலைக்கறந்துஅடுப்பேறவைத்து
      பல்வளையாள்என்மகளிருப்ப
      மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
      இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
      சாளக்கிராமமுடையநம்பி
      சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
      ஆலைக்கரும்பின்மொழியனைய
      அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.
      207
      போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
      போதரேனென்னாதேபோதர்கண்டாய்
      ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
      ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
      கோதுகலமுடைக்குட்டனேயா.
      குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.
      வேதப்பொருளே. என்வேங்கடவா.
      வித்தகனே. இங்கேபோதராயே. 6.
      208
      செந்நெலரிசிசிறுபருப்பு
      செய்த அக்காரம்நறுநெய்பாலால்
      பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
      பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
      இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
      எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
      உன்மகன்தன்னையசோதைநங்காய்.
      கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7.
      209
      கேசவனே. இங்கேபோதராயே
      கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
      நேசமிலாதாரகத்திருந்து
      நீவிளையாடாதேபோதராயே
      தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
      தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
      தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
      தாமோதரா. இங்கேபோதராயே. 8.
      210
      கன்னலிலட்டுவத்தோடுசீடை
      காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
      என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
      இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
      பின்னும்அகம்புக்குஉறியைநோக்கி
      பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
      உன்மகன்தன்னையசோதைநங்காய்.
      கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9.
      211
      சொல்லிலரசிப்படுதிநங்காய்.
      சுழலுடையன்உன்பிள்ளைதானே
      இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவி
      கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
      கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
      அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
      நல்லனநாவற்பழங்கள்கொண்டு
      நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10.
      212
      வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
      வருபுனல்காவிரித்தென்னரங்கன்
      பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
      பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
      கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
      கோவிந்தன்தன்அடியார்களாகி
      எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
      இணையடிஎன்தலைமேலனவே. 2 11.
      பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
      ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளை கூறி முறையிடுதல்
      கலித்தாழிசை
      213
      ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
      சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
      காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
      மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
      வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். 2 1.
      214
      குண்டலம்தாழ குழல்தாழநாண்தாழ
      எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
      வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
      விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
      வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2.
      215
      தடம்படுதாமரை பொய்கைகலக்கி
      விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
      படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
      உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
      உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3.
      216
      தேனுகனாவி செகுத்து பனங்கனி
      தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
      வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
      ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
      அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4.
      217
      ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
      பேர்த்தவர்கண்டுபிடிக்க பிடியுண்டு
      வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
      ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
      அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5.
      218
      தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
      உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
      கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
      துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
      துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6.
      219
      மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
      மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
      ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
      தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
      தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7.
      220
      தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
      வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
      வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
      ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
      அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8.
      221
      வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
      கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
      ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
      தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
      தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9.
      தரவு கொச்சகக்கலிப்பா
      222
      அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
      மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
      அங்கவர்சொல்லை புதுவைப்கோன்பட்டன்சொல்
      இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. 2 10.
      ------------------------------------------------------------------------
      மூன்றாம்பத்து
      முதல்திருமொழி - தன்னேராயிரம்
      யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களை
      கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்

      எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      223
      தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
      பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
      மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே.
      அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2 1.
      224
      பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
      வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
      மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
      அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2.
      225
      கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கி குடத்தயிர்சாய்த்துப்பருகி
      பொய்ம்மாயமருதானஅசுரரை பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
      இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
      அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3.
      226
      மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
      கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
      பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
      ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4.
      227
      முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
      கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
      மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
      அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5.
      228
      கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலை கற்றாநிறைமண்டித்தின்ன
      விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே.
      சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்கு சூழ்வலைவைத்துத்திரியும்
      அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6.
      229
      மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
      சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னை சுற்றும்தொழநின்றசோதி.
      பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
      அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7.
      230
      வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
      தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
      கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன்
      காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8.
      231
      தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
      நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
      காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
      ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9.
      232
      தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியை சோலைத்தடம்கொண்டுபுக்கு
      முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
      ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
      அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10.
      233
      கரார்மேனிநிறத்தெம்பிரானை கடிகமழ்பூங்குழலாய்ச்சி
      ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
      பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
      ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11.
      இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
      யசோதப்பிராட்டி கண்ணனை கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்
      கலிநிலைத்துறை
      234
      அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
      மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
      கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
      என்செயப்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 2 1.
      235
      பற்றுமஞ்சள்பூசி பாவைமாரொடுபாடியில்
      சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
      கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
      எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 2.
      236
      நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
      பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
      கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
      என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3.
      237
      வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
      பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
      கண்ணுக்கினியானை கானதரிடைக்கன்றின்பின்
      எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4.
      238
      அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
      கொவ்வைக்கனிவாய்கொடுத்து கூழைமைசெய்யாமே
      எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
      தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5.
      239
      மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
      படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
      கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
      இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6.
      240
      வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
      துள்ளிவிளையாடி தோழரோடுதிரியாமே
      கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
      புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7.
      241
      பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
      என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
      பொன்னடிநோவ புலரியேகானில்கன்றின்பின்
      என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8.
      242
      குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
      உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
      கடியவெங்கானிடை காலடிநோவக்கன்றின்பின்
      கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9.
      243
      என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
      கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
      பொன்திகழ்மாட புதுவையர்கோன்பட்டன்சொல்
      இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. 2 10.
      மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
      கண்ணன் கன்றுகள்மேய்த்துவர கண்டு யசோதை மகிழ்தல்
      எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      244
      சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
      கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
      காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
      ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. 2 1.
      245
      கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
      மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து
      உன்னைஇளங்கன்றுமேய்க்க சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
      என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2.
      246
      காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூ
      சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
      பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன்
      ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3.
      247
      கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும்
      குடையும்செருப்பும்குழலும்தருவி கொள்ளாதேபோனாய்மாலே.
      கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
      அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4.
      248
      பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே.
      எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே.
      சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
      கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்து கலந்துடன்வந்தாய்போலும். 5.
      249
      அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு
      நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
      என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை
      கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6.
      250
      பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல்
      கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
      சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
      என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7.
      251
      கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
      கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
      ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
      வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.
      252
      திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
      பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டி பல்லாண்டுகூறுவித்தேன்
      கண்ணாலம்செ கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
      கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9.
      253
      புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
      கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
      செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
      கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. 2 10.
      நான்காம் திருமொழி - தழைகளும்
      காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்
      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      254
      தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
      தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
      குழல்களும்கீதமுமாகிஎங்கும்
      கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
      மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
      மங்கைமார்சாலகவாசல்பற்றி
      நுழைவனர்நிற்பனராகி எங்கும்
      உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. 2 1.
      255
      வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
      வசையறத்திருவரைவிரித்துடுத்து
      பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்தி
      பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
      முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
      அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
      எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
      எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2.
      256
      சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
      மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட
      ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
      ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
      வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
      மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
      அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள்
      அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3.
      257
      குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
      கோவலனாய்க்குழலூதியூதி
      கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
      கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
      என்றும்இவனையொப்பாரைநங்காய்
      கண்டறியேன்ஏடி. வந்துகாணாய்
      ஒன்றும்நில்லாவளைகழன்று
      துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4.
      258
      சுற்றிநின்றுஆயர்தழைகளிட
      சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
      பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
      பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
      மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
      மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
      கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணி
      கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5.
      259
      சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
      திருத்தியகோறம்பும்திருக்குழலும்
      அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
      வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
      அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
      அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
      பந்துகொண்டானென்றுவளைத்துவைத்து
      பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6.
      260
      சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
      தன்திருமேனிநின்றொளிதிகழ
      நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
      பல்லாயர்குழாம்நடுவே
      கோலச்செந்தாமரைக்கண்மிளிர
      குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
      ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
      அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7.
      261
      சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பி
      திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
      அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
      அழகியநேத்திரத்தாலணிந்து
      இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
      எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
      சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
      துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8.
      262
      வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
      மல்லிகைவனமாலைமௌவல்மாலை
      சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டு
      தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
      அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
      அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
      விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
      வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9.
      263
      விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
      மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
      கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
      இளவாய்க்கன்னிமார்காமுற்ற
      வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
      விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
      பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
      பரமானவைகுந்தம்நண்ணுவரே. 2 10.
      ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
      கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
      தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்
      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      264
      அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
      தயிர்வாவியும்நெய்யளறும்அடங்க
      பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
      பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
      வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
      வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
      கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2 1.
      265
      வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
      வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
      மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
      மதுசூதன்எடுத்துமறித்தமலை
      இழவுதரியாததோரீற்றுப்பிடி
      இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
      குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2.
      266
      அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
      ஆனாயரும்ஆநிரையும்அலறி
      எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
      இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
      தம்மைச்சரணென்றதம்பாவையரை
      புனமேய்கின்றமானினம்காண்மினென்று
      கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3.
      267
      கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்கு
      கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
      அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
      அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
      கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கி
      கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
      குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4.
      268
      வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்
      அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல்
      ஏனத்துருவாகியஈசன்எந்தை
      இடவனெழவாங்கியெடுத்தமலை
      கானக்களியானைதன்கொம்பிழந்து
      கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
      கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5.
      269
      செப்பாடுடையதிருமாலவன் தன்
      செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
      கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
      காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
      எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
      இலங்குமணிமுத்துவடம்பிறழ
      குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6.
      270
      படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
      படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
      தடங்கைவிரலைந்தும்மலரவைத்து
      தாமோதரன்தாங்குதடவரைதான்
      அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
      அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
      குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7.
      271
      சலமாமுகில்பல்கணப்போர்க்களத்து
      சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
      நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
      நாராயணன்முன்முகம்காத்தமலை
      இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
      இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
      கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8.
      272
      வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
      வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
      தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
      தாமோதரன்தாங்குதடவரைதான்
      முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
      முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
      கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9.
      273
      கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
      கோலமும்அழிந்திலவாடிற்றில
      வடிவேறுதிருவுகிர்நொந்துமில
      மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
      முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
      முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
      குடியேறியிருந்துமழைபொழியும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10.
      274
      அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
      அரவப்பகையூர்தியவனுடைய
      குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
      கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
      திருவிற்பொலிமறைவாணர்புத்தூர
      திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
      பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
      பரமானவைகுந்தம்நண்ணுவரே. 2 11.
      ஆறாம் திருமொழி - நாவலம்
      கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு
      275
      நாவலம்பெரியதீவினில்வாழும்
      நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர்
      தூவலம்புரியுடையதிருமால்
      தூயவாயில்குழலோசைவழியே
      கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
      குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
      காவலும்கடந்துகயிறுமாலையாகி
      வந்துகவிழ்ந்துநின்றனரே. 2 1.
      276
      இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
      இருகைகூடப்புருவம்நெரிந்தேற
      குடவயிறுபடவாய்கடைகூட
      கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
      மடமயில்களொடுமான்பிணைபோலே
      மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
      உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
      ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2.
      277
      வானிலவரசுவைகுந்தக்குட்டன்
      வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
      கோனிளவரசுகோவலர்குட்டன்
      கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
      வானிளம்படியர்வந்துவந்தீண்டி
      மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
      தேனளவுசெறிகூந்தலவிழ
      சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3.
      278
      தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
      தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
      கானகம்படிஉலாவியுலாவி
      கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
      மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
      உருப்பசியரவர்வெள்கிமயங்கி
      வானகம்படியில்வாய்திறப்பின்றி
      ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4.
      279
      முன்நரசிங்கமதாகி அவுணன்
      முக்கியத்தைமுடிப்பான் மூவுலகில்
      மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
      குழலினோசை செவியைப்பற்றிவாங்க
      நன்னரம்புடையதும்புருவோடு
      நாரதனும்தம்தம்வீணைமறந்து
      கின்னரமிதுனங்களும் தம்தம்
      கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5.
      280
      செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
      தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
      நம்பரமன்இந்நாள்குழலூத
      கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
      அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
      அமுதகீதவலையால்சுருக்குண்டு
      நம்பரமன்றென்றுநாணிமயங்கி
      நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6.
      281
      புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
      பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
      அவையுள் நாகத்தணையான்குழலூத
      அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
      அவியுணாமறந்துவானவரெல்லாம்
      ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
      செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
      கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7.
      282
      சிறுவிரல்கள்தடவிப்பரிமாற
      செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
      குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப
      கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
      பறவையின்கணங்கள்கூடுதுறந்து
      வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
      கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டு
      கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8.
      283
      திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
      செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
      சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
      ஊதுகின்றகுழலோசைவழியே
      மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
      மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
      இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
      எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9.
      284
      கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
      கட்டிநன்குடுத்தபீதகவாடை
      அருங்கலவுருவினாயர்பெருமான்
      அவனொருவன்குழலூதினபோது
      மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
      மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
      இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
      பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10.
      285
      குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சி
      கோவிந்தனுடையகோமளவாயில்
      குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்து
      கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
      குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
      விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
      குழலைவென்றகுளிர்வாயினராகி
      சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. 2 11.
      ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
      திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
      நற்றாய் இரங்கும் பாசுரம்

      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      286
      ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
      செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
      கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
      பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. 2 1.
      287
      வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
      சாய்விலாதகுறுந்தலை சிலபிள்ளைகளோடிணங்கி
      தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
      மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2.
      288
      பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
      சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
      கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
      சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3.
      289
      ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
      தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்
      ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
      மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4.
      290
      நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
      சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
      கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
      பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.
      291
      பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
      இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
      பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
      வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.
      292
      பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
      கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
      கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
      வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7.
      293
      காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
      கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
      தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
      மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8.
      294
      கைத்தலத்துள்ளமாடழி கண்ணாலங்கள்செய்து இவளை
      வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம் நம்மைவடுப்படுத்தும்
      செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
      மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.
      295
      பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
      இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
      மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
      ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10.
      296
      ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
      மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
      கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
      மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. 2 11.
      எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
      தலைமகனுடன் சென்ற தலைமகளை குறித்து தாய்
      பலபடி வருந்திக்கூறும் பாசுரம்

      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      297
      நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
      அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
      இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
      மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ 2 1.
      298
      ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
      கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
      நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
      என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ 2.
      299
      குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
      தமரும்பிறரும்அறி தாமோதரற்கென்றுசாற்றி
      அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
      துமிலமெழப்பறைகொட்டி தோரணம்நாட்டிடுங்கொலோ 3.
      300
      ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
      திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
      பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை
      மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ 4.
      301
      தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
      செம்மாந்திரேயென்றுசொல்லி செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
      கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
      இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ 5.
      302
      வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
      கூடியகூட்டமேயா கொண்டுகுடிவாழுங்கொலோ
      நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
      சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ 6.
      303
      அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
      பண்டப்பழிப்புக்கள்சொல்லி பரிசறஆண்டிடுங்கொலோ
      கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
      பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ 7.
      304
      குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ.
      நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன்
      இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
      கடைகயிறேபற்றிவாங்கி கைதழும்பேறிடுங்கொலோ 8.
      305
      வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
      கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ
      ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
      பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ 9.
      306
      மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
      ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
      தாயவள்சொல்லியசொல்லை தண்புதுவைப்பட்டன்சொன்ன
      தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. 2 10.
      ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
      க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
      இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்
      கலித்தாழிசை
      307
      என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
      தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
      வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
      என்னாதன்வன்மையைப்பாடிப்பற
      எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. 2 1.
      308
      என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
      தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
      முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
      தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற
      தாசரதிதன்மையைப்படிப்பற. 2.
      309
      உருப்பிணிநங்கையை தேரேற்றிக்கொண்டு
      விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
      செருக்குற்றான் வீரம்சிதைய தலையை
      சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
      தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3.
      310
      மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
      ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ
      கூற்றுத்தாய்சொல்ல கொடியவனம்போன
      சீற்றமிலாதானைப்பாடிப்பற
      சீதைமணாளனைப்பாடிப்பற. 4.
      311
      பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
      நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
      அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
      அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
      அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5.
      312
      முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
      அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
      படியில்குணத்து பரதநம்பிக்கு அன்று
      அடிநிலையீந்தானைப்பாடிப்பற
      அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6.
      313
      காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
      நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
      மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
      தோள்வலிவீரமேபாடிப்பற
      தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7.
      314
      தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
      நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடை
      சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
      ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
      அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8.
      315
      மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
      ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
      வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
      ஆயர்களேற்றினைப்பாடிப்பற
      ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9.
      316
      காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
      ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
      நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
      ஆராவமுதனைப்பாடிப்பற
      அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10.
      தரவு கொச்சகக்கலிப்பா
      317
      நந்தன்மதலையை காகுத்தனைநவின்று
      உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
      செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
      ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. 2 11.
      பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
      இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியை கண்டு
      சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களை
      கூறி கணையாழிகொடுத்து களிப்பித்தல்

      கலிவிருத்தம்
      318
      நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம்
      செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
      அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
      செறிந்தசிலைகொடுதவத்தை சிதைத்ததும்ஓரடையாளம். 2 1.
      319
      அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம்
      சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே.
      எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
      மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2.
      320
      கலக்கியமாமனத்தனளா கைகேசிவரம்வேண்ட
      மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
      குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
      இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3.
      321
      வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம்
      தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய்
      கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
      சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4.
      322
      மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம்
      கானமரும்கல்லதர்போ காடுறைந்தகாலத்து
      தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
      பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5.
      323
      சித்திரகூடத்துஇருப்ப சிறுகாக்கைமுலைதீண்ட
      அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
      வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப
      அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6.
      324
      மின்னொத்தண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம்
      பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
      நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
      பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7.
      325
      மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம்
      ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
      அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
      இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8.
      326
      திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
      மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
      ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல்
      வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. 2 9.
      327
      வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
      சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
      பாராரும்புகழ்ப்புதுவை பட்டர்பிரான்பாடல்வல்லார்
      ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. 2 10.
      ------------------------------------------------------------------------
      நான்காம்பத்து
      முதல் திருமொழி - கதிராயிரம்
      ஸர்வேஸ்வரனை காணவேணுமென்று தேடுவார் சிலரும் கண்டார் சிலருமா கூறுதல்
      அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்

      328
      கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
      எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
      அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
      உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். 2 1.
      329
      நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
      ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
      காந்தள்முகிழ்விரல்சீதைக்காகி கடுஞ்சிலைசென்றிறுக்க
      வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2.
      330
      கொலையானைக்கொம்புபறித்து கூடலர்சேனைபொருதழிய
      சிலையால்மராமரமெய்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
      தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
      அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3.
      331
      தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
      மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
      ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
      வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4.
      332
      நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
      சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
      வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
      தேரேற்றி சேனைநடுவுபோர்செ சிக்கெனக்கண்டாருளர். 5.
      333
      பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்ச புணர்முலைவாய்மடுக்க
      வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
      பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
      எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6.
      334
      வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
      உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
      வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி தேர்மிசைமுன்புநின்று
      கள்ளப்படைத்துணையாகி பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7.
      335
      நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
      நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
      ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்ப சயத்திரதன்தலையை
      பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8.
      336
      மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
      திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
      எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
      வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9.
      337
      கரியமுகில்புரைமேனிமாயனை கண்டசுவடுரைத்து
      புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
      திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
      பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. 2 10.
      இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
      திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு

      கலிநிலைத்துறை
      338
      அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
      குலம்பாழ்படுத்து குலவிளக்காய்நின்றகோன்மலை
      சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
      சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 2 1.
      339
      வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
      பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
      எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
      செல்லாநிற்கும்சீர தென்திருமாலிருஞ்சோலையே. 2.
      340
      தக்கார்மிக்கார்களை சஞ்சலம்செய்யும்சலவரை
      தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
      எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
      அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3.
      341
      ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
      கோனார்க்கொழி கோவர்த்தனத்துச்செய்தான்மலை
      வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
      தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4.
      342
      ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
      ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
      கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
      திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5.
      343
      ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
      சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
      ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
      சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6.
      344
      மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
      முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
      கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
      தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7.
      345
      குறுகாதமன்னரை கூடுகலக்கி வெங்கானிடை
      சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
      அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
      சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8.
      346
      சிந்தப்புடைத்து செங்குருதிகொண்டு பூதங்கள்
      அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
      இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
      சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9.
      347
      எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
      விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
      பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவா
      தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10.
      348
      மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
      கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
      விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
      கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. 2 11.
      மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
      திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு
      கலிநிலைத்துறை
      349
      உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
      உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
      பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
      விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. 2 1.
      350
      கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
      வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
      நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
      செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2.
      351
      மன்னுநரகன்தன்னை சூழ்போகிவளைத்தெறிந்து
      கன்னிமகளிர்தம்மை கவர்ந்தகடல்வண்ணன்மலை
      புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
      பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3.
      352
      மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
      காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
      கோவலர்கோவிந்தனை குறமாதர்கள் பண்குறிஞ்சி
      பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4.
      353
      பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
      அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
      குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
      நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. 2 5.
      354
      பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
      ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
      பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
      தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6.
      355
      கனங்குழையாள்பொருட்டா கணைபாரித்து அரக்கர்தங்கள்
      இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
      கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
      இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7.
      356
      எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
      வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
      அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
      திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8.
      357
      கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
      மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
      ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
      ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9.
      358
      ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
      ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
      ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
      ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. 2 10.
      359
      மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
      நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
      மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
      மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. 2 11.
      நான்காம் திருமொழி - நாவகாரியம்
      முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரை கொண்டாடியும்
      அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்
      எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      360
      நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
      தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
      மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அ
      பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. 2 1.
      361
      குற்றமின்றிக்குணம்பெருக்கி குருக்களுக்குஅனுகூலராய்
      செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
      துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
      பெற்றதாயர்வயிற்றினை பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2.
      362
      வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்
      திண்ணைசூழ் திருக்கோட்டியூர திருமாலவன்திருநாமங்கள்
      எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
      உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்கு கவளமுந்துகின்றார்களே. 3.
      363
      உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
      நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
      நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
      பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4.
      364
      ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
      தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
      நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
      பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கி புல்லைத்திணிமினே. 5.
      365
      பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
      ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
      நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
      பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6.
      366
      குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
      திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
      கருந்தடமுகில்வண்ணனை கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
      இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7.
      367
      நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
      தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
      குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
      விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8.
      368
      கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
      செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
      நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
      எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9.
      369
      காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
      தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
      கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று
      பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10.
      370
      சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
      ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
      கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
      ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. 2 11.
      ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
      பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
      கிதோபதேசம் செய்தல்

      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      371
      ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
      அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
      வாசவார்குழலாளென்றுமயங்கி
      மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
      கேசவா. புருடோ த்தமா. என்றும்
      கேழலாகியகேடிலீ. என்றும்
      பேசுவாரவர்எய்தும்பெருமை
      பேசுவான்புகில்நம்பரமன்றே. 2 1.
      372
      சீயினால்செறிந்தேறியபுண்மேல்
      செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
      ஈயினால்அரிப்புண்டுமயங்கி
      எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
      வாயினால்நமோநாரணாவென்று
      மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
      போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
      பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2.
      373
      சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
      சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
      ஆர்வினவிலும்வாய்திறவாதே
      அந்தகாலம்அடைவதன்முன்னம்
      மார்வமென்பதோர்கோயிலமைத்து
      மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
      ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
      அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3.
      374
      மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
      மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
      காலுங்கையும்விதிர்விதிர்த்தேறி
      கண்ணுறக்கமதாவதன்முன்னம்
      மூலமாகியஒற்றையெழுத்தை
      மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
      வேலைவண்ணனைமேவுதிராகில்
      விண்ணகத்தினில்மேவலுமாமே. 4.
      375
      மடிவழிவந்துநீர்புலன்சோர
      வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
      கடைவழிவாரக்கண்டமடைப்ப
      கண்ணுறக்கமதாவதன்முன்னம்
      தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
      சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
      இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
      இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5.
      376
      அங்கம்விட்டவையைந்துமகற்றி
      ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
      சங்கம்விட்டவர்கையைமறித்து
      பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
      வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
      மதுசூதனனைமார்பில்
      தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்
      சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6.
      377
      தென்னவன்தமர்செப்பமிலாதார்
      சேவதக்குவார்போலப்புகுந்து
      பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றி
      பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
      இன்னவன்இனையானென்றுசொல்லி
      எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
      மன்னவன்மதுசூதனென்பார்
      வானகத்துமன்றாடிகள்தாமே. 7.
      378
      கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
      குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
      பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
      நரிப்படைக்குஒருபாகுடம்போலே
      கோடிமூடியெடுப்பதன்முன்னம்
      கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
      கூடியாடியஉள்ளத்தரானால்
      குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8.
      379
      வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
      வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
      தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
      தாரமும்ஒருபக்கம்அலற்ற
      தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
      செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
      மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
      அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9.
      380
      செத்துப்போவதோர்போதுநினைந்து
      செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
      பத்தராயிறந்தார்பெறும்பேற்றை
      பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
      சித்தம்நன்கொருங்கித்திருமாலை
      செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
      சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
      சென்றசிந்தைபெறுவர்தாமே. 2 10.
      ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
      பெற்றபிள்ளைகளுக்கு பரமபுருஷனுடைய திருநாமங்களை
      இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்
      கலித்துறை
      381
      காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
      ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.
      கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
      நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2 1.
      382
      அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
      மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்.
      செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால்
      நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2.
      383
      உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
      எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்
      பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
      நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3.
      384
      மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
      மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
      வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்
      நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4.
      385
      மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
      மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
      குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால்
      நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5.
      386
      நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
      கூடியழுங்கி குழியில்வீழ்ந்துவழுக்கதே
      சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று
      நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6.
      387
      மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
      எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.
      கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
      நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7.
      388
      நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
      நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
      செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
      நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8.
      389
      ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
      மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
      கோத்துக்குழைத்து குணாலமாடித்திரிமினோ
      நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9.
      390
      சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
      வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
      ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
      பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. 2 10.
      ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
      தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      391
      தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
      எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
      கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
      கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. 2 1.
      392
      சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வா சந்திரன்வெங்கதிர்அஞ்ச
      மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
      நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
      கலந்திழிபுனலால்புகர்படுகங்கை கண்டமென்னும்கடிநகரே. 2.
      393
      அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
      எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
      சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
      கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 3.
      394
      இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
      நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
      இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
      கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4.
      395
      உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
      மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
      எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
      கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5.
      396
      தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
      மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
      அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
      கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6.
      397
      விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
      மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
      அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
      கற்பகமலரும்கலந்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே. 7.
      398
      திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
      அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
      நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
      கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8.
      399
      வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
      இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
      தடவரையதிரத்தரணிவிண்டிடி தலைப்பற்றிக்கரைமரம்சாடி
      கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே. 2 9.
      400
      மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
      ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
      மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
      கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 2 10.
      401
      பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
      வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
      தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
      கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. 2 11.
      எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
      திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1
      தரவு கொச்சகக்கலிப்பா
      402
      மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
      ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
      தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
      போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. 2 1.
      403
      பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
      இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
      மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
      சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.
      404
      மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
      உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
      திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
      பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3.
      405
      கூந்தொழுத்தைசிதகுரைப்ப கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
      ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
      கான்தொடுத்தநெறிபோகி கண்டகரைக்களைந்தானூர்
      தேந்தொடுத்தமலர்ச்சோலை திருவரங்கமென்பதுவே. 4.
      406
      பெருவரங்களவைபற்றி பிழகுடையஇராவணனை
      உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
      குருவரும்பக்கோங்கலர குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
      திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5.
      407
      கீழுலகில்அசுரர்களை கிழங்கிருந்துகிளராமே
      ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
      தாழைமடலூடுரிஞ்சி தவளவண்ணப்பொடியணிந்து
      யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6.
      408
      கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
      பிழக்குடையஅசுரர்களை பிணம்படுத்தபெருமானூர்
      தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
      தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7.
      409
      வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
      எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
      எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
      மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8.
      410
      குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
      நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
      குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
      மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9.
      411
      பருவரங்களவைபற்றி படையாலித்தெழுந்தானை
      செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
      திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
      இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. 2 10.
      ஒன்பதாம் திருமொழி - மரவடியை
      திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      412
      மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
      வைத்துப்போய்வானோர்வாழ
      செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
      உலகாண்டதிருமால்கோயில்
      திருவடிதன்திருவுருவும்
      திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
      உருவுடையமலர்நீலம்
      காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. 2 1.
      413
      தன்னடியார்திறத்தகத்து
      தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
      என்னடியார்அதுசெய்யார்
      செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
      மன்னுடையவிபீடணற்கா
      மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
      என்னுடையதிருவரங்கற்கன்றியும்
      மற்றொருவர்க்குஆளாவரே 2 2.
      414
      கருளுடையபொழில்மருதும்
      கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
      உருளுடையசகடரையும்மல்லரையும்
      உடையவிட்டுஓசைகேட்டான்
      இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
      ஏற்றிவைத்துஏணிவாங்கி
      அருள்கொடுத்திட்டுஅடியவரை
      ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3.
      415
      பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய
      துவரையென்னும்
      அதில்நாயகராகிவீற்றிருந்த
      மணவாளர்மன்னுகோயில்
      புதுநாண்மலர்க்கமலம்
      எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
      பொதுநாயகம்பாவித்து
      இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4.
      416
      ஆமையாய்க்கங்கையாய்
      ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
      நான்முகனாய்நான்மறையாய்
      வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
      சேமமுடைநாரதனார்
      சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
      பூமருவிப்புள்ளினங்கள்
      புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5.
      417
      மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
      அவர்களையேமன்னராக்கி
      உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
      உயிராளன்உறையும்கோயில்
      பத்தர்களும்பகவர்களும்
      பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
      சித்தர்களும்தொழுதிறைஞ்ச
      திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6.
      418
      குறட்பிரமசாரியாய்
      மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
      இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
      கொடுத்துகந்தஎம்மான்கோயில்
      எறிப்புடையமணிவரைமேல்
      இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
      சிறப்புடையபணங்கள்மிசை
      செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7.
      419
      உரம்பற்றிஇரணியனை
      உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
      சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
      வாயலரத்தெழித்தான்கோயில்
      உரம்பெற்றமலர்க்கமலம்
      உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
      வரம்புற்றகதிர்ச்செந்நெல்
      தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8.
      420
      தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
      அரியாய்க்குறளாய்
      மூவுருவினிராமனா
      கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
      சேவலொடுபெடையன்னம்
      செங்கமலமலரேறிஊசலாடி
      பூவணைமேல்துதைந்தெழு
      செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9.
      421
      செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
      செருச்செய்யும்நாந்தகமென்னும்
      ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்
      விழுக்கையாளன்
      இரவாளன்பகலாளன்என்னையாளன்
      ஏழுலகப்பெரும்புரவாளன்
      திருவாளன்இனிதாக
      திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10.
      422
      கைந்நாகத்திடர்கடிந்த
      கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
      தென்னாடும்வடநாடும்தொழநின்ற
      திருவரங்கம்திருப்பதியின்மேல்
      மெய்ந்நாவன்மெய்யடியான்
      விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
      எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
      இணைபிரியாதிருப்பர்தாமே. 2 11.
      பத்தாம் திருமொழி - துப்புடையாரை
      அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
      பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.
      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      423
      துப்புடையாரைஅடைவதெல்லாம்
      சோர்விடத்துத்துணையாவரென்றே
      ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
      ஆனைக்குநீஅருள்செய்தமையால்
      எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
      அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
      அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2 1.
      424
      சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
      சங்கொடுசக்கரமேந்தினானே.
      நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
      செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
      போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
      புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
      ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2.
      425
      எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
      எற்றிநமன்தமர்பற்றும்போது
      நில்லுமினென்னும்உபாயமில்லை
      நேமியும்சங்கமும்ஏந்தினானே.
      சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
      சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
      அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3.
      426
      ஒற்றைவிடையனும்நான்முகனும்
      உன்னையறியாப்பெருமையோனே.
      முற்றஉலகெல்லாம்நீயேயாகி
      மூன்றெழுத்தாயமுதல்வனேயா.
      அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
      அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
      அற்றைக்கு நீஎன்னைக்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4.
      427
      பையரவினணை பாற்கடலுள்
      பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி.
      உய்யஉலகுபடைக்கவேண்டி
      உந்தியில்தோற்றினாய்நான்முகனை
      வையமனிசரைப்பொய்யென்றெண்ணி
      காலனையும்உடனேபடைத்தாய்
      ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5.
      428
      தண்ணெனவில்லைநமன்தமர்கள்
      சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
      மண்ணொடுநீரும்எரியும்காலும்
      மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்.
      எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
      எண்ணினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
      அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6.
      429
      செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
      தேவர்கள்நாயகனே. எம்மானே.
      எஞ்சலிலென்னுடையின்னமுதே.
      ஏழுலகுமுடையாய். என்னப்பா.
      வஞ்சவுருவின்நமன்தமர்கள்
      வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
      அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7.
      430
      நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
      நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
      ஊனேபுகேயென்றுமோதும்போது
      அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
      வானேய்வானவர்தங்களீசா.
      மதுரைப்பிறந்தமாமாயனே. என்
      ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8.
      431
      குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா.
      கோநிரைமேய்த்தவனே. எம்மானே.
      அன்றுமுதல் இன்றறுதியா
      ஆதியஞ்சோதிமறந்தறியேன்
      நன்றும்கொடியநமன்தமர்கள்
      நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
      அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
      அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9.
      432
      மாயவனைமதுசூதனனை
      மாதவனைமறையோர்களேத்தும்
      ஆயர்களேற்றினைஅச்சுதனை
      அரங்கத்தரவணைப்பள்ளியானை
      வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
      விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
      தூயமனத்தனராகிவல்லார்
      தூமணிவண்ணனுக்காளர்தாமே. 2 10.
      ------------------------------------------------------------------------
      ஐந்தாம் பத்து
      முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
      எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
      433
      வாக்குத்தூய்மையிலாமையினாலே
      மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
      நாக்குநின்னையல்லால்அறியாது
      நானதஞ்சுவன்என்வசமன்று
      மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
      முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
      காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
      காரணா. கருளக்கொடியானே. 2 1.
      434
      சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
      சங்குசக்கரமேந்துகையனே.
      பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
      பொறுப்பது பெரியோர்கடனன்றே
      விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
      வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
      உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
      ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2.
      435
      நன்மைதீமைகளொன்றும்அறியேன்
      நாரணா. என்னும்இத்த்னையல்லால்
      புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசி
      புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.
      உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
      ஓவாதேநமோநாரணா. என்பன்
      வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
      வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3.
      436
      நெடுமையால்உலகேழுமளந்தாய்.
      நின்மலா. நெடியாய். அடியேனை
      குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
      கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
      அடிமையென்னுமக்கோயின்மையாலே
      அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
      கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
      கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4.
      437
      தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
      துடவையும்கிணறும்இவையெல்லாம்
      வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
      வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
      நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
      நச்சுவார்பலர்கேழலொன்றாகி
      கோட்டுமண்கொண்டகொள்கையினானே.
      குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5.
      438
      கண்ணா. நான்முகனைப்படைத்தானே.
      காரணா. கரியாய். அடியேன்நான்
      உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
      ஓவாதேநமோநாரணாவென்று
      எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
      வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
      நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
      அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6.
      439
      வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
      மெத்தையாகவிரித்து அதன்மேலே
      கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
      காணலாங்கொல் என்றாசையினாலே
      உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
      உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
      துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
      சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7.
      440
      வண்ணமால்வரையேகுடையாக
      மாரிகாத்தவனே. மதுசூதா.
      கண்ணனே. கரிகோள்விடுத்தானே.
      காரணா. களிறட்டபிரானே.
      எண்ணுவாரிடரைக்களைவானே.
      ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
      நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
      நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8.
      441
      நம்பனே. நவின்றேத்தவல்லார்கள்
      நாதனே. நரசிங்கமதானாய்.
      உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
      ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி
      கம்பமாகரிகோள்விடுத்தானே.
      காரணா. கடலைக்கடைந்தானே.
      எம்பிரான். என்னையாளுடைத்தேனே.
      ஏழையேனிடரைக்களையாயே. 9.
      442
      காமர்தாதைகருதலர்சிங்கம்
      காணவினியகருங்குழல்குட்டன்
      வாமனன்என்மரகதவண்ணன்
      மாதவன்மதுசூதனன்தன்னை
      சேமநன்கமரும்புதுவையர்கோன்
      விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
      நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
      நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. 2 10.
      இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
      தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
      விரும்பிப்புகுந்ததனால் நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
      443
      நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
      கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
      மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
      பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. 2 1.
      444
      சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
      வைத்தஇலச்சினைமாற்றி தூதுவர்ஓடியொளித்தார்
      முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
      பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2.
      445
      வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
      கயிற்றும்அக்காணிகழித்து காலிடைப்பாசம்கழற்றி
      எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னை
      பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3.
      446
      மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
      இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
      சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
      பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4.
      447
      மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
      பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
      மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்.
      பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5.
      448
      உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
      பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
      அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்
      பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6.
      449
      கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
      அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
      வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
      பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7.
      450
      ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
      பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
      போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
      பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8.
      451
      உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.
      அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே.
      இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்.
      பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 2 9.
      452
      அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
      அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
      பரவைத்திரைபலமோத பள்ளிகொள்கின்றபிரானை
      பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. 2 10.
      மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
      திருமாலிருஞ்சோலை எம்பெருமானை போகவொட்டேனென்று தடுத்தல்
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
      453
      துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
      புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ
      மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
      சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 2 1.
      454
      வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
      ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
      அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
      தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடை திருமாலிருஞ்சோலையெந்தாய். 2.
      455
      உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன் இனிப்போய்ஒருவன்
      தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
      புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
      இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். 2 3.
      456
      காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
      பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
      தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
      பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4.
      457
      காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
      மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
      மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
      சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5.
      458
      எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
      ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
      மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிர
      திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6.
      459
      அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
      இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
      சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
      செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7.
      460
      எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
      இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
      மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்.
      சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8.
      461
      அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
      இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே
      சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
      தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9.
      462
      சென்றுலகம்குடைந்தாடும்சுனை திருமாலிருஞ்சோலைதன்னுள்
      நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
      பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
      ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. 2 10.
      நாலாம் திருமொழி - சென்னியோங்கு
      எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
      தாம் பெற்ற நன்மைகளை கூறி உகத்தல்

      அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
      463
      சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு
      தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா.
      என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
      நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே 2 1.
      464
      பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்
      பிறவியென்னும்கடலும்வற்றி பெரும்பதமாகின்றதால்
      இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
      அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2.
      465
      எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே.
      நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்
      நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
      சும்மெனாதேகைவிட்டோ டி தூறுகள்பாய்ந்தனவே. 3.
      466
      கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
      உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
      கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
      தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4.
      467
      பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
      உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
      உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
      என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5.
      468
      உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
      என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
      மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ.
      என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே 6.
      469
      பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
      திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
      மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே
      உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7.
      470
      அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
      மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்.
      நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்கு கண்கள்அசும்பொழுக
      நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8.
      471
      பனிக்கடலில்பள்ளிகோளை பழகவிட்டு ஓடிவந்துஎன்
      மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ.
      தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
      உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. 2 9.
      472
      தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
      சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி.
      வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
      இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. 2 10.
      473
      வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
      கோயில்கொண்டகோவலனை கொழுங்குளிர்முகில்வண்ணனை
      ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
      சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. 2 11.
      பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
      ------------------------------------------------------------------------
      13 . 2002


      ------------------------------------------------------------------------
      - 474- 947
      -8 -
      நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 474- 947
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      - 2002



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 474- 947
      ஸ்ரீ ஆண்டாள் அருளி செய்த திருப்பாவை
      அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்கு
      பன்னு திருப்பாவை பல்பதியம்
      இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
      பூமாலை சூடி கொடுத்தாளை சொல்லு
      சூடி கொடுத்தாள் சுடர கொடியே தொல்பாவை
      பாடி அருளவல்ல பல்வளையாய்
      நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
      நாங்கடவா வண்ணமே நல்கு.
      474
      மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
      நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
      சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள்
      கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
      ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
      கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
      நாராயணனே நமக்கே பறை தருவான்
      பாரோர் புகழ படிந்தேலோர் எம்பாவாய்
      475
      வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு
      செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
      பை துயின்ற பரமனடி பாடி
      நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
      மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
      செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
      ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
      உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
      476
      ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
      நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
      தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
      ஓங்கு பெறும் செ நெல் ஊடு கயலுகள
      பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப
      தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
      வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
      நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
      477
      ஆழி மழை கண்ணா ஒன்று நீ கை கரவேல்
      ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
      ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
      பாழிய் அம் தோளுடை பற்பனாபன் கையில்
      ஆழி போல் மின்னி வலம்புரி நின்று
      தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
      வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
      மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
      478
      மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
      தூய பெரு நீர் யமுனை துறைவனை
      ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
      தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை
      தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி தொழுது
      வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
      போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
      தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
      479
      புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
      வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
      பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
      கள்ள சகடம் கலக்கழி காலோச்சி
      வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
      உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
      மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
      உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
      480
      கீசு என்று எங்கும் ஆனை சாத்தான்
      பேசின பேச்சரவம் கேட்டிலையோ பே பெண்ணே
      காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
      வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
      ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
      நாயக பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
      கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
      தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
      481
      கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
      மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
      போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை
      கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
      பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு
      மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
      தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
      ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்
      482
      தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரி
      தூபம் கமழ துயிலணைமேல் கண் வளரும்
      மாமான் மகளே மணி கதவம் தாழ் திறவாய்
      மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
      ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
      ஏ பெரு துயில் மந்திர பட்டாளோ
      மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
      நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்
      483
      நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
      மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
      நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால்
      போற்ற பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
      கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
      தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
      ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
      தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
      484
      கற்று கறவை கணங்கள் பல கறந்து
      செற்றார் திறலழி சென்று செரு செய்யும்
      குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
      புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
      சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
      முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
      சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
      எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
      485
      கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
      நினைத்து முலை வழியே நின்று பால் சோர
      நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
      பனி தலை வீழ நின் வாசற் கடை பற்றி
      சினத்தினால் தென் இலங்கை கோமானை செற்ற
      மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
      இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
      அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
      486
      புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
      கிள்ளி களைந்தானை கீர்த்தி மை பாடி போ
      பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
      புள்ளும் சிலம்பின காண் போதரி கண்ணினாய்
      குள்ள குளிர குடைந்து நீராடாதே
      பள்ளி கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
      கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
      487
      உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
      செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் கூம்பின
      செங்கற் பொடி கூரை வெண்பல் தவத்தவர்
      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
      எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
      நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
      சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
      பங கண்ணானை பாடேலோர் எம்பாவாய்.
      488
      எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
      சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
      வல்லை உன் கட்டுரைகள் பண்டே வாய்
      வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
      ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
      எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
      வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
      வல்லானை மாயனை பாடேலோர் எம்பாவாய்
      489
      நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
      கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
      வாயில் காப்பானே. மணி கதவம் தாள் திறவாய்
      ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
      மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
      தூயோமாய் வந்தோம் துயில் எழ பாடுவான்
      வாயால் முன்னம் மாற்றாதே அம்மா.
      நேய நிலை கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
      490
      அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
      எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
      கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
      எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
      அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
      உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
      செம் பொற் கழலடி செல்வா பலதேவா
      உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
      491
      உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
      நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
      கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
      வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி
      பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
      பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட
      செந்தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப
      வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
      492
      குத்து விளக்கெரிய கோட்டு கால் கட்டில் மேல்
      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
      கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
      வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
      மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
      எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
      எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
      தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
      493
      முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
      கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
      செப்பம் உடையாய் திறல்
      வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
      செப்பென்ன மென் முலை செவ்வா சிறு மருங்குல்
      நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
      உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
      இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
      494
      ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
      மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
      ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
      ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
      தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
      மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
      ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
      போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
      495
      அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
      பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டிற் கீழே
      சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
      கிங்கிணி வா செய்த தாமரை பூ போலே
      செங்கண் சிறு சிறிதே எம்மேல் விழியாவோ
      திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
      அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
      எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
      496
      மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து உறங்கும்
      சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து
      வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
      மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
      போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
      கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
      சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
      காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
      497
      அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
      சென்றங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
      பொன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
      கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
      குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
      வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
      என்றென்றும் உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான்
      இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
      498
      ஒருத்தி மகனா பிறந்து ஓர் இரவில்
      ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
      தரிக்கிலான் ஆகி தான் தீங்கு நினைந்த
      கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
      நெருப்பென்ன நின்ற நெடுமாலே. உன்னை
      அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
      திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
      வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
      499
      மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
      ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
      பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
      போல்வன சங்கங்கள் போ பாடுடையனவே
      சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
      கோல விளக்கே கொடியே விதானமே
      ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
      500
      கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை
      பாடி பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
      நாடு புகழும் பரிசினால் நன்றாக
      சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே
      பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
      ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
      மூட நெய் பெய்து முழங்கை வழி வார
      கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
      501
      கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
      அறிவு ஒன்றும் இல்லாத ஆ குலத்து உந்தன்னை
      பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
      குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
      உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
      அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
      சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
      இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
      502
      சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
      பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
      குற்று ஏவல் எங்களை கொள்ளாமல் போகாது
      இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
      எற்றைக்கும் ஏழ் பிறவிக்கும் உன்
      உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
      மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
      503
      வங கடல் கடைந்த மாதவனை கேசவனை
      திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
      அங்க பறை கொண்ட ஆற்றை அணி புதுவை
      பைங்கமல தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
      சங்க தமிழ் மாலை முப்பதும் தப்பாமே -சொன்ன
      இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
      செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால்
      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
      கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
      சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
      நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
      வில்லிபுத்தூர் வேத கோனூர்
      பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
      வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
      ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
      வையம் சுமப்பது வம்பு.
      திருவாடி பூரத்து செகத்துதித்தாள் வாழியே
      திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
      பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
      பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
      ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
      உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
      மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
      வண்புதுவை நகர கோதை மலர பதங்கள் வாழியே
      ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். மங்களம்
      ------------------------------------------------------------------------
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      நாச்சியார் திருமொழி தனியன்கள்

      திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது
      நேரிசை வெண்பா
      அல்லிநா டாமரைமே லாரணங்கி னின்துணைவி
      மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்
      ஆயர் குலவேந்த னாகத்தாள் தென்புதுவை
      வேயர் பயந்த விளக்கு.
      கட்டளை கலித்துறை
      கோல சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
      சீல தனள்தென் திருமல்லி நாடி செழுங்குழல்மேல்
      மால தொடைதென் னரங்கரு கீயும் மதிப்புடைய
      சோலை கிளிஅவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
      ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
      1 தையொரு திங்கள்
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      504
      தையொரு திங்களும் தரைவிளக்கி
      தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
      ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
      அழகினு கலங்கரி தனங்கதேவா
      உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
      உன்னையு மும்பியை யும்தொழுதேன்
      வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
      வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. 2 1
      505
      வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
      வெள்வரை பதன்முன்னம் துறைபடிந்து
      முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
      முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
      கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
      கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
      புள்ளினை வாய்பிள தானென்பதோர்
      இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2
      506
      மத்தநன் னறுமலர் முருக்கமலர்
      கொண்டுமு போதுமுன் னடிவணங்கி
      தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
      வாசக தழித்துன்னை வைதிடாமே
      கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
      கோவிந்த னென்பதோர் பேரேழுதி
      வித்தகன் வேங்கட வாணனென்னும்
      விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3
      507
      சுவரில் புராணநின் பேரேழுதி
      சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
      கவரி பிணாக்களும் கருப்புவில்லும்
      காட்டித்த தேன்கண்டாய் காமதேவா
      அவரை பிரா தொடங்கிஎன்றும்
      ஆதரி தெழுந்தவென் தடமுலைகள்
      துவரை பிரானுக்கே சங்கற்பித்து
      தொழுதுவை தேனொல்லை விதிக்கிற்றியே. 4
      508
      வானிடை வாழுமவ் வானவர்க்கு
      மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
      கானிடை திரிவதோர் நரிபுகுந்து
      கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
      ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
      உன்னி தெழுந்தவென் தடமுலைகள்
      மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
      வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5
      509
      உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
      ஓத்துவல் லார்களை கொண்டுவைகல்
      தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
      திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
      கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
      கருவிளை போல்வண்ணன் கமலவண்ண
      திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
      திருந்தவே நோக்கென கருளுகண்டய். 6
      510
      காயுடை நெல்லொடு கரும்பமைத்து
      கட்டி யரிசி யவலமைத்து
      வாயுடை மறையவர் மந்திரத்தால்
      மன்மத னே.உன்னை வணங்குகின்றேன்
      தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
      திருக்கைக ளாலென்னை தீண்டும்வண்ணம்
      சாயுடை வயிறுமென் தடமுலையும்
      தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7
      511
      மாசுடை யுடம்பொடு தலையுலறி
      வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
      தேசுடை திறலுடை காமதேவா.
      நோற்கின்ற நோன்பினை குறிக்கொள்கண்டாய்
      பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
      பெண்மையை தலையுடை தாக்கும்வண்ணம்
      கேசவ நம்பியை கால்பிடிப்பாள்
      என்னுமி பேறென கருளுகண்டாய். 8
      512
      தொழுதுமு போதுமுன் னடிவணங்கி
      தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்
      பழுதின்றி பாற்கடல் வண்ணனுக்கே
      பணிசெய்து வாழ பெறாவிடில்நான்
      அழுதழு தலமந்தம் மாவழங்க
      ஆற்றவு மதுவுன குறைக்குங்கண்டாய்
      உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
      ஊட்டமின் றித்துர தாலொக்குமே. 9
      513
      கருப்புவில் மலர்க்கணை காமவேளை
      கழலிணை பணிந்தங்கோர் கரியலற
      மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
      மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
      பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
      புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
      விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
      விண்ணவர் கோனடி நண்ணுவரே. 2 10
      2 நாமமாயிரம்
      கலி விருத்தம்
      514
      நாமமாயிர மேத்தநின்ற
      நாராயணாநர னேஉன்னை
      மாமிதன்மக னாகப்பெற்றா
      லெமக்குவாதை தவிருமே
      காமன்போதரு காலமென்றுபங்
      குனிநாள்கடை பாரித்தோம்
      தீமைசெய்யும் சிரீதரா.எங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 2 1
      515
      இன்றுமுற்றும் முதுகுநோவ
      இருந்திழைத்தஇ சிற்றிலை
      நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
      ஆர்வந்தன்னை தணிகிடாய்
      அன்றுபாலக னாகியாலிலை
      மேல்துயின்றவெம் மாதியாய்
      என்றுமுன்றன கெங்கள்மேலிர
      கம்மெழாததெம் பாவமே. 2
      516
      குண்டுநீருறை கோளரீ.மத
      யானைகோள்விடு தாய்உன்னை
      கண்டுமாலுறு வோங்களைக்கடை
      கண்களாலிட்டு வாதியேல்
      வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளை
      கைகளால்சிர மப்பட்டோ ம்
      தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 3
      517
      பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன்
      பேச்சும்செய்கையும் எங்களை
      மையலேற்றி மயக்கவுன்முகம்
      மாயமந்திர தான்கொலோ
      நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
      நோவநாங்களு ரைக்கிலோம்
      செய்யதாமரை கண்ணினாயெங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 4
      518
      வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
      விசித்திரப்பட வீதிவா
      தெள்ளிநாங்களி ழைத்தகோல
      மழித்தியாகிலும் உன்றன்மேல்
      உள்ளமோடி யுருகலல்லால்
      உரோடமொன்று மிலோங்கண்டாய்
      கள்ளமாதவா. கேசவா.உன்
      முகத்தனகண்க ளல்லவே. 5
      519
      முற்றிலாதபிள் ளைகளோம்முலை
      போந்திலாதோமை நாடொறும்
      சிற்றில்மேலிட்டு கொண்டுநீசிறி
      துண்டுதிண்ணென நாமது
      கற்றிலோம்கட லையடைத்தரக்-
      கர்குலங்களை முற்றவும்
      செற்றுஇலங்கையை பூசலாக்கிய
      சேவகா.எம்மை வாதியேல். 6
      520
      பேதநன்கறி வார்களோடிவை
      பேசினால்பெரி திஞ்சுவை
      யாதுமொன்றறி யாதபிள்ளைக
      ளோமைநீநலி தென்பயன்
      ஓதமாகடல் வண்ணா.உன்மண
      வாட்டிமாரொடு சூழறும்
      சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 7
      521
      வட்டவாய்ச்சிறு தூதையோடு
      சிறுசுளகும்மண லுங்கொண்டு
      இட்டமாவிளை யாடுவோங்களை
      சிற்றிலீடழி தென்பயன்
      தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர
      சக்கரம்கையி லேந்தினாய்
      கட்டியும்கை தாலின்னாமை
      அறிதியேகடல் வண்ணனே. 8
      522
      முற்றத்தூடு புகுந்துநின்முகங்
      காட்டிப்புன்முறு வல்செய்து
      சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதை
      கக்கடவையோ கோவிந்தா
      முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
      நீண்டளந்துகொண் டாய்எம்மைப்-
      பற்றிமெய்ப்பிண கிட்டக்காலிந்த
      பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார் 9
      523
      சீதைவாயமு தமுண்டாய்.எங்கள்
      சிற்றில்நீசிதை யேல். என்று
      வீதிவாய்விளை யாடுமாயர்
      சிறுமியர்மழ லைச்சொல்லை
      வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி
      புத்தூர்மன்விட்டு சித்தன்றன்
      கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை
      வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10
      3 கோழியழைப்பதன்
      524
      கோழி யழைப்பதன் முன்னம்
      குடைந்துநீ ராடுவான் போந்தோம்
      ஆழியஞ் செல்வ னெழுந்தான்
      அரவணை மேல்பள்ளி கொண்டாய்
      ஏழைமை யாற்றவும் பட்டோ ம்
      இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
      தோழியும் நானும் தொழுதோம்
      துகிலை பணித்தரு ளாயே. 2 1
      525
      இதுவென் புகுந்ததிங் கந்தோ.
      இப்பொய்கை கெவ்வாறு வந்தாய்
      மதுவின் துழாய்முடி மாலே.
      மாயனே.எங்க ளமுதே
      விதியின்மை யாலது மாட்டோ ம்
      வித்தக பிள்ளாய். விரையேல்
      குதிகொண் டரவில் நடித்தாய்.
      குருந்திடை கூறை பணியாய். 2
      526
      எல்லே யீதென்ன இளமை
      எம்மனை மார்காணி லொட்டார்
      பொல்லாங்கீ தென்று கருதாய்
      பூங்குரு தேறி யிருத்தி
      வில்லாலி லங்கை யழித்தாய்.நீ
      வேண்டிய தெல்லாம் தருவோம்
      பல்லாரும் காணாமே போவோம்
      பட்டை பணித்தரு ளாயே. 3
      527
      பரக்க விழித்தெங்கும் நோக்கி
      பலர்குடை தாடும் சுனையில்
      அரக்கநில் லாகண்ண நீர்கள்
      அலமரு கின்றவா பாராய்
      இரக்கமே லொன்று மிலாதாய்.
      இலங்கை யழித்த பிரானே
      குரக்கர சாவ தறிந்தோம்
      குருந்திடை கூறை பணியாய். 4
      528
      காலை கதுவிடு கின்ற
      கயலோடு வாளை விரவி
      வேலை பிடித்தெந்னை மார்கள்
      ஓட்டிலென் னவிளை யாட்டோ
      கோலச்சிற் றாடை பலவுங்
      கொண்டுநீ யேறி யிராதே
      கோலங் கரிய பிரானே.
      குருந்திடை கூறை பணியாய். 5
      529
      தடத்தவிழ் தாமரை பொய்கை
      தாள்களெங் காலை கதுவ
      விடத்தே ளெறிந்தாலே போல
      வேதனை யற்றவும் பட்டோ ம்
      குடத்தை யெடுத்தேற விட்டு
      கூத்தாட வல்லஎங் கோவே
      படிற்றையெல் லாம்தவிர தெங்கள்
      பட்டை பணித்தரு ளாயே. 6
      530
      நீரிலே நின்றயர கின்றோம்
      நீதியல் லாதன செய்தாய்
      ஊரகம் சாலவும் சேய்த்தால்
      ஊழியெல் லாமுணர் வானே
      ஆர்வ முனக்கே யுடையோம்
      அம்மனை மார்காணி லொட்டார்
      போர விடாயெங்கள் பட்டை
      பூங்குரு தேறியி ராதே. 7
      531
      மாமிமார் மக்களே யல்லோம்
      மற்றுமிங் கெல்லாரும் போந்தார்
      தூமலர கண்கள் வளர
      தொல்லையி ராத்துயில் வானே
      சேமமே லன்றிது சால
      சிக்கென நாமிது சொன்னோம்
      கோமள ஆயர்கொ ழுந்தே.
      குருந்திடை கூறை பணியாய். 8
      532
      கஞ்சன் வலைவைத்த வன்று
      காரிரு ளெல்லில் பிழைத்து
      நெஞ்சுது கம்செ போந்தாய்
      நின்றஇ கன்னிய ரோமை
      அஞ்ச உரப்பாள் அசோதை
      ஆணாட விட்டி டிருக்கும்
      வஞ்சக பேய்ச்சிபா லுண்ட
      மசிமையி லீ.கூறை தாராய். 9
      533
      கன்னிய ரோடெங்கள் நம்பி
      கரிய பிரான்விளை யாட்டை
      பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
      புதுவையர் கோன்பட்டன் கோதை
      இன்னிசை யால்சொன்ன மாலை
      ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
      மன்னிய மாதவ னோடு
      வைகுந்தம் புக்கிரு பாரே. 2 10
      4 தெள்ளியார் பலர்
      கலி விருத்தம்
      534
      தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்
      வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்
      பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட
      கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1
      535
      காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
      வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
      ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
      கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. 2
      536
      பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
      காம கன்அணி வாணுதல் தேவகி
      மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
      கோம கன்வரில் கூடிடு கூடலே. 3
      537
      ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
      பூத்த நீள்கடம் பேறி புகப்பாய்ந்து
      வாய்த்த காளியன் மேல்நட மாடிய
      கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4
      538
      மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
      நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
      ஓடை மாமத யானை யுதைத்தவன்
      கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5
      539
      அற்ற வன்மரு தம்முறி யநடை
      கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
      செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
      கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6
      540
      அன்றின் னாதன செய்சிசு பாலனும்
      நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
      வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
      கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7
      541
      ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
      மேவ லன்விரை சூழ்துவ ராபதி
      காவ லன்கன்று மேய்த்து விளையாடும்
      கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8
      542
      கொண்ட கோல குறளுரு வாய்ச்சென்று
      பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
      அண்ட மும்நில னும்அடி யொன்றினால்
      கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9
      543
      பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
      ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்
      அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
      குழக னார்வரில் கூடிடு கூடலே. 10
      544
      ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
      நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்
      கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
      பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. 2 11
      5 மன்னு பெரும்புகழ்
      எழுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      545
      மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
      வண்ணன் மணிமுடி மைந்தன்
      தன்னை உகந்தது காரண மாகஎன்
      சங்கிழ கும்வழ குண்டே
      புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி
      பொதும்பினில் வாழும் குயிலே
      பன்னியெ போது மிருந்து விரைந்தென்
      பவளவா யன்வர கூவாய். 2 1
      546
      வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட
      விமல னெனக்குரு காட்டான்
      உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
      உயிர்பெய்து கூத்தாட்டு காணும்
      கள்ளவிழ் செண்பக பூமலர் கோதி
      களித்திசை பாடுங் குயிலே
      மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
      வேங்கட வன்வர கூவாய். 2
      547
      மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
      இராவணன் மேல்சர மாரி
      தாய்தலை யற்றற்று வீழ தொடுத்த
      தலைவன் வரவெங்குங் காணேன்
      போதலர் காவில் புதுமணம் நாற
      பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
      காதலி யோடுடன் வாழ்குயி லே.என்
      கருமாணி கம்வர கூவாய். 3
      548
      என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
      இமைபொரு தாபல நாளும்
      துன்ப கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
      தோணி பெறாதுழல் கின்றேன்
      அன்புடை யாரை பிரிவுறு நோயது
      நீயு மறிதி குயிலே
      பொன்புரை மேனி கருள கொடியுடை
      புண்ணிய னைவர கூவாய். 4
      549
      மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
      வில்லிபு தூருறை வான்றன்
      பொன்னடி காண்பதோ ராசயி னாலென்
      பொருகயற் கண்ணிணை துஞ்சா
      இன்னடி சிலோடு பாலமு தூட்டி
      எடுத்தவென் கோல கிளியை
      உன்னொடு தோழமை கொள்வன் குயிலே.
      உலகள தான்வர கூவாய். 2 5
      550
      எத்திசை யுமம ரர்பணி தேத்தும்
      இருடீகே சன்வலி செய்ய
      முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
      முலயு மழகழி தேன்நான்
      கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
      கொள்ளு மிளங்குயி லேஎன்
      தத்துவ னைவர கூகிற்றி யாகில்
      தலையல்லால் கைம்மாறி லேனே. 6
      551
      பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானை
      புணர்வதோ ராசயி னால்என்
      கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலி
      தாவியை யாகுலஞ் செய்யும்
      அங்குயி லே.உன கென்ன மறைந்துறைவு
      ஆழியும் சங்குமொண் தண்டும்
      தங்கிய கையவ னைவர கூவில்நீ
      சால தருமம் பெறுதி. 7
      552
      சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கை
      சதுரன் பொருத்த முடையன்
      நாங்களெம் மில்லிரு தொட்டிய கச்சங்கம்
      நானு மவனு மறிதும்
      தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
      சிறுகுயி லேதிரு மாலை
      ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
      அவனைநான் செய்வன காணே. 8
      553
      பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
      பாச தகப்பட்டி ருந்தேன்
      பொங்கொளி வண்டிரை கும்பொழில் வாழ்குயி
      லே.குறி கொண்டிது நீகேள்
      சங்கொடு சக்கர தான்வர கூவுதல்
      பொன்வளை கொண்டு தருதல்
      இங்குள்ள காவினில் வாழ கருதில்
      இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9
      554
      அன்றுல கம்மள தானை யுகந்தடி-
      மைக்கண வன்வலி செய்ய
      தென்றலு திங்களு மூடறு தென்னை
      நலியும் முறைமை யறியேன்
      என்றுமி காவி லிருந்திரு தென்னை
      தகர்த்தாதே நீயும் குயிலே
      இன்றுநா ராயண னைவர கூவாயேல்
      இங்குத்தை நின்றும் துரப்பன். 10
      555
      விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
      வேற்கண் மடந்தை விரும்பி
      கண்ணுற வென்கடல் வண்ணனை கூவு
      கருங்குயி லே. என்ற மாற்றம்
      பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
      பட்டர்பி ரான்கோதை சொன்ன
      நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-
      நாராய ணாயவென் பாரே. 2 11
      6வாரணமாயிரம்
      கலி விருத்தம்
      556
      வாரண மாயிரம் சூழவ லம்செய்து
      நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
      பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
      தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீநான். 2 1
      557
      நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
      பாளை கமுகு பரிசுடை பந்தற்கீழ்
      கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
      காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
      558
      இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
      வந்திரு தென்னைம கட்பேசி மந்திரித்து
      மந்திர கோடியு டுத்திம ணமாலை
      அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
      559
      நாற்றிசை தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
      பார்ப்பன சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
      பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
      காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
      560
      கதிரொளி தீபம் கலசமு டனேந்தி
      சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
      மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
      அதிர புகுத கனாக்கண்டேன் தோழீநான். 5
      561
      மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
      முத்துடை தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
      மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னை
      கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழீநான். 6
      562
      வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்
      பாசிலை நாணல் படுத்து பரிதிவைத்து
      காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
      தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
      563
      இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்
      நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
      செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
      அம்மி மிதி கனாக்கண்டேன் தோழீநான். 8
      564
      வரிசிலை வாள்முக தென்னைமார் தாம்வந்திட்டு
      எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
      அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
      பொரிமுக தட்ட கனாக்கண்டேன் தோழீநான். 9
      565
      குங்கும மப்பி குளிர்சாந்தம் மட்டித்து
      மங்கல வீதி வலம்செய்து மணநீர்
      அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்
      மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
      566
      ஆயனு காகத்தான் கண்ட கனாவினை
      வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
      தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
      வாயுநன் மக்களை பெற்று மகிழ்வரே. 2 11
      7 கருப்பூரம் நாறுமோ
      கலிவிருத்தம்
      567
      கருப்பூரம் நாறுமோ கமலப்பூ
      திருப்பவள செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
      மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
      விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 2 1
      568
      கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
      உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தல
      திடரில் குடியேறி தீய வசுரர்
      நடலை படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2
      569
      தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
      இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
      வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
      குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3
      570
      சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
      அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்
      மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
      இந்திரனு முன்னோடு செல்வத்து கேலானே. 4
      571
      உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை
      இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
      மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
      பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5
      572
      போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்
      சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறி குடிகொண்டு
      சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
      வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.
      573
      செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
      செங்க கருமேனி வாசுதே வனுடய
      அங்கை தலமேறி அன்ன வசஞ்செய்யும்
      சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7
      574
      உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்
      கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
      பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
      பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8
      575
      பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
      மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்
      பொதுவாக வுண்பதனை புக்குநீ யுண்டக்கால்
      சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9
      576
      பாஞ்சசன் னியத்தை பற்பநா பனோடும்
      வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
      ஏய்ந்தபுகழ பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
      ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. 2 10
      8 விண்ணீல மேலாப்பு
      தரவு கொச்ச கலிப்பா
      577
      விண்ணீல மேலாப்பு
      விரித்தாற்போல் மேகங்காள்
      தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
      திருமாலும் போந்தானே
      கண்ணீர்கள் முலைக்குவட்டில்
      துளிசோர சோர்வேனை
      பெண்ணீர்மை யீடழிக்கும்
      இதுதமக்கோர் பெருமையே 2 1
      578
      மாமுத்த நிதிசொரியும்
      மாமுகில்காள் வேங்கடத்து
      சாமத்தின் நிறங்கொண்ட
      தாடாளன் வார்த்தையென்னே
      காமத்தீ யுள்புகுந்து
      கதுவப்பட்டு இடைக்கங்குல்
      ஏமத்தோர் தென்றலுக்கிங்-
      கிலக்காய்நா னிருப்பேனே. 2
      579
      ஒளிவண்ணம் வளைசிந்தை
      உறக்கத்தோ டிவையெல்லாம்
      எளிமையா லிட்டென்னை
      ஈடழி போயினவால்
      குளிரருவி வேங்கடத்தென்
      கோவிந்தன் குணம்பாடி
      அளியத்த மேகங்காள்.
      ஆவிகா திருப்பேனே. 3
      580
      மின்னாக தெழுகின்ற
      மேகங்காள் வேங்கடத்து
      தன்னாக திருமங்கை
      தங்கியசீர் மார்வற்கு
      என்னாக திளங்கொங்கை
      விரும்பித்தாம் நாடோ றும்
      பொன்னாகம் புல்குதற்கென்
      புரிவுடைமை செப்புமினே. 4
      581
      வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
      மாமுகில்காள் வேங்கடத்து
      தேன்கொண்ட மலர்ச்சிதற
      திரண்டேறி பொழிவீர்காள்
      ஊன்கொண்ட வள்ளுகிரால்
      இரணியனை யுடலிடந்தான்
      தான்கொண்ட சரிவளைகள்
      தருமாகில் சாற்றுமினே. 5
      582
      சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
      தண்முகில்காள் மாவலியை
      நிலங்கொண்டான் வேங்கடத்தே
      நிரந்தேறி பொழிவீர்காள்
      உலங்குண்ட விளங்கனிபோல்
      உள்மெலி புகுந்துஎன்னை
      நலங்கொண்ட நாரணற்கென்
      நடலைநோய் செப்புமினே. 6
      583
      சங்கமா கடல்கடைந்தான்
      தண்முகில்காள் வேங்கடத்து
      செங்கண்மால் சேவடிக்கீழ்
      அடிவீழ்ச்சி விண்ணப்பம்
      கொங்கைமேல் குங்குமத்தின்
      குழம்பழி புகுந்துஒருநாள்
      தங்குமே லென்னாவி
      தங்குமென் றுரயீரே. 2 7
      584
      கார்கால தெழுகின்ற
      கார்முகில்காள் வேங்கடத்து
      போர்கால தெழுந்தருளி
      பொருதவனார் பேர்சொல்லி
      நீர்கால தெருக்கிலம்
      பழவிலைபோல் வீழ்வேனை
      வார்கால தொருநாள்தம்
      வாசகம்த தருளாரே. 8
      585
      மதயானை போலெழுந்த
      மாமுகில்காள் வேங்கடத்தை
      பதியாக வாழ்வீர்காள்.
      பாம்பணையான் வார்த்தையென்னே
      கதியென்றும் தானாவான்
      கருதாதுஓர் பெண்கொடியை
      வதைசெய்தான். என்னும்சொல்
      வையகத்தார் மதியாரே. 2 9
      586
      நாகத்தி னணையானை
      நன்னுதலாள் நயந்துரைசெய்
      மேகத்தை வேங்கடக்கோன்
      விடுதூதில் விண்ணப்பம்
      போகத்தில் வழுவாத
      புதுவையர்கோன் கோதைதமிழ்
      ஆகத்து வைத்துரைப்பார்
      அவரடியா ராகுவரே. 2 10
      9 சிந்தூர செம்பொடி
      கலிநிலைத்துறை
      587
      சிந்துர செம்பொடிப்போல்
      திருமாலிருஞ் சோலையெங்கும்
      இந்திர கோபங்களே
      எழுந்தும்பர திட்டனவால்
      மந்தரம் நாட்டியன்று
      மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
      சுந்தர தோளுடையான்
      சுழலையினின் றுய்துங்கொலோ. 2 1
      588
      போர்களி றுபொரும்மா
      லிருஞ்சோலையம் பூம்புறவில்
      தார்க்கொடி முல்லைகளும்
      தவளநகை காட்டுகின்ற
      கார்க்கொள் படாக்கள்நின்று
      கழறிச்சிரி கத்தரியேன்
      ஆர்க்கிடு கோதோழி.
      அவன்தார்ச்செய்த பூசலையே. 2
      589
      கருவிளை யொண்மலர்காள்.
      காயாமலர் காள்திருமால்
      உருவொளி காட்டுகின்றீர்
      எனக்குய்வழ கொன்றுரையீர்
      திருவிளை யாடுதிண்டோ ள்
      திருமாலிருஞ் சோலைநம்பி
      வரிவளை யில்புகுந்து
      வந்திபற்றும் வழ்க்குளதே. 3
      590
      பைம்பொழில் வாழ்குயில்காள்.
      மயில்காள்.ஒண் கருவிளைகாள்
      வம்ப களங்கனிகாள்.
      வண்ணப்பூவை நறுமலர்காள்
      ஐம்பெரும் பாதகர்காள்.
      அணிமாலிருஞ் சோலைநின்ற
      எம்பெரு மானுடைய
      நிறமுங்களு கெஞ்செய்வதே 4
      591
      துங்க மலர்ப்பொழில்சூழ்
      திருமாலிருஞ் சோலைநின்ற
      செங்க கருமுகிலின்
      திருவுரு போல்மலர்மேல்
      தொங்கிய வண்டினங்காள்.
      தொகுபூஞ்சுனை காள்சுனையில்
      தங்குசெ தாமரைகாள்.
      எனக்கோர்சரண் சாற்றுமினே. 5
      592
      நாறு நறும்பொழில்மா
      லிருஞ்சோலை நம்பிக்கு நான்
      நூறு தடாவில்வெண்ணெய்
      வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
      நூறு தடாநிறைந்த
      அக்கார வடிசில்சொன்னேன்
      ஏறு திருவுடையான்
      இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. 2 6
      593
      இன்றுவ தித்தனையும்
      அமுதுசெய் திடப்பெறில்நான்
      ஒன்று நூறாயிரமா
      கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
      தென்றல் மணங்கமழும்
      திருமாலிருஞ் சோலைதன்னுள்
      நின்ற பிரான்அடியேன்
      மனத்தேவந்து நேர்படிலே. 7
      594
      காலை யெழுந்திருந்து
      கரியகுரு விக்கணங்கள்
      மாலின் வரவுசொல்லி
      மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
      சோலை மலைப்பெருமான்
      துவராபதி யெம்பெருமான்
      ஆலி னிலைப்பெருமான்
      அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8
      595
      கோங்கல ரும்பொழில்மா-
      லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
      தூங்குபொன் மாலைகளோ-
      டுடனாய்நின்று தூங்குகின்றேன்
      பூங்கொள் திருமுகத்து
      மடுத்தூதிய சங்கொலியும்
      சார்ங்கவில் நாணொலியும்
      தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9
      596
      சந்தொடு காரகிலும்
      சுமந்துதடங் கள்பொருது
      வந்திழி யும்சிலம்பா-
      றுடைமாலிருஞ் சோலைநின்ற
      சுந்தரனை சுரும்பார்
      குழல்கோதை தொகுத்துரைத்த
      செந்தமிழ் பத்தும்வல்லார்
      திருமாலடி சேர்வர்களே. 2 10
      10 கார்க்கோடல் பூக்காள் .
      கலிநிலைத்துறை
      597
      கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல்
      வண்ணனென் மேல்உம்மை
      போர்க்கோலம் செய்து போர
      விடுத்தவ னெங்குற்றான்
      ஆர்க்கோ இனிநாம் பூச
      லிடுவது அணிதுழா
      தார்க்கோடும் நெஞ்ச தன்னை
      படைக்கவல் லேனந்தோ. 2 1
      598
      மேற்றோன்றி பூக்காள் மேலுல
      கங்களின் மீதுபோய்
      மேற்றோன்றும் சோதி வேத
      முதல்வர் வலங்கையில்
      மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
      போல சுடாதுஎம்மை
      மாற்றோலை பட்டவர் கூட்டத்து
      வைத்துகொள் கிற்றிரே. 2
      599
      கோவை மணாட்டி. நீயுன்
      கொழுங்கனி கொண்டுஎம்மை
      ஆவி தொலைவியேல் வாயழ-
      கர்தம்மை யஞ்சுதும்
      பாவி யேன்தோன்றி பாம்பணை-
      யார்க்கும்தம் பாம்புபோல்
      நாவு மிரண்டுள வாய்த்து
      நாணிலி யேனுக்கே. 3
      600
      முல்லை பிராட்டி.நீயுன்
      முறுவல்கள் கொண்டுஎம்மை
      அல்லல் விளைவியே லாழிநங்
      காய்.உன்ன டைக்கலம்
      கொல்லை யரக்கியை மூக்கரி
      திட்ட குமரனார்
      சொல்லும் பொய்யானால் நானும்
      பிறந்தமை பொய்யன்றே. 4
      601
      பாடும் குயில்காள். ஈதென்ன
      பாடல்நல் வேங்கட
      நாடர் நமக்கொரு வாழ்வுத
      தால்வந்து பாடுமின்
      ஆடும் கருள கொடியுடை
      யார்வ தருள்செய்து
      கூடுவ ராயிடில் கூவிநும்
      பாட்டுகள் கேட்டுமே. 5
      602
      கணமா மயில்காள். கண்ணபி
      ரான்திரு கோலம்போன்று
      அணிமா நடம்பயின் றாடுகின்
      றீர்க்கடி வீழ்கின்றேன்
      பணமா டரவணை பற்பல
      காலமும் பள்ளிகொள்
      மணவாளர் நம்மை வைத்த
      பரிசிது காண்மினே. 6
      603
      நடமாடி தோகை விரிக்கின்ற
      மாமயில் காள்உம்மை
      நடமாட்டங் காண பாவியேன்
      நானோர் முதலிலேன்
      குடமாடு கூத்தன் கோவிந்தன்
      கோமிறை செய்துஎம்மை
      உடைமாடு கொண்டா னுங்களு
      கினியொன்று போதுமே 7
      604
      மழையே.
      பூசியுள் ளாய்நின்ற
      மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்
      வேங்கட துள்நின்ற
      அழக பிரானார் தம்மையென்
      நெஞ்ச தகப்பட
      தழுவநின்று என்னை ததர்த்திக்கொண்
      டூற்றவும் வல்லையே 8
      605
      கடலே.
      கடைந்து கலக்குறுத்து
      உடலுள் புகுந்துநின் றூறல்
      அறுத்தவற்கு என்னையும்
      உடலுள் புகுந்துநின் றூறல்
      அறுக்கின்ற மாயற்குஎன்
      நடலைக ளெல்லாம் நாகணை
      கேசென்று ரைத்தியே. 9
      606
      நல்லஎன் தோழி. நாக
      ணைமிசை நம்பரர்
      செல்வர் பெரியர் சிறுமா
      னிடவர்நாம் செய்வதென்
      வில்லி புதுவை விட்டுசி
      தர்தங்கள் தேவரை
      வல்ல பரிசு வருவிப்ப
      ரேலது காண்டுமே. 2 10
      11 தாமுகக்கும்
      தரவு சொச்ச கலிப்பா
      607
      தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
      யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
      தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
      ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. 2
      608
      எழிலுடைய வம்மனைமீர். என்னரங்க தின்னமுதர்
      குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
      எழுகமல பூவழக ரெம்மானார் என்னுடைய
      கழல்வளையை தாமும் கழல்வளையே யாக்கினரே. 2
      609
      பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
      அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
      செங்கோ லுடைய திருவரங்க செல்வனார்
      எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. 2 3
      610
      மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
      பச்சை பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
      பிச்சை குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
      இச்சை யுடையரே லித்தெருவே போதாரே 4
      611
      பொல்லா குறளுருவா பொற்கையில் நீரேற்று
      எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
      நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
      இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5
      612
      கைப்பொருள்கள் முன்னமே
      கைக்கொண்டார் காவிரிநீர்
      செய்ப்புரள வோடும்
      திருவரங்க செல்வனார்
      எப்பொருட்கும் நின்றார்க்கு
      மெய்தாது நான்மறையின்
      சொற்பொருளாய் நின்றாரென்
      மெய்ப்பொருளும் கொண்டாரே. 6
      613
      உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
      பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
      திண்ணார் மதிள்சூழ் திருவரங்க செல்வனார்
      எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7
      614
      பாசிதூர துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
      மாசுடம்பில் நீர்வார மானமிலா பன்றியாம்
      தேசுடைய தேவர் திருவரங்க செல்வனார்
      பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. 2 8
      615
      கண்ணாலங் கோடித்து கன்னிதன்னை கைப்பிடிப்பான்
      திண்ணார திருந்த சிசுபாலன் தேசழிந்து
      அண்ணா திருக்கவே யாங்கவளை கைப்பிடித்த
      பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9
      616
      செம்மை யுடைய
      திருவரங்கர் தாம்பணித்த
      மெய்ம்மை பெருவார்த்தை
      விட்டுசித்தர் கேட்டிருப்பர்
      தம்மை யுகப்பாரை
      தாமுகப்ப ரென்னும்சொல்
      தம்மிடையே பொய்யானால்
      சாதிப்பா ராரினியே . 2 10
      12 மற்றிருந்தீர்
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      617
      மற்றிரு தீர்க கறியலாகா
      மாதவ னென்பதோ ரன்புதன்னை
      உற்றிரு தேனு குரைப்பதெல்லாம்
      ஊமைய ரோடு செவிடர்வார்த்தை
      பெற்றிரு தாளை யொழியவேபோ
      பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
      மற்பொரு தாமற் களமடைந்த
      மதுரை புறத்தென்னை யுய்த்திடுமின். 2 1
      618
      நாணி யினியோர் கருமமில்லை
      நாலய லாரும் அறிந்தொழிந்தார்
      பாணியா தென்னை மருந்து செய்து
      பண்டுபண் டாக்க வுறுதிராகில்
      மாணி யுருவா யுலகளந்த
      மாயனை காணில் தலைமறியும்
      ஆணையால் நீரென்னை காக்கவேண்டில்
      ஆய்ப்பாடி கேயென்னை யுய்த்திடுமின். 2
      619
      தந்தையும் தாயுமுற் றாரும்நிற்க
      தனிவழி போயினாள். என்னும்சொல்லு
      வந்தபின் னைப்பழி காப்பரிது
      மாயவன் வந்துரு காட்டுகின்றான்
      கொந்தள மாக்கி பரக்கழித்து
      குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
      நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
      நள்ளிரு கணென்னை யுய்த்திடுமின். 3
      620
      அங்கை தலத்திடை யாழிகொண்டான்
      அவன்முக தன்றி விழியேனென்று
      செங்கச்சு கொண்டுகண் ணாடையார்த்து
      சிறுமா னிடவரை காணில்நாணும்
      கொங்கை தலமிவை நோக்கிக்காணீர்
      கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா
      இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
      யமுனை கரைக்கென்னை யுய்த்திடுமின். 4
      621
      ஆர்க்குமென் நோயி தறியலாகா
      தம்மனை மீர்.துழ திப்படாதே
      கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
      கைகண்ட யோகம் தடவத்தீரும்
      நீர்க்கரை நின்ற கடம்பையேறி
      காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
      போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
      பொய்கை கரைக்கென்னை யுய்த்திடுமின். 5
      622
      கார்த்தண் முகிலும் கருவிளையும்
      காயா மலரும் கமலப்பூவும்
      ஈர்த்திடு கின்றன வென்னைவந்தி
      டிருடீகே சன்பக்கல் போகேயென்று
      வேர்த்து பசித்து வயிறசைந்து
      வேண்டடி சிலுண்ணும் போதுஈதென்று
      பார்த்திரு துநெடு நோக்குக்கொள்ளும்
      பத்தவி லோசந துய்த்திடுமின். 6
      623
      வண்ணம் திரிவும் மனங்குழைவும்
      மானமி லாமையும் வாய்வெளுப்பும்
      உண்ண லுறாமையு முள்மெலிவும்
      ஓதநீர் வண்ணனென் பானொருவன்
      தண்ண துழாயென்னும் மாலைகொண்டு
      சூட்ட தணியும் பிலம்பன்றன்னை
      பண்ணழி யப்பல தேவன்வென்ற
      பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7
      624
      கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
      காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
      பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
      பாவிகாள். உங்களு கேச்சுக்கொலோ
      கற்றன பேசி வசையுணாதே
      காலிக ளுய்ய மழைதடுத்து
      கொற்ற குடையாக வேந்திநின்ற
      கோவர தனத்தென்னை யுய்த்திடுமின். 8
      625
      கூட்டி லிருந்து கிளியெப்போதும்
      கோவிந்தா.
      ஊட்டு கொடாது செறுப்பனாகில்
      உலகள தான். என் றுயரக்கூவும்
      நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
      நன்மை யிழந்து தலையிடாதே
      சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
      துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9
      626
      மன்னு மதுரை தொடக்கமாக
      வண்துவ ராபதி தன்னளவும்
      தன்னை தமருய்த்து பெய்யவேண்டி
      தாழ்குழ லாள்துணி ததுணிவை
      பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
      புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
      இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
      ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. 2 10
      13 கண்ணனென்னும்
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      627
      கண்ண னென்னும் கருந்தெய்வம்
      காட்சி பழகி கிடப்பேனை
      புண்ணில் புளிப்பெய் தாற்போல
      புறநின் றழகு பேசாதே
      பெண்ணின் வருத்த மறியாத
      பெருமா னரையில் பீதக
      வண்ண ஆடை கொண்டுஎன்னை
      வாட்டம் தணிய வீசீரே. 2 1
      628
      பாலா லிலையில் துயில்கொண்ட
      பரமன் வலைப்ப டிருந்தேனை
      வேலால் துன்னம் பெய்தாற்போல்
      வேண்டிற் றெல்லாம் பேசாதே
      கோலால் நிரைமே தாயனா
      குடந்தை கிடந்த குடமாடி
      நீலார் தண்ண துழாய்கொண்டென்
      நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2
      629
      கஞ்சை காய்ந்த கருவல்லி
      கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
      நெஞ்சூ டுருவ வேவுண்டு
      நிலையும் தளர்ந்து நைவேனை
      அஞ்சே லென்னா னவனொருவன்
      அவன்மார் வணிந்த வனமாலை
      வஞ்சி யாதே தருமாகில்
      மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3
      630
      ஆரே யுலக தாற்றுவார்
      ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
      காரே றுழக்க வுழக்குண்டு
      தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
      ஆரா வமுத மனையான்றன்
      அமுத வாயி லூறிய
      நீர்தான் கொணர்ந்து புலராமே
      பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4
      631
      அழிலும் தொழிலு முருக்காட்டான்
      அஞ்சே லென்னா னவனொருவன்
      தழுவி முழுகி புகுந்தென்னை
      சுற்றி சுழன்று போகானால்
      தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
      நெடுமா லூதி வருகின்ற
      குழலின் தொளைவாய் நீர்கொண்டு
      குளிர முகத்து தடவீரே. 5
      632
      நடையொன் றில்லா வுலகத்து
      நந்த கோபன் மகனென்னும்
      கொடிய கடிய திருமாலால்
      குளப்பு கூறு கொளப்பட்டு
      புடையும் பெயர கில்லேன்நான்
      போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
      பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
      போகா வுயிரென் னுடம்பையே. 6
      633
      வெற்றி கருள கொடியான்றன்
      மீமீ தாடா வுலகத்து
      வெற்ற வெறிதே பெற்றதாய்
      வேம்பே யாக வளர்த்தாளே
      குற்ற மற்ற முலைதன்னை
      குமரன் கோல பணைத்தோளோடு
      அற்ற குற்ற மவைதீர
      அணைய வமுக்கி கட்டீரே. 7
      634
      உள்ளே யுருகி நைவேனை
      உளளோ இலளோ வென்னாத
      கொள்ளை கொள்ளி குறும்பனை
      கோவர தனனை கண்டக்கால்
      கொள்ளும் பயனொன் றில்லாத
      கொங்கை தன்னை கிழங்கோடும்
      அள்ளி பறித்தி டவன்மார்வில்
      எறிந்தென் அழலை தீர்வேனே. 8
      635
      கொம்மை முலைக ளிடர்தீர
      கோவி தற்கோர் குற்றேவல்
      இம்மை பிறவி செய்யாதே
      இனிப்போ செய்யும் தவந்தானென்
      செம்மை யுடைய திருமார்வில்
      சேர்த்தா னேலும் ஒருஞான்று
      மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
      விடைதான் தருமேல் மிகநன்றே. 9
      636
      அல்லல் விளைத்த பெருமானை
      ஆயர் பாடி கணிவிளக்கை
      வில்லி புதுவை நகர்நம்பி
      விட்டு சித்தன் வியன்கோதை
      வில்லை தொலைத்த புருவத்தாள்
      வேட்கை யுற்று மிகவிரும்பும்
      சொல்லை துதிக்க வல்லார்கள்
      துன்ப கடளுள் துவளாரே. 2 10
      14 பட்டி மேய்ந்து
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      637
      பட்டி மேய்ந்தோர் காரேறு
      பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
      இட்டீ றிட்டு விளையாடி
      இங்கே போத கண்டீரே-
      இட்ட மான பசுக்களை
      இனிது மறித்து நீரூட்டி
      விட்டு கொண்டு விளையாட
      விருந்தா வனத்தே கண்டோ மே. 2 1
      638
      அனுங்க வென்னை பிரிவுசெய்
      தாயர் பாடி கவர்ந்துண்ணும்
      குணுங்கு நாறி குட்டேற்றை
      கோவர தனனை கண்டீரே-
      கணங்க ளோடு மின்மேகம்
      கலந்தாற் போல வனமாலை
      மினுங்க நின்று விளையாட
      விருந்தா வனத்தே கண்டோ மே. 2
      639
      மாலா பிரந்த நம்பியை
      மாலே செய்யும் மணாளனை
      ஏலா பொய்க ளுரைப்பானை
      இங்கே போத கண்டீரே-
      மேலால் பரந்த வெயில்காப்பான்
      வினதை சிறுவன் சிறகென்னும்
      மேலா பின்கீழ் வருவானை
      விருந்தா வனத்தே கண்டோ மே. 3
      640
      கார்த்தண் கமல கண்ணென்னும்
      நெடுங்கயி றுபடு திஎன்னை
      ஈர்த்து கொண்டு விளையாடும்
      ஈசன் றன்னை கண்டீரே-
      போர்த்த முத்தின் குப்பா
      புகர்மால் யானை கன்றேபோல்
      வேர்த்து நின்று விளையாட
      விருந்தா வனத்தே கண்டோ மே. 4
      641
      மாத வன்என் மணியினை
      வலையில் பிழைத்த பன்றிபோல்
      ஏது மொன்றும் கொளத்தாரா
      ஈசன் றன்னை கண்டீரே-
      பீதக வாடை யுடைதாழ
      பெருங்கார் மே கன்றேபோல்
      வீதி யார வருவானை
      விருந்தா வனத்தே கண்டோ மே. 2 5
      642
      தரும மறியா குறும்பனை
      தங்கை சார்ங்க மதுவேபோல்
      புருவ வட்ட மழகிய
      பொருத்த மிலியை கண்டீரே-
      உருவு கரிதாய் முகம்செய்தாய்
      உத பருப்ப தத்தின்மேல்
      விரியும் கதிரே போல்வானை
      விருந்தா வனத்தே கண்டோ மே. 6
      643
      பொருத்த முடைய நம்பியை
      புறம்போ லுள்ளும் கரியானை
      கருத்தை பிழைத்து நின்றஅ
      கருமா முகிலை கண்டீரே-
      அருத்தி தாரா கணங்களால்
      ஆர பெருகு வானம்போல்
      விருத்தம் பெரிதாய் வருவானை
      விருந்தா வனத்தே கண்டோ மே. 7
      644
      வெளிய சங்கொன் றுடையானை
      பீதக வாடை யுடையானை
      அளிநன் குடைய திருமாலை
      ஆழி யானை கண்டீரே-
      களிவண் டெங்கும் கலந்தாற்போல்
      கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
      மிளிர நின்று விளையாட
      விருந்தா வனத்தே கண்டோ மே. 8
      645
      நாட்டை படையென்று அயன்முதலா
      தந்த நளிர்மா மலருந்தி
      வீட்டை பண்ணி விளையாடும்
      விமலன் றன்னை கண்டீரே-
      காட்டை நாடி தேனுகனும்
      களிறும் புள்ளு முடன்மடிய
      வேட்டை யாடி வருவானை
      விருந்தா வனத்தே கண்டோ மே. 9
      646
      பருந்தா களிற்று கருள்செய்த
      பரமன் றன்னை பாரின்மேல்
      விருந்தா வனத்தே கண்டமை
      விட்டு சித்தன் கோதைசொல்
      மருந்தா மென்று தம்மனத்தே
      வைத்து கொண்டு வாழ்வார்கள்
      பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ
      பிரியா தென்று மிருப்பாரே. 2 10
      ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமாநுஜாய நம
      பெருமாள் திருமொழி தனியன்கள்
      உடயவர் அருளி செய்தது
      நேரிசை வெண்பா
      இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
      தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
      சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
      குலசே கரனென்றே கூறு
      மணக்கால் நம்பி அருளியது
      கட்டளை கலித்துறை
      ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
      வாரங் கொடுகுட பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
      வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
      சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே
      குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி
      எண்சீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      647
      இருளிரி சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
      இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
      அரவரச பெருஞ்சோதி யனந்த னென்னும்
      அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
      திருவரங்க பெருநகருள் தெண்ணீர பொன்னி
      திரைக்கையா லடிவருட பள்ளி கொள்ளும்
      கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
      கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே 2 1.1
      648
      வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த
      வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
      வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்
      மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
      காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலை
      கடியரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்
      வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 1.2
      649
      எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்
      எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
      எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்
      தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
      அம்மான்றன் மலர்க்கமல கொப்பூழ் தோன்ற
      அணியரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்
      கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே 1.3
      650
      மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை
      வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
      ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை
      அமரர்கள்த தலைவனைஅ தமிழி னின
      பாவினைஅவ் வடமொழியை பற்றற் றார்கள்
      பயிலரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்
      கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே 1.4
      651
      இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்ப
      தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
      துணியில்லா தொன்மறைநூல் தோத்தி ரத்தால்
      தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
      மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ
      மதிளரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      மணிவண்ண னம்மானை கண்டு கொண்டென்
      மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே 1.5
      652
      அளிமலர்மே லயனரனி திரனோடு ஏனை
      அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
      தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தி
      திசைதிசையில் மலர்தூவி சென்று சேரும்
      களிமலர்சேர் பொழிலரங்க துரக மேறி
      கண்வளரும் கடல்வண்ணர் கமல கண்ணும்
      ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்
      உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே 1.6
      653
      மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி
      ஐம்புலன்க ளடக்கியிடர பார துன்பம்
      துறந்துஇருமு பொழுதேத்தி யெல்லை யில்லா
      தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
      அறம்திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி
      அணியரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      நிறம்திகழும் மாயோனை கண்டென் கண்கள்
      நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே 1.7
      654
      கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
      கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
      காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றி
      கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
      சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
      திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      மாலோனை கண்டின்ப கலவி யெய்தி
      வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே 1.8
      655
      தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
      குழாம்குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி
      ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்
      மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
      சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்
      திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      போராழி யம்மானை கண்டு துள்ளி
      பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே 1.9
      656
      வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய
      மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
      துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லா
      சுகம்வளர அகமகிழு தொண்டர் வாழ
      அன்பொடுதென் திசைநோக்கி பள்ளி கொள்ளும்
      அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
      இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
      இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே 2 1.10
      657
      திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டு
      திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
      கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னை
      கண்ணார கண்டுகக்கும் காதல் தன்னால்
      குடைவிளங்கு விறல்தானை கொற்ற வொள்வாள்
      கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த
      நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 2 1.11
      சந்த கலி விருத்தம்
      658
      தேட்டரும்திறல் தேனினைத்தென்
      னரங்கனைத்திரு மாதுவாழ்
      வாட்டமில்வன மாலைமார்வனை
      வாழ்த்திமால்கொள்சி தையராய்
      ஆட்டமேவி யலந்தழைத்தயர்
      வெய்தும்மெய்யடி யார்கள்தம்
      ஈட்டம்கண்டிட கூடுமேலது
      காணும்கண்பய னாவதே 2 2.1
      659
      தோடுலாமலர் மங்கைதோளிணை
      தேய்ந்ததும்சுடர் வாளியால்
      நீடுமாமரம் செற்றதும்நிரை
      மேய்த்துமிவை யேநினைந்து
      ஆடிப்பாடி அரங்கவோஎன்ற
      ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
      ஆடனாம்பெறில் கங்கைநீர்குடை
      தாடும்வேட்கையென் னாவதே 2.2
      660
      ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம்
      கீண்டதும்முன்னி ராமனாய்
      மாறடர்த்ததும் மண்ணளந்ததும்
      சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
      ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட
      ரங்கன்கோயில் திருமுற்றம்
      சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ்
      சேறெஞ்சென்னி கணிவனே 2.3
      661
      தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
      உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
      ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
      ரங்கனுக்கடி யார்களாய்
      நாத்தழும்பெழ நாரணாவென்ற
      ழைத்துமெய்தழும் பத்தொழு
      தேத்திஇன்புறும் தொண்டர்சேவடி
      ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4
      662
      பொய்சிலைக்குர லேற்றெருத்தமி
      றுத்துபோரர வீர்த்தகோன்
      செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண
      மாமதிள்தென்ன ரங்கனாம்
      மெய்சிலைக்கரு மேகமொன்றுதம்
      நெஞ்சில்நின்று திகழப்போய்
      மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினை
      தென்மனம்மெய்சி லிர்க்குமே 2.5
      663
      ஆதியந்தம னந்தமற்புதம்
      ஆனவானவர் தம்பிரான்
      பாதமாமலர் சூடும்பத்தியி
      லாதபாவிக ளுய்ந்திட
      தீதில்நன்னெரி காட்டியெங்கும்
      திரிந்தரங்கனெம் மானுக்கே
      காதல்செய்தொண்டர கெப்பிறப்பிலும்
      காதல்செய்யுமென் னெஞ்சமே 2.6
      664
      காரினம்புரை மேனிநல்கதிர்
      முத்தவெண்ணகை செய்யவாய்
      ஆரமார்வ னரங்கனென்னும்
      அரும்பெருஞ்சுட ரொன்றினை
      சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக
      சிந்திழிந்தகண் ணீர்களால்
      வாரநிற்பவர் தாளிணைக்கொரு
      வாரமாகுமென் னெஞ்சமே 2.7
      665
      மாலையுற்றக டல்கிடந்தவன்
      வண்டுகிண்டுந றுந்துழாய்
      மாலையுற்றவ ரைப்பெருந்திரு
      மார்வனைமலர கண்ணனை
      மாலையுற்றெழு தடிப்பாடித்தி
      ரிந்தரங்கனெம் மானுக்கே
      மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு
      மாலையுற்றதென் நெஞ்சமே 2.8
      666
      மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி
      லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
      எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழு
      தாடிப்பாடியி றைஞ்சிஎன்
      அத்தனச்ச னரங்கனுக்கடி
      யார்களாகி அவனுக்கே
      பித்தராமவர் பித்தரல்லர்கள்
      மற்றையார்முற்றும் பித்தரே 2.9
      667
      அல்லிமாமலர் மங்கைநாதன்
      அரங்கன்மெய்யடி யார்கள்தம்
      எல்லையிலடி மைத்திறத்தினில்
      என்றுமேவு மனத்தனாம்
      கொல்லிகாவலன் கூடல்நாயகன்
      கோழிக்கோன்குல சேகரன்
      சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்
      தொண்டர்தொண்டர்க ளாவரே 2 2.10
      கலி விருத்தம்
      668
      மெய்யில் வாழ்க்கையை மெய்யென கொள்ளும்இவ்
      வை தன்னொடும் கூடுவ தில்லையான்
      ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
      மையல் கொண்டாழி தேனென்றன் மாலுக்கே 2 3.1
      669
      நூலி னேரிடை யார்திற தேநிற்கும்
      ஞால தன்னொடும் கூடுவ தில்லையான்
      ஆலியா அழையா அரங்கா வென்று
      மாலெ ழுந்தொழி தேனென்றன் மாலுக்கே 3.2
      670
      மார னார்வரி வெஞ்சிலை காட்செய்யும்
      பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
      ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
      நார ணன்நர காந்தகன் பித்தனே 3.3
      671
      உண்டி யேயுடை யேயுக தோடும்இம்
      மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
      அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
      உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே 3.4
      672
      தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
      நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
      ஆதி ஆய னரங்கன்அ தாமரை
      பேதை மாமண வாளன்றன் பித்தனே 3.5
      673
      எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
      உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
      தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்
      எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே 3.6
      674
      எத்தி றத்திலும் யாரொடும் கூடும்அ
      சித்த தன்னை தவிர்த்தனன் செங்கண்மால்
      அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
      பித்த னாயொழி தேனெம்பி ரானுக்கே 3.7
      675
      பேய ரேயென கியாவரும் யானுமோர்
      பேய னேயெவர கும்இது பேசியென்
      ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
      பேய னாயொழி தேனெம்பி ரானுக்கே 3.8
      676
      அங்கை யாழி யரங்க னடியிணை
      தங்கு சிந்தை தனிப்பெரும் பித்தனாய்
      கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
      இங்கு வல்லவர கேதமொன் றில்லையே 2 3.9
      தாவு கொச்ச கலிப்பா
      677
      ஊனேறு செல்வ துடற்பிறவி யான்வேண்டேன்
      ஆனேறேழ் வென்றா னடிமை திறமல்லால்
      கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
      கோனேரி வாழும் குருகா பிறப்பேனே 2 4.1
      678
      ஆனாத செல்வ தரம்பையர்கள் தற்குழ
      வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
      தேனார்பூஞ் சோலை திருவேங்க டச்சுனையில்
      மீனா பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2
      679
      பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்
      துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
      மின்வட்ட சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
      பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே 4.3
      680
      ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
      கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
      பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
      செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே 4.4
      681
      கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
      இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
      எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
      தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே 4.5
      682
      மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
      அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
      தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
      அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே 4.6
      683
      வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
      கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
      தேனார்பூஞ் சோலை திருவேங் கடமலைமேல்
      கானாறா பாயும் கருத்துடையே னாவேனே 4.7
      684
      பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
      முறையாய பெருவேள்வி குறைமுடிப்பான் மறையானான்
      வெறியார்தண் சோலை திருவேங் கடமலைமேல்
      நெறியா கிடக்கும் நிலையுடையே னாவேனே 4.8
      685
      செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
      நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
      அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
      படியா கிடந்துன் பவளவாய் காண்பேனே 2 4.9
      686
      உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
      அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
      செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
      எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10
      687
      மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
      பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
      கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
      பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே 2 4.11
      தரவு கொச்ச கலிப்பா
      688
      தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
      விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோ டம்மானே
      அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
      அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே 2 5.1
      689
      கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்
      கொண்டானை யல்லா லறியா குலமகள்போல்
      விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோ டம்மாநீ
      கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே 5.2
      690
      மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோ டம்மாஎன்
      பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
      தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
      கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே 5.3
      691
      வாளா லறுத்து சுடினும் மருத்துவன்பால்
      மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
      மீளா துயர்தரினும் விற்றுவக்கோ டம்மாநீ
      ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4
      692
      வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோ டம்மானே
      எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
      எங்கும்போ கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
      வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே 5.5
      693
      செந்தழலே வந்தழலை செய்திடினும் செங்கமலம்
      அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
      வெந்துயர்வீ டாவிடினும் விற்றுவக்கோ டம்மாஉன்
      அந்தமில்சீர கல்லா லகங்குழைய மாட்டேனே 5.6
      694
      எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
      மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
      மெய்த்துயர்வீ டாவிடினும் விற்றுவக்கோ டம்மாஎன்
      சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே 5.7
      695
      தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
      புக்கன்றி புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
      மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோ டம்மாஉன்
      புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே 5.8
      696
      நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
      தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
      மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோ டம்மானே
      நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே 5.9
      697
      விற்றுவக்கோ டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
      மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனை தாள்நயந்த
      கொற்றவேல் தானை குலசே கரஞ்சொன்ன
      நற்றமிழ்ப தும்வல்லார் நண்ணார் நரகமே 2 5.10
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      698
      ஏர்மலர பூங்குழ லாயர்மாதர்
      எனைப்பல் ருள்ளவிவ் வூரில்உன்றன்
      மார்வு தழுவுதற் காசையின்மை
      அறிந்தறி தேயுன்றன் பொய்யைக்கேட்டு
      கூர்மழை போல்பனி கூதலெய்தி
      கூசி நடுங்கி யமுனையாற்றில்
      வார்மணற் குன்றில் புலரநின்றேன்
      வாசுதே வாஉன் வரவுபார்த்தே 2 6.1
      699
      கொண்டையொண் கண்மட வாளொருத்தி
      கீழை யகத்து தயிர்கடை
      கண்டுஒல்லை நானும் கடைவனென்று
      கள்ள விழிவிழி துப்புக்கு
      வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
      வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
      தண்டயிர் நீகடை திட்டவண்ணம்
      தாமோத ராமெய் யறிவன்நானே 6.2
      700
      கருமலர கூந்த லொருத்திதன்னை
      கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
      மருவி மனம்வைத்து மற்றொருத்தி
      குரைத்தொரு பேதைக்கு பொய்குறித்து
      புரிகுழல் மங்கை யொருத்திதன்னை
      புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
      மருதிறு தாய்உன் வளர்த்தியூடே
      வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே 6.3
      701
      தாய்முலை பாலி லமுதிருக்க
      தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
      பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு
      பித்தனென் றேபிற ரேசநின்றாய்
      ஆய்மிகு காதலோடு யானிருப்ப
      யான்விட வந்தவென் தூதியோடே
      நீமிகு போகத்தை நன்குகந்தாய்
      அதுவுமுன் கோரம்பு கேற்குமன்றே 6.4
      702
      மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு
      வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
      பொன்னொத்த வாடைகு கூடலிட்டு
      போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
      கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டு
      கைவிளி கின்றதும் கண்டேநின்றேன்
      என்னு கவளைவி டிங்குவந்தாய்
      இன்னமங் கேநட நம்பிநீயே 6.5
      703
      மற்பொரு தோளுடை வாசுதேவா
      வல்வினை யேன்துயில் கொண்டவாறே
      இற்றை யிரவிடை யேமத்தென்னை
      இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
      அற்றை யிரவுமோர் பிற்றைநாளும்
      அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
      எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய்
      எம்பெரு மான்நீ யெழுந்தருளே 6.6
      704
      பையர வின்னணை பள்ளியினாய்
      பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும்
      மையரி யொண்கண்ணி னாருமல்லோம்
      வைகியெம் சேரி வரவோழிநீ
      செய்ய வுடையும் திருமுகமும்
      செங்கனி வாயும் குழலும்கண்டு
      பொய்யொரு நாள்பட்ட தேயமையும்
      புள்ளுவம் பேசாதே போகுநம்பீ 6.7
      705
      என்னை வருக வெனக்குறித்தி
      டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
      மன்னி யவளை புணரப்புக்கு
      மற்றென்னை கண்டுழ றாநெகிழ்ந்தாய்
      பொன்னிற வாடையை கையில்தாங்கி
      பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
      இன்னமென் கையக தீங்கொருநாள்
      வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே 6.8
      706
      மங்கல நல்வன மாலைமார்வில்
      இலங்க மயில்தழை பீலிசூடி
      பொங்கிள வாடை யரையில்சாத்தி
      பூங்கொத்து காதிற் புணரப்பெய்து
      கொங்கு நறுங்குழ லார்களோடு
      குழைந்து குழலினி தூதிவந்தாய்
      எங்களு கேயொரு நாள்வந்தூத
      உன்குழ லின்னிசை போதராதே 6.9
      707
      அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்
      றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
      எல்லி பொழுதினி லேமத்தூடி
      எள்கி யுரைத்த வுரையதனை
      கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்
      குலசே கரனின் னிசையில்மேவி
      சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்
      சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே 2 6.10
      எண்சீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      708
      ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ
      அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
      வேலை நீர்நிற தன்னவன் தாலோ
      வேழ போதக மன்னவன் தாலோ
      ஏல வார்குழ லென்மகன் தாலோ
      என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய
      தாலொ லித்திடும் திருவினை யில்லா
      தாய ரில்கடை யாயின தாயே 2 7.1
      709
      வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண்
      மருவி மேலினி தொன்றினை நோக்கி
      முடக்கி சேவடி மலர்ச்சிறு கருந்தாள்
      பொலியு நீர்முகில் குழவியே போல
      அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும்
      அங்கை யோடணை தானையிற் கிடந்த
      கிடக்கை கண்டிட பெற்றில னந்தோ
      கேச வாகெடு வேன்கெடு வேனே 7.2
      710
      முந்தை நன்முறை யுன்புடை மகளிர்
      முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
      எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே
      எழுமு கில்கண தெழில்கவ ரேறே
      உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ்
      விரலி னும்கடை கண்ணினும் காட்ட
      நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
      நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே 7.3
      711
      களிநி லாவெழில் மதிபுரை முகமும்
      கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்
      தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
      தடங்கொள் தாமரை கண்களும் பொலிந்த
      இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்
      பருகு வேற்கிவள் தாயென நினைந்த
      அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
      பாவி யேனென தாவிநில் லாதே 7.4
      712
      மருவு நின்திரு நெற்றியில் சுட்டி
      அசைத ரமணி வாயிடை முத்தம்
      தருத லும்உன்றன் தாதையை போலும்
      வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
      விரலை செஞ்சிறு வாயிடை சேர்த்து
      வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
      திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதைபெற் றாளே 7.5
      713
      தண்ண தாமரை கண்ணனே கண்ணா
      தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்
      மண்ணில் செம்பொடி யாடிவ தென்றன்
      மார்வில் மன்னிட பெற்றிலே னந்தோ
      வண்ண செஞ்சிறு கைவிர லனைத்தும்
      வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல்
      உண்ண பெற்றிலேன் ஓகொடு வினையேன்
      என்னை எஞ்செ பெற்றதெம் மோயே 7.6
      714
      குழக னேஎன்றன் கோமள பிள்ளாய்
      கோவி தாஎன் குடங்கையில் மன்னி
      ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல்
      ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா
      மழலை மென்னகை யிடையிடை யருளா
      வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே
      எழில்கொள் நின்திரு கண்ணிணை நோக்க
      தன்னை யுமிழ தேனிழ தேனே 7.7
      715
      முழுதும் வெண்ணெ யளைந்துதொ டுண்ணும்
      முகிழி ளஞ்சிறு தாமரை கையும்
      எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
      நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
      அழுகை யுமஞ்சி நோக்கு நோக்கும்
      அணிகொள் செஞ்சிறு வாய்நெளி பதுவும்
      தொழுகை யுமிவை கண்ட அசோதை
      தொல்லை யின்ப திறுதிகண் டாளே 7.8
      716
      குன்றி னால்குடை கவித்ததும் கோல
      குரவை கோத்த தும்குட மாட்டும்
      கன்றி னால்விள வெறிந்ததும் காலால்
      காளி யன்தலை மிதித்தது முதலா
      வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம்
      அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
      ஒன்றும் கண்டிட பெற்றிலே னடியேன்
      காணு மாறினி யுண்டெனி லருளே 7.9
      717
      வஞ்ச மேவிய நெஞ்சுடை பேய்ச்சி
      வரண்டு நார்நரம் பெழக்கரி துக்க
      நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ
      சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்
      கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்
      கடைப்ப டேன்வெறி தேமுலை சுமந்து
      தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன்
      தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே 7.10
      718
      மல்லை மாநகர கிறையவன் றன்னை
      வாஞ்செ லுத்திவ தீங்கணை மாயத்து
      எல்லை யில்பிள்ளை செய்வன காணா
      தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
      கொல்லி காவலன் மாலடி முடிமேல்
      கோல மாம்குல சேகரன் சொன்ன
      நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
      நண்ணு வாரொல்லை நாரண னுலகே 2 7.11
      தரவு கொச்ச கலிப்பா
      719
      மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
      தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
      கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
      என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ 2 8.1
      720
      புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
      திண்டிறலாள் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தய்
      கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
      எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ 8.2
      721
      கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
      தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
      கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
      எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 8.3
      722
      தாமரைமே லயனவனை படைத்தவனே தசரதன்றன்
      மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
      காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
      ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 8.4
      723
      பாராளும் படர்செல்வம் பரதநம்பி கேயருளி
      ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
      சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
      தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 8.5
      724
      சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கான மடைந்தவனே
      அற்றவர்க கருமருந்தே அயோத்திநகர கதிபதியே
      கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
      சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ 8.6
      725
      ஆலினிலை பாலகனா யன்றுலக முண்டவனே
      வாலியைகொன் றரசிளைய வானரத்து களித்தவனே
      காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
      ஆலிநகர கதிபதியே அயோத்திமனே தாலேலோ 8.7
      726
      மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
      அலைகடலை கடைந்தமரர கமுதருளி செய்தவனே
      கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
      சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ 8.8
      727
      தளையவிழும் நறுங்குஞ்சி தயரதன்றன் குலமதலாய்
      வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
      களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
      இளையவர்க கருளுடையாய் இராகவனே தாலேலோ 8.9
      728
      தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
      யாவரும்வ தடிவணங்க அரங்கநகர துயின்றவனே
      காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
      ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ 2 8.10
      729
      கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
      தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
      கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
      பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே 2 8.11
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      730
      வன்தாளி னிணைவணங்கி வளநகரம்
      தொழுதேத்த மன்ன னாவான்
      நின்றாயை அரியணைமே லிருந்தாயை
      நெடுங்கானம் படர போகு
      என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த
      கைகேசி தஞ்சொற் கேட்டு
      நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
      நன்மகனே உன்னை நானே 2 9.1
      731
      வெவ்வாயேன் வெவ்வுரைகே டிருநிலத்தை
      வேண்டாதே விரைந்து வென்றி
      மைவாய களிறொழிந்து தேரொழிந்து
      மாவொழிந்து வனமே மேவி
      நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
      இளங்கோவும் பின்பு போக
      எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ
      எம்பெருமான் எஞ்செய் கேனே 9.2
      732
      கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன்
      குலமதலாய் குனிவில் லேந்தும்
      மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன்
      மனமுருக்கும் வகையே கற்றாய்
      மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
      வியன்கான மரத்தின் நீழல்
      கல்லணைமேல் கண்டுயில கற்றனையோ
      காகுத்தா கரிய கோவே 9.3
      733
      வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
      கண்டுபோ மலராள் கூந்தல்
      வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா
      விடையோன்றன் வில்லை செற்றாய்
      மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
      மனமுருக்கும் மகனே இன்று
      நீபோக என்னெஞ்ச மிருபிளவா
      போகாதே நிற்கு மாறே 9.4
      734
      பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய
      மெல்லடிகள் குருதி சோர
      விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
      வெம்பசிநோய் கூர இன்று
      பெரும்பாவி யேன்மகனே போகின்றாய்
      கேகயர்கோன் மகளா பெற்ற
      அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
      எஞ்செய்கேன் அந்தோ யானே 9.5
      735
      அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல்
      கேளாதே அணிசேர் மார்வம்
      என்மார்வ திடையழுந தழுவாதே
      முழுசாதே மோவா துச்சி
      கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
      கமலம்போல் முகமும் காணாது
      எம்மானை யென்மகனை யிழந்திட்ட
      இழிதகையே னிருக்கின் றேனே 9.6
      736
      பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையா
      புனைந்துபூ துகில்சே ரல்குல்
      காமரெழில் விழலுடுத்து கலனணியா
      தங்கங்க ளழகு மாறி
      ஏமருதோ ளென்புதல்வன் யானின்று
      செலத்தக்க வனந்தான் சேர்தல்
      தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே
      விசிட்டனே சொல்லீர் நீரே 9.7
      737
      பொன்பெற்றா ரெழில்வேத புதல்வனையும்
      தம்பியையும் பூவை போலும்
      மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்
      மருகிகையும் வனத்தில் போக்கி
      நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்தி
      டென்னையும்நீள் வானில் போக்க
      என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில்
      இனிதாக விருக்கின் றாயே 9.8
      738
      முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி
      அவன்தவத்தை முற்றும் செற்றாய்
      உன்னையுமுன் னருமையையு முன்மோயின்
      வருத்தமுமொன் றா கொள்ளாது
      என்னையும்என் மெய்யுரையும் மெய்யா
      கொண்டுவனம் புக்க எந்தாய்
      நின்னையே மகனாக பெறப்பெறுவேன்
      ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே 9.9
      739
      தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும்
      சுமித்திரையும் சிந்தை நோவ
      கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
      கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
      கானகமே மிகவிரும்பி நீதுறந்த
      வளநகரை துறந்து நானும்
      வானகமே மிகவிரும்பி போகின்றேன்
      மனுகுலத்தார் தங்கள் கோவே 9.10
      740
      ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்
      வனம்புக்க அதனு காற்றா
      தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்
      புலம்பியஅ புலம்பல் தன்னை
      கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்
      குடைக்குலசே கரஞ்சொற் செய்த
      சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்
      தீநெறிக்கண் செல்லார் தாமே 2 9.11
      எண்சீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      741
      அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
      அணிநகர துலகனைத்தும் விளக்கும் சோதி
      வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்கா தோன்றி
      விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை
      செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
      என்றுகொலோ கண்குளிர காணு நாளே 2 10.1
      742
      வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தை கீறி
      வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
      மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
      வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
      செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
      அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே 10.2
      743
      செல்வரிநற் கருநெடுங்கண் சீதை காகி
      சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
      வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
      வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
      தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை
      இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே 10.3
      744
      தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
      தென்னகர துரந்துதுறை கங்கை தன்னை
      பத்தியுடை குகன்கடத்த வனம்போ புக்கு
      பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
      சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      எத்தனையும் கண்குளிர காண பெற்ற
      இருநிலத்தார கிமையவர்நே ரொவ்வார் தாமே 10.4
      745
      வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதை கொன்று
      வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
      கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
      கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
      சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      தலைவணக்கி கைகூப்பி யேத்த வல்லார்
      திரிதலால் தவமுடைத்தி தரணி தானே 10.5
      746
      தனமருவு வைதேகி பிரிய லுற்று
      தளர்வெய்தி சடாயுவைவை குந தேற்றி
      வனமருவு கவியரசன் காதல் கொண்டு
      வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
      சினமடங்க மாருதியால் சுடுவி தானை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை
      ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ 10.6
      747
      குரைகடலை யடலம்பால் மறுக வெய்து
      குலைகட்டி மறுகரையை யதனா லேரி
      எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்
      இன்னுயிர்கொண் டவன்தம்பி கரசு மீந்து
      திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
      அரசாக வெண்ணேன்மற் றரசு தானே 10.7
      748
      அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
      அரசெய்தி அகத்தியன்வா தான்முன் கொன்றான்
      றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலை செல்வி
      உலகு திருவயிறு வாய்த்த மக்கள்
      செம்பவள திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்
      பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே 10.8
      749
      செறிதவச்சம் புகன்றன்னை சென்று கொன்று
      செழுமறையோ னுயிர்மீட்டு தவத்தோ னீந்த
      நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னை
      தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
      திறல்விளங்கு மிலக்குமனை பிரிந்தான் றன்னை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      உறைவானை மறவாத வுள்ள தன்னை
      உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே 10.9
      750
      அன்றுசரா சரங்களைவை குந தேற்றி
      அடலரவ பகையேறி யசுரர் தம்மை
      வென்றுஇலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
      சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னை
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்
      இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே 10.10
      751
      தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
      திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
      எல்லையில்சீர தயரதன்றன் மகனா தோன்றிற்
      றதுமுதலா தன்னுலகம் புக்க தீறா
      கொல்லியலும் படைத்தானை கொற்ற வொள்வாள்
      கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
      நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 2 10.11
      குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      திருச்சந்த விரு தனியந்கள்
      திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
      தரவு கொச்ச கலிப்பா
      தருச்சந்த பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
      திருச்சந்த விருத்தம்செய் திருமழிசை பரன்வருமூர்
      கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்
      திருச்சந துடன்மருவு திருமழிசை வளம்பதியே.
      இருவிகற்ப நேரிசை வெண்பா
      உலகும் மழிசையு முள்ளுணர்ந்து தம்மில்
      புலவர் புகழ்க்கோலால் தூக்க- உலகுதன்னை
      வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
      வைத்தெடுத்த பக்கம் வலிது.
      திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்
      சந்த கலி விருத்தம்
      752
      பூநிலாய வைந்துமா
      புனற்கண்நின்ற நான்குமாய்
      தீநிலாய மூன்றுமா
      சிறந்தகா லிரண்டுமாய்
      மீநிலாய தொன்றுமாகி
      வேறுவேறு தன்மையாய்
      நீநிலாய வண்ணநின்னை
      யார்நினைக்க வல்லரே 2 1
      753
      ஆறுமாறு மாறுமாயொ
      ரைந்துமைந்து மைந்துமாய்
      ஏறுசீரி ரண்டுமூன்று
      மேழுமாறு மெட்டுமாய்
      வேறுவேறு ஞானமாகி
      மெய்யினொடு பொய்யுமாய்
      ஊறொடோ சை யாயவைந்து
      மாய ஆய மாயனே. 2
      753
      ஐந்துமைந்து மைந்துமாகி
      யல்லவற்று ளாயுமாய்
      ஐந்துமூன்று மொன்றுமாகி
      நின்றவாதி தேவனே
      ஐந்துமைந்து மைந்துமாகி
      யந்தரத்த ணைந்துநின்று
      ஐந்துமைந்து மாயநின்னை
      யாவர்காண வல்லரே 3
      755
      மூன்றுமுப்ப தாறினோடொ
      ரைந்துமைந்து மைந்துமாய்
      மூன்றுமூர்த்தி யாகிமூன்று
      மூன்றுமூன்று மூன்றுமாய
      தோன்றுசோதி மூன்றுமா
      துளக்கமில் விளக்கமாய்
      ஏன்றெனாவி யுள்புகுந்த
      தென்கொலோவெம் மீசனே. 4
      756
      நின்றியங்கு மொன்றலாவு
      ருக்கடோ றும் ஆவியாய்
      ஒன்றியுள்க லந்துநின்ற
      நின்னதன்மை யின்னதென்று
      என்றும்யார்க்கு மெண்ணிறந்த
      ஆதியாய்நின் னுந்திவாய்
      அன்றுநான்மு கற்பயந்த
      வாதிதேவ னல்லையே 5
      757
      நாகமேந்து மேருவெற்பை
      நாகமேந்து மண்ணினை
      நாகமேந்து மாகமாக
      மாகமேந்து வார்புனல்
      மாகமேந்து மங்குல்தீயொர்
      வாயுவை தமைந்துகாத்து
      ஏகமேந்தி நின்றநீர்மை
      நின்கணேயி யன்றதெ. 6
      758
      ஒன்றிரண்டு மூர்த்தியா
      யுறக்கமோடு ணர்ச்சியாய்
      ஒன்றிரண்டு காலமாகி
      வேலைஞால மாயினாய்
      ஒன்றிரண்டு தீயுமாகி
      யாயனாய மாயனே
      ஒன்றிரண்டு கண்ணினுனு
      முன்னையேத்த வல்லனே 7
      759
      ஆதியான வானவர்க்கு
      மண்டமாய வப்புறத்து
      ஆதியான வானவர்க்கு
      மாதியான வாதிநீ
      ஆதியான வானவாண
      ரந்தகாலம் நீயுரைத்தி
      ஆதியான காலநின்னை
      யாவர்காண வல்லரே 8
      760
      தாதுலாவு கொன்றைமாலை
      துன்னுசெஞ்ச டைச்சிவன்
      நீதியால்வ ணங்குபாத
      நின்மலா.நி லாயசீர்
      வேதவாணர் கீதவேள்வி
      நீதியான வேள்வியார்
      நீதியால் வணங்குகின்ற
      நீர்மைநின்கண் நின்றதே 9
      761
      தன்னுளேதி ரைத்தெழும்
      தரங்கவெண்த டங்கடல்
      தன்னுளேதி ரைத்தெழு
      தடங்குகின்ற தன்மைபோல்
      நின்னுளேபி றந்திறந்து
      நிற்பவும் திரிபவும்
      நின்னுளேய டங்குகின்ற
      நீர்மைநின்கண் நின்றதே. 10
      761
      தன்னுளேதி ரைத்தெழும்
      தரங்கவெண்த டங்கடல்
      தன்னுளேதி ரைத்தெழு
      தடங்குகின்ற தன்மைபோல்
      நின்னுளேபி றந்திறந்து
      நிற்பவும் திரிபவும்
      நின்னுளேய டங்குகின்ற
      நீர்மைநின்கண் நின்றதே 10
      762
      சொல்லினால்தொ டர்ச்சிநீ
      சொலப்படும்பொ ருளும்நீ
      சொல்லினால்சொ லப்படாது
      தோன்றுகின்ற சோதிநீ
      சொல்லினால்ப டைக்கநீப
      டைக்கவந்து தோன்றினார்
      சொல்லினால்சு ருங்கநின்கு
      ணங்கள் சொல்ல வல்லரே 11
      763
      உலகுதன்னை நீபடைத்தி
      யுள்ளொடுக்கி வைத்தி மீண்-
      டுலகுதன்னு ளேபிறத்தி
      யோரிடத்தை யல்லையால்
      உலகுநின்னொ டொன்றிநிற்க
      வேறுநிற்றி யாதலால்
      உலகில்நின்னை யுள்ளசூழல்
      யாவருள்ளா வல்லரே 12
      764
      இன்னையென்று சொல்லலாவ
      தில்லையாதும் இட்டிடை
      பின்னைகேள்வ னென்பருன்பி
      ணக்குணர்ந்த பெற்றியோர்
      பின்னையாய கோலமோடு
      பேருமூரு மாதியும்
      நின்னையார் நினைக்கவல்லர்
      நீர்மையால்நி னைக்கிலே. 13
      765
      தூய்மையோக மாயினாய்து
      ழாயலங்கல் மாலையாய்
      ஆமையாகி யாழ்கடல்து
      யின்றவாதி தேவநின்
      நாமதேய மின்னதென்ன
      வல்லமல்ல மாகிலும்
      சாமவேத கீதனாய
      சக்ரபாணி யல்லையே 14
      766
      அங்கமாறும் வேதநான்கு
      மாகிநின்ற வற்றுளே
      தங்குகின்ற தன்மையாய்த
      டங்கடல்ப ணத்தலை
      செங்கண்நாக ணைக்கிடந்த
      செல்வமல்கு சீரினாய்
      சங்கவண்ண மன்னமேனி
      சார்ங்கபாணி யல்லையே 15
      767
      தலைக்கணத்து கள்குழம்பு
      சாதிசோதி தோற்றாமாய்
      நிலைக்கணங்கள் காணவந்து
      நிற்றியேலும் நீடிருங்
      கலைக்கணங்கள் சொற்பொருள்க
      ருத்தினால்நி னைக்கொணா
      மலைக்கணங்கள் போலுணர்த்தும்
      மாட்சிநின்றன் மாட்சியே. 16
      768
      ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
      நாலுமூர்த்தி நன்மைசேர்
      போகமூர்த்தி புண்ணியத்தின்
      மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
      நாகமூர்த்தி சயனமாய்ந
      லங்கடல்கி டந்துமேல்
      ஆகமூர்த்தி யாயவண்ண
      மெங்கொலாதி தேவனே. 17
      769
      விடத்தவாயொ ராயிரமி
      ராயிரம்கண் வெந்தழல்
      விடத்துவீழ்வி லாதபோகம்
      மிக்கசோதி தொக்கசீர்
      தொடுத்துமேல்வி தானமாய
      பௌவநீர ராவணை
      படுத்தபாயல் பள்ளிகொள்வ
      தென்கொல்வேலை வண்ணாணே. 18
      770
      புள்ளாதாகி வேதநான்கு
      மோதினாய்அ தன்றியும்
      புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ
      டிப்பிடித்த பின்னரும்
      புள்ளையூர்தி யாதலால
      தென்கொல்மின்கொள் நேமியாய்
      புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி
      டத்தல்காத லித்ததே. 19
      771
      கூசமொன்று மின்றிமாசு
      ணம்படுத்து வேலைநீர்
      பேசநின்ற தேவர்வந்து
      பாடமுன்கி டந்ததும்
      பாசம்நின்ற நீரில்வாழு
      மாமையான கேசவா
      ஏசவன்று நீகிடந்த
      வாறுகூறு தேறவே.
      772
      அரங்கனே.த ரங்கநீர்க
      லங்கவன்று குன்றுசூழ்
      மரங்கடேய மாநிலம்கு
      லுங்கமாசு ணம்சுலாய்
      நெருங்கநீ கடைந்தபோது
      நின்றசூர ரெஞ்செய்தார்
      குரங்கையா ளுகந்தவெந்தை.
      கூறுதேற வேறிதே. 21
      773
      பண்டுமின்று மேலுமாயொர்
      பாலனாகி ஞாலமேழ்
      உண்டுமண்டி யாலிலைத்து
      யின்றவாதி தேவனே
      வண்டுகிண்டு தண்டுழாய
      லங்கலாய்.க லந்தசீர
      புண்டரீக பாவைசேரு
      மார்ப.பூமி நாதனே. 22
      774
      வானிறத்தொர் சீயமாய்வ
      ளைந்தவாளெ யிற்றவன்
      ஊன்நிறத்து கிர்த்தலம
      ழுத்தினாய்.உ லாயசீர்
      நால்நிறத்த வேதநாவர்
      நல்லயோகி னால்வணங்கு
      பால்நிறக்க டல்கிடந்த
      பற்பநாப னல்லையே 23
      775
      கங்கைநீர்ப யந்தபாத
      பங்கயத்தெம் மண்ணலே
      அங்கையாழி சங்குதண்டு
      வில்லும்வாளு மேந்தினாய்
      சிங்கமாய தேவதேவ.
      தேனுலாவு மென்மலர்
      மங்கைமன்னி வாழுமார்ப.
      ஆழிமேனி மாயனே. 24
      776
      வரத்தினில்சி ரத்தைமிக்க
      வாளெயிற்று மற்றவன்
      உரத்தினில்க ரத்தைவைத்து
      கிர்த்தலத்தை யூன்றினாய்
      இரத்தநீயி தென்னபொய்யி
      ரந்தமண்வ யிற்றுளே
      கரத்திஉன்க ருத்தையாவர்
      காணவல்லர் கண்ணனே. 25
      777
      ஆணினோடு பெண்ணுமாகி
      யல்லவோடு நல்லவாய்
      ஊணொடோ சை யூறுமாகி
      யொன்றலாத மாயையாய்
      பூணிபேணு மாயனாகி
      பொய்யினோடு மெய்யுமாய்
      காணிபேணும் மாணியாய்க்க
      ரந்துசென்ற கள்வனே. 26
      778
      விண்கடந்த சோதியாய்வி
      ளங்குஞான மூர்த்தியாய்
      பண்கடந்த தேசமேவு
      பாவநாச நாதனே
      எண்கடந்த யோகினோடி
      ரந்துசென்று மாணியாய்
      மண்கடந்த வண்ணம்நின்னை
      யார்மதிக்க வல்லரே 27
      779
      படைத்தபாரி டந்தளந்த
      துண்டுமிழ்ந்து பௌவநீர்
      படைத்தடைத்த திற்கிடந்து
      முன்கடைந்த பெற்றியோய்
      மிடைத்தமாலி மாலிமான்வி
      லங்குகால னூர்புக
      படைக்கலம் விடுத்தபல்ப
      டைத்தடக்கை மாயனே. 28
      780
      பரத்திலும்ப ரத்தையாதி
      பௌவநீர ணைக்கிடந்து
      உரத்திலும்மொ ருத்திதன்னை
      வைத்துகந்த தன்றியும்
      நரத்திலும்பி றத்திநாத
      ஞானமூர்த்தி யாயினாய்
      ஒருத்தரும்நி னாதுதன்மை
      யின்னதென்ன வல்லரே. 29
      781
      வானகம்மும் மண்ணாகம்மும்
      வெற்புமேழ்க டல்களும்
      போனகம்செய் தாலிலைத்து
      யின்றபுண்ட ரீகனே
      தேனகஞ்செய் தண்ணறும்ம
      லர்த்துழாய்நன் மாலையாய்
      கூனகம்பு கத்தெறித்த
      கொற்றவில்லி யல்லையே 30
      782
      காலநேமி காலனே.
      கணக்கிலாத கீர்த்தியாய்
      ஞாலமேழு முண்டுபண்டோ ர்
      பாலனாய பண்பனே
      வேலைவேவ வில்வளைத்த
      வெல்சினத்த வீரநின்
      பாலராய பத்தர்சித்தம்
      முத்திசெய்யும் மூர்த்தியே. 31
      783
      குரக்கினப்ப டைகொடுகு
      ரைகடலின் மீதுபோய்
      அரக்கரங்க ரங்கவெஞ்ச
      ரந்துரந்த வாதிநீ
      இரக்கமண்கொ டுத்தவற்கி
      ரக்கமொன்று மின்றியே
      பரக்கவைத்த ளந்துகொண்ட
      பற்பபாத னல்லையே 32
      784
      மின்னிறத்தெ யிற்றரக்கன்
      வீழவெஞ்ச ரம்துரந்து
      பின்னவற்க ருள்புரிந்த
      ரசளித்த பெற்றியோய்
      நன்னிறத்தொ ரிஞ்சொலேழை
      பின்னைகேள்வ. மன்னுசீர்
      பொன்னிறத்த வண்ணானாய
      புண்டரீக னல்லையே 33
      785
      ஆதியாதி யாதிநீயொ
      ரண்டமாதி யாதலால்
      சோதியாத சோதிநீஅ
      துண்மையில்வி ளங்கினாய்
      வேதமாகி வேள்வியாகி
      விண்ணினோடு மண்ணுமாய்
      ஆதியாகி யாயனாய
      மாயமென்ன மாயமே 34
      786
      அம்புலாவு மீனுமாகி
      யாமையாகி ஆழியார்
      தம்பிரானு மாகிமிக்க
      தன்புமிக்க தன்றியும்
      கொம்பராவு நுண்மருங்கு
      லாயர்மாதர் பிள்ளையாய்
      எம்பிரானு மாயவண்ண
      மென்கொலோவெம் மீசனே. 35
      787
      ஆடகத்த பூண்முலைய
      சோதையாய்ச்சி பிள்ளையாய்
      சாடுதைத்தோர் புள்ளதாவி
      கள்ளதாய பேய்மகள்
      வீடுவைத்த வெய்யகொங்கை
      ஐயபால முதுசெய்து
      ஆடகக்கை மாதர்வா
      யமுதமுண்ட தென்கொலோ 36
      788
      காய்த்தநீள்வி ளங்கனியு
      திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்
      சாய்த்துமாபி ளந்தகைத்த
      லத்தகண்ண னென்பரால்
      ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை
      யுண்டுவெண்ணெ யுண்டுபின்
      பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ
      ரேனமாய வாமனா. 37
      789
      கடங்கலந்த வன்கரிம
      ருப்பொசித்துஓர் பொய்கைவாய்
      விடங்கலந்த பாம்பின்மேல்ந
      டம்பயின்ற நாதனே
      குடங்கலந்த கூத்தனாய
      கொண்டல்வண்ண. தண்டுழாய்
      வடங்கலந்த மாலைமார்ப.
      காலநேமி காலனே. 38
      790
      வெற்பெடுத்து வேலைநீர்க
      லக்கினாய்அ தன்றியும்
      வெற்பெடுத்து வேலைநீர்வ
      ரம்புகட்டி வேலைசூழ்
      வெற்பெடுத்த இஞ்சிசூழி
      லங்கைகட்ட ழித்தநீ
      வெற்பெடுத்து மாரிகாத்த
      மேகவண்ண னல்லையே. 39
      791
      ஆனைகாத்தொ ரானைகொன்ற
      தன்றியாயர் பிள்ளையாய்
      ஆனைமேய்த்தி யானெயுண்டி
      அன்றுகுன்ற மொன்றினால்
      ஆனைகாத்து மையரிக்கண்
      மாதரார்தி றத்துமுன்
      ஆனையன்று சென்றடர்த்த
      மாயமென்ன மாயமே 40
      792
      ஆயனாகி யாயர்மங்கை
      வேயதோள்வி ரும்பினாய்
      ஆய.நின்னை யாவர்வல்ல
      ரம்பரத்தொ டிம்பராய்
      மாய.மாய மாயைகொல்அ
      தன்றிநீவ குத்தலும்
      மாயமாய மாக்கினாயுன்
      மாயமுற்று மாயமே. 41
      793
      வேறிசைந்த செக்கர்மேனி
      நீரணிந்த புஞ்சடை
      கீறுதிங்கள் வைத்தவன்கை
      வைத்தவன்க பால்மிசை
      ஊறுசெங்கு ருதியால்நி
      றைத்தகார ணந்தனை
      ஏறுசென்ற டர்த்தவீச.
      பேசுகூச மின்றியே. 42
      794
      வெஞ்சினத்த வேழவெண்ம
      ருப்பொசித்து உருத்தமா
      கஞ்சனைக்க டிந்துமண்ண
      ளந்துகொண்ட காலனே
      வஞ்சனத்து வந்தபேய்ச்சி
      யாவிபாலுள் வாங்கினாய்
      அஞ்சனத்த வண்ணானாய
      ஆதிதேவ னல்லையே 43
      795
      பாலினீர்மை செம்பொனீர்மை
      பாசியின்ப சும்புறம்
      போலுநீர்மை பொற்புடைத்த
      டத்துவண்டு விண்டுலாம்
      நீலநீர்மை யென்றிவைநி
      றைந்தகாலம் நான்குமாய்
      மாலினீர்மை வையகம்ம
      றைத்ததென்ன நீர்மையே 44
      796
      மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்
      மண்ணுளேம யங்கிநின்று
      எண்ணுமெண்ண கப்படாய்கொல்
      என்னமாயை நின்தமர்
      கண்ணுளாய்கொல் சேயைகொல்அ -
      னந்தன்மேல்கி டந்தவெம்
      புண்ணியாபு னந்துழாய
      லங்கலம்பு னிதனே. 45
      797
      தோடுபெற்ற தண்டுழாய
      லங்கலாடு சென்னியாய்
      கோடுபற்றி ஆழியேந்தி
      அஞ்சிறைப்புள் ளூர்தியால்
      நாடுபெற்ற நன்மைநண்ண
      மில்லையேனும் நாயினேன்
      வீடுபெற்றி றப்பொடும்பி
      றப்பறுக்கு மாசொலே. 46
      798
      காரொடொத்த மேனிநங்கள்
      கண்ண. விண்ணிண் நாதனே
      நீரிடத்த ராவணைக்கி
      டத்தியென்பர் அன்றியும்
      ஓரிடத்தை யல்லையெல்லை
      யில்லையென்ப ராதலால்
      சேர்விடத்தை நாயினேன்
      தெரிந்திறைஞ்சு மாசொலே. 47
      799
      குன்றில்நின்று வானிருந்து
      நீள்கடல்கி டந்துமண்
      ஒன்றுசென்ற தொன்றையுண்ட
      தொன்றிடந்து பன்றியாய்
      நன்றுசென்ற நாளவற்றுள்
      நல்லுயிர்ப டைத்தவர்க்கு
      அன்றுதேவ மைத்தளித்த
      ஆதிதேவ னல்லயே 48
      780
      கொண்டைகொண்ட கோதைமீது
      தேனுலாவு கூனிகூன்
      உண்டைகொண்ட ரங்கவோட்டி
      யுள்மகிழ்ந்த நாதனூர்
      நண்டையுண்டு நாரைபேர
      வாளைபாய நீலமே
      அண்டைகொண்டு கெண்டைமேயு
      மந்தணீர ரங்கமே. 2 49
      781
      வெண்டிரைக்க ருங்கடல்சி
      வந்துவேவ முன்னோர்நாள்
      திண்டிறல்சி லைக்கைவாளி
      விட்டவீரர் சேருமூர்
      எண்டிசைக்க ணங்களுமி
      றைஞ்சியாடு தீர்த்தநீர்
      வண்டிரைத்த சோலைவேலி
      மன்னுசீர ரங்கமே. 50
      802
      சரங்களைத்து ரந்துவில்வ
      ளைத்துஇலங்கை மன்னவன்
      சிரங்கள்பத்த றுத்துதிர்த்த
      செல்வர்மன்னு பொன்னிடம்
      பரந்துபொன்நி ரந்துநுந்தி
      வந்தலைக்கும் வார்புனல்
      அரங்கமென்பர் நான்முக
      தயன்பணிந்த கோயிலே. 51
      803
      பொற்றையுற்ற முற்றல்யானை
      போரெதிர்ந்து வந்ததை
      பற்றியுற்று மற்றதன்
      மருப்பொசித்த பாகனூர்
      சிற்றெயிற்று முற்றல்மூங்கில்
      மூன்றுதண்ட ரொன்றினர்
      அற்றபற்றர் சுற்றிவாழு
      மந்தணீர ரங்கமே. 52
      804
      மோடியோடி லச்சையாய
      சாபமெய்தி முக்கணான்
      கூடுசேனை மக்களோடு
      கொண்டுமண்டி வெஞ்ச
      தோடவாண னாயிரம்
      கரங்கழித்த வாதிமால்
      பீடுகோயில் கூடுநீர
      ரங்கமென்ற பேரதே. 53
      805
      இலைத்தலைச்ச ரந்துரந்தி
      லங்கைகட்ட ழித்தவன்
      மலைத்தலைப்பி றந்திழிந்து
      வந்துநுந்து சந்தனம்
      குலைத்தலைத்தி றத்தெறிந்த
      குங்குமக்கு ழம்பினோடு
      அலைத்தொழுகு காவிரிய
      ரங்கமேய வண்ணலே. 54
      806
      மன்னுமாம லர்க்கிழத்தி
      வையமங்கை மைந்தனாய்
      பின்னுமாயர் பின்னைதோள்ம
      ணம்புணர்ந்த தன்றியும்
      உன்னபாத மென்னசிந்தை
      மன்னவைத்து நல்கினாய்
      பொன்னிசூ ழரங்கமேய
      புண்டரீக னல்லையே 55
      807
      இலங்கைமன்ன னைந்தொடைந்து
      பைந்தலைநி லத்துக
      கலங்கவன்று சென்றுகொன்று
      வென்றிகொண்ட வீரனே
      விலங்குநூலர் வேதநாவர்
      நீதியான கேள்வியார்
      வலங்கொளக்கு டந்தையுள்கி
      டந்தமாலு மல்லையே 56
      808
      சங்குதங்கு முன்கைநங்கை
      கொங்கைதங்க லுற்றவன்
      அங்கமங்க வன்றுசென்ற
      டர்த்தெறிந்த வாழியான்
      கொங்குதங்கு வார்குழல்ம
      டந்தைமார்கு டைந்தநீர்
      பொங்குதண்கு டந்தையுள்கி
      டந்தபுண்ட ரீகனே. 57
      809
      மரங்கெடந டந்தடர்த்து
      மத்தயானை மத்தகத்து
      உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ
      சித்துகந்த வுத்தமா
      துரங்கம்வாய்பி ளந்துமண்ண
      ளந்தபாத வேதியர்
      வரங்கொளக்கு டந்தையுள்கி
      டந்தமாலு மல்லையே 58
      810
      சாலிவேலி தண்வயல்த
      டங்கிடங்கு பூம்பொழில்
      கோலமாட நீடுதண்கு
      டந்தைமேய கோவலா
      காலநேமி வக்கரன்க
      ரன்முரஞ்சி ரம்மவை
      காலனோடு கூடவில்கு
      னித்தவிற்கை வீரனே. 59
      811
      செழுங்கொழும்பெ ரும்பனிபொ
      ழிந்திடஉ யர்ந்தவேய்
      விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு
      டைக்கும்வேங்க டத்துள்நின்று
      எழுந்திருந்து தேன்பொருந்து
      பூம்பொழில்த ழைக்கொழுஞ்
      செழுந்தடங்கு டந்தையுள்கி
      டந்தமாலு மல்லையே 2 60
      812
      நடந்தகால்கள் நொந்தவோ
      நடுங்குஞால மேனமாய்
      இடந்தமெய்கு லுங்கவோவி
      லங்குமால்வ ரைச்சுரம்
      கடந்தகால்ப ரந்தகாவி
      ரிக்கரைக்கு டந்தையுள்
      கிடந்தவாறெ ழுந்திருந்து
      பேசுவாழி கேசனே. 2 61
      813
      கரண்டமாடு பொய்கையுள்க
      ரும்பனைப்பெ ரும்பழம்
      புரண்டுவீழ வாளைபாய்கு
      றுங்குடிநெ டுந்தகாய்
      திரண்டதோளி ரணியஞ்சி
      னங்கொளாக மொன்றையும்
      இரண்டுகூறு செய்துகந்த
      சிங்கமென்ப துன்னையே 2 62
      814
      நன்றிருந்து யோகநீதி
      நண்ணுவார்கள் சிந்தையுள்
      சென்றிருந்து தீவினைகள்
      தீர்த்ததேவ தேவனே
      குன்றிருந்த மாடநீடு
      பாடகத்து மூரகத்தும்
      நின்றிருந்து வெஃகணைக்கி
      டந்ததென்ன நீர்மையே 63
      815
      நின்றதெந்தை யூரகத்தி
      ருந்ததெந்தை பாடகத்து
      அன்றுவெஃக ணைக்கிடந்த
      தென்னிலாத முன்னெலாம்
      அன்றுநான்பி றந்திலேன்பி
      றந்தபின்ம றந்திலேன்
      நின்றதும் மிருந்ததும்கி
      டந்ததும்மென் நெஞ்சுளே. 64
      816
      நிற்பதும்மொர் வெற்பகத்தி
      ருப்பும்விண்கி டப்பதும்
      நற்பெருந்தி ரைக்கடலுள்
      நானிலாத முன்னெலாம்
      அற்புதன னந்தசயன
      னாதிபூதன் மாதவன்
      நிற்பதும்மி ருப்பதும்கி
      டப்பதும்என் நெஞ்சுளே. 65
      817
      இன்றுசாதல் நின்றுசாத
      லன்றியாரும் வையகத்து
      ஒன்றிநின்று வாழ்தலின்மை
      கண்டுநீச ரென்கொலோ
      அன்றுபார ளந்தபாத
      போதையுன்னி வானின்மேல்
      சென்றுசென்று தேவராயி
      ருக்கிலாத வண்ணமே 66
      818
      சண்டமண்ட லத்தினூடு
      சென்றுவீடு பெற்றுமேல்
      கண்டுவீடி லாதகாத
      லின்பம்நாளு மெய்துவீர்
      புண்டரீக பாதபுண்ய
      கீர்த்திநுஞ்செ விமடுத்து
      உண்டும்மு றுவினைத்து
      யருள்நீங்கி யுய்ம்மினோ. 67
      819
      முத்திறத்து வாணியத்தி
      ரண்டிலொன்று நீசர்கள்
      மத்தராய்ம யங்குகின்ற
      திட்டதிலி றந்தபோந்து
      எத்திறத்து முய்வதோரு
      பாயமில்லை யுய்குறில்
      தொத்துறத்த தண்டுழாய்நன்
      மாலைவாழ்த்தி வாழ்மினோ. 68
      820
      காணிலும்மு ருப்பொலார்செ
      விக்கினாத கீர்த்தியார்
      பேணிலும்வ ரந்தரமி
      டுக்கிலாத தேவரை
      ஆணமென்ற டைந்துவாழும்
      ஆதர்காள்.எம் மாதிபால்
      பேணிநும்பி றப்பெனும்பி
      ணக்கறுக்க கிற்றிரே. 69
      821
      குந்தமோடு சூலம்வேல்கள்
      தோமரங்கள் தண்டுவாள்
      பந்தமான தேவர்கள்ப
      ரந்துவான கம்முற
      வந்தவாண னீரைஞ்நூறு
      தோள்களைத்து ணித்தநாள்
      அந்தவந்த வாகுலம
      மரரேய றிவரே. 70
      822
      வண்டுலாவு கோதைமாதர்
      காரணத்தி னால்வெகுண்டு
      இண்டவாண னீரைஞ்று
      தோள்களைத்து ணித்தநாள்
      முண்டனீறன் மக்கள்வெப்பு
      மோடியங்கி யோடிட
      கண்டுநாணி வாணனுக்கி
      ரங்கினானெம் மாயனே. 71
      823
      போதில்மங்கை பூதலக்கி
      ழத்திதேவி யன்றியும்
      போதுதங்கு நான்முகன்ம
      கனவன்ம கஞ்சொலில்
      மாதுதங்கு கூறன்ஏற
      தூர்தியென்று வேதநூல்
      ஓதுகின்ற துண்மையல்ல
      தில்லைமற்று ரைக்கிலே 72
      824
      மரம்பொத ரந்துரந்து
      வாலிவீழ முன்னொர்நாள்
      உரம்பொதச்ச ரந்துரந்த
      வும்பராளி யெம்பிரான்
      வரம்குறிப்பில் வைத்தவர்க்க
      லாதுவான மாளிலும்
      நிரம்புநீடு போகமெத்தி
      றத்ததும்யார்க்கு மில்லையே. 73
      825
      அறிந்தறிந்து வாமனன
      டியணைவ ணங்கினால்
      செறிந்தெழுந்த ஞானமோடு
      செல்வமும்சி றந்திடும்
      மறிந்தெழுந்த தெண்டிரையுள்
      மன்னுமாலை வாழ்த்தினால்
      பறிந்தெழுந்து தீவினைகள்
      பற்றறுதல் பான்மையே. 74
      826
      ஒன்றிநின்று நல்தவம்செய்
      தூழியூழி தோறெலாம்
      நின்றுநின்ற வன்குணங்க
      ளுள்ளியுள்ளம் தூயராய்
      சென்றுசென்று தேவதேவ
      ரும்பரும்ப ரும்பராய்
      அன்றியெங்கள் செங்கண்மாலை
      யாவர்காண வல்லரே 75
      827
      புன்புலவ ழியடைத்த
      ரக்கிலச்சி னைசெய்து
      நன்புலவ ழிதிறந்து
      ஞானநற்சு டர்கொளீஇ
      என்பிலெள்கி நெஞ்சுருகி
      யுள்கனிந்தெ ழுந்ததோர்
      அன்பிலன்றி யாழியானை
      யாவர்காண வல்லரே 76
      828
      எட்டுமெட்டு மெட்டுமாயொ
      ரேழுமேழு மேழுமாய்
      எட்டுமூன்று மொன்றுமாகி
      நின்றவாதி தேவனை
      எட்டினாய பேதமோடி
      றைஞ்சிநின்ற வன்பெயர்
      எட்டெழுத்து மோதுவார்கள்
      வல்லர்வான மாளவே. 77
      829
      சோர்விலாத காதலால்தொ
      டக்கறாம னத்தராய்
      நீரராவ ணைக்கிடந்த
      நின்மலன்ந லங்கழல்
      ஆர்வமோடி றைஞ்சிநின்ற
      வன்பெயரெ டெழுத்தும்
      வாரமாக வோதுவார்கள்
      வல்லர்வான மாளவே. 78
      830
      பத்தினோடு பத்துமாயொ
      ரேழினோடொ ரொன்பதாய்
      பத்தினால்தி சைக்கணின்ற
      நாடுபெற்ற நன்மையாய்
      பத்தினாய தோற்றமோடொ
      ராற்றல்மிக்க வாதிபால்
      பத்தராம வர்க்கலாது
      முத்திமுற்ற லாகுமே 79
      831
      வாசியாகி நேசமின்றி
      வந்தெதிர்ந்த தேனுகன்
      நாசமாகி நாளுலப்ப
      நன்மைசேர்ப னங்கனிக்கு
      வீசமேல்நி மிர்ந்ததோளி
      லில்லையாக்கி னாய்கழற்கு
      ஆசையாம வர்க்கலால
      மரராக லாகுமே 80
      832
      கடைந்தபாற்க டல்கிடந்து
      காலநேமி யைக்கடிந்து
      உடைந்தவாலி தன்பினுக்கு
      தவவந்தி ராமனாய்
      மிடைந்தவேழ்ம ரங்களும
      டங்கவெய்துவேங்கடம்
      அடைந்தமால பாதமே
      யடைந்துநாளு முய்ம்மினோ 81
      833
      எத்திறத்து மொத்துநின்று
      யர்ந்துயர்ந்த பெற்றியோய்
      முத்திறத்து மூரிநீர
      ராவணைத்து யின்றநின்
      பத்துறுத்த சிந்தையோடு
      நின்றுபாசம் விட்டவர்க்கு
      எத்திறத்து மின்பமிங்கு
      மங்குமெங்கு மாகுமே. 82
      834
      மட்டுலாவு தண்டுழாய
      லங்கலாய்.பொ லன்கழல்
      விட்டுவீள்வி லாதபோகம்
      விண்ணில்நண்ணி யேறினும்
      எட்டினோடி ரண்டெனும்க
      யிற்றினால்ம னந்தனை
      கட்டிவீடி லாதுவைத்த
      காதலின்ப மாகுமே. 83
      835
      பின்பிறக்க வைத்தனன்கொ
      லன்றிநின்று தன்கழற்கு
      அன்புறைக்க வைத்தநாள
      றிந்தனன்கொ லாழியான்
      தந்திறத்தொ ரன்பிலாவ
      றிவிலாத நாயினேன்
      எந்திறத்தி லென்கொலெம்பி
      ரான்குறிப்பில் வைத்ததே 84
      836
      நச்சராவ ணைக்கிடந்த
      நாத.பாத போதினில்
      வைத்தசிந்தை வாங்குவித்து
      நீங்குவிக்க நீயினம்
      மெய்த்தன்வல்லை யாதலால
      றிந்தனன்நின் மாயமே
      உய்த்துநின்ம யக்கினில்ம
      யக்கலென்னை மாயனே. 85
      837
      சாடுசாடு பாதனே.ச
      லங்கலந்த பொய்கைவாய்
      ஆடராவின் வன்பிடர்ந
      டம்பயின்ற நாதனே
      கோடுநீடு கைய.செய்ய
      பாதநாளு முன்னினால்
      வீடனாக மெய்செயாத
      வண்ணமென்கொல் கண்ணனே. 86
      838
      நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி
      னாதனோடு போதின்மேல்
      நற்றவத்து நாதனோடு
      மற்றுமுள்ள வானவர்
      கற்றபெற்றி யால்வணங்கு
      பாத.நாத. வேதநின்
      பற்றலாலொர் பற்றுமற்ற
      துற்றிலேனு ரைக்கிலே. 87
      839
      வெள்ளைவேலை வெற்புநாட்டி
      வெள்ளெயிற்ற ராவளாய்
      அள்ளலாக்க டைந்தவன்ற
      ருவரைக்கொ ராமையாய்
      உள்ளநோய்கள் தீர்மருந்து
      வானவர்க்க ளித்தஎம்
      வள்ளலாரை யன்றிமற்றொர்
      தெய்வம்நான்ம திப்பனே 88
      840
      பார்மிகுத்த பாரமுன்னொ
      ழிச்சுவான ருச்சனன்
      தேர்மிகுத்து மாயமாக்கி
      நின்றுகொன்று வென்றிசேர்
      மாரதர்க்கு வான்கொடுத்து
      வையமைவர் பாலதாம்
      சீர்மிகுத்த நின்னலாலொர்
      தெய்வம்நான்ம திப்பனே 89
      841
      குலங்களாய வீரிரண்டி
      லொன்றிலும்பி றந்திலேன்
      நலங்களாய நற்கலைகள்
      நாவிலும்ந வின்றிலேன்
      புலன்களைந்தும் வென்றிலேன்பொ
      றியிலேன்பு னிதநின்
      இலங்குபாத மன்றிமற்றொர்
      பற்றிலேனெம் மீசனே. 90
      842
      பண்ணுலாவு மென்மொழிப்ப
      டைத்தடங்க ணாள்பொருட்டு
      எண்ணிலாவ ரக்கரைநெ
      ருப்பினால்நெ ருக்கினாய்
      கண்ணலாலொர் கண்ணிலேன்க
      லந்தசுற்றம் மற்றிலேன்
      எண்ணிலாத மாய.நின்னை
      யென்னுள்நீக்க லென்றுமே. 91
      843
      விடைக்குலங்க ளேழடர்த்து
      வென்றிவேற்கண் மாதரார்
      கடிக்கலந்த தோள்புணர்ந்த
      காலியாய. வேலைநீர்
      படைத்தடைத்த திற்கிடந்து
      முன்கடைந்து நின்றனக்கு
      அடைக்கலம்பு குந்தவென்னை
      யஞ்சலென்ன வேண்டுமே. 92
      844
      சுரும்பரங்கு தண்டுழாய்து
      தைந்தலர்ந்த பாதமே
      விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி
      ரங்கரங்க வாணனே
      கரும்பிருந்த கட்டியே.க
      டல்கிடந்த கண்ணனே
      இரும்பரங்க வெஞ்சரம்து
      ரந்தவில்லி ராமனே. 93
      845
      ஊனின்மேய ஆவிநீஉ
      றக்கமோடு ணர்ச்சிநீ
      ஆனில்மேய ஐந்தும்நீஅ
      வற்றுள்நின்ற தூய்மைநீ
      வானினோடு மண்ணும்நீவ
      ளங்கடற்ப யனும்நீ
      யானும்நீய தன்றியெம்பி
      ரானும்நீயி ராமனே. 94
      846
      அடக்கரும்பு லன்கள்ஐந்த
      டக்கியாசை யாமவை
      தொடக்கறுத்து வந்துநின்தொ
      ழிற்கணின்ற வென்னைநீ
      விடக்கருதி மெய்செயாது
      மிக்கொராசை யாக்கிலும்
      கடற்கிடந்த நின்னலாலொர்
      கண்ணிலேனெம் மண்ணலே. 95
      847
      வரம்பிலாத மாயைமாய.
      வையமேழும் மெய்ம்மையே
      வரம்பிலூழி யேத்திலும்வ
      ரம்பிலாத கீர்த்தியாய்
      வரம்பிலாத பல்பிறப்ப
      றுத்துவந்து நின்கழல்
      பொருந்துமாதி ருந்தநீவ
      ரஞ்செய்புண்ட ரீகனே. 96
      848
      வெய்யவாழி சங்குதண்டு
      வில்லும்வாளு மேந்துசீர
      கையசெய்ய போதில்மாது
      சேருமார்ப நாதனே
      ஐயிலாய வாக்கைநோய
      றுத்துவந்து நின்னடைந்து
      உய்வதோரு பாயம்நீயெ
      னக்குநல்க வேண்டுமே. 97
      849
      மறம்துறந்து வஞ்சமாற்றி
      யைம்புலன்க ளாசையும்
      துறந்துநின்க ணாசையேதொ
      டர்ந்துநின்ற நாயினேன்
      பிறந்திறந்து பேரிடர்ச்சு
      ழிக்கணின்று நீங்குமா
      மறந்திடாது மற்றெனெக்கு
      மாய.நல்க வெண்டுமே. 98
      850
      காட்டினான்செய் வல்வினைப்ப
      யன்றனால்ம னந்தனை
      நாட்டிவைத்து நல்லவல்ல
      செய்யவெண்ணி னாரென
      கேட்டதன்றி யென்னதாவி
      பின்னைகேள்வ. நின்னொடும்
      பூட்டிவைத்த வென்னைநின்னுள்
      நீக்கல்பூவை வண்ணனே. 99
      851
      பிறப்பினோடு பேரிடர
      சுழிக்கண்நின்றும் நீங்குமஃது
      இறப்பவைத்த ஞானநீச
      ரைக்கரைக்கொ டேற்றுமா
      பெறற்கரிய நின்னபாத
      பத்தியான பாசனம்
      பெறற்கரிய மாயனே.
      எனக்குநல்க வேண்டுமே. 100
      852
      இரந்துரைப்ப துண்டுவாழி
      ஏமநீர்தி றத்தமா
      வரர்தரும்தி ருக்குறிப்பில்
      வைத்ததாகில் மன்னுசீர்
      பரந்தசிந்தை யொன்றிநின்று
      நின்னபாத பங்கயம்
      நிரந்தரம்நி னைப்பதாக
      நீநினைக்க வேண்டுமே. 101
      853
      விள்விலாத காதலால்
      விளங்குபாத போதில்வைத்து
      உள்ளுவேன தூனநோயொ
      ழிக்குமாதெ ழிக்குநீர்
      பள்ளிமாய பன்றியாய
      வென்றிவீர குன்றினால்
      துள்ளுநீர்வ ரம்புசெய்த
      தோன்றலொன்று சொல்லிடே. 102
      854
      திருக்கலந்து சேருமார்ப.
      தேவதேவ தேவனே
      இருக்கலந்த வேதநீதி
      யாகிநின்ற நின்மலா
      கருக்கலந்த காளமேக
      மேனியாய நின்பெயர்
      உருக்கலந்தொ ழிவிலாது
      ரைக்குமாறு ரைசெயே. 103
      855
      கடுங்கவந்தன் வக்கரன்க
      ரன்முரன்சி ரம்மவை
      இடந்துகூறு செய்தபல்ப
      டைத்தடக்கை மாயனே
      கிடந்திருந்து நின்றியங்கு
      போதும்நின்ன பொற்கழல்
      தொடர்ந்துவிள்வி லாததோர்தொ
      டர்ச்சிநல்க வேண்டுமே. 104
      856
      மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி
      ரந்துகொண்ட ளந்துமண்
      கண்ணுளல்ல தில்லையென்று
      வென்றகால மாயினாய்
      பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை
      கொங்கைதங்கு பங
      கண்ணநின்ன வண்ணமல்ல
      தில்லையெண்ணும் வண்ணமே. 105
      857
      கறுத்தெதிர்ந்த காலநேமி
      காலனோடு கூடஅன்
      றறுத்தவாழி சங்குதண்டு
      வில்லும்வாளு மேந்தினாய்
      தொறுக்கலந்த வூனமஃதொ
      ழிக்கவன்று குன்றம்முன்
      பொறுத்தநின்பு கழ்க்கலாலொர்
      நேசமில்லை நெஞ்சமே. 106
      858
      காய்சினத்த காசிமன்னன்
      வக்கரன்ப வுண்டிரன்
      மாசினத்த மாலிமாஞ்சு
      மாலிகேசி தேனுகன்
      நாசமுற்று வீழநாள்க
      வர்ந்தநின்க ழற்கலால்
      நேசபாச மெத்திறத்தும்
      வைத்திடேனெம் மீசனே. 107
      859
      கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ
      டும்வரத்த யனரன்
      நாடினோடு நாட்டமாயி
      ரத்தன்நாடு நண்ணிலும்
      வீடதான போகமெய்தி
      வீற்றிருந்த போதிலும்
      கூடுமாசை யல்லதொன்று
      கொள்வனோகு றிப்பிலே 108
      860
      சுருக்குவாரை யின்றியேசு
      ருங்கினாய்சு ருங்கியும்
      பெருக்குவாரை யின்றியேபெ
      ருக்கமெய்து பெற்றியோய்
      செருக்குவார்கள் தீக்குணங்கள்
      தீர்த்ததேவ தேவனென்று
      இருக்குவாய்மு னிக்கணங்க
      ளேத்தயானு மேத்தினேன். 109
      861
      தூயனாயு மன்றியும்சு
      ரும்புலாவு தண்டுழாய்
      மாய.நின்னை நாயினேன்வ
      ணங்கிவாழ்த்து மீதெலாம்
      நீயுநின்கு றிப்பினிற்பொ
      றுத்துநல்கு வேலைநீர
      பாயலோடு பத்தர்சித்தம்
      மேயவேலை வண்ணனே. 110
      862
      வைதுநின்னை வல்லவாப
      ழித்தவர்க்கும் மாறில்போர்
      செய்துநின்னை செற்றதீயில்
      வெந்தவர்க்கும் வந்துன்னை
      எய்தலாகு மென்பராத
      லாலெம்மாய. நாயினேன்
      செய்தகுற்றம் நற்றமாக
      வேகொள்ஞால நாதனே. 111
      863
      வாள்களாகி நாள்கள்செல்ல
      நோய்மைகுன்றி மூப்பெய்தி
      மாளுநாள தாதலால்வ
      ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
      ஆளதாகு நன்மையென்று
      நன்குணர்ந்த தன்றியும்
      மீள்விலாத போகம்நல்க
      வேண்டும்மால பாதமே. 112
      864
      சலங்கலந்த செஞ்சடைக்க
      றுத்தகண்டன் வெண்டலை
      புலன்கலங்க வுண்டபாத
      கத்தன்வன்து யர்கெட
      அலங்கல்மார்வில் வாசநீர்கொ
      டுத்தவன்ன டுத்தசீர்
      நலங்கொள்மாலை நண்ணும்வண்ண
      மெண்ணுவாழி நெஞ்சமே. 113
      865
      ஈனமாய வெட்டுநீக்கி
      யேதமின்றி மீதுபோய்
      வானமாள வல்லையேல்வ
      ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
      ஞானமாகி ஞாயிறாகி
      ஞாலமுற்று மோரெயிற்று
      ஏனமாயி டந்தமூர்த்தி
      யெந்தைபாத மெண்ணியே. 114
      866
      அத்தனாகி யன்னையாகி
      யாளுமெம்பி ரானுமாய்
      ஒத்தொவ்வாத பல்பிறப்பொ
      ழித்துநம்மை யாட்கொள்வான்
      முத்தனார்மு குந்தனார்பு
      குந்துநம்முள் மேவினார்
      எத்தினாலி டர்க்கடல்கி
      டத்தியேழை நெஞ்சமே. 2 115
      867
      மாறுசெய்த வாளரக்கன்
      நாளுலப்ப அன்றிலங்கை
      நீறுசெய்து சென்றுகொன்று
      வென்றிகொண்ட வீரனார்
      வேறுசெய்து தம்முளென்னை
      வைத்திடாமை யால்நமன்
      கூறுசெய்து கொண்டிறந்த
      குற்றமெண்ண வல்லனே. 116
      868
      அச்சம்நோயொ டல்லல்பல்பி
      றப்புவாய மூப்பிவை
      வைத்தசிந்தை வைத்தவாக்கை
      மாற்றிவானி லேற்றுவான்
      அச்சுதன நந்தகீர்த்தி
      யாதியந்த மில்லவன்
      நச்சுநாக ணைக்கிடந்த
      நாதன்வேத கீதனே. 117
      869
      சொல்லினும்தொ ழிற்கணும்தொ
      டக்கறாத வன்பினும்
      அல்லுநன்ப கலினோடு
      மானமாலை காலையும்
      அல்லிநாண்ம லர்க்கிழத்தி
      நாத.பாத போதினை
      புல்லியுள்ளம் விள்விலாது
      பூண்டுமீண்ட தில்லையே. 118
      870
      பொன்னிசூழ ரங்கமேய
      பூவைவண்ண. மாய.கேள்
      என்னதாவி யென்னும்வல்வி
      னையினுள்கொ ழுந்தெழுந்து
      உன்னபாத மென்னிநின்ற
      வொண்சுடர்க்கொ ழுமலர்
      மன்னவந்து பூண்டுவாட்ட
      மின்றுயெங்கும் நின்றதே. 2 119
      871
      இயக்கறாத பல்பிறப்பி
      லென்னைமாற்றி யின்றுவந்து
      உயக்கொள்மேக வண்ணன்நண்ணி
      யென்னிலாய தன்னுளே
      மயக்கினான்றன் மன்னுசோதி
      யாதலாலென் னாவிதான்
      இயக்கெலாம றுத்தறாத
      வின்பவீடு பெற்றதே. 2 120
      திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்
      திருமாலை தனியன்
      திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
      மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்
      கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்- உற்ற
      திருமாலை பாடும்சீர தொண்டரடிப்பொடியெம்
      பெருமானை எப்பொழுதும் பேசு.
      ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை
      872
      காவலிற் புலனை வைத்து
      கலிதனை கடக்க பாய்ந்து
      நாவலி டுழிதரு கின்றோம்
      நமன்தமர் தலைகள் மீதே
      மூவுல குண்டு மிழ்ந்த
      முதல்வ.நின் நாமம் கற்ற
      ஆவலி புடைமை கண்டாய்
      அரங்கமா நகரு ளானே. 2 1
      873
      பச்சைமா மலைபோல் மேனி
      பவளவாய் கமல செங்கண்
      அச்சுதா. அமர ரேறே.
      ஆயர்தம் கொழுந்தே. என்னும்
      இச்சுவை தவிர யான்போய்
      இந்திர லோக மாளும்
      அச்சுவை பெறினும் வேண்டேன்
      அரங்கமா நகரு ளானே. 2
      874
      வேதநூல் பிராயம் நூறு
      மனிசர்தாம் புகுவ ரேலும்
      பாதியு முறங்கி போகும்
      நின்றதில் பதினை யாண்டு
      பேதைபா லகன தாகும்
      பிணிபசி மூப்பு துன்பம்
      ஆதலால் பிறவி வேண்டேன்
      அரங்கமா நகரு ளானே. 3
      875
      மொய்த்தவல் வினையுள் நின்று
      மூன்றெழு துடைய பேரால்
      கத்திர பந்து மன்றே
      பராங்கதி கண்டு கொண்டான்
      இத்தனை யடிய ரானார
      கிரங்கும்நம் மரங்க னாய
      பித்தனை பெற்று மந்தோ.
      பிறவியுள் பிணங்கு மாறே. 4
      876
      பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
      பெரியதோ ரிடும்பை பூண்டு
      உண்டிரா கிடக்கும் போது
      உடலுக்கே கரைந்து நைந்து
      தண்டுழாய் மாலை மார்பன்
      தமர்களா பாடி யாடி
      தொண்டுபூண் டமுத முண்ணா
      தொழும்பர்சோ றுகக்கு மாறே. 5
      877
      மறம்சுவர் மதிளெ டுத்து
      மறுமைக்கே வெறுமை பூண்டு
      புறம்சுவ ரோட்டை மாடம்
      புரளும்போ தறிய மாட்டீர்
      அறம்சுவ ராகி நின்ற
      அரங்கனார காட்செய் யாதே
      புறம்சுவர் கோலஞ் செய்து
      புள்கவ்வ கிடக்கின் றீரே. 6
      878
      புலையற மாகி நின்ற
      புத்தொடு சமண மெல்லாம்
      கலையற கற்ற மாந்தர்
      காண்பரோ கேட்ப ரோதாம்
      தலையறு புண்டும் சாவேன்
      சத்தியங் காண்மின் ஐயா
      சிலையினா லிலங்கை செற்ற
      தேவனே தேவ னாவான். 7
      879
      வெறுப்பொடு சமணர் முண்டர்
      விதியில்சா கியர்கள் நின்பால்
      பொறுப்பரி யனகள் பேசில்
      போவதே நோய தாகி
      குறிப்பென கடையு மாகில்
      கூடுமேல் தலையை ஆங்கே
      அறுப்பதே கருமங் கண்டாய்
      அரங்கமா நகரு ளானே. 8
      880
      மற்றுமோர் தெய்வ முண்டே
      மதியிலா மானி டங்காள்
      உற்றபோ தன்றி நீங்கள்
      ஒருவனென் றுணர மாட்டீர்
      அற்றமே லொன்ற றீயீர்
      அவனல்லால் தெய்வ மில்லை
      கற்றினம் மேய்த்த வெந்தை
      கழலிணை பணிமி னீரே. 9
      881
      நாட்டினான் தெய்வ மெங்கும்
      நல்லதோ ரருள்தன் னாலே
      காட்டினான் திருவ ரங்கம்
      உய்பவர குய்யும் வண்ணம்
      கேட்டிரே நம்பி மீர்காள்.
      கெருடவா கனனும் நிற்க
      சேட்டைதன் மடிய கத்து
      செல்வம்பார திருக்கின் றீரே. 10
      882
      ஒருவில்லா லோங்கு முந்நீர்
      அனைத்துல கங்க ளுய்ய
      செருவிலே யரக்கர் கோனை
      செற்றநம் சேவ கனார்
      மருவிய பெரிய கோயில்
      மதிள்திரு வரங்க மென்னா
      கருவிலே திருவி லாதீர்.
      காலத்தை கழிக்கின் றீரே. 11
      883
      நமனும்முற் கலனும் பேச
      நரகில்நின் றார்கள் கேட்க
      நரகமே சுவர்க்க மாகும்
      நாமங்க ளுடைய நம்பி
      அவனதூ ரரங்க மென்னாது
      அயர்த்துவீழ தளிய மாந்தர்
      கவலையுள் படுகின் றாரென்
      றதனுக்கே கவல்கின் றேனே. 12
      884
      எறியுநீர் வெறிகொள் வேலை
      மாநில துயிர்க ளெல்லாம்
      வெறிகொள்பூ துளவ மாலை
      விண்ணவர் கோனை யேத்த
      அறிவிலா மனித ரெல்லாம்
      அரங்கமென் றழைப்ப ராகில்
      பொறியில்வாழ் நரக மெல்லாம்
      புல்லெழு தொழியு மன்றே 13
      885
      வண்டின முரலும் சோலை
      மயிலினம் ஆலும் சோலை
      கொண்டல்மீ தணவும் சோலை
      குயிலினம் கூவும் சோலை
      அண்டர்கோ னமரும் சோலை
      அணிதிரு வரங்க மென்னா
      மிண்டர்பா துண்ணும் சோற்றை
      விலக்கிநா கிடுமி னீரே. 2 14
      886
      மெய்யர்க்கே மெய்ய னாகும்
      விதியிலா வென்னை போல
      பொய்யர்க்கே பொய்ய னாகும்
      புட்கொடி யுடைய கோமான்
      உய்யப்போ முணர்வி னார்க
      கொருவனென் றுணர்ந்த பின்னை
      ஐயப்பா டறுத்து தோன்றும்
      அழகனூ ரரங்க மன்றே 15
      887
      சூதனா கள்வ னாகி
      தூர்த்தரோ டிசைந்த காலம்
      மாதரார் கயற்க ணென்னும்
      வலையுள்ப டழுந்து வேனை
      போதரே யென்று சொல்லி
      புந்தியில் புகுந்து தன்பால்
      ஆதரம் பெருக வைத்த
      அழகனூ ரரங்க மன்றே 16
      888
      விரும்பிநின் றேத்த மாட்டேன்
      விதியிலேன் மதியொன் றில்லை
      இரும்புபோல் வலிய நெஞ்சம்
      இறையிறை யுருகும் வண்ணம்
      சுரும்பமர் சோலை சூழ்ந்த
      அரங்கமா கோயில் கொண்ட
      கரும்பினை கண்டு கொண்டேன்
      கண்ணிணை களிக்கு மாறே. 17
      889
      இனிதிரை திவலை மோத
      எறியும்தண் பரவை மீதே
      தனிகிட தரசு செய்யும்
      தாமரை கண்ண னெம்மான்
      கனியிரு தனைய செவ்வா
      கண்ணணை கண்ட கண்கள்
      பனியரும் புதிரு மாலோ
      எஞ்செய்கேன் பாவி யேனே. 18
      890
      குடதிசை முடியை வைத்து
      குணதிசை பாதம் நீட்டி
      வடதிசை பின்பு காட்டி
      தென்திசை யிலங்கை நோக்கி
      கடல்நிற கடவு ளெந்தை
      அரவணை துயிலு மாகண்டு
      உடலென குருகு மாலோ
      எஞ்செய்கே னுலக தீரே. 2 19
      891
      பாயுநீ ரரங்க தன்னுள்
      பாம்பணை பள்ளி கொண்ட
      மாயனார் திருநன் மார்பும்
      மரகத வுருவும் தோளும்
      தூய தாமரை கண்களும்
      துவரிதழ் பவள வாயும்
      ஆயசீர் முடியும் தேசும்
      அடியரோர ககல லாமே 20
      892
      பணிவினால் மனம தொன்றி
      பவளவா யரங்க னார்க்கு
      துணிவினால் வாழ மாட்டா
      தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்
      அணியனார் செம்பொ னாய
      அருவரை யனைய கோயில்
      மணியனார் கிடந்த வாற்றை
      மனத்தினால் நினைக்க லாமே 21
      893
      பேசிற்றே பேச லல்லால்
      பெருமையொன் றுணர லாகாது
      ஆசற்றார் தங்க கல்லால்
      அறியலா வானு மல்லன்
      மாசற்றார் மனத்து ளானை
      வணங்கிநா மிருப்ப தல்லால்
      பேசத்தா னாவ துண்டோ
      பேதைநெஞ் சே.நீ சொல்லாய். 22
      894
      கங்கயிற் புனித மாய
      காவிரி நடுவு பாட்டு
      பொங்குநீர் பரந்து பாயும்
      பூம்பொழி லரங்க தன்னுள்
      எங்கள்மா லிறைவ னீசன்
      கிடந்ததோர் கிடக்கை கண்டும்
      எங்ஙனம் மறந்து வாழ்கேன்
      ஏழையே னேழை யேனே. 23
      895
      வெள்ளநீர் பரந்து பாயும்
      விரிபொழி லரங்க தன்னுள்
      கள்ளனார் கிடந்த வாறும்
      கமலநன் முகமும் கண்டு
      உள்ளமே. வலியை போலும்
      ஒருவனென் றுணர மாட்டாய்
      கள்ளமே காதல் செய்துன்
      கள்ளத்தே கழிக்கின் றாயே. 24
      896
      குளித்துமூன் றனலை யோம்பும்
      குறிகொள தணமை தன்னை
      ஒளித்திட்டே னென்க ணில்லை
      நின்கணும் பத்த னல்லேன்
      களிப்பதென் கொண்டு நம்பீ.
      கடல்வண்ணா. கதறு கின்றேன்
      அளித்தென கருள்செய் கண்டாய்
      அரங்கமா நகரு ளானே. 25
      897
      போதெல்லாம் போது கொண்டுன்
      பொன்னடி புனைய மாட்டேன்
      தீதிலா மொழிகள் கொண்டுன்
      திருக்குணம் செப்ப மாட்டேன்
      காதலால் நெஞ்ச மன்பு
      கலந்திலே னதுதன் னாலே
      ஏதிலே னரங்கர்க்கு எல்லே.
      எஞ்செய்வான் தோன்றி னேனே. 26
      898
      குரங்குகள் மலையை தூ
      குளித்துத்தாம் புரண்டி டோ டி
      தரங்கநீ ரடைக்க லுற்ற
      சலமிலா அணிலம் போலேன்
      மரங்கள்போல் வலிய நெஞ்சம்
      வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
      அரங்கனார காட்செய் யாதே
      அளியத்தே னயர்க்கின் றேனே. 27
      899
      உம்பரா லறிய லாகா
      ஒளியுளார் ஆனை காகி
      செம்புலா லுண்டு வாழும்
      முதலைமேல் சீறி வந்தார்
      நம்பர மாய துண்டே
      நாய்களோம் சிறுமை யோரா
      எம்பிராற் காட்செய் யாதே
      எஞ்செய்வான் தோன்றி னேனே. 28
      900
      ஊரிலேன் காணி யில்லை
      உறவுமற் றொருவ ரில்லை
      பாரில்நின் பாத மூலம்
      பற்றிலேன் பரம மூர்த்தி
      காரொளி வண்ண னே.என்
      கண்ணனே. கதறு கின்றேன்
      ஆருளர களை ணம்மா.
      அரங்கமா நகரு ளானே. 29
      901
      மனத்திலோர் தூய்மை யில்லை
      வாயிலோ ரிஞ்சொ லில்லை
      சினத்தினால் செற்றம் நோக்கி
      தீவிளி விளிவன் வாளா
      புனத்துழாய் மாலை யானே.
      பொன்னிசூழ் திருவ ரங்கா
      எனக்கினி கதியென் சொல்லாய்
      என்னையா ளுடைய கோவே. 30
      902
      தவத்துளார் தம்மி லல்லேன்
      தனம்பட தாரி லல்லேன்
      உவர்த்தநீர் போல வென்றன்
      உற்றவர கொன்று மல்லேன்
      துவர்த்தசெவ் வாயி னார்க்கே
      துவக்கற துரிச னானேன்
      அவத்தமே பிறவி தந்தாய்
      அரங்கமா நகரு ளானே. 31
      903
      ஆர்த்துவண் டலம்பும் சோலை
      அணிதிரு வரங்க தன்னுள்
      கார்த்திர ளனைய மேனி
      கண்ணனே. உன்னை காணும்
      மார்க்கமொ றறிய மாட்டா
      மனிசரில் துரிச னாய
      மூர்க்கனேன் வந்து நின்றேன்
      மூர்க்கனேன் மூர்க்க னேனே. 32
      904
      மெய்யெல்லாம் போக விட்டு
      விரிகுழ லாரில் பட்டு
      பொய்யெலாம் பொதிந்து கொண்ட
      போட்கனேன் வந்து நின்றேன்
      ஐயனே. அரங்க னே.உன்
      அருளென்னு மாசை தன்னால்
      பொய்யனேன் வந்து நின்றேன்
      பொய்யனேன் பொய்ய னேனே. 33
      905
      உள்ளத்தே யுறையும் மாலை
      உள்ளுவா னுணர்வொன் றில்லா
      கள்ளத்தேன் நானும் தொண்டா
      தொண்டுக்கே கோலம் பூண்டேன்
      உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
      உடனிரு தறிதி யென்று
      வெள்கிப்போ யென்னுள் ளேநான்
      விலவற சிரித்தி டேனே. 34
      906
      தாவியன் றுலக மெல்லாம்
      தலைவிளா கொண்ட எந்தாய்
      சேவியே னுன்னை யல்லால்
      சிக்கென செங்கண் மாலே
      ஆவியே.அமுதே என்றன்
      ஆருயி ரனைய எந்தாய்
      பாவியே னுன்னை யல்லால்
      பாவியேன் பாவி யேனே. 35
      907
      மழைக்கன்று வரைமு னேந்தும்
      மைந்தனே.மதுர வாறே
      உழைக்கன்றே போல நோக்கம்
      உடையவர் வலையுள் பட்டு
      உழைக்கின்றேற் கென்னை நோக்கா
      தொழிவதேஉன்னை யன்றே
      அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி.
      அரங்கமா நகரு ளானே. 36
      908
      தெளிவிலா கலங்கல் நீர்சூழ்
      திருவரங்கங் கத்துள் ளோங்கும்
      ஒளியுளார் தாமே யன்றே
      தந்தையும் தாயு மாவார்
      எளியதோ ரருளு மன்றே
      எந்திற தெம்பி ரானார்
      அளியன்நம் பையல் என்னார்
      அம்மவோ கொடிய வாறே. 37
      909
      மேம்பொருள் போக விட்டு
      மெய்ம்மையை மிகவு ணர்ந்து
      ஆம்பரி சறிந்து கொண்டு
      ஐம்புல னகத்த டக்கி
      காம்புற தலைசி ரைத்துன்
      கடைத்தலை யிருந்துவாழும்
      சோம்பரை உகத்தி போலும்
      சூழ்புனல் அரங்க தானே. 2 38
      910
      அடிமையில் குடிமை யில்லா
      அயல்சது பேதி மாரில்
      குடிமையில் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்ப ரேலும்
      முடியினில் துளபம் வைத்தாய்.
      மொய்கழற் கன்பு செய்யும்
      அடியரை யுகத்தி போலும்
      அரங்கமா நகரு ளானே. 39
      911
      திருமறு மார்வ.நின்னை
      சிந்தையுள் திகழ வைத்து
      மருவிய மனத்த ராகில்
      மாநில துயிர்க ளெல்லாம்
      வெருவர கொன்று சுட்டி
      டீட்டிய வினைய ரேலும்
      அருவினை பயன துய்யார்
      அரங்கமா நகரு ளானே. 40
      912
      வானுளா ரறிய லாகா
      வானவா. என்ப ராகில்
      தேனுலா துளப மாலை
      சென்னியாய். என்ப ராகில்
      ஊனமா யினகள் செய்யும்
      ஊனகா ரகர்க ளேலும்
      போனகம் செய்த சேடம்
      தருவரேல் புனித மன்றே 41
      913
      பழுதிலா வொழுக லாற்று
      பலசது பேதி மார்கள்
      இழிகுல தவர்க ளேலும்
      எம்மடி யார்க ளாகில்
      தொழுமினீர் கொடுமின் கொள்மின்.
      என்றுநின் னோடு மொக்க
      வழிபட வருளி னாய்போன்ம்
      மதிள்திரு வரங்க தானே. 42
      913
      அமரவோ ரங்க மாறும்
      வேதமோர் நான்கு மோதி
      தமர்களில் தலைவ ராய
      சாதி தணர்க ளேலும்
      நுமர்களை பழிப்ப ராகில்
      நொடிப்பதோ ரளவில் ஆங்கே
      அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்கமா நகரு ளானே. 43
      915
      பெண்ணுலாம் சடையி னானும்
      பிரமனு முன்னை காண்பான்
      எண்ணிலா வூழி யூழி
      தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
      விண்ணுளார் வியப்ப வந்து
      ஆனைக்கன் றருளை யீந்த
      கண்ணறா உன்னை யென்னோ
      களைகணா கருது மாறே. 2 44
      916
      வளவெழும் தவள மாட
      மதுரைமா நகர தன்னுள்
      கவளமால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க மாலை
      துவளத்தொண் டாய தொல்சீர
      தொண்டர டிப்பொ டிசொல்
      இளையபுன் கவிதை யேலும்
      எம்பிறார் கினிய வாறே. 2 45
      தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்
      திருப்பள்ளியெழுச்சி
      திருமலையாண்டான் அருளியது
      தமேவமத்வா பரவாஸுதேவம்
      ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
      ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
      பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.
      திருவரங்கப்பெருமாளரையர் அருளியது
      மண்டங் குடியென்பர் மாமரையோர் மன்னியசீர
      தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
      திணர்த்தவயல் தென்னரங்க தம்மானை பள்ளி
      உணர்த்தும் பிரானுதித்த வூர்.
      ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி
      917
      கதிரவன் குணதிசை சிகரம்வ தணைந்தான்
      கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்
      மதுவிரி தொழுகின மாமல ரெல்லாம்
      வானவ ரரசர்கள் வந்துவ தீண்டி
      எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
      இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
      அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 2 1
      918
      கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவி
      கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
      எழுந்தன மலரணை பள்ளிகொள் ளன்னம்
      ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி
      விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
      வெள்ளெயி றுறவதன் விடத்தனு கனுங்கி
      அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 2
      919
      சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
      படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
      பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்
      மடலிடை கீறிவண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
      அடலொளி திகழ்தரு திகிரி தடக்கை
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 3
      920
      மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
      வேய்ங்குழ லோசையும் விடைமணி குரலும்
      ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
      இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
      வாட்டிய வரிசிலை வானவ ரேறே.
      மாமுனி வேள்வியை காத்துஅவ பிரதம்
      ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே.
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 4
      921
      புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
      போயிற்று கங்குல் புகுந்தது புலரி
      கலந்தது குணதிசை கனைகட லரவம்
      களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
      அலங்கல தொடையல்கொண் டடியிணை பணிவான்
      அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
      இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
      எம்பெரு மான்.பள்ளி யெழுந்தரு ளாயே. 5
      922
      இரவியர் மணிநெடு தேரொடு மிவரோ
      இறையவர் பதினொரு விடையரு மிவரோ
      மருவிய மயிலின னறுமுக னிவனோ
      மருதரும் வசுக்களும் வந்துவ தீண்டி
      புரவியோ டாடலும் பாடலும் தேரும்
      குமரதண் டம்புகு தீண்டிய வெள்ளம்
      அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 6
      923
      அந்தர தமரர்கள் கூட்டங்க ளிவையோ
      அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ
      இந்திர னானையும் தானும்வ திவனோ
      எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
      சுந்தரர் நெருக்கவி சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
      அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 7
      924
      வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
      எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
      ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
      தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ
      தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி
      அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 8
      925
      ஏதமில் தண்ணுமை யெக்க தளியே
      யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி
      கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
      கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்
      மாதவர் வானவர் சாரண ரியக்கர்
      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
      ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. 2 9
      926
      கடிமலர கமலங்கள் மலர்ந்தன இவையோ
      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
      துடியிடை யார்சுரி குழல்பிழி துதறி
      துகிலுடு தேறினர் சூழ்புன லரங்கா
      தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
      தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
      அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்-
      காட்படு தாய்.பள்ளி எழுந்தரு ளாயே. 2 10
      தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
      அமலனாதிபிரான் தனியன்கள்
      பெரிய நம்பிகள் அருளியது
      ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
      மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
      அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
      யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.
      திருமலை நம்பிகள் அருளியது
      காட்டவே கண்ட பாத
      கமலம்நல் லாடை யுந்தி
      தேட்டரு முதர பந்தம்
      திருமார்பு கண்டம் செவ்வாய்
      வாட்டமில் கண்கள் மேனி
      முனியேறி தனிபு குந்து
      பாட்டினால் கண்டு வாழும்
      பாணர்தாள் பரவி னோமே.
      திருப்பாணாழ்வார் அருளி செய்த அமலனாதிபிரான்
      927
      அமல னாதிபிரா னடியார
      கென்னை யாட்படுத்த
      விமலன் விண்ணவர் கோன்விரை
      யார்பொழில் வேங்கடவன்
      நிமலன் நின்மலன் நீதி வானவன்
      நீள்மதி ளரங்க தம்மான் திரு
      கமல பாதம்வ தென்கண்ணி
      னுள்ளன வொக்கின்றதே. 2 1
      928
      உவந்த வுள்ளத்தனா யுலகமள தண்டமுற
      நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
      கவர்ந்த வெங்கணை காகுத்தன் கடியார்பொழில்
      அரங்க தம்மான் அரை
      சிவந்த ஆடையின் மேல்சென்ற
      தாமென் சிந்தனையே. 2
      929
      மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
      சந்தி செய்ய நின்றா னரங்க தரவி னணையான்
      அந்தி போல்நிற தாடையு மதன்மேல்
      அயனை படைத்த தோரெழில்
      உந்தி மேலதன் றோஅடி
      யேனுள்ள தின்னுயிரே. 2 3
      930
      சதுரமா மதிள்சூழ் ழிலங்கை
      கிறைவன் தலைபத்து
      உதிர வோட்டிஓர் வெங்கணை
      யுய்த்தவ னோத வண்ணன்
      மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்க
      தம்மான்திருவயிற்
      றுதரப தனமென்
      னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. 4
      931
      பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
      வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
      யென்னுள் புகுந்தான்
      கோர மாதவம் செய்தனன்கொ லறியே
      னரங்க தம்மான்திரு
      வார மார்பதன் றோஅடி
      யேனை யாட்கோண்டதே. 5
      932
      துண்ட வெண்பிறை யான்துயர்
      தீர்த்தவன் அஞ்சிறைய
      வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்
      அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்
      எழுமால்வரை முற்றும்
      உண்ட கண்டங்கண் டீரடி
      யேனை யுய்யக்கொண்டதே. 6
      933
      கையி னார்சுரி சங்கன லாழியர் நீள்வரைபோல்
      மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
      ஐயனார் அணியரங்கனா ரரவி
      னணைமிசை மேய மாயனார்
      செய்யவா யையோ. என்னை
      சிந்தை கவர்ந்ததுவே. 7
      934
      பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு
      அரிய ஆதிபிரா னரங்க தமலன் முகத்து
      கரிய வாகி புடைபரந்து மிளிர்ந்து
      செவ்வரி யோடி நீண்டவ
      பெரிய வாய கண்க
      ளென்னை பேதைமை செய்தனவே. 8
      935
      ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்
      ஞால மேழு முண்டா னரங்க தரவி னணையான்
      கோல மாமணி யாரமும் முத்து தாமமும்
      முடிவில்ல தோரெழில்
      நீல மேனி யையோ.
      நிறை கொண்டதென் நெஞ்சினையே. 2 9
      936
      கொண்டல் வண்ணனை
      கோவல னாய்வெண்ணெய்
      உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை
      அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினை
      கண்ட கண்கள்மற் றொன்றினை காணாவே. 2 10
      திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
      கண்ணி நிண்சிறுத்தாம்பு தனியன்கள்
      ஸ்ரீ நாதமுனிகள் அருளிச்செய்தவை
      அவிதிதவிஷயாந்தரச்சடாரே
      ருபநிஷதாமுபகாநமாத்ரபோக
      அபிசகுணவஸா ததேகஸேஷீ
      மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
      இருகவிற்ப நேரிசை வெண்பா
      வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
      மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறுஎங்கள்
      வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
      ஆள்வார் அவரே யரண்.
      ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
      கண்ணி நுண்சிறுத்தாம்பு
      937
      கண்ணி நுண்சிறு தாம்பினால் கட்டுண்ண
      பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
      நண்ணி தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
      அண்ணி கும்அமு தூறுமென் நாவுக்கே. 2 1
      938
      நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
      மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
      தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
      பாவி னின்னிசை பாடி திரிவனே. 2
      939
      திரித தாகிலும் தேவ பிரானுடை
      கரிய கோல திருவுரு காண்பன்நான்
      பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
      உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே. 3
      940
      நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்
      புன்மை யா கருதுவ ராதலின்
      அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
      தன்மை யான்சட கோபனென் நம்பியே. 4
      941
      நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
      நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
      செம்பொன் மாட திருக்குரு கூர்நம்பி
      கன்ப னாய்அடி யேஞ்சதிர தேனின்றே. 5
      942
      இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
      நின்று தன்புக ழேத்த வருளினான்
      குன்ற மாட திருக்கு கூர்நம்பி
      என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. 6
      943
      கண்டு கொண்டென்னை காரிமா றப்பிரான்
      பண்டை வல்வினை பாற்றி யருளினான்
      எண்டி சையு மறிய இயம்புகேன்
      ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. 7
      944
      அருள்கொண் டாடு மடியவ ரின்புற
      அருளி னானவ் வருமறை யின்பொருள்
      அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்
      அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. 8
      945
      மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
      நிற்க பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
      தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆ
      புக்க காத லடிமை பயனன்றே 9
      946
      பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
      செயல்நன் றாக திருத்தி பணிகொள்வான்
      குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
      முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. 2 10
      947
      அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
      அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
      அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
      நம்பு வார்ப்பதி வைகுந்தம் காண்மினே. 2 11
      ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்


      -
      948-1447
      ------------------------------------------------------------------------
      2

      .


      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      ------------------------------------------------------------------------
      நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 948-1447
      திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
      பெரிய திருமொழி
      முதற் பத்து
      948
      வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
      பெருந்துயரிடும்பையில் பிறந்து
      கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
      அவர்த்தரும் கலவியேகருதி
      ஓடினேன் ஓடியுய்வதோர பொருளால்
      உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
      நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
      நாராயணா வென்னும் நாமம். 2 1.1.1
      949
      ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
      அவரவர்ப்பணைமுலைதுணையா
      பாவியேனுணரா தெத்தனைபகலும்
      பழுதுபோயொழிந்தனநாள்கள்
      தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
      சூழ்புனற்குடந்தையேதொழுது என்
      நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
      நாராயணாவென்னும் நாமம். 2 1.1.2
      950
      சேமமேவேண்டி தீவினைபெருக்கி
      தெரிவைமாருருவமேமருவி
      ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
      ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்
      காமனார் தாதைநம்முடையடிகள்
      தம்மடைந்தார்மனத்திருப்பார்
      நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
      நாராயணாவென்னும்நாமம். 1.1.3
      951
      வென்றியே வேண்டி வீழ்பொரு கிரங்கி
      வேற்கணார் கலவியே கருதி
      நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
      என்செய்கேன் நெடுவிசும்பணவும்
      பன்றியா யன்றுபாரகங்கீண்ட
      பாழியா னாழியானருளே
      நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
      நாராயணாவென்னும்நாமம். 1.1.4
      952
      கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
      கண்டவாதிரிதந்தேனேலும்
      தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
      சிக்கெனத்திருவருள்பெற்றேன்
      உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
      உடம்பெலாம்கண்ணநீர்சோர
      நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
      நாராயணாவென்னும்நாமம். 1.1.5
      953
      எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
      எனக்கரசு என்னுடைவாணாள்
      அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
      அவருயிர்செகுத்தவெம்மண்ணல்
      வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
      மாமணிக்கோயிலேவணங்கி
      நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
      நாராயணாவென்னும்நாமம். 2 1.1.6
      954
      இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
      இன்னதோர்த்தன்மையென்றுணரீர்
      கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
      கண்டவாதொண்டரைப்பாடும்
      சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
      சூழ்புனற்குடந்தையேதொழுமின்
      நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
      நாராயணாவென்னும்நாமம். 1.1.7
      955
      கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
      கருத்துளே திருத்தினேன் மனத்தை
      பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
      பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்
      செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
      செல்கதிக்குய்யுமாறெண்ணி
      நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
      நாராயணாவென்னும்நாமம். 1.1.8
      956
      குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படுதுயராயினவெல்லம்
      நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
      அருளொடுபெருநிலமளிக்கும்
      வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
      தாயினு மாயினசெய்யும்
      நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
      நாராயணாவென்னும்நாமம். 2 1.1.9
      957
      மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
      மங்கையார்வாள் கலிகன்றி
      செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை
      இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.
      துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
      துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
      நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
      நாராயணாவென்னும் நாமம். 2 1.1.10
      958
      வாலிமாவலத்தொருவனதுடல்கெட
      வரிசிலைவளைவித்துஅன்று
      ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
      இருந்தநலிமய்யத்துள்
      ஆலிமாமுகிலதிர்தர அருவரை
      அகடுறமுகடேறி
      பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனை
      பிரிதிசென்றடைநெஞ்சே. 2 1.2.1
      959
      கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
      அருவரையணைகட்டி
      இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
      இருந்தநல்லிமயத்து
      விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
      வேழங்கள்துயர்க்கூர
      பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.2
      960
      துடிகொள்ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
      றிளங்கொடிதிறத்து ஆயர்
      இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
      இருந்தநல்லிமயத்து
      கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
      மணியறைமிசைவேழம்
      பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.3
      961
      மறங்கொளாளரியுருவெனவெருவர
      ஒருவனதகல்மார்வம்
      திறந்துவானவர்மணிமுடிபணிதர
      இருந்தநல்லிமயத்துள்
      இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திட
      கிடந்தருகெரிவீசும்
      பிறங்குமாமணியருவியொடிழிதரு
      பிரிதிசென்றடைனெஞ்சே. 1.2.4
      962
      கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
      அமரர்கள்தொழுதேத்த
      அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
      அமர்ந்தநல்லிமயத்து
      வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
      அளைமிகுதேன்தோய்த்து
      பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.5
      963
      பணங்களாயிரமுடையநல்லவரவணை
      பள்ளிகொள் பரமாவென்று
      இணங்கிவானவர்மணிமுடிபணிதர
      இருந்தநல்லிமயத்து
      மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
      நிமிர்ந்தவைமுகில்பற்றி
      பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.6
      964
      கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
      கறிவளர்க்கொடிதுன்னி
      போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
      பூம்பொழிலிமயத்துள்
      ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படி தினமலர்
      எட்டுமிட்டிமையோர்கள்
      பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.7
      965
      இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
      இரும்பசியதுகூர
      அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
      அருவரையிமயத்து
      பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
      எண்ணிநின்றிமையோர்கள்
      பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகை
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.8
      966
      ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
      உறுதுயரடையாமல்
      ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
      இருந்தநல்லிமயத்து
      தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
      தழல்புரையெழில்நோக்கி
      பேதைவண்டுகளெரியெனவெருவரு
      பிரிதிசென்றடைநெஞ்சே. 1.2.9
      967
      கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
      அவைமுழங்கிடகளிறென்று
      பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
      பிரிதியெம்பெருமானை
      வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
      கலியனதொலிமாலை
      அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
      அருவினையடயாவே. 1.2.10
      968
      முற்றமூத்துக்கோல்துணையா
      முன்னடிநோக்கிவளைந்து
      இற்றகால்போல்தள்ளி
      மெள்ள இருந்தங்கிளையாமுன்
      பெற்றதாய்போல்வந்த
      பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
      வற்றவாங்கியுண்ட
      வாயான் வதரிவணங்குதுமே. 1.3.1
      969
      முதுகுபற்றிக்கைத்த
      லத்தால் முன்னொருகோலூன்றி
      விதிர்விதிர்த்துக்கண்
      சுழன்று மேற்கிளைகொண்டிருமி
      இதுவென்னப்பர் மூத்தவா
      றென்று இளையவரேசாமுன்
      மதுவுண்வண்டுபண்கள்
      பாடும் வதரிவணங்குதுமே. 1.3.2
      970
      உறிகள்போல்மெய்ந்நரம்
      பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி
      நெறியைநோக்கிக்கண்
      சுழன்று நின்றுநடுங்காமுன்
      அறிதியாகில்நெஞ்சம்
      அன்பா யாயிரநாமஞ்சொல்லி
      வெறிகொள்வண்டுபண்கள்
      பாடும் வதரிவணங்குதுமே. 1.3.3
      971
      பீளைசோரக்கண்ணி
      டுங்கி பித்தெழமூத்திருமி
      தாள்கள் நோவத்தம்மில்
      முட்டி தள்ளிநடவாமுன்
      காளையாகிக்கன்று
      மேய்த்து குன்றெடுத்தன்றுநின்றான்
      வாளைபாயும்தண்ட
      டஞ்சூழ் வதரிவணங்குதுமே. 1.3.4
      972
      பண்டுகாமரான
      வாறும் பாவையர்வாயமுதம்
      உண்டவாறும் வாழ்ந்த
      வாறும் ஒக்கவுரைத்திருமி
      தண்டுகாலாவூன்றி
      யூன்றி தள்ளிநடவாமுன்
      வண்டுபாடும்தண்டு
      ழாயான் வதரிவணங்குதுமே. 1.3.5
      973
      எய்த்தசொல்லோடீளை
      யேங்கி இயிருமியிளைத்துடலம்
      பித்தர்ப்போலச்சித்தம்
      வேறா பேசியயராமுன்
      அத்தனெந்தையாதி
      மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த
      மைத்தசோதியெம்பெ
      ருமான் வதரிவணங்குதுமே. 1.3.6
      974
      பப்பவப்பர்மூத்த
      வாறு பாழ்ப்பதுசீத்திரளை
      யொப்ப ஐக்கள்போத
      வுந்த உன்தமர்க்காண்மினென்று
      செப்புநேர்மென்கொங்கை
      நல்லார் தாம்சிரியாதமுன்னம்
      வைப்பும்நங்கள்வாழ்வு
      மானான் வதரிவணங்குதுமே. 1.3.7
      975
      ஈசிபோமினீங்கி
      ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
      கூசியிட்டீரென்று
      பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்
      நாசமானபாசம்
      விட்டு நன்னெறிநோக்கலுறில்
      வாசம்மல்குதண்டு
      ழாயான் வதரிவணங்குதுமே. 1.3.8
      976
      புலன்கள்நையமெய்யில்
      மூத்து போந்திருந்துள்ளமெள்கி
      கலங்கவைக்கள்போத
      வுந்தி கண்டபிதற்றாமுன்
      அலங்கலாயதண்டு
      ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி
      வலங்கொள்தொண்டர்ப்பாடி
      யாடும் வதரிவணங்குதுமே. 1.3.9
      977
      வண்டுதண்டேனுண்டுவாழும்
      வதரிநெடுமாலை
      கண்டல்வேலிமங்கை
      வேந்தன் கலியனொலிமாலை
      கொண்டுதொண்டர்ப்பாடி
      யாட கூடிடில்நீள்விசும்பில்
      அண்டமல்லால்மற்ற
      வர்க்கு ஓராட்சியறியோமே. 1.3.10
      978
      ஏனமுனாகியிருநிலமிடந்து
      அன்றிணையடியிமையவர்வணங்க
      தானவனாகம்தரணியில்புரள
      தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்
      தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
      தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து
      வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1
      979
      கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
      கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்
      ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
      உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்
      தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
      சென்றுசென்றிறைஞ்சிட பெருகு
      வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.2
      980
      இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
      இருநிதிக்கிறைவனும் அரக்கர்
      குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த
      கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற
      விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
      வெண்துகிற்கொடியெனவிரிந்து
      வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.3
      981
      துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே.
      தொழுதெழுதொண்டர்கள்தமக்கு
      பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
      பேரருளாளனெம்பெருமான்
      அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும்
      ஆரமும்வாரிவந்து அணிநீர்
      மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.4
      982
      பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
      பெருமுலைசுவைத்திட பெற்ற
      தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
      தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்
      சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
      செம்பொன்செய்விலங்கலிலிலங்கு
      வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5
      983
      தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
      திறத்து ஒருமறத்தொழில்புரிந்து
      பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
      பனிமுகில்வண்ணனெம்பெருமான்
      காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
      கருவரைபிளவெழக்குத்தி
      வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.6
      984
      வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
      விண்ணொடுவிண்ணவர்க்கரசும்
      இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
      எந்தையெம்மடிகளெம்பெருமான்
      அந்தரத்தமரரடியிணைவணங்க
      ஆயிரமுகத்தினாலருளி
      மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7
      985
      மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
      மன்னவன்பொன்னிறத்துரவோன்
      ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
      உகிர்நுதிமடுத்து அயனரனை
      தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
      தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த
      மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.8
      986
      கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர
      குரைகடலுலகுடனனைத்தும்
      உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த
      உம்பருமூழியுமானான்
      அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
      அங்கவனியாளலமர பெருகு
      மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.9
      987
      வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
      வதரியாச்சிராமத்துள்ளானை
      கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணி
      கலியன்வாயொலிசெய்தபனுவல்
      வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
      வானவருலகுடன் மருவி
      இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
      இமையவராகுவர்தாமே. 1.4.10
      988
      கலையும்கரியும்பரிமாவும்
      திரியும்கானம்கடந்துபோய்
      சிலையும்கணையும்துணையாக
      சென்றான்வென்றிச்செறுக்களத்து
      மலைகொண்டலைநீரணைகட்டி
      மதிள்நீரிலங்கைவாளரக்கர்
      தலைவன் தலைபத்தறுத்துகந்தான்
      சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.1
      989
      கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்
      உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்
      இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்
      தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.2
      990
      உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்
      நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
      வலவன் வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
      சலவன் சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.3
      991
      ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய
      தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
      பேரான் பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
      தாரான் தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.4
      992
      அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
      விடுத்தான் விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்
      கடுத்தார்த்தெழுந்தபெருமழையை கல்லொன்றேந்தியினநிரைக்கா
      தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.5
      993
      தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
      வாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
      ஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும்
      தாயான் காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.6
      994
      ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை
      ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்
      வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்
      தானாய் தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.7
      995
      வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து ஓர்
      சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று என்
      எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
      தந்தான் சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.8
      996
      தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்
      அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்
      வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய
      தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.9
      997
      தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை
      காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை
      ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள
      பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. 1.5.10
      998
      வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
      பேணினேன் அதனைப்பிழையெனக்கருதி பேதையேன்பிறவிநோயறுப்பான்
      ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
      நாணினேன் வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.1
      999
      சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து
      புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கி போக்கினேன் பொழுதினைவாளா
      அலம்புரிதடக்கையாயனேமாயா. வானவர்க்கரசனே. வானோர்
      நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.2
      1000
      சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து
      காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்
      வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த
      நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.3
      1001
      வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை
      நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து எரியெழுகின்ற
      செம்பினாலியன்றபாவையை பாவீ. தழுவெனமொழிவதர்க்கஞ்சி
      நம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.4
      1002
      இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று
      நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
      கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி
      நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.5
      1003
      கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு
      ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால் நமனார்
      பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே. பாற்கடல்கிடந்தாய்.
      நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.6
      1004
      நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்
      துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.
      வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும்
      நஞ்சனே. வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.7
      1005
      ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு ஐவர்
      கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.
      பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து என்
      நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.8
      1006
      ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்
      தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்
      தேனுடைக்கமலத்திருவினுக்கரசே. திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்.
      நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.9
      1007
      ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று இமையோர்
      நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து
      காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்
      ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே. 1.6.10
      1008
      அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
      பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
      பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ
      செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1
      1009
      அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
      கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
      மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப
      சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே. 1.7.2
      1010
      ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
      வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்
      ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்
      தேய்ந்தவேயுமல்லதில்லா சிங்கவேள்குன்றமே. 1.7.3
      1011
      எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
      வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்
      கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று
      தெய்வமல்லால்செல்லவொண்ணா சிங்கவேள்குன்றமே. 1.7.4
      1012
      மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
      பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
      நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய
      சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5
      1013
      எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று
      இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்
      நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை
      திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.6
      1014
      முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்
      அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்
      கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்
      தினைத்தனையும்செல்லவொண்ணா சிங்கவேள்குன்றமே. 1.7.7
      1015
      நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
      ஏத்த அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்
      காய்த்தவாகைநெற்றொலிப்ப கல்லதர்வேய்ங்கழைபோய்
      தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.8
      1016
      நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்
      அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்
      நெல்லிமல்கிக்கல்லுடை புல்லிலையார்த்து அதர்வா
      சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே. 1.7.9
      1017
      செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய
      எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்ற்புலவன்
      மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்
      செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே. 1.7.10
      1018
      கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்
      சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்
      பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம் பொங்குநீர
      செங்கயல்திளைக்கும்சுனை திருவேங்கடமடை நெஞ்சமே. 1.8.1
      1019
      பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை
      பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்
      வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி நாடொறும்
      தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.2
      1020
      நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்
      என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்
      கன்றிமாரிபொழிந்திட கடிதானிரைக்கிடர் நீக்குவான்
      சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.3
      1021
      பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்
      கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்
      ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
      தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.4
      1022
      வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்
      மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்
      எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்
      திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.5
      1023
      எண்டிசைகளுமேழுலகமும்வாங்கி பொன்வயிற்றில்பெய்து
      பண்டோ ராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்
      ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
      திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.6
      1024
      பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்
      பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்
      காரும்வார்ப்பனிநீள்விசும்பிடை சோருமாமுகில்தோய்தர
      சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.7
      1025
      அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்
      வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்
      கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்
      செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.8
      1026
      பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று பின்னரும்
      பேசுவார்த்தம்மையுய்யவாங்கி பிறப்பறுக்கும் பிரானிடம்
      வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்
      தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே. 2 1.8.9
      1027
      செங்கயல்திளைக்கும் சுனை திருவேங்கடத்துறைசெல்வனை
      மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்
      சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே
      வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே. 1.8.10
      1028
      தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்
      நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்
      வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.
      நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே. 1.9.1
      1029
      மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
      நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்
      தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை என்
      ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.2
      1030
      கொன்றேன்பல்லுயிரை குறிக்கோளொன்றிலாமையினால்
      என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்
      குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.
      அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.3
      1031
      குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
      நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்
      நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா.
      அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.4
      1032
      எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்
      துப்பா. நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்
      செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை என்
      அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.5
      1033
      மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்
      புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்
      விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா.
      அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.6
      1034
      தெரியென்பாலகனா பலதீமைகள்செய்துமிட்டேன்
      பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்
      கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.
      அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.7
      1035
      நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்
      ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்.
      கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா.
      ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.8
      1036
      பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்
      மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே.
      கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா.
      அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே. 1.9.9
      1037
      கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை
      விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை
      திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்
      பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே. 1.9.10
      1038
      கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்
      திண்ணாகம்பிளக்க சரம்செலவுய்த்தாய்.
      விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய
      அண்ணா. அடியேன் இடரைக்களையாயே. 1.10.1
      1039
      இலங்கைப்பதிக்கு அன்றீறையாய அரக்கர்
      குலம்கெட்டவர்மாள கொடிப்புள்திரித்தாய்.
      விலங்கல்குடுமி திருவேங்கடம்மேய
      அலங்கல்துளபமுடியாய். அருளாயே. 1.10.2
      1040
      நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு
      ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்.
      சீரார் திருவேங்கடமாமலைமேய
      ஆராவமுதே. அடியேற்கருளாயே. 1.10.3
      1041
      உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக
      கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே
      விண்தோய்சிகர திருவேங்கடம்மேய
      அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே. 1.10.4
      1042
      தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி
      பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.
      சேணார் திருவேங்கடமாமலைமேய
      கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே. 1.10.5
      1043
      மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி
      தன்னாகி தன்னினருள்செய்யும்தலைவன்
      மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய
      என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே. 1.10.6
      1044
      மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த
      ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.
      தேனே. திருவேங்கடமாமலைமேய
      கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. 1.10.7
      1045
      சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
      மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள்
      வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய
      ஆயனடியல்லது மற்றறையேனே. 1.10.8
      1046
      வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்
      நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.
      சிந்தாமணியே திருவேங்கடம்மேய
      எந்தாய். இனியானுன்னை யென்றும் விடேனே. 1.10.9
      1047
      வில்லார்மலி வேங்கடமாமலைமேய
      மல்லார்த்திரடோ ள் மணிவண்ணனம்மானை
      கல்லார்த்திரடோ ள் கலியன்சொன்னமாலை
      வல்லாரவர் வானவராகுவர்த்தாமே. 1.10.10
      1048
      வானவர் தங்கள் சிந்தை போலேன்
      நெஞ்சமே. இனிதுவந்து மாதவ
      மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை
      கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி மாண்குறள்
      ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2 2.1.1
      1049
      உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்
      உகந்தவர் தம்மை மண்மிசை
      பிறவி யேகெடு பானது கண்டென் நெஞ்சமென்பாய்
      குறவர் மாதர்க ளோடு வண்டு
      குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து
      அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.2
      1050
      இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
      ஏத்து வாருற வோடும் வானிடை
      கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்
      வண்டு வாழ்வட வேங்கடமலை
      கோயில் கொண்டத னோடும் மீமிசை
      அண்ட மாண்டிரு பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.3
      1051
      பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே.
      பண்டு தொண்டுசெய் தாரை மண்மிசை
      மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை
      கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
      வேங்க டமலை யாண்டு வானவர்
      ஆவி யாயிரு பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.4
      1052
      பொங்கு போதியும் பிண்டி யுமுடை
      புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை
      தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்
      எங்கும் வானவர் தான வர்நிறை
      தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
      அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.5
      1053
      துவரி யாடையர் மட்டை யர்சமண்
      தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்
      தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்
      கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்
      கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை
      அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே. 2.1.6
      1054
      தருக்கி னால்சமண் செய்து சோறுதண்
      தயிரினால்திரளைமி டற்றிடை
      நெருக்கு வார்அல கணது கண்டென் நெஞ்சமென்பாய்
      மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
      கோயில் கொண்டத னோடும் வானிடை
      அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.7
      1055
      சேயனணியன் சிறியன் பெரிய னென்பது
      சிலர்ப்பேச கேட்டிரு
      தேஎன் னெஞ்சமென் பாய்.என கொன்று சொல்லாதே
      வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி
      வேங்க டமலை கோயில் மேவிய
      ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.8
      1056
      கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்
      நெஞ்சமென் பாய். துணிந்துகேள்
      பாடி யாடி பலரும் பணிந்தேத்தி காண்கிலா
      ஆடு தாமரை யோனு மீசனும்
      அமர் கோனும்நின் றேத்தும்வேங்கடத்து
      ஆடு கூத்தனு கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 2.1.9
      1057
      மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க
      டமலை கோயில் மேவிய
      அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
      கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி
      கன்றி யிந்தமி ழாலு ரைத்த இம்
      மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. 2 2.1.10
      1058
      காசை யாடை மூடியோடி காதல்செய் தானவனூர்
      நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்
      வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
      ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2 2.2.1
      1059
      தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்
      பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்அன்று
      செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சர தாலுருள
      எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.2
      1060
      முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்துஅரக்கன்
      மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
      பின்னோர் தூத னாதிமன்னர காகி பெருநிலத்தார்
      இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. 2.2.3
      1061
      பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்
      வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்
      நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்
      எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. 2.2.4
      1062
      பால நாகி ஞாலமேழு
      முண்டுபண் டாலிலைமேல்
      சால நாளும் பள்ளிகொள்ளும்
      தாமரை கண்ணன்எண்ணில்
      நீல மார்வண் டுண்டுவாழும்
      நெய்தல தண்கழனி
      ஏல நாறும் பைம்புறவி
      லெவ்வுள் கிடந்தானே. 2.2.5
      1063
      சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டி தொடர்ந்தழைக்கும்
      ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்
      மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-
      தேத்தும் நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2.6
      1064
      திங்க ளப்பு வானெரிகாலாகி திசைமுகனார்
      தங்க ளப்பன் சாமியப்பன் பாக திருந்தவண்டுண்
      தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற
      எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. 2.2.7
      1065
      முனிவன் மூர்த்தி மூவராகி
      வேதம் விரித்துரைத்த
      புனிதன் பூவை வண்ணனண்ணல்
      புண்ணியன் விண்ணவர்கோன்
      தனியன் சேயன் தானொருவன்
      ஆகிலும் தன்னடியார்க்கு
      இனியன் எந்தை யெம்பெருமான்
      எவ்வுள் கிடந்தானே. 2.2.8
      1066
      பந்தி ருக்கும் மெல்விரலாள்
      பாவை பனிமலராள்
      வந்தி ருக்கும் மார்வன்நீல
      மேனி மணிவண்ணன்
      அந்த ரத்தில் வாழும் வானோர்
      நாயக னாயமைந்த
      இந்தி ரற்கும் தம்பெருமா
      னெவ்வுள் கிடந்தானே. 2.2.9
      1067
      இண்டை கொண்டு தொண்டரேத்த
      எவ்வுள் கிடந்தானை
      வண்டு பாடும் பைபுறவில்
      மங்கையர் கோன்கலியன்
      கொண்ட சீரால் தண்டமிழ்செய்
      மாலையீ ரைந்தும்வல்லார்
      அண்ட மாள்வ தாணையன்றே
      லாள்வ ரருலகே. 2 2.2.10
      1068
      விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
      வேழமும் பாகனும் வீழ
      செற்றவன் றன்னை புரமெரி செய்த
      சிவனுறு துயர்களை தேவை
      பற்றலர் வீ கோல்கையில் கொண்டு
      பார்த்தன்றன் தேர்முன்நின் றானை
      சிற்றவை பணியால் முடிதுற தானை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2 2.3.1
      1069
      வேதத்தை வே தின்சுவை பயனை
      விழுமிய முனிவர்கள் விழுங்கும்
      கோதிலின் கனியை நந்தனார் களிற்றை
      குவல தோர்தொழு தேத்தும்
      ஆதியை யமுதை யென்னை யாளுடை
      அப்பனை ஒப்பவ ரில்லா
      மாதர்கள் வாழும் மாடமா மயிலை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2 2.3.2
      1070
      வஞ்சனை செ தாயுரு வாகி
      வந்தபே யலறிமண் சேர
      நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
      நாதனை தானவர் கூற்றை
      விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
      துதிசெ பெண்ணுரு வாகி
      அஞ்சுவை யமுத மன்றளி தானை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2.3.3
      1071
      இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
      எழில்விழ வில்பழ நடைசெய்
      மந்திர விதியில் பூசனை பெறாது
      மழைபொழி திடத்தளர்ந்து ஆயர்
      அந்தமோ டினவா நிரைதள ராமல்
      எம்பெரு மானரு ளென்ன
      அந்தமில் வரையால் மழைதடு தானை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2.3.4
      1072
      இந்துணை பது தலர்மகள் தனக்கும்
      இன்பன்நற் புவிதன கிறைவன்
      தந்துணை யாயர் பாவைந பின்னை
      தனக்கிறை மற்றையோர கெல்லாம்
      வன்துணை பஞ்ச பாண்டவர காகி
      வாயுரை தூதுசென் றியங்கும்
      என்துணை எந்தை தந்தைதம் மானை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2.3.5
      1073
      அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற்
      கிளையவ னணியிழை யைச்சென்று
      எந்த குரிமை செய் என தரியாது
      எம்பெரு மானருள் என்ன
      சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம்
      பெண்டிரு மெய்திநூ லிழப்ப
      இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2.3.6
      1074
      பரதனும் தம்பி சத்துரு கனன்னும்
      இலக்கும னோடுமை திலியும்
      இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற
      இராவணா தகனையெம் மானை
      குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு
      குயிலொடு மயில்கள்நின் றால
      இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியா
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2 2.3.7
      1075
      பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
      வாயிலோ ராயிர நாமம்
      ஒள்ளிய வாகி போதவாங் கதனு
      கொன்றுமோர் பொறுப்பில னாகி
      பிள்ளையை சீறி வெகுண்டுதூண் புடை
      பிறையெயிற் றனல்விழி பேழ்வாய்
      தெள்ளிய சிங்க மாகிய தேவை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2 2.3.8
      1076
      மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
      வேட்கையி னோடுசென் றிழிந்த
      கானமர் வேழம் கையெடு தலற
      கராவதன் காலினை கதுவ
      ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
      சென்றுநின் றாழிதொ டானை
      தேனமர் சோலை மாடமா மயிலை
      திருவல்லி கேணிக்கண் டேனே. 2 2.3.9
      1077
      மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
      மாடமா ளிகையும்மண் டபமும்
      தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலை
      திருவல்லி கேணிநின் றானை
      கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
      காமரு சீர்க்கலி கன்றி
      சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
      சுகமினி தாள்வர்வா னுலகே. 2 2.3.10
      1078
      அன்றாயர்கு லக்கொடி யோடணிமா
      மலர்மங்கையொ டன்பளவிஅவுணர
      கென்றானு மிரக்கமி லாதவனுக்கு
      குறையுமிட மாவதுஇரும்பொழில்சூழ்
      நன்றாயபு னல்நறை யூர்த்திருவா
      லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்
      நின்றானிரு தான்கிட தான்நடந்தாற்
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2 2.4.1
      1079
      காண்டாவன மென்பதொர் காடமரர
      கரையனது கண்டவன் நிற்கமுனே
      மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்
      அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர
      தாண்டான்அவுணனவன் மார்வகலம்
      உகிரால்வகி ராகமு னிந்து அரியாய்
      நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனு
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.2
      1080
      அலமன்னு மடல்சுரி சங்கமெடு
      தடலாழியி னாலணி யாருருவில்
      புலமன்னு வடம்புனை கொங்கையினாள்
      பொறைதீரமு னாளடு வாளமரில்
      பலமன்னர் படச்சுட ராழியினை
      பகலோன்மறை யப்பணி கொண்டுஅணிசேர்
      நிலமன்னனு மாயுல காண்டவனு
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.3
      1081
      தாங்காததோ ராளரி யாயவுணன் -
      றனைவீட முனிந்தவ னாலமரும்
      பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளை
      ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்
      பாங்காகமுன் ஐவரொ டன்பளவி
      பதிற்றைந்திர டிப்படை வேந்தர்பட
      நீங்காச்செரு வில்நிறை காத்தவனு
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.4
      1082
      மாலுங்கட லாரம லைக்குவடி
      டணைகட்டி வரம்புருவமதிசேர்
      கோலமதி ளாயவி லங்கைகெட
      படைதொட்டொரு காலம ரிலதிர
      காலமிது வென்றயன் வாளியினால்
      கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்
      நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.5
      1083
      பாராருல கும்பனி மால்வரையும்
      கடலும்சுட ருமிவை யுண்டும் என
      காரா தென நின்றவ னெம்பெருமான்
      அலைநீருல குக்கரசாகியஅப்-
      பேரானைமுனிந்தமுனிக்கரையன்
      பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்
      நீரார்ப்பே ரான்நெடு மாலவனு
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.6
      1084
      புகராருரு வாகிமுனிந்தவனை
      புகழ்வீட முனிந்துயி ருண்டுஅசுரன்
      நகராயின பாழ்பட நாமமெறிந்-
      ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்
      பகராதவ னாயிர நாமமடி
      பணியாதவ னைப்பணி யாமலரில்
      நிகராயவன் நெஞ்சிட தானவனு
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.7
      1085
      பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்
      பிணந்தின்மடவாரவர் போல்அங்ஙனே
      அச்சமிலர் நாணில ராதன்மையால்
      அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்
      நச்சிநம னாரடை யாமைந
      கருள்செய் எனவுள்குழை தார்வமொடு
      நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.8
      1086
      பேசுமள வன்றிது வம்மின்நமர்.
      பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்
      நாசமது செய்திடும் ஆதன்மையால்
      அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
      வாசமணி வண்டறை பைம்புறவில்
      மனமைந்தொடு நைந்துழல் வார்மதியில்
      நீசரவர் சென்றடை யாதவனு
      கிடம்மாமலை யாவது நீர்மலையே. 2.4.9
      1087
      நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
      நிலவும்புகழ் மங்கையர் கோன்அமரில்
      கடமாகளி யானைவல்லான் கலியன்
      ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்குஉடனே
      விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்
      எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்
      கொடுமாகடல் வையக மாண்டுமதி
      குடைமன்னவ ராயடி கூடுவரே. 2 2.4.10
      1088
      பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணை
      பாடுகடலி லமுதத்தை பரிவாய்கீண்ட
      சீரானை எம்மானை தொண்டர்தங்கள்
      சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
      போரானை கொம்பொசித்த போரேற்றினை
      புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை
      காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தை
      கண்டதுநான் கடல்மல்லை தலசயனத்தே. 2 2.5.1
      1089
      பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டு
      பொய்ந்லை மெய்ந்லென் றென்றுமோதி
      மாண்டுஅவத்தம் போகாதே வம்மினெந்தை
      என்வணங்க படுவானை கணங்களேத்தும்
      நீண்டவத்தை கருமுகிலை எம்மான்தன்னை
      நின்றவூர் நித்திலத்தை தொத்தார்சோலை
      காண்டவத்தை கனலெரிவா பெய்வித்தானை
      கண்டதுநான் கடல்மல்லை தலசயனத்தே. 2 2.5.2
      1090
      உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
      உலகுய்ய நின்றானைஅன்றுபேய்ச்சி
      விடம்பருகு வித்தகனை கன்றுமேய்த்து
      விளையாட வல்லானை வரைமீகானில்
      தடம்பருகு கருமுகிலை தஞ்சைக்கோயில்
      தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்
      கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடன்மல்லை தலசயனத்தே. 2.5.3
      1091
      பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னை
      பிணைமருப்பில் கருங்களிற்றை பிணைமான்னோக்கின்
      ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
      அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே
      கோத்தானை குடமாடு கூத்தன்றன்னை
      கோகுலங்கள் தளராமல் குன்றமேந்தி
      காத்தானை எம்மானை கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே. 2.5.4
      1092
      பாய்ந்தானை திரிசகடம் பாறிவீழ
      பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
      ஏய்ந்தானை இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
      ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை
      தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்ற
      பொய்யறைவா புகப்பெய்த மல்லர்மங
      காய்த்தானை எம்மானை கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே. 2.5.5
      1093
      கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி
      கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
      படர்ந்தானை படுமதத்த களிற்றின்கொம்பு
      பறித்தானை பாரிடத்தை எயிறுகீற
      இடந்தானை வளைமருப்பி னேனமாகி
      இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
      கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே. 2.5.6
      1094
      பேணாத வலியரக்கர் மெலியவன்று
      பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை
      பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனை
      பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
      ஊணாக பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
      உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை
      காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடன்மல்லை தலசயனத்தே. 2.5.7
      1095
      பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானை
      பிறையெயிற்றன் றடலரியா பெருகினானை
      தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
      தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி
      என்ணானை யெண்ணிறந்த புகழினானை
      இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
      கண்ணானை கண்ணார கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே. 2.5.8
      1096
      தொண்டாயர் தாம்பரவு மடியினானை
      படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
      விண்டானை தென்னிலங்கை யரக்கர்வேந்தை
      விலங்குண்ண வலங்கைவா சரங்களாண்டு
      பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
      வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
      கண்டானை தொண்டனேன் கண்டுகொண்டேன்
      கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே. 2.5.9
      1097
      படநாக தணைக்கிடந்தன் றவுணர்கோனை
      படவெகுண்டு மருதிடைப்போ பழனவேலி
      தடமார்ந்த கடல்மல்லை தலசயனத்து
      தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை
      கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர
      கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்
      திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
      தீவினையை முதலரிய வல்லார்தாமெ. 2 2.5.10
      1098
      நண்ணாத வாளவுண
      ரிடைப்புக்கு வானவரை
      பெண்ணாகி யமுதூட்டும்
      பெருமானார் மருவினிய
      தண்ணார்ந்த கடன்மல்லை
      தலசயன துறைவாரை
      எண்ணாதே யிருப்பாரை
      யிறைப்பொழுது மெண்ணோமே. 2 2.6.1
      1099
      பார்வண்ண மடமங்கை
      பனிநன்மா மலர்க்கிழத்தி
      நீர்வண்ணன் மார்வகத்தி
      லிருக்கையைமுன் நினைந்தவனூர்
      கார்வண்ண முதுமுந்நீர
      கடல்மல்லை தலசயனம்
      ஆரெண்ணும் நெஞ்சுடையா
      ரவரெம்மை யாள்வாரே. 2.6.2
      1100
      ஏனத்தி னுருவாகி
      நிலமங்கை யெழில்கொண்டான்
      வானத்தி லவர்முறையால்
      மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
      கானத்தின் கடல்மல்லை
      தலசயன துறைகின்ற
      ஞானத்தி னொளியுருவை
      நினைவாரென் நாயகரே. 2.6.3
      1101
      விண்டாரை வென்றாவி
      விலங்குண்ண மெல்லியலார்
      கொண்டாடும் மல்லகலம்
      அழலேற வெஞ்சமத்து
      கண்டாரை கடல்மல்லை
      தலசயன துறைவாரை
      கொண்டாடும் நெஞ்சுடையா
      ரவரெங்கள் குலதெய்வமே. 2.6.4
      1102
      பி சிறுபீலி
      சமண்குண்டர் முதலாயோர்
      விச்சை கிறையென்னு
      மவ்விறையை பணியாதே
      கச்சி கிடந்தவனூர்
      கடன்மல்லை தலசயனம்
      நச்சி தொழுவாரை
      நச்சென்றன் நன்னெஞ்சே. 2.6.5
      1103
      புலன்கொள்நிதி குவையோடு
      புழைக்கைமா களிற்றினமும்
      நலங்கொள்நவ மணிக்குவையும்
      சுமந்தெக்கும் நான்றொசிந்து
      கலங்களியங் கும்மல்லை
      கடல்மல்லை தலசயனம்
      வலங்கொள்மன தாரவரை
      வலங்கொள்ளென் மடநெஞ்சே. 2.6.6
      1104
      பஞ்சி சிறுகூழை
      யுருவாகி மருவாத
      வஞ்சப்பெண் நஞ்சுண்ட
      அண்ணல்முன் நண்ணாத
      கஞ்சை கடந்தவனூர்
      கடன்மல்லை தலசயனம்
      நெஞ்சில் தொழுவாரை
      தொழுவாயென் தூய்நெஞ்சே. 2.6.7
      1105
      செழுநீர் மலர்க்கமலம்
      திரையுந்த வன்பகட்டால்
      உழுநீர் வயலுழவ
      ருழப்பின்முன் பிழைத்தெழுந்த
      கழுநீர் கடிகமழும்
      கடன்மல்லை தலசயனம்
      தொழுநீர் மனத்தவரை
      தொழுவாயென் தூய்நெஞ்சே. 2.6.8
      1106
      பிணங்களிடு காடதனுள்
      நடமாடு பிஞ்ஞகனோடு
      இணங்குதிரு சக்கரத்தெம்
      பெருமானார கிடம்விசும்பில்
      கணங்களியங் கும்மல்லை
      கடன்மல்லை தலசயனம்
      வணங்குமன தாரவரை
      வணங்கென்றன் மடநெஞ்சே. 2.6.9
      1107
      கடிகமழு நெடுமறுகில்
      கடல்மல்லை தலசயனத்து
      அடிகளடி யேநினையு
      மடியவர்கள் தம்மடியான்
      வடிகொள்நெடு வேல்வலவன்
      கலிகன்றி யொலிவல்லார்
      முடிகொள்நெடு மன்னவர்தம்
      முதல்வர்முத லாவாரே. 2 2.6.10
      1108
      திவளும்வெண் மதிபோல் திருமுக தரிவை
      செழுங்கட லமுதினிற் பிறந்த
      அவளும்நின் னாக திருப்பது மறிந்தும்
      ஆகிலு மாசைவி டாளால்
      குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
      சொல்லுநின் தாள திருந்த
      இவளைஉன் மனத்தா லென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2 2.7.1
      1109
      துளம்படு முறுவல் தோழியர கருளாள்
      துணைமுலை சாந்துகொண் டணியாள்
      குளம்படு குவளை கண்ணிணை யெழுதாள்
      கோலநன் மலர்க்குழற் கணியாள்
      வளம்படு முந்நீர் வையமுன் னளந்த
      மாலென்னும் மாலின மொழியாள்
      இளம்படி யிவளு கென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.2
      1110
      சாந்தமும் பூணும் சந்தன குழம்பும்
      தடமுலை கணியிலும் தழலாம்
      போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்
      பொருகடல் புலம்பிலும் புலம்பும்
      மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்
      வளைகளும் இறைநில்லா என்தன்
      ஏந்திழை யிவளு கென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.3
      1111
      ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும்
      ஒண்சுடர் துயின்றதால் என்னும்
      ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா
      தென்றலும் தீயினிற் கொடிதாம்
      தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும்
      சொல்லுமி னென்செய்கேன் என்னும்
      ஏழையென் பொன்னு கென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.4
      1112
      ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள்
      உருகும்நின் திருவுரு நினைந்து
      காதன்மை பெரிது கையற வுடையள்
      கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்
      பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
      தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்
      ஏதலர் முன்னா என்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.5
      1113
      தன்குடி கேதும் தக்கவா நினையாள்
      தடங்கடல் நுடங்கெயி லிலங்கை
      வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
      வார்த்தைகே டின்புறும் மயங்கும்
      மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
      மென்முலை பொன்ப திருந்த
      என்கொடி யிவளு கென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.6
      1114
      உளங்கனி திருக்கும் உன்னையே பிதற்றும்
      உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்
      வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை
      மாயனே. என்றுவாய் வெருவும்
      களங்கனி முறுவல் காரிகை பெரிது
      கவலையோ டவலம்சேர திருந்த
      இளங்கனி யிவளு கென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.7
      1115
      அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்
      கழியுமா லென்னுள்ளம். என்னும்
      புலங்கெழு பொருநீர புட்குழி பாடும்
      போதுமோ நீர்மலை கெ ன்னும்
      குலங்கெழு கொல்லி கோமள வல்லி
      கொடியிடை நெடுமழை கண்ணி
      இலங்கெழில் தோளி கென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.8
      1116
      பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள்
      பொருகயல் கண்துயில் மறந்தாள்
      அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ
      ணங்கினு குற்றநோ யறியேன்
      மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
      வீங்கிய வனமுலை யாளுக்கு
      என்கொலாம் குறிப்பி லென்னினை திருந்தாய்
      இடவெந்தை யெந்தை பிரானே. 2.7.9
      1117
      அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
      ஆயஎம் மாயனே. அருளாய்
      என்னுமின் தொண்டர கின்னருள் புரியும்
      இடவெந்தை யெந்தை பிரானை
      மன்னுமா மாட மங்கையர் தலைவன்
      மானவேல் கலியன்வா யொலிகள்
      பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்றறு பாரே. 2 2.7.10
      1118
      திரிபுர மூன்றெரி தானும்மற்றை
      மலர்மிசை மேலய னும்வியப்ப
      முரிதிரை மாகடல் போல்முழங்கி
      மூவுல கும்முறை யால்வணங்க
      எரியன கேசர வாளெயிற்றோ
      டிரணிய னாக மிரண்டுகூறா
      அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2 2.8.1
      1119
      வெந்திறல் வீரரில் வீரரொப்பார்
      வேத முரைத்திமை யோர்வணங்கும்
      செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்
      தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்
      வந்து குறளரு வாய்நிமிர்ந்து
      மாவலி வேள்வியில் மண்ணளந்த
      அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.2
      1120
      செம்பொ னிலங்கு வலங்கைவாளி
      திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்
      உம்ப ரிருசுட ராழியோடு
      கேடக மொண்மலர் பற்றியெற்றே
      வெம்பு சினத்தடல் வேழம்வீழ
      வெண்மரு பொன்று பறித்துஇருண்ட
      அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.3
      1121
      மஞ்சுயர் மாமணி குன்றமேந்தி
      மாமழை காத்தொரு மாயவானை
      யஞ்சஅதன்மரு பொன்றுவாங்கும்
      ஆயர்கொல் மாய மறியமாட்டேன்
      வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி
      வேதமு னோதுவர் நீதிவானத்து
      அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.4
      1122
      கலைகளும் வேதமும் நீதிநூலும்
      கற்பமும் சொற்பொருள் தானும்மற்றை
      நிலைகளும் வானவர கும்பிறர்க்கும்
      நீர்மையி நாலருள் செய்துநீண்ட
      மலைகளும் மாமணி யும்மலர்மேல்
      மங்கையும் சங்கமும் தங்குகின்ற
      அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.5
      1123
      எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்
      ஏது மறிகிலம் ஏந்திழையார்
      சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
      தம்மன வாக புகுந்துதாமும்
      பொங்கு கருங்கடல் பூவைகாயா
      போதவிழ் நீலம் புனைந்தமேகம்
      அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.6
      1124
      முழுசிவண் டாடிய தண்டுழாயின்
      மொய்ம்மலர கண்ணியும்மேனியஞ்சாந்-
      திழிசிய கோல மிருந்தவாறும்
      எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்
      எழுதிய தாமரை யன்னகண்ணும்
      ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்
      அழகிய தாமிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.7
      1125
      மேவியெ பாலும்விண் ணோர்வணங்க
      வேத முரைப்பர்மு நீர்மடந்தை
      தேவிஅ பாலதிர் சங்கமிப்பால்
      சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்
      காவியொ பார்க்கட லேயுமொப்பார்
      கண்ணும் வடிவும் நெடியராய்என்
      ஆவியொ பாரிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.8
      1126
      தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா
      நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
      வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி
      வாய்திற தொன்று பணித்ததுண்டு
      நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்
      நானிவர் தம்மை யறியமாட்டேன்
      அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன
      அட்ட புயகர தேனென்றாரே. 2.8.9
      1127
      மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்
      நீள்முடி மாலை வயிரமேகன்
      தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி
      அட்ட புயகர தாதிதன்னை
      கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
      காமரு சீர்க்கலி கன்றிகுன்றா
      இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
      யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. 2 2.8.10
      1128
      சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை
      யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்
      நல்லரன் நான்முகன் நாரண னுக்கிட
      தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
      பல்லவன் வில்லவ னென்றுல கில்பல
      ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
      பல்லவன் மல்லையர் கோன்பணிநத பர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2 2.9.1
      1129
      கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட
      ரும்நில னும்மலை யும்தன்னுந்தி
      தார்மன்னு தாமரை கண்ணனி டம்தட
      மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி
      தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு
      வில்திறல் வாட்டிய திண்சிலையோன்
      பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.2
      1130
      உரந்தரு மெல்லணை பள்ளிகொண் டானொரு
      கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்
      வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி
      மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
      நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு
      வாயி லுகச்செரு வில்முனநாள்
      பரந்தவன் பல்லவர் கோன்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.3
      1131
      அண்டமு மெண்டிசை யும்நில னுமலை
      நீரொடு வானெரி கால்முதலா
      உண்டவன் எந்தைபி ரானதி டமொளி
      மாடங்கள் சூந்தழ காயகச்சி
      விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரை
      தாரிரி யச்செரு வில்முனைந்து
      பண்டொரு கால்வளை தான்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.4
      1132
      தூம்புடை திண்கைவன் தாள்களிற் றின்துயர்
      தீர்த்தர வம்வெருவமுனநாள்
      பூம்புனல் பொய்கைபு கானவ னுக்கிட
      தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
      தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசை
      பச்செரு மேல்வி தன்றுசென்ற
      பாம்புடை பல்லவர் கோன்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.5
      1133
      திண்படை கோளரி யினுரு வாய்த்திற
      லோனக லம்செரு வில்முனநாள்
      புண்பட போழ்ந்த பிரானதி டம்பொரு
      மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
      வெண்குடை நீழல்செங் கோல்நட பவிடை
      வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த
      பண்புடை பல்லவர் கோன்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.6
      1134
      இலகிய நீண்முடி மாவலி தன்பெரு
      வேள்வியில் மாணுரு வாய்முனநாள்
      சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிட
      தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
      உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி
      மாமதிள் சூழ்கரு வூர்வெருவ
      பலபடை சாயவென் றான்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.7
      1135
      குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங்
      கைப்படை யாமலை யால்கடலை
      அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி
      மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
      விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு
      வச்செரு வேல்வலங் கைப்பிடித்த
      படைத்திறல் பல்லவர் கோன்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.8
      1136
      பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
      முன்னொரு கால்செரு வில்லுருமின்
      மறையுடை மால்விடை யேழடர தாற்கிட
      தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
      கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்
      போல முழங்கும் குரல்கடுவாய்
      பறையுடை பல்லவர் கோன்பணி தபர
      மேச்சுர விண்ணக ரமதுவே. 2.9.9
      1137
      பார்மன்னு தொல்புகழ பல்லவர் கோன்பணி
      தபர மேச்சுர விண்ணகர்மேல்
      கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை
      வன்கலி கன்றிகுன் றாதுரைத்த
      சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்த்திரு
      மாமகள் தன்னரு ளால்உலகில்
      தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு
      நீருல காண்டு திகழ்வர்களே. 2 2.9.10
      1138
      மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்
      வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்
      எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்
      இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை
      துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை தென்பால்
      தூயநான் மறையாளர் சோமு செய்ய
      செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2 2.10.1
      1139
      கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
      தீபம்கொண் டமரர்த்தொழ பணங்கொள்பாம்பில்
      சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
      தாமிருவ ரடிவருடும் தன்மை யானை
      வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
      வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
      சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வ
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.2
      1140
      கொழுந்தலரு மலர்ச்சோலை குழாங்கொள் பொய்கை
      கோள்முதலை வாளெயிற்று கொண்டற்கெள்கி
      அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி
      அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை
      எழுந்தமலர கருநீல மிருந்தில் காட்ட
      இரும்புன்னை முத்தரும்பி செம்பொன்காட்ட
      செழுந்தடநீர கமலம்தீ விகைபோல் காட்டும்
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.3
      1141
      தாங்கரும்போர் மாலிபட பறவை யூர்ந்து
      தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை
      ஆங்கரும்பி கண்ணீர்சோர தன்பு கூரும்
      அடியவர்க காரமுத மானான் றன்னை
      கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை
      குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
      தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.4
      1142
      கறைவளர்வேல் கரன்முதலா கவந்தன் வாலி
      கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்
      பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்
      பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை
      மறைவளர புகழ்வளர மாட தோறும்
      மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத
      சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.5
      1143
      உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்
      குண்டானை கண்டாய்ச்சி யுரலோ டார்க்க
      தறியார்ந்த கருங்களிறே போல நின்று
      தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை
      வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு
      வியன்கலையெண் தோளினாள் விளங்கு செல்வ
      செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.6
      1144
      இருங்கைம்மா கரிமுனிந்து பரியை கீறி
      இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து
      வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு
      வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை
      கருங்கமுகு பசும்பாளை வெண்மு தீன்று
      காயெல்லாம் மரகதமா பவளங் காட்ட
      செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலை
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.7
      1145
      பாரேறு பெரும்பார தீர பண்டு
      பாரதத்து தூதியங்கி பார்த்தன் செல்வ
      தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
      செருக்களத்து திறலழி செற்றான்றன்னை
      போரேறொன் றுடையானு மளகை கோனும்
      புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்
      சீரேறு மறையாளர் நிறைந்த செல்வ
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.8
      1146
      தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
      சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற
      காவடிவின் கற்பகமே போல நின்று
      கலந்தவர்க கருள்புரியுங் கருத்தி னானை
      சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
      செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை
      தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. 2.10.9
      1147
      வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல
      மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை
      சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வ
      திருக்கோவ லூரதனுள் கண்டேன் என்று
      வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
      வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்
      காரணங்க லாலுகங் கலந்தங கேத்த
      கரந்தெங்கும் பரந்தானை காண்பர் தாமே. 2 2.10.10
      பெரிய திருமொழி மூன்றாம் பத்து
      1148
      இருந்தண் மாநில மேனம தாய்வளை
      மருப்பினி லகத்தொடுக்கி
      கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்
      கமலநன் மலர்த்தேறல்
      அருந்தி இன்னிசை முரன்றெழும் அளிகுலம்
      பொதுளியம் பொழிலூடே
      செருந்தி நாண்மலர் சென்றணை துழிதரு
      திருவயி திரபுரமே. 2 3.1.1
      1149
      மின்னு மாழியங் கையவன் செய்யவள்
      உறைதரு திருமார்பன்
      பன்னு நான்மறை பலபொரு ளாகிய
      பரனிடம் வரைச்சாரல்
      பின்னு மாதவி பந்தலில் பெடைவர
      பிணியவிழ் கமலத்து
      தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு
      திருவயி திரபுரமே. 3.1.2
      1150
      வைய மேழுமுண் டாலிலை வைகிய
      மாயவன் அடியவர்க்கு
      மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்
      மெய்தகு வரைச்சாரல்
      மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
      முல்லையங் கொடியாட
      செய்ய தாமரை செழும்பணை திகழ்தரு
      திருவயி திரபுரமே. 3.1.3
      1151
      மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்
      மார்பக மிருபிளவா
      கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்
      கொடுத்தவ னிடம்மிடைந்து
      சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை
      விசும்புற மணிநீழல்
      சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்
      திருவயி திரபுரமே. 3.1.4
      1152
      ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
      றகலிட மளந்து ஆயர்
      பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்
      பொன்மலர் திகழ்வேங்கை
      கோங்கு செண்ப கொம்பினில் குதிகொடு
      குரக்கினம் இரைத்தோடி
      தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு
      திருவயி திரபுரமே. 3.1.5
      1153
      கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்
      திறத்திளங் கொடியோடும்
      கானு லாவிய கருமுகில் திருநிற
      தவனிடம் கவினாரும்
      வானு லாவிய மதிதவழ் மால்வரை
      மாமதிள் புடைசூழ
      தேனு லாவிய செழும்பொழில் தழுவிய
      திருவயி திரபுரமே. 3.1.6
      1154
      மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
      விலங்கலின் மிசையிலங்கை
      மன்னன் நீண்முடி பொடிசெய்த மைந்தன
      திடம்மணி வரைநீழல்
      அன்ன மாமல ரரவிந தமளியில்
      பெடையொடு மினிதமர
      செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்
      திருவயி திரபுரமே. 3.1.7
      1155
      விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்
      வில்லிறுத்து அடல்மழைக்கு
      நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்
      நிலவிய இடம்தடமார்
      வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு
      மலைவள ரகிலுந்தி
      திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு
      திருவயி திரபுரமே. 3.1.8
      1156
      வேல்கொள் கைத்தல தரசர்வெம் போரினில்
      விசயனு காய்மணித்தேர
      கோல்கொள் கைத்தல தெந்தைபெம் மானிடம்
      குலவுதண் வரைச்சாரல்
      கால்கொள் கண்கொடி கையெழ கமுகிளம்
      பாளைகள் கமழ்சாரல்
      சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
      திருவயி திரபுரமே. 3.1.9
      1157
      மூவ ராகிய வொருவனை மூவுல
      குண்டுமிழ தளந்தானை
      தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்
      திருவயி திரபுரத்து
      மேவு சோதியை வேல்வல வன்கலி
      கன்றி விரித்துரைத்த
      பாவு தண்டமிழ் பத்திவை பாடிட
      பாவங்கள் பயிலாவே. 2 3.1.10
      1158
      ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு
      உடலிற் பிரியா புலனைந்தும் நொந்து
      தாம்வாட வாட தவம்செய்ய வேண்டா
      தமதா இமையோ ருலகாள கிற்பீர்
      கானாட மஞ்ஞை கணமாட மாடே
      கயலாடு கானீர பழனம் புடைபோய்
      தேனாட மாட கொடியாடு தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 2 3.2.1
      1159
      காயோடு நீடு கனியுண்டு வீசு
      கடுங்கால் கர்ந்து நெடுங்காலம் ஐந்து
      தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா
      திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
      வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
      மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
      தீயோங்க வோங்க புகழோங்கு தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.2
      1160
      வெம்பும் சினத்து புனக்கேழ லொன்றாய்
      விரிநீர் முதுவெள்ள முள்பு கழுந்த
      வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
      அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்
      பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
      படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த
      செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.3
      1161
      அருமா நிலமன் றளப்பான் குறளாய்
      அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த
      பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
      பிறவி துயர்நீங்கு துமென்ன கிற்பீர்.
      கருமா கடலுள் கிடந்தா னுவந்து
      கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்
      திருமால் திருமங் கையொடாடு தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.4
      1162
      கோமங்க வங கடல்வைய மு
      குலமன்ன ரங்கம் மழுவில் துணிய
      தாமங் கமருள் படைதொட்ட வென்றி
      தவமா முனியை தமக்காக்க கிற்பீர்
      பூமங்கை தங்கி புலமங்கை மன்னி
      புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
      சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.5
      1163
      நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
      துணி பணிகொண் டணியார்ந்துஇலங்கு
      மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம்
      மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்
      அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான்
      அருமா மறை தணர்சி தைபுக
      செவ்வா கிளிநான் மறைபாடு தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.6
      1164
      மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து
      மகரம் சுழல சுழல்நீர் பயந்த
      தெய்வ திருமா மலர்மங்கை தங்கு
      திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
      கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில்
      கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்
      தெய்வ புனல்சூழ தழகாய தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.7
      1165
      மாவாயி னங்கம் மதியாது கீறி
      மழைமா முதுகுன் றெடுத்துஆயர் தங்கள்
      கோவாய் நிரைமே துலகுண்ட மாயன்
      குரைமா கழல்கூ டும்குறி புடையீர்
      மூவா யிரநான் மறையாளர் நாளும்
      முறையால் வணங்க அணங்காய சோதி
      தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.8
      1166
      செருநீல வேற்கண் மடவார் திறத்து
      சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
      அருநீல பாவ மகல புகழ்சேர்
      அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்
      பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்
      வித்தும் வயலுள் கயல்பா துகள
      திருநீல நின்று திகழ்கின்ற தில்லை
      திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே. 3.2.9
      1167
      சீரார் பொழில்சூழ தழகாய தில்லை
      திருசித்ர கூட துறைசெங்கண் மாலுக்கு
      ஆராத வுள்ள தவர்க்கே டுவப்ப
      அலைநீ ருலகு கருளே புரியும்
      காரார் புயற்கை கலிகன்றி குன்றா
      ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்
      பாரா ருலக மளந்தா னடிக்கீழ
      பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே. 2 3.2.10
      1168
      வாட மருதிடை போகி
      மல்லரை கொன்றொக்க லிட்டிட்டு
      ஆடல்நல் மாவுடை தாயர்
      ஆநிரை கன்றிடர் தீர்ப்பான்
      கூடிய மாமழை காத்த
      கூத்த னெனெவரு கின்றான்
      சேடுயர் பூம்பொழில் தில்லை
      சித்திர கூடத்துள் ளானே. 2 3.3.1
      1169
      பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
      பிள்ளை பரிசிது வென்றால்
      மாநில மாமகள் மாதர்
      கேள்வ னிவனென்றும் வண்டுண்
      பூமகள் நாயக னென்றும்
      புலங்கெழு கோவியர் பாடி
      தேமலர் தூவ வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.2
      1170
      பண்டிவன் வெண்ணெயுண் டானென்
      றாய்ச்சியர் கூடி யிழிப்ப
      எண்டிசை யோரும்வ ணங்க
      இணைமரு தூடு நடந்திட்டு
      அண்டரும் வான தவரு
      மாயிர நாமங்க ளோடு
      திண்டிறல் பாட வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.3
      1171
      வளைக்கை நெடுங்கண் மடவா
      ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப
      தளைத்தவிழ் தாமரை பொய்கை
      தண்தடம் புக்கண்டர் காண
      முளைத்த எயிற்றழல் நாக
      துச்சியில் நின்றது வாட
      திலைத்தமர் செய்து வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.4
      1172
      பருவ கருமுகி லொத்து
      முட்டுடை மாகட லொத்து
      அருவி திரள்திகழ் கின்ற
      வாயிரம் பொன்மலை யொத்து
      உருவ கருங்குழ லாய்ச்சி
      திறத்தின மால்விடை செற்று
      தெருவில் திளைத்து வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.5
      1173
      எ சிதைந்த திலங்கை
      மலங்க வருமழை காப்பான்
      உ பருவரை தாங்கி
      ஆநிரை காத்தானென் றேத்தி
      வை தெவரும் வணங்க
      அணங்கெழு மாமலை போலே
      தெய்வப்புள் ளேறி வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 2 3.3.6
      1174
      ஆவ ரிவைசெய் தறிவார்
      அஞ்சன மாமலை போலே
      மேவு சினத்தடல் வேழம்
      வீழ முனிந்துஅழ காய
      காவி மலர்நெடுங் கண்ணார்
      கைதிழ வீதி வருவான்
      தேவர் வணங்குதண் தில்லை
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.7
      1175
      பொங்கி யமரி லொருகால்
      பொன்பெய ரோனை வெருவ
      அங்கவனாக மளைந்தி
      டாயிர தோளெழு தாட
      பைங்க ணிரண்டெரி கான்ற
      நீண்ட எயிற்றொடு பேழ்வாய்
      சிங்க வுருவில் வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.8
      1176
      கருமுகில் போல்வதோர் மேனி
      கையன வாழியும் சங்கும்
      பெருவிறல் வானவர் சூழ
      ஏழுல கும்தொழு தேத்த
      ஒருமக ளாயர் மடந்தை
      யொருத்தி நிலமகள் மற்றை
      திருமக ளோடும் வருவான்
      சித்திர கூடத்துள் ளானே. 3.3.9
      1177
      தேனமர் பூம்பொழில் தில்லை
      சித்திர கூட மமர்ந்த
      வானவர் தங்கள் பிரானை
      மங்கையர் கோன்மரு வார்
      ஊனமர் வேல்கலி கன்றி
      யொண்டமி ழொன்பதோ டொன்றும்
      தானிவை கற்றுவல் லார்மேல்
      சாராதீவினைதானே. 2 3.3.10
      1178
      ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி
      உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும்
      தருகவெனா மாவலியை சிறையில் வைத்த
      தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
      அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்
      அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்
      தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 2 3.4.1
      1179
      நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
      நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி நக்கன்
      ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை
      ஒளிமலர்ச்கே வடியணைவீர் உழுசே யோட
      சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தை
      தொல்குருகு சினையென்ன சூழ்ந்தி யங்க
      தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.2
      1180
      வையணைந்த திக்கோட்டு வராக மொன்றாய்
      மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து
      நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோ ள்
      நேர்ந்தவந்தா ளணைகிற்பீர் நெய்த லோடு
      மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்
      மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்
      செய்யணைந்து களைகளையா தேறும் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.3
      1181
      பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்
      பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்
      நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட
      நின்மலந்தா ளணைகிற்பீர் நீல மாலை
      தஞ்சுடைய விருள்தழைப்ப தரள மாங்கே
      தண்மதியின் நிலாக்காட்ட பவள தன்னால்
      செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.4
      1182
      தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
      திருக்குலத்தி லிறந்தோர்க்கு திருத்தி செய்து
      வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட
      விண்ணவர்க்கோன் தாளணைவீர் விகிர்த மாதர்
      அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட
      அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்
      செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.5
      1183
      பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாள
      படர்வனத்து கவந்தனொடும் படையார்த்திண்கை
      வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த
      விண்ணவர்க்கோன் தாளணைவீர் வெற்புப்போலும்
      துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்
      துடியிடையார் முகக்கமல சோதி தன்னால்
      திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.6
      1184
      பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்
      புற்றுமறி தனபோல புவிமேல் சிந்த
      செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்
      திருவடிசேர துய்கிற்பீர் திரைநீர தெள்கி
      மருவிவலம் புரிகைதை கழியூ டாடி
      வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
      தெருவில்வலம் புரிதரள மீனும் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.7
      1185
      பட்டரவே ரகலல்குல் பவள செவ்வாய்
      பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்
      மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
      மரங்கொணர்ந்தா னடியணைவீர் அணில்கள்தாவ
      நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
      நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு பீன
      தெட்டபழம் சிதைந்துமது சொரியும் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.8
      1186
      பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து
      பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து
      கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
      கலந்தவந்தா ளணைகிற்பீர் கழுநீர் கூடி
      துறைதங்கு கமலத்து துயின்று கைதை
      தோடாரும் பொதிசோற்று சுண்ணம்நண்ணி
      சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழி
      சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.9
      1187
      செங்கமல தயனனைய மறையோர் காழி
      சீராம விண்ணகரென் செங்கண் மாலை
      அங்கமல தடவயல்சூ ழாலி நாடன்
      அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்
      கொங்குமலர குழலியர்வேள் மங்கை வேந்தன்
      கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
      சங்கமுக தமிழ்மாலை பத்தும் வல்லார்
      தடங்கடல்சூ ழுலகுக்கு தலைவர் தாமே. 2 3.4.10
      1188
      வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
      புகுந்ததற்பின் வணங்கும்என்
      சிந்தனை கினியாய். திருவே என் னாருயிரே
      அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
      கலந்து அவை யெங்கும்
      செந்தழல் புரையும் திருவாலி யம்மானே. 2 3.5.1
      1189
      நீல தடவரை மாமணி நிகழ
      கிடந்ததுபோல் அரவணை
      வேலை தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்
      சோலை தலைக்கண மாமயில் நடமாட
      மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
      ஆலை புகைகமழும் அணியாலி யம்மானே. 3.5.2
      1190
      நென்னல்போய் வருமென்றென் றெண்ணி
      யிராமையென் மனத்தே புகுந்தது
      இம்மை கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்
      செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார்
      முகத்தெழு வாளைபோய் கரும்பு
      அந்நற் காடணையும் அணியாலி யம்மானே. 3.5.3
      1191
      மின்னில் மன்னு டங்கிடை மடவார்தம்
      சிந்தை மறந்து வந்துநின்
      மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
      புன்னை மன்னு செருந்தி வண்பொழில்
      வாயகன் பணைகள் கலந்தெங்கும்
      அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே. 3.5.4
      1192
      நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி
      தொழுதேத்தும் என்மனம்
      வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா
      பாட லின்னொலி சங்கி நோசை பரந்து
      பல்பணை யால்மலிந்து எங்கும்
      ஆட லோசையறா அணியாலி யம்மானே. 3.5.5
      1193
      கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்
      சேவடி கைதொழுதெழும்
      புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகலொட்டேன்
      சந்தி வேள்வி சடங்கு நான்மறை
      ஓதி யோதுவி தாதி யாய்வரும்
      அந்த ணாள ரறாவணியாலி யம்மானே. 3.5.6
      1194
      உலவுதிரை கடற்பள்ளி கொண்டு வந்துன்
      அடியேன் மனம்புகுந்தஅ
      புலவ. புண்ணிய னே.புகு தாயை போகலொட்டேன்
      நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்
      தண்டாமரை மலரின் மிசைமலி
      அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே. 3.5.7
      1195
      சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை
      யுள்கிடந்தாய் அருள்புரிந்து
      இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ
      கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி
      இன்னிள வண்டு போய்இளம்
      தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே. 3.5.8
      1196
      ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி
      நின்னடை தேற்குஒரு பொருள்
      வேதியா. அரையா.உரையாய் ஒருமாற்றமெந்தாய்
      நீதி யாகிய வேதமா முனியாளர்
      தோற்ற முரைத்து மற்றவர
      காதியாய் இருந்தாய். அணியாலி யம்மானே. 3.5.9
      1197
      புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
      தென்னாலி யொருந்த மாயனை
      கல்லின் மன்னு திண்டோ ள் கலிய னொலிசெய்த
      நல்ல இன்னிசை மாலை நாலுமோ
      ரைந்துமொன் றும்நவின்று தாமுடன்
      வல்ல ராயுரை பார்க்கிட மாகும் வானுலகே. 2 3.5.10
      1198
      தூவிரிய மலருழக்கி
      துணையோடும் பிரியாதே
      பூவிரிய மதுநுகரும்
      பொறிவரிய சிறுவண்டே
      தீவிரிய மறைவளர்க்கும்
      புகழாளர் திருவாலி
      ஏவரிவெஞ் சிலையானு
      கென்னிலைமை யுரையாயே. 2 3.6.1
      1199
      பிணியவிழு நறுநீல
      மலர்க்கிழி பெடையோடும்
      அணிமலர்மேல் மதுநுகரும்
      அறுகால சிறுவண்டே
      மணிகெழுநீர் மருங்கலரும்
      வயலாலி மணவாளன்
      பணியறியேன் நீசென்றென்
      பயலைநோ யுரையாயே. 3.6.2
      1200
      நீர்வானம் மண்ணெரிகா
      லாய்நின்ற நெடுமால்தன்
      தாராய நறுந்துளவம்
      பெருந்தகையெற் கருளானே
      சீராரும் வளர்ப்பொழில்சூழ்
      திருவாலி வயல்வாழும்
      கூர்வாய சிறுகுருகே.
      குறிப்பறிந்து கூறாயே. 3.6.3
      1201
      தானாக நினையானேல்
      தன்னினைந்து நைவேற்குஓர்
      மீனாய கொடிநெடுவேள்
      வலிசெய்ய மெலிவேனோ
      தேன்வாய வரிவண்டே.
      திருவாலி நகராளும்
      ஆனாயற் கென்னுறுநோ
      யறியச்சென் றுரையாயே. 3.6.4
      1202
      வாளாய கண்பனிப்ப
      மென்முலைகள் பொன்னரும்ப
      நாணாளும் நின்னினைந்து
      நைவேற்குஓமண்ணளந்த
      தாளாளா தண்குடந்தை
      நகராளா வரையெடுத்த
      தோளாளா என்றனக்கோர்
      துணையாள னாகாயே. 3.6.5
      1203
      தாராய தண்டுளவ
      வண்டுழுத வரைமார்பன்
      போரானை கொம்பொசித்த
      புட்பாக னென்னம்மான்
      தேராரும் நெடுவீதி
      திருவாலி நகராளும்
      காராயன் என்னுடைய
      கனவளையும் கவர்வானோ. 3.6.6
      1204
      கொண்டரவ திரையுலவு
      குரைகடல்மேல் குலவரைபோல்
      பண்டரவி னணைக்கிடந்து
      பாரளந்த பண்பாளா
      வண்டமரும் வளர்ப்பொழில்சூழ்
      வயலாலி மைந்தாஎன்
      கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
      கனவளையும் கடவேனோ. 3.6.7
      1205
      குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்
      தண்குடந்தை குடமாடி
      துயிலாத கண்ணிணையேன்
      நின்னினைந்து துயர்வேனோ
      முயலாலு மிளமதிக்கே
      வளையிழந்தேற்கு இதுநடுவே
      வயலாலி மணவாளா.
      கொள்வாயோ மணிநிறமே. 3.6.8
      1206
      நிலையாளா நின்வணங்க
      வேண்டாயே யாகினும்என்
      முலையாள வொருநாளுன்
      னகலத்தால் ஆளாயே
      சிலையாளா மரமெய்த
      திறலாளா திருமெய்ய
      மலையாளா நீயாள
      வளையாள மாட்டோ மே. 3.6.9
      1207
      மையிலங்கு கருங்குவளை
      மருங்கலரும் வயலாலி
      நெய்யிலங்கு சுடராழி
      படையானை நெடுமாலை
      கையிலங்கு வேல்கலியன்
      கண்டுரைத்த தமிழ்மாலை
      ஐயிரண்டு மிவைவல்லார
      கருவினைக ளடையாவே. 2 3.6.10
      1208
      கள்வன்கொல் யானறியேன்
      கரியானொரு காளைவந்து
      வள்ளிமருங் குலென்றன்
      மடமானினை போதவென்று
      வெள்ளிவளை கைப்பற்ற
      பெற்றதாயரை விட்டகன்று
      அள்ளலம் பூங்கழனி
      யணியாலி புகுவர்க்கொலோ. 2 3.7.1
      1209
      பண்டிவ னாயன்நங்காய்.
      படிறன்புகுந்து என்மகள்தன்
      தொண்டையஞ் செங்கனிவாய்
      நுகர்ந்தானை யுகந்துஅவன்பின்
      கெண்டையொண் கண்மிளிர
      கிளிபோல்மிழற் றிநடந்து
      வண்டமர் கானல்மல்கும்
      வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.2
      1210
      அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்.
      அரக்கர்க்குல பாவைதன்னை
      வெஞ்சின மூக்கரிந்த
      விறலோந்திறங் கேட்கில்மெய்யே
      பஞ்சியல் மெல்லடியெம்
      பணைத்தோளி பரக்கழிந்து
      வஞ்சி தண்பணைசூழ்
      வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.3
      1211
      ஏதுஅவன் தொல்பிறப்பு
      இளைய வன்வளை யூதிமன்னர்
      தூதுவ னாயவனூர்
      சொலுவீர்கள். சொலீரறியேன்
      மாதவன் தந்துணையா
      நடந்தாள்தடஞ் சூழ்புறவில்
      போதுவண் டாடுசெம்மல்
      புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.4
      1212
      தாயெனை யென்றிரங்காள்
      தடந்தோளி தனக்கமைந்த
      மாயனை மாதவனை
      மதித்தென்னை யகன்றைவள்
      வேயன தோள்விசிறி
      பெடையன்ன மெனநடந்து
      போயின பூங்கொடியாள்
      புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.5
      1213
      எந்துணை யென்றெடுத்தேற்
      கிறையேனு மிரங்கிற்றிலள்
      தன்துணை யாயவென்றன்
      தனிமைக்கு மிரங்கிற்றிலள்
      வன்துணை வானவர்க்காய்
      வரஞ்செற்றரங் கத்துறையும்
      இந்துணை வன்னொடும்போ
      யெழிலாலி புகுவர்க்கொலோ. 2 3.7.6
      1214
      அன்னையு மத்தனுமென்
      றடியோமு கிரங்கிற்றிலள்
      பின்னைதன் காதலன்றன்
      பெருந்தோள்நலம் பேணினளால்
      மின்னையும் வஞ்சியையும்
      வென்றிலங்கு மிடையாள்நடந்து
      புன்னையும் அன்னமும்சூழ்
      புனலாலி புகுவர்க்கொலோ. 3.7.7
      1215
      முற்றிலும் பைங்கிளியும்
      பந்துமூசலும் பேசுகின்ற
      சிற்றில்மென் பூவையும்வி
      டகன்றசெழுங் கோதைதன்னை
      பெற்றிலேன் முற்றிழையை
      பிறப்பிலிபின் னேநடந்து
      மற்றெல்லாம் கைதொழப்போய்
      வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.8
      1216
      காவியங் கண்ணியெண்ணில்
      கடிமாமலர பாவையொப்பாள்
      பாவியேன் பெற்றமையால்
      பணைத்தோளி பரக்கழிந்து
      தூவிசே ரன்னமன்ன
      நடையாள்நெடு மாலொடும்போய்
      வாவி தண்பணைசூழ்
      வயலாலி புகுவர்க்கொலோ. 3.7.9
      1217
      தாய்மனம் நின்றிரங்க
      தனியேநெடு மால்துணையா
      போயின பூங்கொடியாள்
      புனலாலி புகுவரென்று
      காய்சின வேல்கலிய
      னொலிசெய்தமிழ் மாலைபத்தும்
      மேவிய நெஞ்சுடையார்
      தஞ்சமாவது விண்ணுலகே. 2 3.7.10
      1218
      நந்தா விளக்கே அளத்தற் கரியாய்.
      நரநா ரணனே கருமா முகில்போல்
      எந்தாய் எமக்கே யருளாய் எனநின்று
      இமையோர் பரவு மிடம்எ திசையும்
      கந்தா ரமந்தே னிசைபாடமாடே
      களிவண் டுமிழற் றநிழல் துதைந்து
      மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 2 3.8.1
      1219
      முதலை தனிமா முரண்தீர வன்று
      முதுநீர தடத்து செங்கண்வேழ முய்ய
      விதலை தலைச்சென் றதற்கே யுதவி
      வினைதீர்த்த வம்மானிடம்விண்ணணவும்
      பதலை கபோ தொளிமாட நெற்றி
      பவள கொழுங்கால் பைங்கால் புறவம்
      மதலை தலைமென் பெடைகூடு நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.2
      1220
      கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
      கொடுமா முதலை கிடர்செய்து கொங்கார்
      இலைப்புண்ட ரீக தவளின்ப மன்போ
      டணைந்திட்ட வம்மானிடம்ஆளரியால்
      அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
      அணிமுத்தும் வெண்சா மரையோடுபொன்னி
      மலைப்பண்ட மண்ட திரையுந்து நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.3
      1221
      சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
      திசைநான்கும் நான்கு மிரிய செருவில்
      கறையார் நெடுவே லரக்கர் மடி
      கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்
      முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
      ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்
      மறையோர் வணங்க புகழெய்து நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.4
      1222
      இழையாடு கொங்கை தலைநஞ்ச முண்டிட்டு
      இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து
      தழைவாட வந்தாள் குருந்த மொசித்து
      தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்
      குழையாட வல்லி குலமாடமாடே
      குயில்கூவ நீடு கொடிமாட மல்கு
      மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.5
      1223
      பண்ணேர் மொழியா சியரஞ்ச வஞ்ச
      பகுவா கழுது கிரங்காது அவள்தன்
      உண்ணா முலைமற் றவளாவி யோடும்
      உடனே சுவைத்தா நிடம்ஓங்கு பைந்தாள்
      கண்ணார் கரும்பின் கழைதின்று வைகி
      கழுநீரில் மூழ்கி செழுநீர தடத்து
      மண்ணே திளமேதி கள்வைகு நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.6
      1224
      தளைக்க டவிழ்தா மரைவைகு பொய்கை
      தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்
      இளைக்க திளைத்தி டதனுச்சி தன்மேல்
      அடிவைத்த அம்மா னிடம்மாமதியம்
      திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில்
      செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்றுமூன்றில்
      வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.7
      1225
      துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
      துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும் முற்றா
      விளையார் விளையா டொடுகாதல் வெள்ளம்
      விளைவித்த வம்மானிடம்வேல் நெடுங்கண்
      முளைவாளெயிற்று மடவார் பயிற்று
      மொழிகே டிருந்து முதிராதவின்சொல்
      வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.8
      1226
      விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த
      விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்
      படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று
      இமையோர் பரவு மிடம்பை தடத்து
      பெடையோடு செங்கால வன்னம் துகைப்ப
      தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்
      மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
      மணிமாட கோயில் வணங்கென் மனனே. 3.8.9
      1227
      வண்டார் பொழில்சூழ தழகாய நாங்கூர்
      மணிமாட கோயில் நெடுமாலுக்குஎன்றும்
      தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்
      கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்
      கண்டார் வணங களியானை மீதே
      கடல்சூ ழுலகு கொருகா வலராய்
      விண்டோ ய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
      விரிநீ ருலகாண் டுவிரும் புவரே. 2 3.8.10
      1228
      சலங்கொண்ட இரணியன
      தகல்மார்வம் கீண்டு
      தடங்கடலை கடைந்தமுதங்
      கொண்டுகந்த காளை
      நலங்கொண்ட கருமுகில்போல்
      திருமேனி யம்மான்
      நாடோ றும் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      சலங்கொண்டு மலர்சொரியும்
      மல்லிகையொண் செருந்தி
      சண்பகங்கள் மணநாறும்
      வண்பொழிலி னூடே
      வலங்கொண்டு கயலோடி
      விளையாடு நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 2 3.9.1
      1229
      திண்ணியதோ ரரியுருவா
      திசையனைத்தும் நடுங்க
      தேவரொடு தானவர்கள்
      திசைப்பஇரணியனை
      நண்ணியவன் மார்வகல
      துகிர்மடுத்த நாதன்
      நாடோ றும் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      எண்ணில்மிகு பெருஞ்செல்வ
      தெழில்விளங்கு மறையும்
      ஏழிசையும் கேள்விகளு
      மியன்றபெருங் குணத்தோர்
      மண்ணில்மிகு மறையவர்கள்
      மலிவெய்து நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.2
      1230
      அண்டமுமிவ் வலைகடலு
      மவனிகளு மெல்லாம்
      அமுதுசெய்த திருவயிற்றன்
      அரன்கொண்டு திரியும்
      முண்டமது நிறைத்தவன்கண்
      சாபமது நீக்கும்
      முதல்வனவன் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      எண்டிசையும் பெருஞ்செந்ந
      லிளந்தெங்கு கதலி
      இலைக்கொடியொண் குலைக்கமுகொ
      டிகலிவளம் சொரிய
      வண்டுபல விசைபாட
      மயிலாலு நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.3
      1231
      கலையிலங்கு மகலல்குல்
      அரக்கர்க்குல கொடியை
      காதொடுமூ குடனரி
      கதறியவ ளோடி
      தலையிலங்கை வைத்துமலை
      யிலங்கைபுக செய்த
      தடந்தோளன் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      சிலையிலங்கு மணிமாட
      துச்சிமிசை சூலம்
      செழுங்கொண்ட லகடிரி
      சொரிந்தசெழு முத்தம்
      மலையிலங்கு மாளிகைமேல்
      மலிவெய்து நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.4
      1232
      மின்னனைய ண்மருங்குல்
      மெல்லியற்கா யிலங்கை
      வேந்தன்முடி யொருபதும்தோ
      ளிருபதும்போ யுதிர
      தன்நிகரில் சிலைவளைத்தன்
      றிலங்கைபொடி செய்த
      தடந்தோளன் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      செந்நெலொடு செங்கமலம்
      சேல்கயல்கள் வாளை
      செங்கழுநீ ரொடுமிடைந்து
      கழனிதிகழ தெங்கும்
      மன்னுபுகழ் வேதியர்கள்
      மலிவெய்து நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.5
      1233
      பெண்மைமிகு வடிவுகொடு
      வந்தவளை பெரிய
      பேயினது உருவுகொடு
      மாளவுயி ருண்டு
      திண்மைமிகு மருதொடுநற்
      சகடமிறு தருளும்
      தேவனவன் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      உண்மைமிகு மறையொடுநற்
      கலைகள்நிறை பொறைகள்
      உதவுகொடை யென்றிவற்றி
      னொழிவில்லா பெரிய
      வண்மைமிகு மறையவர்கள்
      மலிவெய்து நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.6
      1234
      விளங்கனியை யிளங்கன்று
      கொண்டுதிர வெறிந்து
      வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள்
      வைத்ததயிர் வெண்ணெய்
      உளங்குளிர அமுதுசெய்திவ்
      வுலகுண்ட காளை
      உகந்தினிது நாடோ றும்
      மருவியுறை கோயில்
      இளம்படிநற் கமுகுகுலை
      தெங்குகொடி செந்நெல்
      ஈன்கரும்பு கண்வளர
      கால்தடவும் புனலால்
      வளங்கொண்ட பெருஞ்செல்வம்
      வளருமணி நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.7
      1235
      ஆறாத சினத்தின்மிகு
      நரகனுர மழித்த
      அடலாழி தடக்கையன்
      அலர்மகட்கும் அரற்கும்
      கூறா கொடுத்தருளும்
      திருவுடம்பன் இமையோர்
      குலமுதல்வன் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      மாறாத மலர்க்கமலம்
      செங்கழுநீர் ததும்பி
      மதுவெள்ள மொழுகவய
      லுழவர்மடை யடைப்ப
      மாறாத பெருஞ்செல்வம்
      வளருமணி நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.8
      1236
      வங்கமலி தடங்கடலுள்
      வானவர்க ளோடு
      மாமுனிவர் பலர்கூடி
      மாமலர்கள் தூவி
      எங்கள்தனி நாயகனே
      எமக்கருளாய் என்னும்
      ஈசனவன் மகிழ்ந்தினிது
      மருவியுறை கோயில்
      செங்கயலும் வாளைகளும்
      செந்நெலிடை குதிப்ப
      சேலுகளும் செழும்பணைசூழ்
      வீதிதொறும் மிடைந்து
      மங்குல்மதி யகடுரிஞ்சு
      மணிமாட நாங்கூர்
      வைகுந்த விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.9.9
      1237
      சங்குமலி தண்டுமுதல்
      சக்கரமுனேந்தும்
      தாமரைக்கண் நெடியபிரான்
      தானமரும் கோயில்
      வங்கமலி கடலுலகில்
      மலிவெய்து நாங்கூர்
      வைகுந்த விண்ணகர்மேல்
      வண்டறையும் பொழில்சூழ்
      மங்கையர்தம் தலைவன்மரு
      வலர்தமுடல் துணிய
      வாள்வீசும் பரகாலன்
      கலிகன்றி சொன்ன
      சங்கமலி தமிழ்மாலை
      பத்திவைவல்லார்கள்
      தரணியொடு விசும்பாளும்
      தன்மைபெறு வாரே. 2 3.9.10
      1238
      திருமடந்தை மண்மடந்தை
      யிருபாலும் திகழ
      தீவினைகள் போயகல
      அடியவர்க கென்றும்
      அருள்நடந்துஇவ் வேழுலக
      தவர்ப்பணிய வானோர்
      அமர்ந்தேத்த இருந்தவிடம்
      பெரும்புகழ்வே தியர்வாழ்
      தருமிடங்கள் மலர்கள்மிகு
      கைதைகள்செங கழுநீர்
      தாமரைகள் தடங்கடொறு
      மிடங்கடொறும் திகழ
      அருவிடங்கள் பொழில்தழுவி
      யெழில்திகழு நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 2 3.10.1
      1239
      வென்றிமிகு நரகனுர
      மதுவழிய விசிறும்
      விறலாழி தடக்கையன்
      விண்ணவர்கட்கு அன்று
      குன்றுகொடு குரைகடலை
      கடைந்தமுத மளிக்கும்
      குருமணியென் னாரமுதம்
      குலவியுறை கோயில்
      என்றுமிகு பெருஞ்செல்வ
      தெழில்விளங்கு மறையோர்
      ஏழிசையும் கேள்விகளு
      மியன்றபெருங் குணத்தோர்
      அன்றுலகம் படைத்தவனே
      யனையவர்கள் நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.2
      1240
      உம்பருமிவ் வேழுலகு
      மேழ்கடலு மெல்லாம்
      உண்டபிரான்ண்டர்கள்முன்
      கண்டுமகிழ வெய்த
      கும்பமிகு மதயானை
      மருப்பொசித்து கஞ்சன்
      குஞ்சிபிடி தடித்தபிரான்
      கோயில்மருங் கெங்கும்
      பைம்பொனொடு வெண்முத்தம்
      பலபுன்னை காட்ட
      பலங்கனிகள் தேன்காட்ட
      படவரவே ரல்குல்
      அம்பனைய கண்மடவார்
      மகிழ்வெய்து நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.3
      1241
      ஓடாத வாளரியி
      னுருவமது கொண்டு அன்
      றுலப்பில்மிகு பெருவரத்த
      விரணியனை பற்றி
      வாடாத வள்ளுகிரால்
      பிளந்தவன்றன் மகனு
      கருள்செய்தான் வாழுமிடம்
      மல்லிகைசெங் கழுநீர்
      சேடேறு மலர்ச்செருந்தி
      செழுங்கமுகம் பாளை
      செண்பகங்கள் மணநாறும்
      வண்பொழிலி னூடே
      ஆடேறு வயலாலை
      புகைகமழு நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.4
      1242
      கண்டவர்தம் மனம்மகிழ
      மாவலிதன் வேள்வி
      களவில்மிகு சிறுகுறளாய்
      மூவடியென் றிரந்திட்டு
      அண்டமுமிவ் வலைகடலு
      மவனிகளு மெல்லாம்
      அளந்தபிரா னமருமிடம்
      வளங்கொள்பொழி லயலே
      அண்டமுறு முழவொலியும்
      வண்டினங்க ளொலியும்
      அருமறையி னொலியும்மட
      வார்சிலம்பி னொலியும்
      அண்டமுறு மலைகடலி
      னொலிதிகழு நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.5
      1243
      வாணெடுங்கண் மலர்க்கூந்தல்
      மைதிலிக்கா இலங்கை
      மன்னன்முடி யொருபதும்தோ
      ளிருபதும்போ யுதிர
      தாணெடுந்தின் சிலைவளைத்த
      தயரதன்சேய் என்தன்
      தனிச்சரண்வா னவர்க்கரசு
      கருதுமிடம் தடமார்
      சேணிடங்கொள் மலர்க்கமலம்
      சேல்கயல்கள் வாளை
      செந்நெலொடு மடுத்தரிய
      வுதிர்ந்தசெழு முத்தம்
      வாணெடுங்கண் கடைசியர்கள்
      வாருமணி நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.6
      1244
      தீமனத்தான் கஞ்சனது
      வஞ்சனையில் திரியும்
      தேனுகனும் பூதனைத
      னாருயிரும் செகுத்தான்
      காமனைத்தான் பயந்தகரு
      மேனியுடை யம்மான்
      கருதுமிடம் பொருதுபுனல்
      துறைதுறைமு துந்தி
      நாமனத்தால் மந்திரங்கள்
      நால்வேதம் ஐந்து
      வேள்வியோ டாறங்கம்
      நவின்றுகலை பயின்றுஅங்
      காமனத்து மறையவர்கள்
      பயிலுமணி நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.7
      1245
      கன்றதனால் விளவெறிந்து
      கனியுதிர்த்த காளை
      காமருசீர் முகில்வண்ணன்
      காலிகள்முன் காப்பான்
      குன்றதனால் மழைதடுத்து
      குடமாடு கூத்தன்
      குலவுமிடம் கொடிமதிள்கள்
      மாளிகைகோ புரங்கள்
      துன்றுமணி மண்டபங்கள்
      சாலைகள்தூ மறையோர்
      தொக்கீண்டி தொழுதியொடு
      மிகப்பயிலும் சோலை
      அன்றலர்வாய் மதுவுண்டங்
      களிமுரலு நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.8
      1246
      வஞ்சனையால் வந்தவள்த
      னுயிருண்டு வாய்த்த
      தயிருண்டு வெண்ணெயமு
      துண்டுவலி மிக்க
      கஞ்சனுயி ரதுவுண்டிவ்
      வுலகுண்ட காளை
      கருதுமிடம் காவிரிச
      தகில்கனக முந்தி
      மஞ்சுலவு பொழிலூடும்
      வயலூடும் வந்து
      வளங்கொடுப்ப மாமறையோர்
      மாமலர்கள் தூவி
      அஞ்சலித்தங் கரிசரணென்
      றிரைஞ்சுமணி நாங்கூர்
      அரிமேய விண்ணகரம்
      வணங்குமட நெஞ்சே. 3.10.9
      1247
      சென்றுசின விடையேழும்
      படவடர்த்து பின்னை
      செவ்வித்தோள் புணர்ந்துகந்த
      திருமால்தன் கோயில்
      அன்றயனு மரன்சேயு
      மனையவர்கள் நாங்கூர்
      அரிமேய விண்ணகர
      மமர்ந்தசெழுங் குன்றை
      கன்றிநெடு வேல்வலவன்
      மங்கையர்தம் கோமான்
      கலிகன்றி யொலிமாலை
      யைந்தினொடு மூன்றும்
      ஒன்றினொடு மொன்றுமிவை
      கற்றுவல்லார் உலக
      துத்தமர்க குத்தமரா
      யும்பருமா வர்களே. 2 3.10.10
      பெரிய திருமொழி நான்காம் பத்து
      1248
      போதலர்ந்த பொழில்சோலை
      புறமெங்கும் பொருதிரைகள்
      தாதுதிர வந்தலைக்கும்
      தடமண்ணி தென்கரைமேல்
      மாதவன்றா னுறையுமிடம்
      வயல்நாங்கை வரிவண்டு
      தேதெனவென் றிசைபாடும்
      திருத்தேவ னார்தொகையே 4.1.1
      1249
      யாவருமா யாவையுமா
      யெழில்வேத பொருள்களுமாய்
      மூவருமாய் முதலாய
      மூர்த்தியமர துறையுமிடம்
      மாவரும்திண் படைமன்னை
      வென்றிகொள்வார் மன்னுநாங்கை
      தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
      திருத்தேவ னார்தொகையே 4.1.2
      1250
      வானாடும் மண்ணாடும்
      மற்றுள்ள பல்லுயிரும்
      தானாய வெம்பெருமான்
      தலைவனமர துறையுமிடம்
      ஆனாத பெருஞ்செல்வ
      தருமறையோர் நாங்கைதன்னுள்
      தேனாரு மலர்பொழில்சூழ்
      திருத்தேவ னார்தொகையே 4.1.3
      1251
      இந்திரனு மிமையவரும்
      முனிவர்களும் எழிலமைந்த
      சந்தமலர சதுமுகனும்
      கதிரவனும் சந்திரனும்
      எந்தையெ கருள் எனநின்
      றருளுமிடம் எழில்நாங்கை
      சுந்தரநல் பொழில்புடைசூழ்
      திருத்தேவ னார்தொகையே 4.1.4
      1252
      அண்டமுமிவ் வலைகடலு
      மவனிகளும் குலவரையும்
      உண்டபிரா னுறையுமிடம்
      ஓளிமணிச தகில்கனகம்
      தெண்டிரைகள் வரத்திரட்டும்
      திகழ்மண்ணி தென்கரைமேல்
      திண்திறலார் பயில்நாங்கை
      திருத்தேவ னார்தொகையே 4.1.5
      1253
      ஞாலமெல்லா மமுதுசெய்து
      நான்மறையும் தொடராத
      பாலகனா யாலிலையில்
      பள்ளிகொள்ளும் பரமனிடம்
      சாலிவளம் பெருகிவரும்
      தடமண்ணி தென்கரைமேல்
      சேலுகளும் வயல்நாங்கை
      திருத்தேவ னார்தொகையே 4.1.6
      1254
      ஓடாத வாளரியி
      னுருவாகி யிரணியனை
      வாடாத வள்ளுகிரால்
      பிளந்தளைந்த மாலதிடம்
      ஏடேறு பெருஞ்செல்வ
      தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
      சேடேறு பொழில்தழுவு
      திருத்தேவ னார்தொகையே 4.1.7
      1255
      வாராரு மிளங்கொங்கை
      மைதிலியை மணம்புணர்வான்
      காரார்திண் சிலையிறுத்த
      தனிக்காளை கருதுமிடம்
      ஏராரும் பெருஞ்செல்வ
      தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
      சீராரும் மலர்பொழில்சூழ்
      திருத்தேவ னார்தொகையே 4.1.8
      1256
      கும்பமிகு மதயானை
      பாகனொடும் குலைந்துவிழ
      கொம்பதனை பறித்தெறிந்த
      கூத்தனமர துறையுமிடம்
      வம்பவிழும் செண்பகத்தின்
      மணங்கமழும் நாங்கைதன்னுள்
      செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்
      திருத்தேவ னார்தொகையே 4.1.9
      1257
      காரார்ந்த திருமேனி
      கண்ணனமர துறையுமிடம்
      சீரார்ந்த பொழில்நாங்கை
      திருத்தேவ னார்தொகைமேல்
      கூரார்ந்த வேற்கலியன்
      கூறுதமிழ் பத்தும்வல்லார்
      எரார்ந்த வைகுந
      திமையவரோ டிருப்பாரே 4.1.10
      1258
      கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
      கதிர்முடி யவைபத்தும்
      அம்பி னாலறுத்து அரசவன் தம்பிக்கு
      அளித்தவ னுறைகோயில்
      செம்ப லாநிரை செண்பகம் மாதவி
      சூதகம் வாழைகள்சூழ்
      வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.1
      1259
      பல்ல வந்திகழ் பூங்கடம் பேறி
      காளியன் பணவரங்கில்
      ஒல்லை வந்துற பாய்ந்தரு நடஞ்செய்த
      உம்பர்க்கோ னுறைகோயில்
      நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
      வேள்வியோ டாறங்கம்
      வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.2
      1260
      அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
      றமைத்தசோ றதுவெல்லாம்
      உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன்
      உகந்தினி துறைகோயில்
      கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
      குலமயில் நடமாட
      வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.3
      1261
      பருங்கை யானையின் கொம்பினை பறித்ததன்
      பாகனை சாடிப்புக்கு
      ஒறுங்க மல்லரை கொன்றுபின் கஞ்சனை
      உதைத்தவ னுறைகோயில்
      கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு
      கழனியில் மலிவாவி
      மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.4
      1262
      சாடு போய்விழ தாள்நிமிர தீசன்தன்
      படையொடுங் கிளையோடும்
      ஓட வாணனை யாயிர தோள்களும்
      துணித்தவ னுறைகோயில்
      ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போ
      பகலவ னொளிமறைக்கும்
      மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.5
      1263
      அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
      அலர்கொடு தொழுதேத்த
      கங்கை போதர கால்நிமிர தருளிய
      கண்ணன்வ துறைகோயில்
      கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
      காட்டமா பதுமங்கள்
      மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.6
      1264
      உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
      துரம்பிள துதிரத்தை
      அளையும் வெஞ்சின தரிபரி கீறிய
      அப்பன்வ துறைகோயில்
      இளைய மங்கைய ரிணையடி சிலம்பினோ
      டெழில்கொள்ப தடிப்போர்கை
      வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.7
      1265
      வாளை யார்தட கண்ணுமை பங்கன்வன்
      சாபமற் றதுநீங்க
      மூளை யார்சிர தையமுன் அளித்தவெம்
      முகில்வண்ண னுறைகோயில்
      பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்
      பழம்விழ வெருவிப்போய்
      வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.8
      1266
      இந்து வார்சடை யீசனை பயந்தநான்
      முகனைத்தன் னெழிலாரும்
      உந்தி மாமலர் மீமிசை படைத்தவன்
      உகந்தினி துறைகோயில்
      குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன்
      குருளையை தழுவிப்போய்
      மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
      வண்புரு டோ த்தமமே 4.2.9
      1267
      மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
      வண்புரு டோ த்தமத்துள்
      அண்ணல் சேவடி கீழடை துய்ந்தவன்
      ஆலிமன் அருள்மாரி
      பண்ணு ளார்தர பாடிய பாடலி
      பத்தும்வல் லார்உலகில்
      எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
      ரோடும் கூடுவரே 4.2.10
      1268
      பேரணி துலக தவர்தொழு தேத்தும்
      பேரரு ளாளனெம் பிரானை
      வாரணி முலையாள் மலர்மக ளோடு
      மண்மக ளுமுடன் நிற்ப
      சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      காரணி மேகம் நின்றதொ பானை
      கண்டுகொண் டுய்ந்தொழி தேனே 4.3.1
      1269
      பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னை
      பேதியா வின்பவெள் ளத்தை
      இறப்பெதிர் கால கழிவுமா னானை
      ஏழிசை யின்சுவை தன்னை
      சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      மறைப்பெரும் பொருளை வானவர் கோனை
      கண்டுநான் வாழ்ந்தொழி தேனே 4.3.2
      1270
      திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
      செழுநில துயிர்களும் மற்றும்
      படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை
      பங்க தயனவ னனைய
      திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
      கண்டுகொண் டுய்ந்தொழி தேனே 4.3.3
      1271
      வசையறு குறளாய் மாவலி வேள்வி
      மண்ணள விட்டவன் றன்னை
      அசைவறு மமர ரடியிணை வணங்க
      அலைகடல் துயின்றவம் மானை
      திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      உயர்மணி மகுடம் சூடிநின் றானை
      கண்டுகொண் டுய்ந்தொழி தேனே 4.3.4
      1272
      தீமன தரக்கர் திறலழி தவனே.
      என்றுசென் றடைந்தவர் தமக்கு
      தாய்மன திரங்கி யருளினை கொடுக்கும்
      தயரதன் மதலையை சயமே
      தேமலர பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      காமனை பயந்தான் றன்னைநா னடியேன்
      கண்டுகொண் டுய்ந்தொழி தேனே 4.3.5
      1273
      மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
      அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை
      கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
      கலங்கவோர் வாளிதொ டானை
      செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
      கண்டுகொண் டல்லல்தீர தேனே 4.3.6
      1274
      வெஞ்சின களிறும் வில்லொடு மல்லும்
      வெகுண்டிறு தடர்த்தவன் றன்னை
      கஞ்சனை காய்ந்த காளையம் மானை
      கருமுகில் திருநிற தவனை
      செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      அஞ்சன குன்றம் நின்றதொ பானை
      கண்டுகொண் டல்லல்தீர தேனே 4.3.7
      1275
      அன்றிய வாண னாயிரம் தோளும்
      துணியவன் றாழிதொ டானை
      மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
      மேவிய வேதநல் விளக்கை
      தென்திசை திலதம் அனையவர் நாங்கை
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
      வணங்கிநான் வாழ்ந்தொழி தேனே 4.3.8
      1276
      களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன்
      கார்முகி லே என நினைந்திட்டு
      உளங்கனி திருக்கு மடியவர் தங்கள்
      உள்ளத்து ளூறிய தேனை
      தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
      வணங்கிநான் வாழ்ந்தொழி தேனே 4.3.9
      1277
      தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
      செம்பொன்செய் கோயிலி னுள்ளே
      வானவர் கோனை கண்டமை சொல்லும்
      மங்கையார் வாட்கலி கன்றி
      ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
      ஒழிவின்றி கற்றுவல் லார்கள்
      மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
      வானவ ராகுவர் மகிழ்ந்தே 4.3.10
      1278
      மாற்றரசர் மணிமுடியும்
      திறலும் தேசும்
      மற்றவர்தம் காதலிமார்
      குழையும் தந்தை
      கால்தளையு முடன்கழல
      வந்து தோன்றி
      கதநாகம் காத்தளித்த
      கண்ணர் கண்டீர்
      நூற்றிதழ்கொ ளரவிந்தம்
      நுழைந்த பள்ள
      திளங்கமுகின் முதுபாளை
      பகுவாய் நண்டின்
      சேற்றளையில் வெண்முத்தம்
      சிந்து நாங்கூர
      திருத்தெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.1
      1279
      பொற்றொடித்தோள் மடமகள்தன்
      வடிவு கொண்ட
      பொல்லாத வன்பேய்ச்சி
      கொங்கை வாங்கி
      பெற்றெடுத்த தாய்போல
      மடுப்ப ஆரும்
      பேணாநஞ் சுண்டுகந்த
      பிள்ளை கண்டீர்
      நெல்தொடுத்த மலர்நீலம்
      நிறைந்த சூழல்
      இருஞ்சிறைய வண்டொலியும்
      நெடுங்க ணார்தம்
      சிற்றடிமேல் சிலம்பொலியும்
      மிழற்று நாங்கூர
      திருத்தெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.2
      1280
      படலடைந்த சிறுகுரம்பை
      நுழைந்து புக்கு
      பசுவெண்ணெய் பதமார
      பண்ணை முற்றும்
      அடலடர்த்த வேற்கண்ணார்
      தோக்கை பற்றி
      அலந்தலைமை செய்துழலு
      மையன் கண்டீர்
      மடலெடுத்த நெடுன்தெங்கின்
      பழங்கல் வீழ
      மாங்கனிகள் திரட்டுருட்டா
      வருநீர பொன்னி
      திடலெடுத்து மலர்சுமந்தங்
      கிழியு நாங்கூர
      திருத்தெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.3
      1281
      வாராரும் முலைமடவாள்
      பின்னை காகி
      வளைமருப்பிற் கடுஞ்சினத்து
      வன்தா ளார்ந்த
      காரார்திண் விடையடர்த்து
      வதுவை யாண்ட
      கருமுகில்போல் திருநிறத்தென்
      கண்ணர் கண்டீர்
      ஏராரும் மலர்ப்பொழில்கள்
      தழுவி யெங்கும்
      எழில்மதியை கால்தொடா
      விளங்கு சோதி
      சீராரு மணிமாடம்
      திகழும் நாங்கூர
      திருத்தெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.4
      1282
      கலையிலங்கு மகலல்குல்
      கமல பாவை
      கதி ர்முத்த வெண்ணகையாள்
      கருங்க ணாய்ச்சி
      முலையிலங்கு மொளிமணிப்பூண்
      வடமும் தேய்ப்ப
      மூவாத வரைநெடுந்தோள்
      மூர்த்தி கண்டீர்
      மலையிலங்கு நிரைச்சந்தி
      மாட வீதி
      ஆடவரை மடமொழியார்
      முகத்து இரண்டு
      சிலைவிலங்கி மனஞ்சிறைகொண்
      டிருக்கும் நாங்கூர
      திருத்தெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.5
      1283
      தான்போலு மென்றெழுந்தான்
      தரணி யாளன்
      அதுகண்டு தரித்திருப்பா
      னரக்கர் தங்கள்
      கோன்போலு மென்றெழுந்தான்
      குன்ற மன்ன
      இருபதுதோ ளுடன்துணித்த
      வொருவன் கண்டீர்
      மான்போலு மென்னோக்கின்
      செய்ய வாயார்
      மரகதம் போல் மடக்கிளியை
      கைமேல் கொண்டு
      தேன்போலு மென்மழலை
      பயிற்றும் நாங்கூர
      திருத்தெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.6
      1284
      பொங்கிலங்கு புரிநூலும்
      தோலும் தாழ
      பொல்லாத குறளுருவா
      பொருந்தா வாணன்
      மங்கலம்சேர் மறைவேள்வி
      யதனுள் புக்கு
      மண்ணகலம் குறையிரந்த
      மைந்தன் கண்டீர்
      கொங்கலர்ந்த மலர்க்குழலார்
      கொங்கை தோய்ந்த
      குங்குமத்தின் குழம்பளைந்த
      கோல தன்னால்
      செங்கலங்கல் வெண்மணல்மேல்
      தவழும் நாங்கூர
      திருதெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.7
      1285
      சிலம்பினிடை சிறுபரல்போல்
      பெரிய மேரு
      திருக்குளம்பில் கணகணப்ப
      திருவா காரம்
      குலுங்க நில மடந்தைதனை
      யிடந்து புல்கி
      கோட்டிடைவை தருளியவெங்
      கோமான் கண்டீர்
      இலங்கியநான் மறையனைத்து
      மங்க மாறும்
      ஏழிசையும் கேள்விகளு
      மெண்டி கெங்கும்
      சிலம்பியநற் பெருஞ்செல்வம்
      திகழும் நாங்கூர
      திருதெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.8
      1286
      ஏழுலகும் தாழ்வரையு
      மெங்கு மூடி
      எண்டிசையு மண்டலமும்
      மண்டி அண்டம்
      மோழையெழு தாழிமிகும்
      ஊழி வெள்ளம்
      முன்னகட்டி லொடுக்கியவெம்
      மூர்த்தி கண்டீர்
      ஊழிதொறு மூழிதொறு
      முயர்ந்த செல்வ
      தோங்கியநான் மறையனைத்தும்
      தாங்கு நாவர்
      சேழுயர்ந்த மணிமாடம்
      திகழும் நாங்கூர
      திருதெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலே 4.4.9
      1287
      சீரணிந்த மணிமாடம்
      திகழும் நாங்கூர
      திருதெற்றி யம்பலத்தென்
      செங்கண் மாலை
      கூரணிந்த வேல்வலவன்
      ஆலி நாடன்
      கொடிமாட மங்கையர்கோன்
      குறைய லாளி
      பாரணிந்த தொல்புகழான்
      கலியன் சொன்ன
      பாமாலை யிவையைந்து
      மைந்தும் வல்லார்
      சீரணிந்த வுலகத்து
      மன்ன ராகி
      சேண்விசும்பில் வானவரா
      திகழ்வர் தாமே 4.4.10
      1288
      தூம்புடை பனைக்கை வேழம்
      துயர்கெடு தருளி மன்னு
      காம்புடை குன்ற மேந்தி
      கடுமழை காத்த எந்தை
      பூம்புனல் பொன்னி முற்றும்
      புகுந்துபொன் வரண்ட எங்கும்
      தேம்பொழில் கமழும் நாங்கூர
      திருமணி கூட தானே 4.5.1
      1289
      கவ்வைவா ளெயிற்று வன்பே
      கதிர்முலை சுவைத்துஇ லங்கை
      வவ்விய இடும்பை தீர
      கடுங்கணை துரந்த எந்தை
      கொவ்வைவாய் மகளிர் கொங்கை
      குங்குமம் கழுவி போந்த
      தெய்வநீர் கமழும் நாங்கூர
      திருமணி கூட தானே 4.5.2
      1290
      மாத்தொழில் மடங செற்று
      மறுதிற நடந்து வன்தாள்
      சேத்தொழில் சிதைத்து பின்னை
      செவ்வித்தோள் புணர்ந்த எந்தை
      நாத்தொழில் மறைவல் லார்கள்
      நயந்தறம் பயந்த வண்கை
      தீத்தொழில் பயிலும் நாங்கூர
      திருமணி கூட தானே 4.5.3
      1291
      தாங்கருஞ் சினத்து வன்தாள்
      தடக்கைமா மருப்பு வாங்கி
      பூங்குரு தொசித்து புள்வாய்
      பிளந்தெரு தடர்த்த எந்தை
      மாங்கனி நுகர்ந்த மந்தி
      வந்துவண் டிரிய வாழை
      தீங்கனி நுகரும் நாங்கூர
      திருமணி கூட தானே 4.5.4
      1292
      கருமக ளிலங்கை யாட்டி
      பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
      வருமவள் செவியும் மூக்கும்
      வாளினால் தடிந்த எந்தை
      பெருமகள் பேதை மங்கை
      தன்னொடும் பிரிவி லாத
      திருமகள் மருவும் நாங்கூர
      திருமணி கூட தனே 4.5.5
      1293
      கெண்டையும் குறளும் புள்ளும்
      கேழலு மரியும் மாவும்
      அண்டமும் சுடரும் அல்ல
      ஆற்றலு மாய எந்தை
      ஓண்டிறல் தென்ன னோட
      வடவர சோட்டங் கண்ட
      திண்டிற லாளர் நாங்கூர
      திருமணி கூட தனே 4.5.6
      1294
      குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு
      நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை
      மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு எங்கும்
      தென்றல்வ துலவும் நாங்கூர திருமணி கூட தானே 4.5.7
      1295
      சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இ தரணி யோம்பும்
      பொங்கிய முகிலும் அல்லா பொருள்களு மாய வெந்தை
      பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய
      செங்கய லுகளும் நாங்கூர திருமணி கூட தானே 4.5.8
      1296
      பாவமும் அறமும் வீடும் இன்பமு துன்ப தானும்
      கோவமும் அருளும் அல்லா குணங்களு மாய எந்தை
      மூவரி லெங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
      தேவர்வ திறைஞ்சும் நாங்கூர திருமணி கூட தனே 4.5.9
      1297
      திங்கள்தோய் மாட நாங்கூர திருமணி கூட தானை
      மங்கையர் தலைவன் வண்தார கலியன்வா யொலிகள் வல்லார்
      பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு பின்னும்
      வெங்கதிர பரிதி வட்ட தூடுபோய் விளங்கு வாரே 4.5.10
      1298
      தாவள துலக முற்றும் தடமலர பொய்கை புக்கு
      நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந்தீர்த்தாய்
      மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை
      காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே 4.6.1
      1299
      மண்ணிட தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்
      விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
      துண்ணென மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய
      கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 4.6.2
      1300
      உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி
      கருத்துடை தம்பி கின்ப கதிமுடி யரசளித்தாய்
      பருத்தெழு பலவும் மாவும் பழம்விழு தொழுகும் நாங்கை
      கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே 4.6.3
      1301
      முனைமக தரக்கன் மாள முடிகள்ப தறுத்து வீழ்த்து ஆங்
      கனையவற் கிளைய வற்கே அரசளி தருளி னானே
      சுனைகளில் கயல்கள் பா சுரும்புதேன் நுகரும் நாங்கை
      கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே 4.6.4
      1302
      படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து
      மடவரல் மங்கை தன்னை மார்வக திருத்தி னானே
      தடவரை தங்கு மாட தகுபுகழ் நாங்கை மேய
      கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 4.6.5
      1303
      மல்லரை யட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று
      பல்லர சவிந்து வீழ பாரத போர்மு டித்தாய்
      நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய
      கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 4.6.6
      1304
      மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழு தருளி
      மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்
      பூத்தமர் சோலை யோங்கி புனல்பர தொழுகும் நாங்கை
      காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே 4.6.7
      1305
      ஏவிளங் கன்னி காகி இமையவர் கோனை செற்று
      காவளம் கடிதி றுத்து கற்பகம் கொண்டு போந்தாய்
      பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
      காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே 4.6.8
      1306
      சந்தமாய் சமய மாகி சமயவைம் பூத மாகி
      அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்
      மந்தமார் பொழில்க டோ றும் மடமயி லாலும் நாங்கை
      கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 4.6.9
      1307
      மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை
      காவளம் பாடி மேய கண்ணணை கலியன் சொன்ன
      பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி
      கோவிள மன்னர் தாழ குடைநிழல் பொலிவர் தாமே 4.6.10
      1308
      கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
      நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்
      திண்ணார் மதிள்சூழ் திருவெள்ள குளத்துள்
      அண்ணா அடியே னிடரை களையாயே 4.7.1
      1309
      கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே
      நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
      செந்தா மரைநீர திருவெள்ள குளத்துள்
      எந்தாய் அடியே னிடரை களையாயே 4.7.2
      1310
      குன்றால் குளிர்மா ரிதடு துகந்தானே
      நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
      சென்றார் வணங்கும் திருவெள்ள குளத்துள்
      நின்றாய் நெடியாய் அடியே னிடர்நீக்கே 4.7.3
      1311
      கானார் கரிகொம் பதொசித்த களிறே
      நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்
      தேனார் பொழில்சூழ் திருவெள்ள குளத்துள்
      ஆனாய் அடியேனு கருள்புரி யாயே 4.7.4
      1312
      வேடார் திருவேங் கடம்மேய விளக்கே
      நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்
      சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்
      பாடா வருவேன் விணையா யினபாற்றே 4.7.5
      1313
      கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்
      நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர
      செல்வா திருவெள்ள குளத்துறை வானே
      எல்லா இடரும் கெடுமா றருளாயே 4.7.6
      1314
      கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே
      நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்
      சேலார் வயல்சூழ் திருவெள்ள குளத்துள்
      மாலே எனவல் வினைதீர தருளாயே 4.7.7
      1315
      வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்
      நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்
      சீரார் பொழில்சூழ் திருவெள்ள குளத்துள்
      ஆரா வமுதே அடியேற் கருளாயே 4.7.8
      1316
      பூவார் திருமா மகள்புல் லியமார்பா
      நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர
      தேவா திருவெள்ள குளத்துறை வானே
      ஆவா அடியா னிவன் என் றருளாயே 4.7.9
      1317
      நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர
      செல்வன் திருவெள் ளக்குள துறைவானை
      கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை
      வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே 4.7.10
      1318
      கவளயானை கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர
      குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்
      தவளமாட நீடுநாங்கை தாமரையாள் கேள்வனென்றும்
      பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.1
      1319
      கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்
      வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்
      செஞ்சொலாளர் நீடுநாங்கை தேவதேவ னென்றென்றோதி
      பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.2
      1320
      அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு
      செண்டனென்றும் நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும்
      வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி
      பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.3
      1321
      கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே
      மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும்
      செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
      பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.4
      1322
      அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற
      குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும் மாமதியை
      நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி
      பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.5
      1323
      ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும் நானிலஞ்சூழ்
      வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும் மேலெழுந்து
      சேலுகளும் வயல்கொள்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
      பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.6
      1324
      நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும் நான்மறைகள்
      தேடியென்றும் காணமாட்டா செல்வனென்றும் சிறைகொள்வண்டு
      சேடுலவு பொழில்கொள்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
      பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.7
      1325
      உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா
      நிலவுமாழி படையனென்றும் நேசனென்றும் தென்திசைக்கு
      திலதமன்ன மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
      பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.8
      1326
      கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும்
      எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகு காதியென்றும்
      திண்ணமாட நீடுநாங்கை தேவதேவ னென்றென்றோதி
      பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 4.8.9
      1327
      பாருள்நல்ல மறையோர்நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை
      வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம்
      கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்
      ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே 4.8.10
      1328
      நும்மை தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்
      இம்மை கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே
      எம்மை கடிதா கரும மருளி ஆவா வென்றிரங்கி
      நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே 4.9.1
      1329
      சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
      மைந்தா அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே
      நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ என்
      எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. 4.9.2
      1330
      பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த
      மூசி வண்டு முரலும கண்ணி முடியீர் உம்மைக்காணும்
      ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம் அயலாரும்
      ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. 4.9.3
      1331
      ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து அடியோர்க்கு
      தேச மறிய வுமக்கே யாளா திரிகின் றோமுக்கு
      காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
      வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. 4.9.4
      1332
      தீயெம் பெருமான் நீரெம் திசையு மிருநிலனு
      மாய் எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்
      தாயெம் பெருமான் தந்தை யாவீர் அடியேமுக்-
      கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. 4.9.5
      1333
      சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும்மடியார்
      எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை
      நல்ல ரறிவீர் தீயா நமக்கிவ் வுலகத்தில்
      எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. 4.9.6
      1334
      மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மை பணியறியா
      விட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே
      காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த
      நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே 4.9.7
      1335
      முன்னை வண்ணம் பாலின் முழுதும் நிலைநின்ற
      பின்னை வண்ணம் கொண்டல் வண்ண மெண்ணுங்கால்
      பொன்னின் வண்ணம் மணியின் புரையு திருமேனி
      இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. 4.9.8
      1336
      எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்
      வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
      சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
      இந்த வண்ண மென்று காட்டீர் ளூரீரே 4.9.9
      1337
      ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை
      காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த
      சீரா ரின்சொல் மாலை கற்று திரிவா ருலகத்து
      ஆரா ரவரே யமரர கென்று மமர ராவாரே 4.9.10
      1338
      ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம்
      பெருமான்
      பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்து பெருநில மளந்தவன் கோயில்
      காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே
      வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.1
      1339
      ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி
      கார்நிறை மேகம் கலந்தோ ருருவ கண்ணனார் கருதிய கோயில்
      பூநீரை செருந்தி புன்னைமு தரும்பி பொதும்பிடை வரிவண்டு மிண்டி
      தேனிரை துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.2
      1340
      கடுவிடமுடைய காளியன் தடத்தை கலக்கிமுன் னலக்கழித்து அவன்றன்
      படமிற பாய்ந்து பன்மணி சிந்த பல்நடம் பயின்றவன் கோயில்
      படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடக தொலிபோய்
      அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.3
      1341
      கறவைமுன் காத்து கஞ்சனை காய்த்த காளமே கத்திரு வுருவன்
      பறவைமுன் னுயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்
      துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்
      செறிமணி மாட கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.4
      1342
      பாரினை யுண்டு யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால்
      தேரினை யூர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்
      ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி
      சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.5
      1343
      காற்றிடை பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை
      கூற்றிடை செல்ல கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்
      கோயில்
      ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ தனவுண்டு மண்டி
      சேற்றிடை கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.6
      1344
      ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
      தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
      அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப
      வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே
      4.10.7
      1345
      முடியுடை யமரர கிடர்செயு மசுரர் தம்பெரு மானைஅன் றரியாய்
      மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
      படியிடை மாட தடியிடை தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்
      விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே 4.10.8
      1346
      குடிகுடி யா கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த
      அடியவர கருளி யரவணை துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்
      கடியுடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய
      வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே
      4.10.9
      1347
      பண்டுமுன் ஏன மாகியன் றொருகால் பாரிட தெயிற்றினில் கொண்டு
      தெண்டிரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை
      வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்
      கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரி குரைகட லுலகே 4.10.10
      பெரிய திருமொழி ஐந்தாம் பத்து
      1348
      அறிவ தரியா னனைத்துலகும்
      உடையா னென்னை யாளுடையான்
      குறிய மாணி யுருவாய
      கூத்தன் மன்னி யமருமிடம்
      நறிய மலர்மேல் சுரும்பார்க்க
      எழிலார் மஞ்ஞை நடமாட
      பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.1
      1349
      கள்ள குறளாய் மாவலியை
      வஞ்சித்து உலகம் கைப்படுத்து
      பொள்ளை கரத்த போதகத்தின்
      துன்பம் தவிர்த்த புனிதனிடம்
      பள்ள செறுவில் கயலுகள
      பழன கழனி யதனுள்போய்
      புள்ளு பிள்ளை கிரைதேடும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.2
      1350
      மேவா வரக்கர் தென்னிலங்கை
      வேந்தன் வீ சரம்துரந்து
      மாவாய் பிளந்து மல்லடர்த்து
      மருதம் சாய்த்த மாலதிடம்
      காவார் தெங்கின் பழம்வீழ
      கயல்கள் பா குருகிரியும்
      பூவார் கழனி யெழிலாரும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.3
      1351
      வெற்பால் மாரி பழுதாக்கி
      விறல்வா ளரக்கர் தலைவன்றன்
      வற்பார் திரள்தோ ளைந்நான்கும்
      துணித்த வல்வில் இராமனிடம்
      கற்பார் புரிசை செய்குன்றம்
      கவினார் கூடம் மாளிகைகள்
      பொற்பார் மாட மெழிலாரும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.4
      1352
      மையார் தடங்கண் கருங்கூந்தல்
      ஆய்ச்சி மறைய வைத்ததயிர்
      நெய்யார் பாலோ டமுதுசெய்த
      நேமி யங்கை மாயனிடம்
      செய்யார் ஆரல் இரைகருதி
      செங்கால் நாரை சென்றணையும்
      பொய்யா நாவில் மறையாளர்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.5
      1353
      மின்னி னன்ன நுண்மருங்குல்
      வேயேய் தடந்தோள் மெல்லியற்கா
      மன்னு சினத்த மழவிடைகள்
      ஏழன் றடர்த்த மாலதிடம்
      மன்னு முதுநீ ரரவிந்த
      மலர்மேல் வரிவண் டிசைபாட
      புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.6
      1354
      குடையா விலங்கல் கொண்டேந்தி
      மாரி பழுதா நிரைகாத்து
      சடையா னோட அடல்வாணன்
      தடந்தோள் துணித்த தலைவனிடம்
      குடியா வண்டு கள்ளுண்ண
      கோல நீலம் மட்டுகுக்கும்
      புடையார் கழனி யெழிலாரும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.7
      1355
      கறையார் நெடுவேல் மறமன்னர்
      வீய விசயன் தேர்கடவி
      இறையான் கையில் நிறையாத
      முண்டம் நிறைத்த வெந்தையிடம்
      மறையால் மூத்தீ யவைவளர்க்கும்
      மன்னு புகழால் வண்மையால்
      பொறையால் மிக்க அந்தணர்வாழ்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.8
      1356
      துன்னி மண்ணும் விண்ணாடும்
      தோன்றா திருளாய் மூடியநாள்
      அன்ன மாகி யருமறைகள்
      அருளி செய்த அமலனிடம்
      மின்னு சோதி நவமணியும்
      வேயின் முத்தும் சாமரையும்
      பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
      புள்ளம் பூதங் குடிதானே 5.1.9
      1357
      கற்றா மறித்து காளியன்றன்
      சென்னி நடுங்க நடம்பயின்ற
      பொற்றாமரையாள் தன்கேள்வன்
      புள்ளம் பூதங்குடிதன்மேல்
      கற்றார் பரவும் மங்கையர்க்கோன்
      காரார் புயற்கை கலிகன்றி
      சொல்தானீரை திவைபாட
      சோர நில்லா துயர்தாமே 5.1.10
      1358
      தாம்தம் பெருமை யறியார் தூது
      வேந்தர காய வேந்த ரூர்போல்
      காந்தள் விரல்மென் கலைநன் மடவார்
      கூந்தல் கமழும் கூட லூரே 5.2.1
      1359
      செறும்திண் திமிலே றுடைய பின்னை
      பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்
      நறுந்தண் தீம் தே னுண்ட வண்டு
      குறிஞ்சி பாடும் கூட லூரே 5.2.2
      1360
      பிள்ளை யுருவா தயிருண்டு அடியேன்
      உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்
      கள்ள நாரை வயலுள் கயல்மீன்
      கொள்ளை கொள்ளும் கூட லூரே 5.2.3
      1361
      கூற்றே ருருவின் குறளாய் நிலநீர்
      ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்
      சேற்றே ருழுவர் கோதை போதூண்
      கோல்தேன் முரலும் கூட லூரே 5.2.4
      1362
      தொண்டர் பரவ சுடர்சென் றணவ
      அண்ட தமரும் அடிக ளூர்போல்
      வண்ட லலையுள் கெண்டை மிளிர
      கொண்ட லதிரும் கூட லூரே 5.2.5
      1363
      தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
      துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்
      எக்க லிடுநுண் மணல்மேல் எங்கும்
      கொக்கின் பழம்வீழ் கூட லூரே 5.2.6
      1364
      கருந்தண் கடலும் மலையு முலகும்
      அருந்தும் அடிகள் அமரு மூர்போல்
      பெருந்தண் முல்லை பிள்ளை யோடி
      குருந்தம் தழுவும் கூட லூரே 5.2.7
      1365
      கலைவாழ் பிணையோ டணையும் திருநீர்
      மலைவா ழெந்தை மருவு மூர்போல்
      இலைதாழ் தெங்கின் மேல்நின்று இளநீர
      குலைதாழ் கிடங்கின் கூட லூரே 5.2.8
      1366
      பெருகு காத லடியேன் உள்ளம்
      உருக புகுந்த வொருவ ரூர்போல்
      அருகு கைதை மலர கெண்டை
      குருகென் றஞ்சும் கூட லூரே 5.2.9
      1367
      காவி பெருநீர் வண்ணன் கண்ணன்
      மேவி திகழும் கூட லூர்மேல்
      கோவை தமிழால் கலியன் சொன்ன
      பாவை பாட பாவம் போமே 5.2.10
      1368
      வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை
      மன்னரை மூவெழுகால்
      கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர்
      வகையென கருள்புரியே
      மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை
      மௌவலின் போதலர்த்தி
      தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு
      வெள்ளறை நின்றானே 5.3.1
      1369
      வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்
      கருளிமுன் பரிமுகமாய்
      இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ
      னே என கருள்புரியே
      உயர்கொள் மாதவி போதொடு லாவிய
      மாருதம் வீதியின்வாய்
      திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு
      வெள்ளறை நின்றானே 5.3.2
      1370
      வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன்
      உடலக மிருபிளவா
      கையில் நீளுகிர படையது வாய்த்தவ னே
      என கருள்புரியே
      மையி னார்தரு வராலினம் பாயவண்
      தடத்திடை கமலங்கள்
      தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு
      வெள்ளறை நின்றானே 5.3.3
      1371
      வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக
      ஐவர்க்க கரசளித்த
      காம்பி னார்த்திரு வேங்கட பொருப்ப.நின்
      காதலை யருளெனக்கு
      மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்
      வாயது துவர்ப்பெய்த
      தீம்ப லங்கனி தேனது கர்திரு
      வெள்ளறை நின்றானே 5.3.4
      1372
      மான வேலொண்கண் மடவரல் மண்மகள்
      அழுங்கமு நீர்ப்பரப்பில்
      ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே
      என கருள்புரியே
      கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்
      முறுவல்செய் தலர்கின்ற
      தேனின் வாய்மலர் முருகுகு கும்திரு
      வெள்ளறை நின்றானே 5.3.5
      1373
      பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ
      அமுதினை கொடுத்தளிப்பான்
      அங்கொ ராமைய தாகிய வாதி.நின்
      னடிமையை யருளெனக்கு
      தங்கு பேடையொ டூடிய மதுகரம்
      தையலார் குழலணைவான்
      திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை
      திரு வெள்ளறை நின்றானே 5.3.6
      1374
      ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி
      அரக்கன்றன் சிரமெல்லாம்
      வேறு வேறுக வில்லது வளைத்தவ னே
      என கருள்புரியே
      மாறில் சோதிய மரதக பாசடை
      தாமரை மலர்வார்ந்த
      தேறல் மாந்திவண் டின்னிசை முரல
      திரு வெள்ளறை நின்றானே 5.3.7
      1375
      முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக
      உம்பர்கள் தொழுதேத்த
      அன்ன மாகியன் றருமறை பயந்தவ
      னே.என கருள்புரியே
      மன்னு கேதகை சூதக மென்றிவை
      வனத்திடை சுரும்பினங்கள்
      தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு
      வெள்ளறை நின்றானே 5.3.8
      1376
      ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
      றகலிட முழுதினையும்
      பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு
      வேனென கருள்புரியே
      ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
      டுழிதர மாவேறி
      தீங்கு யில்மிழற் றும்பட பைத்திரு
      வெள்ளறை நின்றானே 5.3.9
      1377
      மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு
      வெள்ளறை யதன்மேய
      அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை
      ஆதியை யமுதத்தை
      நஞ்சு லாவிய வேல்வல வன்கலி
      கன்றிசொல் ஐயிரண்டும்
      எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை
      யோர்க்ர சாவார்க்களே 5.3.10
      1378
      உந்தி மேல்நான் முகனை
      படைத்தான் உல குண்டவன்
      எந்தை பெம்மான் இமையோர்கள்
      தாதைக்கிட மென்பரால்
      சந்தி னோடு மணியும்
      கொழிக்கும்புனல் காவிரி
      அந்தி போலும் நிறத்தார்
      வயல்சூழ்தென் னரங்கமே 5.4.1
      1379
      வையமுண் டாலிலை மேவு
      மாயன்மணி நீண்முடி
      பைகொள் நாக தணையான்
      பயிலுமிட மென்பரால்
      தையல் நல்லார் குழல்மா
      லையும்மற்றவர் தடமுலை
      செய்ய சாந்தும் கலந்திழி
      புனல்சூழ்தென் னரங்கமே 5.4.2
      1380
      பண்டிவ் வைய மளப்பான்
      சென்றுமாவலி கையில்நீர்
      கொண்ட ஆழி தடக்கை
      குறளனிட மென்பரால்
      வண்டு பாடும் மதுவார்
      புனல்வந்திழி காவிரி
      அண்ட நாறும் பொழில்சூழ்ந்து
      அழகார்தென் னரங்கமே 5.4.3
      1381
      விளைத்த வெம்போர் விறல்வா
      ளரக்கன்நகர் பாழ்பட
      வளைத்த வல்வில் தடக்கை
      யவனுக்கிட மென்பரால்
      துளைக்கை யானை மருப்பு
      மகிலும்கொணர துந்திமுன்
      திளைக்கும் செல்வ புனல்கா
      விரிசூழ்தென் னரங்கமே 5.4.4
      1382
      வம்புலாம் கூந்தல் மண்டோ தரி
      காதலன் வான்புக
      அம்பு தன்னால் முனிந்த
      அழகனிட மென்பரால்
      உம்பர் கோனு முலகேழும்
      வந்தீண்டி வணங்கும் நல்
      செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து
      அழகார்தென் னரங்கமே 5.4.5
      1383
      கலையு டுத்த அகலல்குல்
      வன்பேய்மகள் தாயென
      முலைகொ டுத்தா ளுயிருண்
      டவன்வாழுமிட மென்பரால்
      குலையெ டுத்த கதலி
      பொழிலூடும் வந்துந்தி முன்
      அலையெ டுக்கும் புனற்கா
      விரிசூழ்தென் னரங்கமே 5.4.6
      1384
      கஞ்சன் நெஞ்சும் கடுமல்
      லரும்சகடமுங்காலினால்
      துஞ்ச வென்ற சுடராழி
      யான்வாழுமிட மென்பரால்
      மஞ்சு சேர்மா ளிகைநீ
      டகில்புகையும் மறையோர்
      செஞ்சொல் வேள்வி புகையும்
      கமழும்தென் னரங்கமே 5.4.7
      1385
      ஏன மீனா மையோடு
      அரியும்சிறு குறளுமாய்
      தானு மா தரணி
      தலைவனிட மென்பரால்
      வானும் மண்ணும் நிறை
      புகுந்தீண்டி வணங்கும்நல்
      தேனும் பாலும் கலந்தன்
      னவர்சேர்த்தென் னரங்கமே 5.4.8
      1386
      சேய னென்றும் மிகப்பெரியன்
      நுண்ணேர்மையி னாயஇம்
      மாயையை ஆரு மறியா
      வகையானிட மென்பரால்
      வேயின் முத்தும் மணியும்
      கொணர்ந்தார்ப்புனற் காவிரி
      ஆய பொன்மா மதிள்சூழ
      தழகார்தென் னரங்கமே 5.4.9
      1387
      அல்லி மாத ரமரும்
      திருமார்வ னரங்கத்தை
      கல்லின் மன்னு மதிள்மங்
      கையர்கோன்கலி கன்றிசொல்
      நல்லிசை மாலைகள் நாலி
      ரண்டுமிரண் டுமுடன்
      வல்லவர் தாமுல காண்டு
      பின்வானுல காள்வரே 5.4.10
      1388
      வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .
      வேங்கடமே . எங்கின் றாளால்
      மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
      துயில்மறந்தாள் வண்டார் கொண்டல்
      உருவாளன் வானவர்த முயிராளன்
      ஒலிதிரைநீர பௌவங் கொண்ட
      திருவாளன் என்மகளை செய்தனகள்
      எங்ஙனம்நான் சிந்தி கேனே . 5.5.1
      1389
      கலையாளா வகலல்குல் கனவளையும்
      கையாளா என்செய் கேன்நான்
      விலையாளா வடியேனை வேண்டுதியோ
      வேண்டாயோ என்னும் மெய்ய
      மலையாளன் வானவர்த்தம் தலையாளன்
      மராமரமே ழெய்த வென்றி
      சிலையாளன் என் மகளை செய்தனகள்
      எங்ஙனம்நான் சிந்தி கேனே . 5.5.2
      1390
      மானாய மென்னோக்கி வாநெடுங்கண்
      ணீர்மல்கும் வளையும் சோரும்
      தேனாய நறுந்துழா யலங்கலின்
      திறம்பேசி யுறங்காள் காண்மின்
      கானாயன் கடிமனையில் தயிருண்டு
      நெய்பருக நந்தன் பெற்ற
      ஆனாயன் என் மகளை செய்தனகள்
      அம்மனைமீரறிகி லேனே . 5.5.3
      1391
      தாய்வாயில் சொற்கேளாள் தன்னா
      தோடணையாள் தடமென் கொங்கை-
      யேஆர சாந்தணியாள் எம்பெருமான்
      திருவரங்க மெங்கே என்னும்
      பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
      பெருவயிற்றன் பேசில் நங்காய்
      மாமாய னென்மகளை செய்தனகள்
      மங்கைமீர் . மதிக்கி லேனே 5.5.4
      1392
      பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
      மையெழுதாள் பூவை பேணாள்
      ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்
      திருவரங்க மெங்கே என்னும்
      நாண்மலராள் நாயகனாய் நாமறிய
      வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
      ஆண்மகனா யென்மகளை செய்தனகள்
      அம்மனைமீரறிகி லேனே . 5.5.5
      1393
      தாதாடு வனமாலை தாரானோ
      வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்
      யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்
      திருவரங்கம் என்னும் பூமேல்
      மாதாளன் குடமாடி மதுசூதன்
      மன்னர்க்காய் முன்னம் சென்ற
      தூதாளன் என்மகளை செய்தனகள்
      எங்ஙனம்நான் சொல்லு கேனே . 5.5.6
      1394
      வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
      றாயினவா றெண்ணாள் எண்ணில்
      பேராளன் பேரல்லால் பேசாள் இ
      பெண்பெற்றே னென்செய் கேன்நான்
      தாராளன் தண்குடந்தை நகராளன்
      ஐவர்க்கா யமரி லுய்த்த
      தேராளன் என்மகளை செய்தனகள்
      எங்ஙனம்நான் செப்பு கேனே . 5.5.7
      1395
      உறவாது மிலளென்றென் றொழியாது
      பலரேசும் அலரா யிற்றால்
      மறவாதே யெப்பொழுதும் மாயவனே.
      மாதவனே. என்கின் றளால்
      பிறவாத பேராளன் பெண்ணாளன்
      மண்ணாளன் விண்ணோர் தங்கள்
      அறவாளன் என்மகளை செய்தனகள்
      அம்மனைமீரறிகி லேனே . 5.5.8
      1396
      பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
      பாலூட்டாள் பாவை பேணாள்
      வந்தானோ திருவரங்கன் வாரானோ
      என்றென்றே வளையும் சோரும்
      சந்தோகன் பௌழியன் ஐ தழலோம்பு
      தைத்திரியன் சாம வேதி
      அந்தோ.வ தென்மகளை செய்தனகள்
      அம்மனைமீரறிகி லேனே . 5.5.9
      1397
      சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்க
      தம்மானை சிந்தை செய்த
      நீலமலர கண்மடவாள் நிறையழிவை
      தாய்மொழிந்த வதனை நேரார்
      காலவேல் பரகாலன் கலிகன்றி
      ஒலிமாலை கற்று வல்லார்
      மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவரா
      பொன்னுலகில் வாழ்வர் தாமே 5.5.10
      1398
      கைம்மான மழகளிற்றை
      கடல்கிடந்த கருமணியை
      மைம்மான மரகதத்தை
      மறையுரைத்த திருமாலை
      எம்மானை எனக்கென்று
      மினியானை பனிகாத்த
      வம்மானை யான்கண்ட
      தணிநீர தென் னரங்கத்தே 5.6.1
      1399
      பேரானை குறுங்குடியெம்
      பெருமானை திருதண்கால்
      ஊரானை கரம்பனூர்
      உத்தமனை முத்திலங்கு
      காரார்த்திண் கடலேழும்
      மலையேழிவ் வுலகேழுண்டும்
      அராதென் றிருந்தானை
      கண்டதுதென் னரங்கத்தே 5.6.2
      1400
      ஏனாகி யுலகிடந்தன்
      றிருநிலனும் பெருவிசும்பும்
      தானாய பெருமானை
      தன்னடியார் மனத்தென்றும்
      தேனாகி யமுதாகி
      திகழ்ந்தானை மகிழ்ந்தொருகால்
      ஆனாயன் ஆனானை
      கண்டதுதென் னரங்கத்தே 5.6.3
      1401
      வளர்ந்தவனை தடங்கடலுள்
      வலியுருவில் திரிசகடம்
      தளர்ந்துதிர வுதைத்தவனை
      தரியாதன் றிரணியனை
      பிளந்தவனை பெருநிலமீ
      ரடிநீட்டி பண்டொருநாள்
      அளந்தவனை யான்கண்ட
      தணிநீர்த்தென் னரங்கத்தே 5.6.4
      1402
      நீரழலாய் நெடுநிலனாய்
      நின்றானை அன்றரக்கன்
      ஊரழலா லுண்டானை
      கண்டார்பின் காணாமே
      பேரழலா பெருவிசும்பா
      பின்மறையோர் மந்திரத்தின்
      ஆரழலா லுண்டானை
      கண்டதுதென் னரங்கத்தே 5.6.5
      1403
      தஞ்சினத்தை தவிர்த்தடைந்தார்
      தவநெறியை தரியாது
      கஞ்சனைக்கொன் றன்றுலக
      முண்டுமிழ்ந்த கற்பகத்தை
      வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்
      விசையுருவை யசைவித்த
      அஞ்சிறைப்பு பாகனையான்
      கண்டதுதென் னரங்கத்தே 5.6.6
      1404
      சிந்தனையை தவநெறியை
      திருமாலை பிரியாது
      வந்தெனது மனத்திருந்த
      வடமலையை வரிவண்டார்
      கொந்தணைந்த பொழில்கோவ
      லுலகளப்பா னடிநிமிர்த்த
      அந்தணனை யான்கண்ட
      தணிநீர்த்தென் னரங்கத்தே 5.6.7
      1405
      துவரித்த வுடையார்க்கும்
      தூய்மையில்ல சமணர்க்கும்
      அவர்கட்கங் கருளில்லா
      அருளானை தன்னடைந்த
      எமர்கட்கு மடியேற்கு
      மெம்மாற்கு மெம்மனைக்கும்
      அமரர்க்கும் பிரானாரை
      கண்டதுதென் னரங்கத்தே 5.6.8
      1406
      பொய்வண்ணம் மனத்தகற்றி
      புலனைந்தும் செலவைத்து
      மெய்வண்ணம் நினைந்தவர்க்கு
      மெய்ந்நின்ற வித்தகனை
      மைவண்ணம் கருமுகில்போல்
      திகழ்வண்ண மரதகத்தின்
      அவ்வண்ண வண்ணனையான்
      கண்டதுதென் னரங்கத்தே 5.6.9
      1407
      ஆமருவி நிரைமேய்த்த
      அணியரங்க தம்மானை
      காமருசீர கலிகன்றி
      யொலிசெய்த மலிபுகழ்சேர்
      நாமருவு தமிழ்மாலை
      நாலிரண்டோ டிரண்டினையும்
      நாமருவி வல்லார்மேல்
      சாராதீ வினைதாமே 5.6.10
      1408
      பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்வி
      பதங்களும் பதங்களின் பொருளும்
      பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும்
      பெருகிய புனலொடு நிலனும்
      கொடல்மா ருதமும் குரைகட லேழும்
      ஏழுமா மலைகளும் விசும்பும்
      அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
      அரங்கமா நகரமர தானே 5.7.1
      1409
      இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
      எண்ணில்பல் குணங்களே யியற்ற
      தந்தையும் தாயும் மக்களும் மிக்க
      சுற்றமும் சுற்றிநின் றகலா
      பந்தமும் பந்த மறுப்பதோர் மருந்தும்
      பான்மையும் பல்லுயிர கெல்லாம்
      அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
      அரங்கமா நகரமர தானே 5.7.2
      1410
      மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
      வானமும் தானவ ருலகும்
      துன்னுமா யிருளா துலங்கொளி சுருங்கி
      தொல்லைநான் மறைகளும் மறைய
      பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
      பிறங்கிருள் நிறங்கெட ஒருநாள்
      அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
      அரங்கமா நகரமர தானே 5.7.3
      1411
      மாயிருங் குன்ற மொன்று தாக
      மாசுண மதனொடும் அளவி
      பாயிரும் பௌவம் பகடுவிண் டலற
      படுதிரை விசும்பிடை படர
      சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்
      தேவரும் தாமுடன் திசைப்ப
      ஆயிர தோளா லலைகடல் கடைந்தான்
      அரங்கமா நகரமர தானே 5.7.4
      1412
      எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்
      இரணியன் இலங்குபூ ணகலம்
      பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
      பொழிதரு மருவியொ திழிய
      வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
      விண்ணுற கனல்விழி தெழுந்தது
      அங்ஙனே யொக்க அரியுரு வானான்
      அரங்கமா நகரமர தானே 5.7.5
      1413
      ஆயிரும் குன்றம் சென்றுதொ கனைய
      அடல்புரை யெழில்திகழ் திரடோ ள்
      ஆயிர துணிய அடல்மழு பற்றி
      மற்றவன் அகல்விசும் பணைய
      ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச
      அறிதுயி லலைகடல் நடுவே
      ஆயிரம் சுடர்வா யரவணை துயின்றான்
      அரங்கமா நகரமர தானே 5.7.6
      1414
      சுரிகுழல் கனிவா திருவினை பிரித்த
      கொடுமையிற் கடுவிசை யரக்கன்
      எரிவிழி திலங்கு மணிமுடி பொடிசெய்
      திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி
      வரிசிலை வளைய அடிசரம் துரந்து
      மறிகடல் நெறிபட மலையால்
      அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்
      அரங்கமா நகரமர தானே 5.7.7
      1415
      ஊழியாய் ஓ துச்சியாய் ஒருகால்
      உடையதே ரொருவனாய் உலகில்
      சூழிமால் யானை துயர்கெடு திலங்கை
      மலங்கவன் றடுசர துரந்து
      பாழியால் மிக்க பார்த்தனு கருளி
      பகலவ னொளிகெட பகலே
      ஆழியா லன்றங் காழியை மறைத்தான்
      அரங்கமா நகரமர தானே 5.7.8
      1416
      பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்
      பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
      வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
      மணிமுடி வானவர் தமக்கு
      சேயனாய் அடியேற் கணியனாய் வந்தென்
      சிந்தையுள் வெந்துய ரறுக்கும்
      ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
      அரங்கமா நகரமர தானே 5.7.9
      1417
      பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து
      பொருதிரை மாநதி புடைசூழ்ந்து
      அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த
      அரங்கமா நகரமர தானை
      மன்னுமா மாட மங்கையர் தலைவன்
      மானவேற் கலியன்வா யொலிகள்
      பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்றறு பாரே 5.7.10
      1418
      ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா
      திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
      மாழை மான்மட நோக்கியுன் தோழி
      உம்பி யெம்பி யென் றொழிந்திலை உகந்து
      தோழ னீயென கிங்கொழி என்ற
      சொற்கள் வந்தடி யேன்மன திருந்திட
      ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.1
      1419
      வாத மாமகன் மர்க்கடம் விலங்கு
      மற்றோர் சாதியென் றொழிந்திலை உகந்து
      காதல் ஆதரம் கடலினும் பெருக
      செய்த தகவினு கில்லைகைம் மாறென்று
      கோதில் வாய்மையி னாயொடு முடனே
      உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
      ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.2
      1420
      கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
      வைகு தாமரை வாங்கிய வேழம்
      முடியும் வண்ணமோர் முழுவலி முதலை
      பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
      கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங
      கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்துஉன்
      அடிய னேனும்வ தடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.3
      1421
      நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
      வெருவி வந்துநின் சரணென சரணா
      நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறை பறவை
      கடைக்க லம்கொடு தருள்செய்த தறிந்து
      வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்
      கொடிய செய்வன வுளஅதற் கடியேன்
      அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.4
      1422
      மாக மாநிலம் முழுவதும்வ திரைஞ்சும்
      மலர டிகண்ட மாமறை யாளன்
      தோகை மாமயி லன்னவ ரின்பம்
      துற்றி லாமையிலத்தவிங் கொழிந்து
      போகம் நீயெய்தி பின்னும்நம் மிடைக்கே
      போது வாய் என்ற பொன்னருள் எனக்கும்
      ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.5
      1423
      மன்னு நான்மறை மாமுனி பெற்ற
      மைந்த னைமதி யாதவெங் கூற்ற
      தன்னை யஞ்சிநின் சரணென சரணா
      தகவில் காலனை யுகமுனி தொழியா
      பின்னை யென்றும்நின் திருவடி பிரியா
      வண்ண மெண்ணிய பேரருள் எனக்கும்
      அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.6
      1424
      ஓது வாய்மையும் உவனி பிறப்பும்
      உனக்கு முன்தந்த அந்தண னொருவன்
      காத லென்மகன் புகலிடங் காணேன்
      கண்டு நீதரு வாயென கென்று
      கோதில் வாய்மையி னானுனை வேண்டிய
      குறைமு டித்தவன் சிறுவனை கொடுத்தாய்
      ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.7
      1425
      வேத வாய்மொழி யந்தண னொருவன்
      எந்தை நின்சர ணென்னுடை மனைவி
      காதல் மக்களை பயத்தலும் காணாள்
      கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும் என்றழைப்ப
      ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்கு
      செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்
      ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.8
      1426
      துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்
      தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
      உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
      கோடு நாழிகை யேழுடனிருப்ப
      வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளி
      செய்த வாறடி யேனறிந்து உலகம்
      அளந்த பொன்னடி யேயடை துய்ந்தேன்
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே 5.8.9
      1427
      மாடமாளிகை சூழ்திரு மங்கை
      மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
      ஆடல் மாவல் வன்கலி கன்றி
      அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை
      நீடு தொல்புக ழாழிவல் லானை
      எந்தை யைநெடு மாலைநி னைந்த
      பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
      பாட நும்மிடை பாவம்நில் லாவே 5.8.10
      1428
      கையிலங் காழி சங்கன்
      கருமுகில் திருநி றத்தன்
      பொய்யிலன் மெய்யன் தந்தாள்
      அடைவரே லடிமை யாக்கும்
      செய்யலர் கமல மோங்கு
      செறிபொழில் தென்தி ருப்பேர்
      பையர வணையான் நாமம்
      பரவிநா னுய்ந்த வாறே 5.9.1
      1429
      வங்கமார் கடல்க ளேழும்
      மலையும்வா னகமும் மற்றும்
      அங்கண்மா ஞால மெல்லாம்
      அமுதுசெய் துமிழ்ந்த எந்தை
      திங்கள்மா முகில்அ ணவு
      செறிபொழில் தெந்தி ருப்பேர்
      எங்கள்மா லிறைவன் நாமம்
      ஏத்திநா னுய்ந்த வாறே 5.9.2
      1430
      ஒருவனை யுந்தி பூமேல்
      ஓங்குவி தாக தன்னால்
      ஒருவனை சாபம் நீக்கி
      உம்பராள் என்று விட்டான்
      பெருவரை மதிள்கள் சூழ்ந்த
      பெருநகர் அரவ ணைமேல்
      கருவரை வண்ணன் தென்பேர்
      கருதிநா னுய்ந்த வாறே 5.9.3
      1431
      ஊனமர் தலையொன் றேந்தி
      உலகெலாம் திரியு மீசன்
      ஈனமர் சாபம் நீக்காய்
      என்னவொண் புனலை யீந்தான்
      தேனமர் பொழில்கள் சூழ்ந்த
      செறிவயல் தென்தி ருப்பேர்
      வானவர் தலைவன் நாமம்
      வாழ்த்திநா னுய்ந்த வாறே 5.9.4
      1432
      வக்கரன் வாய்முன் கீண்ட
      மாயவனே என்று வானேர்
      புக்கு அரண் தந்த ருள்வாய்
      என்னப்பொன் னாக தானை
      நக்கரி யுருவ மாகி
      நகங்கிளர திடந்து கந்த
      சக்கர செல்வன் தென்பேர
      தலைவன்தா ளடைந்து தேனே 5.9.5
      1433
      விலங்கலால் கடல டைத்து
      விளங்கிழை பொருட்டு வில்லால்
      இலங்கைமா நகர்க்கி றைவன்
      இருபது புயம்து ணித்தான்
      நலங்கொள்நான் மறைவல் லார்கள்
      ஒத்தொலி யேத்த கேட்டு
      மலங்குபாய் வயல்தி ருப்பேர்
      மருவிநான் வாழ்ந்த வாறே 5.9.6
      1434
      வெண்ணெய்தா னமுது செய்ய
      வெகுண்டு தாய்ச்சி யோச்சி
      கண்ணியர் குறுங்க யிற்றால்
      கட்டவெ டென்றி ருந்தான்
      திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
      தென்திரு பேருள் வேலை
      வண்ணனார் நாமம் நாளும்
      வாய்மொழி துய்ந்த வாறே 5.9.7
      1435
      அம்பொனா ருலக மேழும்
      அறியஆ பாடி தன்னுள்
      கொம்பனார் பின்னை கோலம்
      கூடுதற் கேறு கொன்றான்
      செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
      தென்திரு பேருள் மேவும்
      எம்பிரான் நாமம் நாளும்
      ஏத்திநா னுய்ந்த வாறே 5.9.8
      1436
      நால்வகை வேத மைந்து
      வேள்வியா றங்கம் வல்லார்
      மேலைவா னவரின் மிக்க
      வேதிய ராதி காலம்
      சேலுகள் வயல்தி ருப்பேர
      செங்கண்மா லோடும் வாழ்வார்
      சீலமா தவத்தர் சிந்தை
      யாளியென் சிந்தை யானே 5.9.9
      1437
      வண்டறை பொழில்தி ருப்பேர்
      வரியர வணையில் பள்ளி
      கொண்டுறை கின்ற மாலை
      கொடிமதிள் மாட மங்கை
      திண்டிறல் தோள்க லியன்
      செஞ்சொலால் மொழிந்த மாலை
      கொண்டிவை பாடி யாட
      கூடுவார் நீள்வி சும்பே 5.9.10
      1438
      தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
      சும்பு மவையாய்
      மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
      யாய பெருமான்
      தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
      மார்வர் தகைசேர்
      நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.1
      1439
      உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
      யாமை முனநாள்
      மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
      மேவு நகர்தான்
      மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
      கிண்டி யதன்மேல்
      நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.2
      1440
      உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
      யாமை முனநாள்
      தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
      மார்வர் தகைசேர்
      வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
      கங்குல் வயல்சூழ்
      நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.3
      1441
      பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
      வந்த அசுரர்
      இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
      நின்ற பெருமான்
      சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
      அடிகொள் நெடுமா
      நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.4
      1442
      மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
      வந்த அசுரர்
      தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
      யாம ளவெய்தான்
      வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
      யங்கை யுடையான்
      நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.5
      1443
      தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
      யாக முனநாள்
      வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
      மேவு நகர்தான்
      கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
      லார்பு றவுசேர்
      நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.6
      1444
      தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
      நந்தன் மதலை
      எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
      நின்ற நகர்தான்
      மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
      ஆடுபொழில்சூழ்
      நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.7
      1445
      எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
      யாளர் திருவார்
      பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
      கூட எழிலார்
      மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
      தாம லர்கள்தூய்
      நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.8
      1446
      வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
      மிக்க பெருநீர்
      அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
      யார றிதியேல்
      பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
      யெங்கு முளதால்
      நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
      நண்ணு மனமே 5.10.9
      1447
      நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
      நண்ணி யுறையும்
      உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
      யானை ஒளிசேர்
      கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
      யைந்து மைந்தும்
      முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
      முழுத கலுமே 5.10.10


      -
      2032-2790
      ------------------------------------------------------------------------
      4
      .


      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      ------------------------------------------------------------------------
      நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 2032-2790
      திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
      பெரிய திருமொழி
      திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
      திருக்குறுந்தாண்டகம்
      2032
      நிதியினை பவள தூணை
      நெறிமையால் நினைய வல்லார்
      கதியினை கஞ்சன் மாள
      கண்டுமுன் ஆண்ட மாளும்
      மதியினை மாலை வாழ்த்தி
      வணங்கியென் மனத்து வந்த
      விதியினை கண்டு கொண்ட
      தொண்டனேன் விடுகி லேனே 2 1
      2033
      காற்றினை புனலை தீயை
      கடிமதி ளிலங்கை செற்ற
      ஏற்றினை இமயம் மேய
      எழில்மணி திரளை இன்ப
      ஆற்றினை அமுத தன்னை
      அவுணனா ருயிரை யுண்ட
      கூற்றினை குணங்கொண் டுள்ளம்
      கூறுநீ கூறு மாறே. 2
      2034
      பாயிரும் பரவை தன்னுள்
      பருவரை திரித்து வானோர
      காயிரு தமுதங கொண்ட
      அப்பனை எம்பி ரானை
      வேயிருஞ்சோலை சூழ்ந்து
      விரிகதி ரிரிய நின்ற
      மாயிருஞ்சோலை மேய
      மைந்தனை வணங்கி னேனே. 3
      2035
      கேட்கயா னுற்ற துண்டு
      கேழலா யுலகங கொண்ட
      பூக்கெழு வண்ண நாரை
      போதர கனவில் கண்டு
      வாக்கினால் கரு தன்னால்
      மனத்தினால் சிரத்தை தன்னால்
      விழுங்கினேற் கினிய வாறே. 4
      2036
      இரும்பனன் றுண்ட நீர்போல்
      எம்பெரு மானுக்கு என்றன்
      அரும்பெற லன்பு புக்கி
      டடிமைபூண் டுய்ந்து போனேன்
      வரும்புயல் வண்ண னாரை
      மருவியென் மனத்து வைத்து
      கரும்பினின் சாறு போல
      பருகினேற் கினிய லாறே 5
      2037
      மூவரில் முதல்வ நாய
      ஒருவனை யுலகங் கொண்ட
      கோவினை குடந்தை மேய
      குருமணி திரளை இன
      பாவினை பச்சை தேனை
      பைம்பொன்னை யமரர் சென்னி
      பூவினை புகழும் தொண்டர்
      எஞ்சொல்லி புகழ்வர் தாமே 6
      2038
      இம்மையை மறுமை தன்னை
      எமக்குவீ டாகி நின்ற
      மெய்ம்மையை விரிந்த சோலை
      வியந்திரு வரங்கம் மேய
      செம்மையை கருமை தன்னை
      திருமலை ஒருமை யானை
      தன்மையை நினைவா ரென்றன்
      தலைமிசை மன்னு வாரே. 7
      2039
      வானிடை புயலை மாலை
      வரையிடை பிரசம் ஈன்ற
      தேனிடை கரும்பின் சாற்றை
      திருவினை மருவி வாழார்
      மானிட பிறவி யந்தோ.
      மதிக்கிலர் கொள்க தந்தம்
      ஊனிடை குரம்பை வாழ்க்கை
      குறுதியே வேண்டி னாரே. 8
      2040
      உள்ளமோ ஒன்றில் நில்லாது
      ஓசையி னெரிநின் றுண்ணும்
      கொள்ளிமே லெறும்பு போல
      குழையுமா லென்ற னுள்ளம்
      தெள்ளியீர். தேவர கெல்லாம்
      தேவரா யுலகம் கொண்ட
      ஒள்ளியீர் உம்மை யல்லால்
      எழுமையும் துணையி லோமே. 9
      2041
      சித்தமும் செவ்வை நில்லா
      தெஞ்செய்கேன் தீவி னையேன்
      பத்திமை கன்பு டையேன்
      ஆவதே பணியா யந்தாய்
      முத்தொளி மரத கம்மே.
      முழங்கொளி முகில்வண் ணாஎன்
      அத்த.நின் னடிமை யல்லால்
      யாதுமொன் றறிகி லேனே. 10
      2042
      தொண்டெல்லாம் பரவி நின்னை
      தொழுதடி பணியு மாறு
      கண்டு தான் கவலை தீர்ப்பான்
      ஆவதே பணியா யெந்தாய்
      அண்டமா யெண்டி சைக்கும்
      ஆதியாய் நீதி யான
      பண்டமாம் பரம சோதி.
      நின்னையே பரவு வேனே. 11
      2043
      ஆவியயை யரங்க மாலை
      அழுக்குரம் பெச்சில் வாயால்
      தூய்மையில் தொண்ட னேன்நான்
      சொல்லினேன் தொல்லை நாமம்
      பாவியேன் பிழத்த வாறென்
      றஞ்சினேற் கஞ்ச லென்று
      காவிபோல் வண்ணர் வந்தென்
      கண்ணுளே தோன்றினாரே 12
      2044
      இரும்பனன் றுண்ட நீரும்
      போதரும் கொள்க என்றன்
      அரும்பிணி பாவ மெல்லாம்
      அகன்றன என்னை விட்டு
      சுரும்பமர் சோலை சூழ்ந்த
      அரங்கமா கோயில் கொண்ட
      கரும்பினை கண்டு கொண்டென்
      கண்ணிணை களிக்கு மாறே 13
      2045
      காவியை வென்ற கண்ணார்
      கலவியே கருதி நாளும்
      பாவியே னாக வெண்ணி
      அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்
      தூவிசேர் அன்னம் மன்னும்
      சூழ்புனல் குடந்தை யானை
      பாவியென் பாவி யாது
      பாவியே னாயி னேனே. 14
      2046
      முன்பொலா இராவ ணன்றன்
      முதுமதி ளிலங்கை வேவித்து
      அன்பினா லனுமன் வந்தாங்
      கடியிணை பணிய நின்றார்க்கு
      என்பெலா முருகி யுக்கி
      டென்னுடை நெஞ்ச மென்னும்
      அன்பினால் ஞான நீர்கொண்
      டாட்டுவ னடிய னேனே. 15
      2047
      மாயமான் மா செற்று
      மருதிற நடந்து வையம்
      தாயமா பரவை பொங்க
      தடவரை திரித்து வானோர
      கீயுமால் எம்பி ரானார
      கென்னுடை சொற்க ளென்னும்
      தூயமா மாலை கொண்டு
      சூட்டுவன் தொண்ட னேனே 16
      2048
      பேசினார் பிறவி நீத்தார்
      பேருளான் பெருமை பேசி
      ஏச்னார் உய்ந்து போனார்
      என்பதிவ் வுலகின் வண்ணம்
      பேசினேன் ஏச மாட்டேன்
      பேதையேன் பிறவி நீத்தற்கு
      ஆசையோ பெரிது கொள்க
      அலைகடல் வண்ணர் பாலே 17
      2049
      இளைப்பினை யியக்கம் நீக்கி
      யிருந்துமுன் னிமையை கூட்டி
      அளப்பிலைம் புலன டக்கி
      அன்பவர் கண்ணே வைத்து
      துளக்கமில் சிந்தை செய்து
      தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
      விளக்கினை விதியில் காண்பார்
      மெய்ம்மையே காண்கிற் பாரே 18
      2050
      பிண்டியார் மண்டை ஏந்தி
      பிறர்மனை திரித துண்ணும்
      உண்டியான் சாபம் தீர்த்த
      ஒருவனூர் உலக மேத்தும்
      கண்டியூர் அரங்கம் மெய்யம்
      கச்சிபேர் மல்லை என்று
      மண்டினார் உய்யல் அல்லால்
      மற்றையார குய்ய லாமே 2 19
      2051
      வானவர் தங்கள் கோனும்
      மலர்மிசை அயனும் நாளும்
      தேமலர் தூவி ஏத்தும்
      சேவடி செங்கண் மாலை
      மானவேல் கலியன் சொன்ன
      வண்டமிழ் மாலை நாலைந்தும்
      ஊனம தின்றி வல்லார்
      ஒளிவிசும் பாள்வர் தாமே 2 20
      திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமாஜாயா நம
      திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த
      திருநெடுந்தாண்டகம்
      2052
      மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
      விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
      பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூ பில்லா
      பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
      பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தா
      புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
      தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
      தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. 2 1
      2053
      பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகி
      பல்வேறு சமயமுமா பரந்து நின்ற
      ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
      இமையவர்த திருவுருவே றெண்ணும் போது
      ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
      ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற
      மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி
      முகிலுருவம் எம்மடிகள் உருவ தானே. 2
      2054
      திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
      திரேதைக்கண் வளையுருவா திகழ்ந்தா னென்றும்
      பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
      பெருமானை கருநீல வண்ணன் றன்னை
      ஒருவடிவ தோருருவென் றுணர லாகா
      ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்
      கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னை
      கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே 3
      2055
      இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை
      இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்
      செந்திறத்த தமிழோசை வடசொல் லாகி
      திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி
      அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
      அந்தணனை அந்தணர்மா டந்தி வைத்த
      மந்திரத்தை மந்திரத்தால் மறவா தென்றும்
      வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே. 4
      2056
      ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
      ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து
      எண்மதியுங் கடந்தண்ட மீது போகி
      இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலை
      தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி
      தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
      மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
      மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. 5
      2057
      அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்
      அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர கென்றும்
      சலம்புரிந்தங் கருளில்லா தன்மை யாளன்
      தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி
      நிலம்பரந்து வரும்கலுழி பெண்ணை யீர்த்த
      நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி
      புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலி
      பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 6
      2058
      வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள
      வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு
      வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த
      வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய
      கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட
      கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி
      பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
      பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 7
      2059
      நீரகத்தாய். நெடுவரையி னுச்சி மேலாய்.
      நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
      ஊரகத்தாய் ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய்.
      உள்ளுவா ருள்ளத்தாய் உலக மேத்தும்
      காரகத்தாய். கார்வான துள்ளாய். கள்வா.
      காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
      பேரகத்தாய் பேராதென் நெஞ்சி னுள்ளாய்.
      பெருமான்உன் திருவடியே பேணி னேனே. 2 8
      2060
      வங்கத்தால் மாமணிவ துந்து முந்நீர்
      மல்லையாய். மதிள்கச்சி யூராய். பேராய்
      கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
      குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
      பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய்.
      பனிவரையி னுச்சியாய். பவள வண்ணா
      எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி
      ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே. 9
      2061
      பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட
      புகழானாய். இகழ்வாய தொண்ட னேன்நான்
      என்னானாய் என்னல் அல்லால்
      என்னறிவ னேழையேன் உலக மேத்தும்
      தென்னானாய் வடவானாய் குடபா லானாய்
      குணபால தாயினாய் இமையோர கென்றும்
      முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி.
      திருமூழி களத்தானாய் முதலா னாயே. 10
      2062
      பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்
      பனிநெடுங்கண் ணீர்தது பள்ளி கொள்ளாள்
      எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள்
      எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்
      மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்
      மடமானை இதுசெய்தார் தம்மை மெய்யே
      கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய்.
      கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே 11
      2063
      நெஞ்சுருகி கண்பனிப்ப நிற்கும் சோரும்
      நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்
      நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ. என்னும்
      வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்
      அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்
      அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்
      எஞ்சிறகின் கீழடங்கா பெண்ணை பெற்றேன்
      இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே. 12
      2064
      கல்லெடுத்து கல்மாரி காத்தாய். என்றும்
      காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்
      வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும்
      வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும்
      அல்லடர்த்து மல்லரையன் றட்டாய். என்றும்
      மாகீண்ட கத்தலத்தென் மைந்தா. என்றும்
      சொல்லெடுத்து தங்கிளியை சொல்லே என்று
      துணைமுலைமேல் துளிசோர சோர்க்கின் றாளே. 13
      2065
      முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
      அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை
      விளக்கொளியை மரகதத்தை திருத்தண் காவில்
      வெஃகாவில் திருமாலை பாட கேட்டு
      வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று
      மடக்கிளியை கைகூப்பி வங்கி னாளே. 14
      2066
      கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய
      களிறென்றும் கடல்கிடந்த கனியே. என்றும்
      அல்லியம்பூ மலர்ப்பொய்கை பழன வேலி
      அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்
      சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கி
      தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு
      மெல்விரல்கள் சிவப்பெ தடவி யாங்கே
      மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. 15
      2067
      கன்றுமே தினிதுகந்த காளாய். என்றும்
      கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே. என்றும்
      மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய். என்றும்
      வடதிருவேங் கடம்மேய மைந்தா. என்றும்
      வென்றசுரர் குலங்களைந்த வேந்தே. என்றும்
      விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய். என்றும்
      துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும்
      துணைமுலைமேல் துளிசோர சோர்க்கின் றாளே. 2 16
      2068
      பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூ
      பொருகயல்கண் ணீரரு போந்து நின்று
      செங்கால மடப்புறவம் பெடைக்கு பேசும்
      சிறுகுரலு குடலுருகி சிந்தித்து ஆங்கே
      தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி
      தண்கோவ லூர்ப்பாடி யாட கேட்டு
      நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை என்ன
      நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. 17
      2069
      கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
      கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்
      பார்வண்ண மடமங்கை பித்தர்
      பனிமலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
      ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள்
      எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்
      நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
      இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே 18
      2070
      முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்
      மொய்யகல துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
      அற்றாள்தன் நிறையழிந்தாள் ஆவி கின்றாள்
      அணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும்
      பெற்றேன்வா சொல்லிறையும் பேச கேளாள்
      பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி
      பொற்றாம ரைக்கயம்நீ ராட போனாள்
      பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. 19
      2071
      தோராளும் வாளரக்கன் செல்வம் மாள
      தென்னிலங்கை முன்மலங்க செந்தீ ஒல்கி
      பேராள னாயிரம் வாணன் மாள
      பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
      பாராளன் பாரிடந்து பாரை யுண்டு
      பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
      பேராளன் பேரோதும் பெண்ணை மண்மேல்
      பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே 20
      2072
      மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
      மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
      எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
      இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
      கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
      கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
      அவ்வண்ண தவர்நிலைமை கண்டும் தோழீ.
      அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. 2 21
      2073
      நைவளமொன் றாராயா நம்மை நோக்கா
      நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்
      செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி
      எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால்
      கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
      கனமகர குழையிரண்டும் நான்கு தோளும்
      எவ்வளவுண் டெம்பெருமான் கோயில் என்றேற்கு
      இதுவன்றோ எழிலாலி என்றார் தாமே. 22
      2074
      உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்
      ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே
      தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்தி
      சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்ன
      கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை
      கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது
      புள்ளூரும் கள்வாநீ போகேல் என்பன்
      என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே 23
      2075
      இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம்.
      இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட
      பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்
      பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
      ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி
      உலகுண்ட பெருவாய ரிங்கே வந்துஎன்
      பொருகயல்கண் ணீரரு புலவி தந்து
      புனலரங்க மூரென்று போயி நாரே. 24
      2076
      மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
      கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
      தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே
      தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
      என்னலனும் என்னிறையும் எஞ்சி தையும்
      என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு
      பொன்னலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலி னூடே
      புனலரங்க மூரென்று போயி னாரே. 25
      2077
      தேமருவு பொழிலிடத்து மலாந்த போதை
      தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்
      பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த
      அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை
      ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்
      அணியழுந்தூர் நின்றானு கின்றே சென்று
      நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது
      நின்நயந்தாள் என்றிறையே இயம்பி காணே. 26
      2078
      செங்கால மடநாராய். இன்றே சென்று
      திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு
      எங்காத லென்துணைவர குரைத்தி யாகில்
      இதுவொப்ப தெமக்கின்ப மில்லை நாளும்
      பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாக
      பழனமீன் கவர்ந்துண்ண தருவன் தந்தால்
      இங்கேவ தினிதிருந்துன் பெடையும் நீயும்
      இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. 2 27
      2079
      தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாள
      சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்
      மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
      வரையுருவின் மாகளிற்றை தோழீ என்றன்
      பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டி கொண்டு
      போகாமை வல்லேனா புலவி யெய்தி
      என்னிலங்க மெல்லாம்வ தின்ப மெய்த
      எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28
      2080
      அன்றாயர் குலமகளு கரையன் றன்னை
      அலைகடலை கடைந்தடைத்த அம்மான் றன்னை
      குன்றாத வலியரக்கர் கோனை மாள
      கொடுஞ்சிலைவா சரந்துரந்து குலங்க ளைந்து
      வென்றானை குன்றெடுத்த தோளி னானை
      விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
      நின்றானை தண்குடந்தை கிடந்த மாலை
      நெடியானை அடிநாயேன் நினைந்தி டேனே. 2 29
      2081
      மின்னுமா மழைதவழும் மேக வண்ணா.
      விண்ணவர்தம் பெருமானே. அருளாய் என்று
      அன்னமாய் முனிவரோ டமர ரேத்த
      அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை
      மன்னுமா மணிமாட வேந்தன்
      மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
      பன்னியல் தமிழ்மாலை வல்லார் தொல்லை
      பழவினையை முதலரிய வல்லார் தாமே. 2 30
      திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதற்றிருவந்தாதி
      தனியன்
      முதலியாண்டான் அருளிச்செய்தது
      கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
      பொய்கை பிரான்கவிஞர் போரேறு - வையத்து
      அடியவர் வாழ அருந்தமிழ தாதி
      படிவிளங்க செய்தான் பரிந்து
      2082
      வையம் தகளியா வார்கடலே நெய்யாக
      வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
      சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை
      இடராழி நீங்குகவே என்று. 2 1
      2083
      என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது
      ஒன்று மதனை யுணரேன் நான் - அன்று
      தடைத்துடைத்து கண்படுத்த ஆழி இதுநீ
      படைத்திட துண்டுமிழ்ந்த பார். 2
      2084
      பாரளவு மோரடிவை தோரடியும் பாருடுத்த
      நீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவில்
      பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்
      நீயளவு கண்ட நெறி. 3
      2085
      நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
      பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி - அறிவானாம்
      ஆலமர நீழல் அறம்நால்வர கன்றுரைத்த
      ஆலமமர் கண்ட தரன். 4
      2086
      அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி
      உரைல் மறையுறையும் கோயில் - வரைநீர்
      கருமம் அழிப்பளிப்பு கையதுவேல் நேமி
      உருவமெரி கார்மேனி ஒன்று. 5
      2087
      ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்
      இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
      கருவரங்க துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
      திருவரங்க மேயான் திசை. 6
      2088
      திசையும் திசையுறு தெய்வமும் தெய்வ
      திசையுங கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர
      கண்ணன் நெடுமால் கடல்கடைந்த காரோத
      வண்ணன் படைத்த மயக்கு. 7
      2089
      மயங்க வலம்புரி வாய்வைத்து வான
      தியங்கும் எறிகதிரோன் றன்னை - முயங்கமருள்
      தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே
      போராழி கையால் பொருது 8
      2090
      பொருகோட்டோ ர் ஏனமா புக்கிடந்தாய்க்கு அன்றுன்
      ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ - விரிதோட்ட
      சேவடியை நீட்டி திசைநடுங்க விண்துளங்க
      மாவடிவின் நீயளந்த மண் 9
      2091
      மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
      விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் - எண்ணில்
      அலகளவு கண்டசீ ராழியாய்க்கு அன்றிவ்
      வுலகளவு முண்டோ வுன் வாய் 10
      2092
      வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
      தாயவனை யல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்
      சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்
      காணாகண் கேளா செவி. 11
      2093
      செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும் செந்தீ
      புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும் - அவியாத
      ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
      ஏனமாய் நின்றாற் கியல்வு. 12
      2094
      இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல
      முயல்வார் இயலமரர் முன்னம் - இயல்வாக
      நீதியா லோதி நியமங்க ளால்பரவ
      ஆதியாய் நின்றார் அவர். 13
      2095
      அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி
      இவரிவ ரெம்பெருமா னென்று - சுவர்மிசை
      சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
      மூர்த்தி யுருவே முதல். 14
      2096
      முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
      முதலாவான் மூரிநீர் வண்ணன் - முதலாய
      நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து
      பல்லார் அருளும் பழுது 15
      2097
      பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
      அழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்
      கடலோதம் காலலைப்ப கண்வளரும் செங்கண்
      அடலோத வண்ணர் அடி. 16
      2098
      அடியும் படிகடப்ப தோள்திசைமேல் செல்ல
      முடியும் விசும்பளந்த தென்பர் - வடியுகிரால்
      ஈர்ந்தான் இரணியன தாகம் எருஞ்சிறைப்புள்
      ஊர்ந்தா னுலகளந்த நான்று 17
      2099
      நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய்
      தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி
      பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்
      மருதிடைபோய் மண்ணளந்த மால். 18
      2100
      மாலுங் கருங்கடலே. என்நோற்றாய் வையகமுண்
      டாலின் இலைத்துயின்ற ஆழியான் - கோல
      கருமேனி செங்கண்மால் கண்படையுள் என்றும்
      திருமேனி நீதீண்ட பெற்று. 19
      2101
      பெற்றார் தளைகழல போர்ந்தோர் குறளுருவாய்
      செற்றார் படிகடந்த செங்கண்மால் - நற்றா
      மரைமலர சேவடியை வானவர்கை கூப்பி
      நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. 20
      2102
      நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
      சென்று திசையளந்த செங்கண்மாற்கு - என்றும்
      படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்
      அடையாழி நெஞ்சே. அறி. 21
      2103
      அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்
      பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய் - வெறிகமழும்
      காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை
      தாம்பேகொண் டார்த்த தழும்பு. 22
      2104
      தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை
      தழும்பிருந்த தாள்சகடம் சாடி -
      பூங்கோதை யாள்வெருவ பொன்பெயரோன் மார்ப்பிடந்த
      வீங்கோத வண்ணர் விரல். 23
      2105
      விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு ஆய்ச்சி
      உரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா
      தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே
      ஓங்கோத வண்ணா. உரை. 24
      2106
      உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எ போதும்
      வரைமேல் மரகதமே போல - திரைமேல்
      கிடந்தானை கீண்டானை கேழலா பூமி
      இடந்தானை யேத்தி யெழும். 25
      2107
      எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை
      வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்
      வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
      மனச்சுடரை தூண்டும் மலை. 26
      2108
      மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து
      சிலையால் மராமரமேழ் செற்று - கொலையானை
      போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
      காக்கோடு பற்றியான் கை. 27
      2109
      கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ண
      தைய. மலர்மகள்நின் னாகத்தாள் - செய்ய
      மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
      இறையான்நின் ஆக திறை. 28
      2110
      இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
      அறைபுனலும் செந்தீயு மாவான் - பிறைமருப்பின்
      பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த
      செங்கண்மால் கண்டாய் தெளி. 29
      2111
      தெளிதாக வுள்ளத்தை செந்நிறீஇ ஞான
      தெளிதாக நன்குணர்வார் சிந்தை - எளிதாக
      தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே
      போய்நாடி கொள்ளும் புரிந்து. 30
      2112
      புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி
      அரியுருவும் ஆளுருவுமாகி - எரியுருவ
      வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால் மற்
      றெண்ண்த்தா னாமோ இமை 31
      2113
      இமையாத கண்ணால் இருளகல நோக்கி
      அமையா பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்
      ஆக தணைப்பா ரணைவரே ஆயிரவாய்
      நாக தணையான் நகர். 32
      2114
      நகர மருள்புரிந்து நான்முகற்கு பூமேல்
      பகர மறைபயந்த பண்பன் - பெயரினையே
      புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்
      அந்தியா லாம்பனங் கென் 33
      2115
      என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
      முன்னொருவ னாய முகில்வண்ணா - நின்னுருகி
      பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண்
      ஆய்த்தாய் முலைதந்த ஆறு 34
      2116
      ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்
      கூறிய குற்றமா கொள்ளல்நீ - தேறி
      நெடியோய். அடியடைதற் கன்றேஈ ரைந்து
      முடியான் படைத்த முரண் 35
      2117
      முரணை வலிதொலைதற் காமன்றே முன்னம்
      தரணி தனதாக தானே - இரணியனை
      புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழி கையால்நீ
      மண்ணிரந்து கொண்ட வகை 36
      2118
      வகையறு ண்கேள்வி வாய்வார்கள் நாளும்
      புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி - திசைதிசையின்
      வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே வெண்சங்கம்
      ஊதியவாய் மாலுகந்த வூர். 37
      2119
      ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை
      பேர எறிந்த பெருமணியை - காருடைய
      மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
      என்னென்ற மால திடம். 38
      2120
      இடந்தது பூமி எடுத்தது குன்றம்
      கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச - கிடந்ததுவும்
      நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
      பேரோத வண்ணர் பெரிது. 39
      2121
      பெருவில் பகழி குறவர்கை செந்தீ
      வெருவி புனம்துறந்த வேழம் - இருவிசும்பில்
      மீன்வீழ கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
      கோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40
      2122
      குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
      இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
      புறனுரையே யாயினும் பொன்னாழி கையான்
      திறனுரையே சிந்தி திரு 41
      2123
      திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
      திருமகட்கே தீர்ந்தவா றென்கொல் - திருமகள்மேல்
      பாலோதம் சிந்த படநா கணைக்கிடந்த
      மாலோத வண்ணர் மனம் 42
      2124
      மனமாசு தீரு மறுவினையும் சார
      தனமாய தானேகை கூடும் - புனமேய
      பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி
      தாம்தொழா நிற்பார் தமர். 43
      2125
      தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
      தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் - தமருகந்து
      எவ்வண்ணம் சிந்தி திமையா திருப்பரே
      அவ்வண்ணம் அழியா னாம். 44
      2126
      ஆமே யமரர கறிய அதுநிற்க
      நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே - பூமேய
      மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை
      பாதமத்தா லேண்ணினான் பண்பு. 45
      2127
      பண்புரிந்த நான்மறையோன் சென்னி பலியேற்ற
      வெண்புரில் மார்பன் வினைதீர - புண்புரிந்த
      ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம்
      போகத்தால் பூமியாள் வார். 46
      2128
      வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
      சேரி திரியாமல் செந்நிறீஇ - கூரிய
      மெய்ஞ்ஞான தாலுணர்வார் காண்பரே மேலொருநாள்
      கைந்நாகம் காத்தான் கழல். 47
      2129
      கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்
      சுழலும் சுராசுரர்க ளஞ்ச - அழலும்
      செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல
      மருவாழி நெஞ்சே. மகிழ். 48
      2130
      மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை
      நெகிழ முயல்கிற்பார கல்லால் - முகில்விரிந்த
      சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடிஎம்
      ஆதிகாண் பார்க்கு மரிது. 49
      2131
      அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு ஆர்வம்
      பரி பரிசினால் புல்கில் - பெரியனாய்
      மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண்கைநீர்
      ஏற்றானை காண்ப தெளிது. 50
      2132
      எளிதி லிரண்டையும் காண்பதற்கு என்னுள்ளம்
      தெளி தெளிந்தொழியும் செவ்வே - களியில்
      பொருந்தா தவனை பொரலுற்று அரியாய்
      இருந்தான் திருநாமம் எண். 51
      2133
      எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
      வண்ண மலரேந்தி வைகலும் - நண்ணி
      ஒரு மாலை யால்பரவி ஓவாதுஎ போதும்
      திருமாலை கைதொழுவர் சென்று. 52
      2134
      சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
      நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
      புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
      அணையாம் திருமாற் கரவு. 2 53
      2135
      அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
      குரவை குடம்முலைமல் குன்றம் - கரவின்றி
      விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டுகோ தாடிஉண்
      டட்டெடுத்த செங்கண் அவன். 54
      2136
      அவன் தமர் எவ்வினைய ராகிலும் எங்கோன்
      அவன்தமரே யென்றொழிவ தல்லால் - நமன்தமரால்
      ஆரா பட்டறியார் கண்டீர் அரவணைமேல்
      பேராயற் காட்பட்டார் பேர். 55
      2137
      பேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை
      ஆரே அறிவார் அதுநிற்க - நேரே
      கடிக்கமல துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன்
      அடிக்கமல தன்னை அயன். 56
      2138
      அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி
      உயநின் திருவடியே சேர்வான் - நயநின்ற
      நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்
      சொன்மாலை கற்றேன் தொழுது. 57
      2139
      தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி
      எழுதும் எழுவாழி நெஞ்சே - பழுதின்றி
      மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
      அந்தரமொன் றில்லை அடை. 58
      2140
      அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்
      மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் - டங்கிடையை
      முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள்
      தன்வில் அங்கை வைத்தான் சரண். 59
      2141
      சரணா மறைபயந்த தாமரையா னோடு
      மரணாய மன்னுயிர்க கெல்லாம் - அரணாய
      பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது
      ஓராழி சூழ்ந்த வுலகு. 60
      2142
      உலகும் உலகிறந்த வூழியும் ஒண்கேழ்
      விலகு கருங்கடலும் வெற்பும் - உலகினில்
      செந்தீயும் மாருதமும் வானும் திருமால்தன்
      புந்தியி லாய புணர்ப்பு. 61
      2143
      புணர்மருதி னூடுபோ பூங்குருந்தம் சாய்த்து
      மணமருவ மால் விடையேழ் செற்று - கணம்வெருவ
      ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்
      சூழரவ பொங்கணையான் தோள். 62
      2144
      தோளவனை யல்லால் தொழா என் செவியிரண்டும்
      கேளவன தின்மொழியே கேட்டிருக்கும் - நாநாளும்
      கோணா கணையான் கூரைகழலே கூறுவதே
      நாணாமை நள்ளேன் நயம். 63
      2145
      நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு
      உயவேன் உயர்ந்தவரோ டல்லால் - வியவேன்
      திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்
      வருமாறென் நம்மேல் வினை 64
      2146
      வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்
      தினையேனும் தீக்கதிக்க செல்லார் - நினைதற்
      கரியானை சேயானை ஆயிரம்பேர செங்க
      கரியானை கைதொழுத கால். 65
      2147
      காலை யெழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த
      மேலை தலைமறையோர் வேட்பனவும் - வேலைக்கண்
      ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
      பேராழி கொண்டான் பெயர். 66
      2148
      பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
      உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும்
      தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்
      ஒருவனையே நோக்கும் உணர்வு. 67
      2149
      உணர்வாரா ருன்பெருமை யூழிதோ றூழி
      உணர்வாரா ருன்னுருவ தன்னை உணர்வாரார்
      விண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேத
      பண்ணகத்தாய். நீகிடந்த பால் 68
      2150
      பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின்
      மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர் - ஆலன்று
      வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
      சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69
      2151
      சொல்லு தனையும் தொழுமின் விழுமுடம்பு
      சொல்லு தனையும் திருமாலை - நல்லிதழ
      தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
      நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70
      2152
      நன்று பிணிமூப்பு கையகற்றி நான்கூழி
      நின்று நிலமுழுதும் ஆண்டாலும் என்றும்
      விடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய்
      அடலாழி கொண்டான்மா டன்பு. 71
      2153
      அன்பாழி யானை யணுகென்னும் நாஅவன்றன்
      பண்பாழி தோள்பரவி யேத்தென்னும் முன்பூழி
      காணானை காணென்னும் கண்செவி கேளென்னும்
      பூணாரம் பூண்டான் புகழ். 72
      2154
      புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை
      இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே - திகழ்நீர
      கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
      உடலும் உயிருமேற்றான். 73
      2155
      ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
      நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால்
      மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
      கங்கையான் நீள்கழலான் காப்பு. 74
      2156
      காப்புன்னை யுன்ன கழியும் அருவினைகள்
      ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னை
      சிந்திப்பார கில்லை திருமாலே நின்னடியை
      வந்திப்பார் காண்பர் வழி. 75
      2157
      வழிநின்று நின்னை தொழுவார் வழுவா
      மொழிநின்ற மூர்த்தியரே யாவர் - பழுதொன்றும்
      வாராத வண்ணமே விண்கொடுக்கும் மண்ணளந்த
      சீரான் திருவேங்கடம். 76
      2158
      வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
      பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் - நான்கிடத்தும்
      நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே
      என்றால் கெடுமாம் இடர். 77
      2159
      இடரார் படுவார் எழுநெஞ்சே வேழம்
      தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த - படமுடை
      பைந்நாக பள்ளியான் பாதமே கைதொழுதும்
      கொய்ந்நாக பூம்போது கொண்டு. 78
      2160
      கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்
      மண்தா எனவிரந்து மாவலியை ஒண்தாரை
      நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள்விசும்பில்
      ஆரங்கை தோய அடுத்து 79
      2161
      அடுத்த கடும்பகைஞர காற்றேனென் றோடி
      படுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை
      வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
      அல்லாதும் ஆவரோ ஆள் 80
      2162
      ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
      வாளமர் வேண்டி வரைநட்டு - நீளரவை
      சுற்றி கடைந்தான் பெயரன்றே தொன்னரகை
      பற்றி கடத்தும் படை 81
      2163
      படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள் பைம்பூ
      தொடையலோ டேந்திய தூபம் - இடையிடையின்
      மீன்மாய மாசூணும் வேங்கடமே மேலொருநாள்
      மான்மாய எய்தான் வரை. 82
      2164
      வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து ஆயர்
      நிரைவிடையேழ் செற்றவா றென்னே - உரவுடைய
      நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்
      பேராழி கொண்ட பிரான் 83
      2165
      பிரான். உன் பெருமை பிறரா ரறிவார்
      உராஅ யுலகளந்த ஞான்று - வராக
      தெயிற்றளவு போதாவா றென்கொலோ எந்தை
      அடிக்களவு போந்த படி 84
      2166
      படிகண் டறிதியே பாம்பணையி னான்பு
      கொடிகண் டறிதியேகூறாய் - வடிவில்
      பொறியைந்து முள்ளடக்கி போதொடுநீ ரேந்தி
      நெறிநின்ற நெஞ்சமே. நீ. 85
      2167
      நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்து
      பாயும் பனிமறைத்த பண்பாளா - வாயில்
      கடைகழியா வுள்புகா காமர்பூங் கோவல்
      இடைகழியே பற்றி யினி. 86
      2168
      இனியார் புகுவா ரெழுநரக வாசல்
      முனியாது மூரித்தாள் கோமின் - கனிசா
      கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு
      நன்கறிந்த நாவலம்சூழ் நாடு. 87
      2169
      நாடிலும் நின்னடியே நாடுவன நாடோ றும்
      பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
      பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
      என்னாகி லென்னே எனக்கு 88
      2170
      எனக்காவா ராரொருவரே எம்பெருமான்
      தனக்காவான் தானேமற் றல்லால் - புனக்காயாம்
      பூமேனி காண பொதியவிழும் பூவைப்பூ
      மாமேனி காட்டும் வரம். 89
      2171
      வரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம்
      சிரத்தால் வணங்கானா மென்றே - உரத்தினால்
      ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை
      ஓரரியாய் நீயிடந்த தூன் 90
      2172
      ஊன குரம்பையி னுள்பு கிருள்நீக்கி
      ஞான சுடர்கொளீஇ நாடோ றும் - ஏன
      துருவா யுலகிடந்த வூழியான் பாதம்
      மருவாதார குண்டாமோ வான் 91
      2173
      வானாகி தீயாய் மறிகடலாய் மாருதமாய்
      தேனாகி பாலாம் திருமாலே - ஆனாய்ச்சி
      வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள்
      மண்ணை உமிழ்ந்த வயிறு 92
      2174
      வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
      எயிறிலக வாய்மடுத்த தென்நீ - பொறியுகிரால்
      பூவடியை யீடழித்த பொன்னாழி கையாநின்
      சேவடிமே லீடழி செற்று 93
      2175
      செற்றெழுந்து தீவிழித்து சென்றவிந்த ஏழுலகும்
      மற்றிவையா வென்றுவா யங்காந்து முற்றும்
      மறையவற்கு காட்டிய மாயவனை யல்லால்
      இறையேனும் ஏத்தாதென் நா. 94
      2176
      நாவாயி லுண்டே நமோநார ணா என்று
      ஓவா துரைக்கு முரையுண்டே - மூவாத
      மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர்
      தீக்கதிக்க செல்லும் திறம் 95
      2177
      திறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்
      அறம்பாவ மென்றிரண்டு மாவான் புறந்தானிம்
      மண்தான் மறிகடல்தான் மாருதந்தான் வான்தானே
      கண்டாய் கடைக்க பிடி. 96
      2178
      பிடிசேர் களிறளித்த பேராளா உன்றன்
      அடிசேர தருள்பெற்றாள் அன்றே - பொடிசேர்
      அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த
      புனல்கங்கை யென்னும்பேர பொன் 97
      2179
      பொன்திகழ மேனி புரிசடையம் புண்ணியனும்
      நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும்
      இருவரங்க தால்திரிவ ரேலும் ஒருவன்
      ஒருவனங்க தென்று முளன். 98
      2180
      உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
      உளன்கண்டாய் உள்ளூவா ருள்ள - துளன்கண்டாய்
      வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்
      உள்ளத்தி னுள்ளனென் றோர். 99
      2181
      ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர சேவடியும்
      ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்
      தாயவனை கேசவனை தண்டுழாய் மாலைசேர்
      மாயவனை யேமனத்து வை. 2 100
      பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      பூதத்தாழ்வார் அருளிச்செய்த
      இரண்டாம் திருவந்தாதி
      தனியன்
      திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளி செய்தது
      நேரிசை வெண்பா
      என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
      அன்பே தகளி யளித்தானை - நன்புகழ்சேர்
      சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லை
      பூதத்தார் பொன்னங்கழல்.
      2182
      அன்பே தளியா ஆர்வமே நெய்யாக
      இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி
      ஞான சுடர்விள கேற்றினேன் நாரணற்கு
      ஞான தமிழ்புரிந்த நான். 2 1
      2183
      ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்
      தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் - வான
      தணியமர ராக்குவிக்கு மஃதன்றே நாங்கள்
      பணியமரர் கோமான் பரிசு 2
      2184
      பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்
      புரிவார் புகழ்பெறுவர் போலாம் - புரிவார்கள்
      தொல்லமரர் கேள்வி துலங்கொளிசேர் தோற்றத்து
      நல்லமரர் கோமான் நகர். 3
      2185
      நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு ஆங்கே
      திகழும் அணிவயிரம் சேர்த்து - நிகரில்லா
      பைங்கமல மேந்தி பணிந்தேன் பனிமலராள்
      அங்கம்வலம் கொண்டான் அடி. 4
      2186
      அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
      அடிமூன் றிரந்தவனி கொண்டாய் - படிநின்ற
      நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
      ஆரோத வல்லார் அறிந்து 5
      2187
      அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு ஆர்வம்
      செறிந்த மனத்தரா செவ்வே - அறிந்தவன்றன்
      பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
      காரோத வண்ணன் கழல். 6
      2188
      கழலெடுத்து வாய்மடித்து கண்சுழன்று மாற்றார்
      அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச தழலெடுத்த
      போராழி ஏத்தினான் பொன்மலர சேவடியை
      ஓராழி நெஞ்சே. உகந்து. 7
      2189
      உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
      அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி உகந்து
      முலையுண்பாய் போலே முனிந்துண்டாய் நீயும்
      அலைபண்பா லானமையால் அன்று. 8
      2190
      அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி
      நின்று முலைதந்த இன்நீர்மைக்கு அன்று
      வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்
      பெருமுறையா லெய்துமோ பேர்த்து 9
      2191
      பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
      காத்தனை புல்லுயிரும் காவலனே ஏத்திய
      நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
      காவடியேன் பட்ட கடை. 10
      2192
      கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
      இடைநின்ற இன்பத்த ராவர் புடைநின்ற
      நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
      ஆரோத வல்லார் அவர் 11
      2193
      அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்
      எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில் பலரும்
      செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
      தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து 12
      2194
      தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்பு கஞ்சி
      படரெடுத்த பைங்கமலம் கொண்டுஅன் - றிடரடுக்க
      ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்
      பாழிதா னெய்திற்று பண்டு 13
      2195
      பண்டி பெரும்பதியை யாக்கி பழிபாவம்
      கொண்டுஇங்கு வாழ்வாரை கூறாதே - எண்டிசையும்
      பேர்த்தகரம் நான்குடையான் பேரோதி பேதைகாள்
      தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14
      2196
      திரிந்தது வெஞ்சமத்து தேர்கடவி அன்று
      பிரிந்தது சீதையைமான் பின்போய் - புரிந்ததுவும்
      கண்பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
      தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15
      2197
      தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
      மனத்தடைய வைப்பதாம் மாலை - வனத்திடரை
      ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்
      மாரியார் பெய்கிற்பார் மற்று 16
      2198
      மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்
      சுற்றும் வணங்கும் தொழிலானை - ஒற்றை
      பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று மாலை
      குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17
      2199
      கொண்ட துலகம் குறளுருவா கோளரியாய்
      ஒண்டிறலோன் மார்வ துகிர்வைத்தது - உண்டதுவும்
      தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
      வான்கடந்தான் செய்த வழக்கு. 18
      2200
      வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்
      வழக்கொன்று நீமதிக்க வேண்டா - குழக்கன்று
      தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே
      பார்விளங்க செய்தாய் பழி. 19
      2201
      பழிபாவம் கையகற்றி பல்காலும் நின்னை
      வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ - வழுவின்றி
      நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
      காரணங்கள் தாமுடையார் தாம். 20
      2202
      தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே தாமரையின்
      பூவுளதே யேத்தும் பொழுதுண்டே - வாமன்
      திருமருவு தாள்மரூவு சென்னியரே செவ்வே
      அருநரகம் சேர்வ தரிது. 21
      2203
      அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி
      பெருக முயல்வாரை பெற்றால் - கரியதோர்
      வெண்கோட்டு மால்யானை வென்றுமுடி தன்றே
      தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து 22
      2204
      தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
      வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
      விளங்கனிக்கு கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
      அளந்தடிக்கீழ கொண்ட அவன். 23
      2205
      அவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும்
      அவன்கண்டா யைம்புலனாய் நின்றான் - அவன்கண்டாய்
      காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத
      சீற்றத்தீ யாவானும் சென்று. 24
      2206
      சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்
      கொன்ற திராவணனை கூறுங்கால் - நின்றதுவும்
      வேயோங்கு தண்சாரல் வேங்கடமே விண்ணவர்தம்
      வாயோங்கு தொல்புகழான் வந்து. 25
      2207
      வந்தி தவனை வழிநின்ற ஐம்பூதம்
      ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய் - உந்தி
      படியமரர் வேலையான் பண்டமரர கீந்த
      படியமரர் வாழும் பதி. 26
      2208
      பதியமைந்து நாடி பருத்தெழுந்த சிந்தை
      மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்
      கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே
      மால்தேடி யோடும் மனம். 27
      2209
      மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
      நினைப்பரிய நீளரங்க துள்ளான் - எனைப்பலரும்
      தேவாதி தேவ னெனப்படுவான் முன்னொருனாள்
      மாவாய் பிளந்த மகன். 28
      2210
      மகனா கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை
      அகனார வுண்பனென் றுண்டு - மகனைத்தாய்
      தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
      நீறாக எய்தழித்தாய் நீ. 29
      2211
      நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே
      நீயன் றுலகிடந்தா யென்பரால் - நீயன்று
      காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை
      பேரோத மேனி பிரான். 30
      2212
      பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்
      குராநல் செழும்போது கொண்டு - வராக
      தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
      மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31
      2213
      மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
      மகிழ்ந்ததுன் பாதமே போற்றி - மகிழ்ந்த
      தழலாழி சங்க மவைபாடி யாடும்
      தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32
      2214
      துணிந்தது சிந்தை துழாயலங்கல் அங்கம்
      அணிந்தவன்பே ருள்ளத்து பல்கால் - பணிந்ததுவும்
      வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே
      வாய்திறங்கள் சொல்லும் வகை. 33
      2215
      வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்
      புகையால் நறுமலாரால் முன்னே - மிகவாய்ந்த
      அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு
      என்பாக்கி யத்தால் இனி. 34
      2216
      இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற
      இனிதென்பர் தண்ணீரும் எந்தாய் - இனிதென்று
      காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்
      சேமநீ ராகும் சிறிது. 35
      2217
      சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்
      அறியாரும் தாமறியா ராவர் - அறியாமை
      மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று
      எண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36
      2218
      இருந்தண் கமல திருமலரி னுள்ளே
      திருந்து திசைமுகனை தந்தாய் - பொருந்தியநின்
      பாதங்க ளேத்தி பணியாவேல் பல்பிறப்பும்
      ஏதங்க ளெல்லா மெமக்கு. 37
      2219
      எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே
      தமக்கென்றும் சார்வ மறிந்து - நமக்கென்றும்
      மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
      ஓதுவதே நாவினா லோத்து. 38
      2220
      ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
      ஏத்தும் திறமறிமி னேழைகாள் ஓத்தனை
      வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன்பேர்
      சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39
      2221
      சுருக்காக வாங்கி சுலாவினின்று ஐயார்
      நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர் - திருப்பொலிந்த
      ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
      போகத்தா லில்லை பொருள். 40
      2222
      பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
      அருளா லறமருளு மன்றே - அருளாலே
      மாமறையோர கீந்த மணிவண்ணன் பாதமே
      நீமறவேல் நெஞ்சே. நினை. 41
      2223
      நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண
      நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் - மனைப்பால்
      பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்
      துறந்தார் தொழுதார தோள். 42
      2224
      தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்
      தாளிரண்டும் வீழ சரந்துரந்தான் -
      ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றேஎன்
      சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு 43
      2225
      சிறந்தார கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்
      மறந்தாரை மானிடமா வையேன் அறம்தாங்கும்
      மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
      ஓதுவதே நாவினா லுள்ளு. 44
      2226
      உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று
      தளர்தல் அதனருகும் சாரார் - அளவரிய
      வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
      பாதத்தான் பாதம் பயின்று. 45
      2227
      பயின்ற தரங்கம் திருக்கோட்டி பன்னாள்
      பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் - பயின்ற
      தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
      மணிதிகழும் வண்தடக்கை மால். 46
      2228
      மாலை யரியுருவன் பாத மலரணிந்து
      காலை தொழுதெழுமின் கைகோலி - ஞாலம்
      அளந்திட துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
      உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47
      2229
      உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
      மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்
      வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்
      மாயிருஞ் சோலை மலை. 48
      2230
      மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர
      குலைசூழ் குரைகடல்க ளேழும் - முலைசூழ்ந்த
      நஞ்சுரத்து பெண்ணை நவின்றுண்ட நாவனென்று
      அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49
      2231
      அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன
      பிழைப்பில் பெரும்பெயரே பேசி - இழைப்பரிய
      ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்
      மாயவனே என்று மதித்து. 50
      2232
      மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்
      மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை -
      பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
      நீராழி வண்ணன் நிறம். 51
      2233
      நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்
      அறம்பெரிய னார தறிவார் - மறம்புரிந்த
      வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து
      நீளிருக்கை குய்த்தான் நெறி. 52
      2234
      நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து
      அறியா திளங்கிரியென் றெண்ணி - பிறியாது
      பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்
      வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53
      2235
      வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
      நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல் - நிற்பென்
      றுளங்கோயி லுள்ளம்வை துள்ளினேன் வெள்ள
      திளங்கோயில் கைவிடேல் என்று. 54
      2236
      என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
      நின்று நினைப்பொழியா நீர்மையால் - வென்றி
      அடலாழி கொண்ட அறிவனே இன்ப
      கடலாழி நீயருளி காண். 55
      2237
      காண கழிகாதல் கைமிக்கு காட்டினால்
      நாண படுமென்றால் நாணுமே - பேணி
      கருமாலை பொன்மேனி காட்டாமுன் காட்டும்
      திருமாலை நாங்கள் திரு. 56
      2238
      திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்
      கருமம் கடைப்பிடிமின் கண்டீர் - உரிமையால்
      ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்
      நாற்றிசையும் கேட்டீரே நாம் 57
      2239
      நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
      ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து - வேம்பின்
      பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
      அருள்நீர்மை தந்த அருள். 58
      2240
      அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
      பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது - இருள்திரிந்து
      நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்
      ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59
      2241
      ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்
      ஈருருவன் என்பர் இருநிலத்தோர் ஓருருவம்
      ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்
      நீதியால் மண்காப்பார் நின்று. 60
      2242
      நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப நீண்டதோள்
      சென்றளந்த தென்பர் திசையெல்லாம் - அன்று
      கருமாணி யாயிரந்த கள்வனே உன்னை
      பிரமாணி தார்பெற்ற பேறு. 61
      2243
      பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்
      மாறென்று சொல்லிவணங்கினேன் ஏறின்
      பெருத்தெருத்தம் கோடொசி பெண்நசையின் பின் போய்
      எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62
      2244
      ஏறேழும் வென்றடர்த்த எந்தை எரியுருவத்து
      ஏறேறி பட்ட இடுசாபம் - பாறேறி
      உண்டதலை வாய்நிறை கோட்டங்கை ஒண்குருதி
      கண்டபொருள் சொல்லின் கதை. 63
      2245
      கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே
      இதய மிருந்தவையே ஏத்தில் - கதையும்
      திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை
      பருமொழியால் காண பணி. 64
      2246
      பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
      அணிந்தேனுன் சேவடிமே லன்பாய் - துணிந்தேன்
      புரிந்தேத்தி யுன்னை புகலிடம்பார்த்து ஆங்கே
      இருந்தேத்தி வாழும் இது. 65
      2247
      இது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது
      இதுகண்டா யெல்லாம்நா முற்றது - இதுகண்டாய்
      நாரணன்பே ரோதி நகர தருகணையா
      காரணமும் வல்லையேல் காண். 66
      2248
      கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கை
      கண்டேன் கனலுஞ் சுடராழி -
      உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து பின்னும்
      மறுநோய் செறுவான் வலி. 67
      2249
      வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
      வலிமிக்க வாள்வரை தாக
      வாணாகம் சுற்றி மறு கடல்கடைந்தான்
      கோணாகம் கொம்பொசித்த கோ. 68
      2250
      கோவாகி மாநிலம் காத்துநங் கண்முகப்பே
      மாவேகி செல்கின்ற மன்னவரும் - பூவேகும்
      செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்
      தண்கமல மேய்ந்தார் தமர். 69
      2251
      தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
      தமருள்ளும் தண்பொருப்பு வேலை -
      மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
      ஏவல்ல எந்தை கிடம். 70
      2252
      இடங்கை வலம்புரிநின் றார்ப்ப எரிகான்
      றடங்கா ரொடுங்குவித்த தாழி - விடங்காலும்
      தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்
      பூவா ரடிநிமிர்ந்த போது. 71
      2253
      போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு ஆங்கலர்ந்த
      போதரிந்து கொண்டேத்தும் போதுஉள்ளம் - போது
      மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல
      அணிவேங் கடவன்பே ராய்ந்து. 72
      2254
      ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்
      வாய்ந்த மலர்தூவி வைகலும் - ஏய்ந்த
      பிறைக்கோட்டு செங்கண் கரிவிடுத்த பெம்மான்
      இறைக்கா படத்துணிந்த யான். 73
      2255
      யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
      யானே தவமுடையேன் எம்பெருமான் -
      இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்
      பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74
      2256
      பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று
      இருக ணிளமூங்கில் வாங்கி - அருகிருந்த
      தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்
      வான்கலந்த வண்ணன் வரை. 75
      2257
      வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்
      விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு
      ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
      ஓதி பணிவ தூறும். 76
      2258
      உறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம்
      உறுங்கண்டாய் ஒண்கமல தன்னால் -
      ஏத்தி பணிந்தவன் பேர் ஈரைஞ் றெப்பொழுதும்
      சாற்றி யுரைத்தல் தவம். 77
      2259
      தவம்செய்து நான்முகனே பெற்றான் தரணி
      நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம் - சிவந்ததன்
      கையனைத்து மார கழுவினான் கங்கைநீர்
      பெய்தனைத்து பேர்மொழிந்து பின். 78
      2260
      பின்னின்று தாயிரப்ப கேளான் பெரும்பணைத்தோள்
      முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற
      தோள்நலந்தான் நேரில்லா தோன்றல் அவனளந்த
      நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79
      2261
      நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்
      ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய் - ஆர்ந்த
      அடிக்கோலம் கண்டவர கென்கொலோ முன்னை
      படிக்கோலம் கண்ட பகல் 80
      2262
      பகற்கண்டேன் நாரணனை கண்டேன் - கனவில்
      மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே -
      ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்
      வான்திகழும் சோதி வடிவு. 81
      2263
      வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள் செவ்வி
      படிக்கோலம் கண்டகலாள் பன்னாள் - அடிக்கோலி
      ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ
      கோலத்தா லில்லை குறை. 82
      2264
      குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி
      மறையாங் கெனவுரைத்த மாலை - இறையேனும்
      ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
      மாயன்கண் சென்ற வரம். 83
      2265
      வரம்கருதி தன்னை வணங்காத வன்மை
      உரம்கருதி மூர்க்க தவனை - நரம்கலந்த
      சிங்கமா கீண்ட திருவன் அடியிணையே
      அங்கண்மா ஞால தமுது. 84
      2266
      அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
      அமுதன்று கொண்டுகந்தான் என்றும் - அமுதன்ன
      சொன்மாலை யேத்தி தொழுதேன் சொலப்பட்ட
      நன்மாலை யேத்தி நவின்று. 85
      2267
      நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு ஆங்கே
      பயின்றதனால் பெற்றபயன் என்கொல் - பயின்றார்தம்
      மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனையான்
      எத்தவத்தால் காண்பன்கொல் இன்று 86
      2268
      இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தை
      சென்றாங் களந்த திருவடியை - அன்று
      கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
      திருக்கோட்டி எந்தை திறம். 87
      2269
      திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்க தெந்தை
      திறம்பா வருசென்றார கல்லால் - திறம்பா
      செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன் வானோர்
      கடிநகர வாசற் கதவு. 88
      2270
      கதவி கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து
      அதவிப்போர் யானை ஒசித்து - பதவியா
      பாணியால் நீரேற்று பண்டொருகால் மாவலியை
      மாணியா கொண்டிலையே மண். 89
      2271
      மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்
      விண்ணுலகம் தன்னகத்து மேவேனே - நண்ணி
      திருமாலை செங்க ணெடியானை எங்கள்
      பெருமானை கைதொழுத பின். 90
      2272
      பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்
      முன்னால் வணங்க முயல்மினோ - பன்னூல்
      அளந்தானை கார்க்கடல்சூழ் ஞாலத்தை எல்லாம்
      அளந்தா னவஞ்சே வடி. 91
      2273
      அடியால்முன் கஞ்சனை செற்றுஅமர ரேத்தும்
      படியான் கொடிமேல்புள் கொண்டான் - நெடியான்றன்
      நாமமே ஏத்துமின்க ளேத்தினால்தாம்வேண்டும்
      காமமே காட்டும் கடிது. 92
      2274
      கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை
      கொடிதென் றதுகூடா முன்னம் - வடிசங்கம்
      கொண்டானை கூந்தல்வாய் கீண்டானை கொங்கைநஞ்
      சுண்டானை ஏத்துமினோ உற்று. 93
      2275
      உற்று வணங்கி தொழுமின் உலகேழும்
      முற்றும் விழுங்கும் முகில்வண்ணம் - பற்றி
      பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
      இருந்தானை ஏத்துமென் நெஞ்சு. 94
      2276
      என்னெஞ்ச மேயான்என் சென்னியான் தானவனை
      வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன் முன்னம்சேய்
      ஊழியா னூழி பெயர்த்தான் உலகேத்தும்
      ஆழியான் அத்தியூ ரான். 95
      2277
      அத்தியூ ரான்புள்ளை யூர்வான் அணிமணியின்
      துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான் - மூத்தீ
      மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
      இறையாவான் எங்கள் பிரான். 2 96
      2278
      எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ
      செங்க ணெடுமால் திருமார்பா - பொங்கு
      படமூக்கி னாயிரவா பாம்பணைமேல் சேர்ந்தாய்
      குடமூக்கில் கோயிலா கொண்டு. 97
      2279
      கொண்டு வளர குழவியா தான்வளர்ந்தது
      உண்ட துலகேழு முள்ளொடுங்க - கொண்டு
      குடமாடி கோவலனாய் மேவிஎன் னெஞ்சம்
      இடமா கொண்ட இறை. 98
      2280
      இறையெம் பெருமான் அருளென்று இமையோர்
      முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ - அறைகழல
      சேவடியான் செங்க ணெடியான் குறளுருவாய்
      மாவடிவில் மண்கொண்டான் மால். 2 99
      2281
      மாலே. நெடியானே. கண்ணனே விண்ணவர்க்கு
      மேலா. வியந்துழா கண்ணியனே - மேலால்
      விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்றன்
      அளவன்றால் யானுடைய அன்பு. 2 100
      பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
      தனியன்
      குருகை காவலப்பன் அருளி செய்தது
      நேரிசை வெண்பா
      சீராரும் மாட திருக்கோவ லூரதனுள்
      காரார் கருமுகிலை காணப்புக்கு - ஓரா
      திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
      உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.
      2282
      திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
      அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
      பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
      என்னாழி வண்ணன்பால் இன்று. 2 1
      2283
      இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்
      பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய் - அன்று
      திருக்கண்டு கொண்ட திருமாலேஉன்னை
      மருக்கண்டு கொண்டேன் மனம். 2
      2284
      மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான் மலராள்
      தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன் - சினத்து
      செருநர்உக செற்றுகந்த தேங்கோத வண்ணன்
      வருநரகம் தீர்க்கும் மருந்து. 3
      2285
      மருந்தும் பொருளும் அமுதமும் தானே
      திருந்திய செங்கண்மா லாங்கே - பொருந்தியும்
      நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்
      அன்றுலகம் தாயோன் அடி. 4
      2286
      அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்
      படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம் - முடிவண்ணம்
      ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
      ஆராழி கொண்டாற் கழகு 5
      2287
      அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்
      அழகன்றே யண்டம் கடத்தல் -
      அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ
      கங்கைநீர் கான்ற கழல் 6
      2288
      கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை
      பொழிலளந்த புள்ளூர்தி செல்வன் - எழிலளந்தங்
      கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை
      நண்ணற் கரியானை நாம். 7
      2289
      நாமம் பலசொல்லி நாராய ணாவென்று
      நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வாமருவி
      மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்
      கண்ணனையே காண்கநங் கண். 8
      2290
      கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்
      மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
      கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்
      திருமா மணிவண்ணன் தேசு. 9
      2291
      தேசும் திறலும் திருவும் உருவமும்
      மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
      வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத
      நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10
      2292
      நன்கோது நால்வே துள்ளான் நறவிரியும்
      பொங்கோ தருவி புனல்வண்ணன் - சங்கோத
      பாற்கடலான் பாம்பணையின் மேலான் பயின்றுரை பார்
      ற்கடலான் ண்ணறிவி னான். 11
      2293
      அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்
      செறிவென்னும் திண்கதவம் செம்மி - மறையென்றும்
      நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோ றும்
      பைங்கோத வண்ணன் படி. 12
      2294
      படிவட்ட தாமரை பண்டுலகம் நீரேற்று
      அடிவட்ட தாலளப்ப நீண்ட - முடிவட்டம்
      ஆகாய மூடறு தண்டம்போய் நீண்டதே
      மாகாய மாய்நின்ற மாற்கு. 13
      2295
      மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு
      ற்பால் மனம்வைக்க நொய்விதாம் நாற்பால
      வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
      பாதத்தான் பாதம் பணிந்து. 14
      2296
      பணிந்துயர்ந்த பௌவ படுதிரைகள் மோத
      பணிந்த பணிமணிக ளாலே - அணிந்துஅங்
      கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான் அடியேன்
      மனந்த னணைக்கிடக்கும் வந்து. 15
      2297
      வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
      அந்தி விளக்கும் அணிவிளக்காம் - எந்தை
      ஒருவல்லி தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்
      திருவல்லி கேணியான் சென்று. 2 16
      2298
      சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்
      என்றநா ளெந்நாளும் நாளாகும் - என்றும்
      இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்
      மறவாது வாழ்த்துகவென் வாய். 17
      2299
      வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
      நீயளந்து கொண்ட நெடுமாலே - தாவியநின்
      எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
      அஞ்சா திருக்க அருள். 18
      2300
      அருளா தொழியுமே ஆலிலைமேல் அன்று
      தெருளாத பிள்ளையா சேர்ந்தான் இருளாத
      சிந்தையரா சேவடிக்கே செம்மலர்தூ கைதொழுது
      முந்தையராய் நிற்பார்க்கு முன் 19
      2301
      முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு அவ்வுலக மீரடியால்
      பின்னளந்து கோடல் பெரிதொன்றே - என்னே
      திருமாலே. செங்க ணெடியானே எங்கள்
      பெருமானே. நீயிதனை பேசு. 20
      2302
      பேசுவா ரெவ்வளவு பேசுவர் அவ்வளவே
      வாச மலர்த்துழாய் மாலையான் - தேசுடைய
      சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்பொங்கரவ
      வக்கரனை கொன்றான் வடிவு. 21
      2303
      வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்
      கடியார் மலர்தூவி காணும் - படியானை
      செம்மையா லுள்ளுருகி செவ்வனே நெஞ்சமே
      மெய்ம்மையே காண விரும்பு. 22
      2304
      விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
      சுரும்பு தொளையில்சென் றூத அரும்பும்
      புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே
      மனம்துழாய் மாலாய் வரும். 23
      2305
      வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
      நெருங்குதீ நீருருவு மானான் - பொருந்தும்
      சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே நாளும்
      தொடராழி நெஞ்சே. தொழுது. 24
      2306
      தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்
      முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி - விழுதுண்ட
      வாயானை மால்விடையேழ் செற்றானை வானவர்க்கும்
      சேயானை நெஞ்சே. சிறந்து 25
      2307
      சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்
      நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் - உறைந்ததுவும்
      வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கை பாடியுமே
      தாம்கடவார் தண்டுழா யார். 26
      2308
      ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
      காரே மலிந்த கருங்கடலை நேரே
      கடைந்தானை காரணனை நீரணைமேல் பள்ளி
      அடைந்தானை நாளும் அடைந்து 27
      2309
      அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய் அன்று
      மிடைந்தது பாரத வெம்போர் - உடைந்ததுவும்
      ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே வாளெயிற்று
      பேய்ச்சிபா லுண்ட பிரான். 28
      2310
      பேய்ச்சிபா லுண்ட பெருமானை பேர்ந்தெடுத்து
      ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
      இருளார் திருமேனி இன்பவள செவ்வாய்
      தெருளா மொழியானை சேர்ந்து. 29
      2311
      சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
      நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு - வாய்ந்த
      மறையா டகம்அனந்தன் வண்டுழா கண்ணி
      இறைபாடி யாய இவை. 30
      2312
      இவையவன் கோயில் இரணியன தாகம்
      அவைசெய் தரியுருவ மானான் - செவிதெரியா
      நாகத்தான் நால்வே துள்ளான் நறவேற்றான்
      பாகத்தான் பாற்கடலு ளான். 31
      2313
      பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
      ற்கடலும் ண்ணுல தாமரைமேல் - பாற்ப
      டிருந்தார் மனமும் இடமா கொண்டான்
      குருந்தொசித்த கோபா லகன். 32
      2314
      பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
      மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே - மாலவ
      மந்திரத்தால் மாநீர கடல்கடைந்து வானமுதம்
      அந்தரத்தார கீந்தாய்நீ அன்று. 33
      2315
      அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்
      நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் - அன்று
      கிடந்தானை கேடில்சீ ரானைமுன் கஞ்சை
      கடந்தானை நெஞ்சமே. காண். 34
      2316
      காண்காண் எனவிரும்பும் கண்கள் கதிரிலகு
      பூண்டார் அகலத்தான் பொன்மேனி - பாண்கண்
      தொழில்பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
      கழல்பாடி யாம்தொழுதும் கை. 35
      2317
      கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்
      வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் செய்ய
      படைபரவ பாழி பனிநீ ருலகம்
      அடியளந்த மாயன் அவற்கு. 36
      2318
      அவற்கடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
      உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான் துவர்க்கும்
      பவளவா பூமகளும் பன்மணிப்பூ ணாரம்
      திகழும் திருமார்வன் தான். 37
      2319
      தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
      தானே தவவுருவும் தாரகையும் -
      எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும் அண்ட
      திருசுடரு மாய இறை. 38
      2320
      இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
      மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
      வெள்ள தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
      உள்ளத்தி னுள்ளே உளன். 39
      2321
      உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
      உளன்கண்டாய் உள்ளுவா ருள்ள துளன்கண்டாய்
      விண்ணெடுங கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
      மண்ணெடுங்க தானளந்த மன். 40
      2322
      மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்
      துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே - மின்னை
      உடையா கொண்டன் றுலகளந்தான்குன்றும்
      குடையாக ஆகாத்த கோ. 41
      2323
      கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழலூதி
      மாவலனா கீண்ட மணிவண்ணன் மேவி
      அரியுருவ மாகி இரணியன தாகம்
      தெரியுகிரால் கீண்டான் சினம். 42
      2324
      சினமா மதகளிற்றின் திண்மருப்பை சாய்த்து
      புனமேய பூமி யதனை - தனமாக
      பேரகல துள்ளொடுக்கும் பேரார மார்வனார்
      ஓரகல துள்ள துலகு. 43
      2325
      உலகமும் ஊழியும் ஆழியும் ஒண்கேழ்
      அலர்கதிரும் செந்தீயு மாவான் பலகதிர்கள்
      பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
      பூரித்தென் நெஞ்சே புரி. 44
      2326
      புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடி
      திரிந்து சினத்தால் பொருது விரிந்தசீர்
      வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே மேலொருநாள்
      மண்கோட்டு கொண்டான் மலை. 45
      2327
      மலைமுகடு மேல்வைத்து வாசுகியை சுற்றி
      தலைமுகடு தானொருகை பற்றி அலைமுக
      டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்
      பிண்டமாய் நின்ற பிரான். 46
      2328
      நின்ற பெருமானே. நீரேற்று உலகெல்லாம்
      சென்ற பெருமானே. செங்கண்ணா - அன்று
      துரகவாய் கீண்ட துழாய்முடியாய் நாங்கள்
      நரகவாய் கீண்டாயும் நீ. 47
      2329
      நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்
      நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் -
      மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்
      தேவா சுரம்பொருதாய் செற்று 48
      2330
      செற்றதுவும் சேரா இரணியனை சென்றேற்று
      பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் - முற்றல்
      முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்மூரி
      சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49
      2331
      சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்
      தாழ்ந்த அருவி தடவரைவாய் - ஆழ்ந்த
      மணிநீர சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்
      அணிநீல வண்ண தவன். 50
      2332
      அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
      அவனே யணிமருதம் சாய்த்தான் -
      கலங்கா பொருநகரம் காட்டுவான் கண்டீர்
      இலங்கா புரமெரித்தான் எய்து. 51
      2333
      எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
      எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் - எய்ததுவும்
      தென்னிலங்கை கோன்வீழ சென்று குறளுருவாய்
      முன்னிலம்கை கொண்டான் முயன்று. 52
      2334
      முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை
      இயன்றமர தாலிலையின் மேலால் - பயின்றங்கோர்
      மண்ணலங்கொள் வெள்ளத்து மா குழவியாய்
      தண்ணலங்கல் மாலையான் தாள். 53
      2335
      தாளால் சகடம் உதைத்து பகடுந்தி
      கீளா மருதிடைபோ கேழலாய் - மீளாது
      மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு
      பெண்ணகலம் காதல் பெரிது. 54
      2336
      பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு
      கரிய முகிலிடைமின் போல - தெரியுங்கால்
      பாணொடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன்றன்
      நீணெடுங்கண் காட்டும் நிறம். 55
      2337
      நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
      இறையுருவம் யாமறியோ மெண்ணில் - நிறைவுடைய
      நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே
      பூமங்கை கேள்வன் பொலிவு 56
      2338
      பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி
      மலிந்து திருவிருந்த மார்வன் - பொலிந்து
      கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
      தெருடன்மேல் கண்டாய் தெளி. 57
      2339
      தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி
      அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
      வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே மேலொருநாள்
      மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58
      2340
      வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்
      தாழும் அருவிபோல் தார்கிடப்ப - சூழும்
      திருமா மணிவண்ணன் செங்கண்மால் எங்கள்
      பெருமான் அடிசேர பெற்று. 59
      2341
      பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்
      முற்றக்கா தூடுபோ யுண்டுதைத்து - கற்று
      குணிலை விளங்கனிக்கு கொண்டெறிந்தான் வெற்றி
      பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60
      2342
      பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
      கொண்டங் குறைவார்க்கு கோயில்போல் - வண்டு
      வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை
      இளங்குமரன் றன்விண் ணகர். 2 61
      2343
      விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்
      மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
      தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
      தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62
      2344
      தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
      சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
      திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
      இரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63
      2345
      இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
      பசைந்தங் கமுது படுப்ப - அசைந்து
      கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்
      கிடந்திருந்து நின்றதுவும் அங்கு 64
      2346
      அங்கற் கிடரின்றி அந்தி பொழுதத்து
      மங்க இரணியன தாகத்தை பொங்கி
      அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே
      கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65
      2347
      காய்ந்திருளை மற்றி கதிரிலகு மாமணிகள்
      ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப - வாய்ந்த
      மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்
      அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66
      2348
      ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்
      ஓங்கு கமலத்தி னொண்போது - ஆங்கை
      திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில்
      பகரு மதியென்றும் பார்த்து. 67
      2349
      பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு
      பேர்த்தோர் கடுவனென பேர்ந்து - கார்த்த
      களங்கனிக்கு கைநீட்டும் வேங்கடமே மேனாள்
      விளங்கனிக்கு கன்றெறிந்தான் வெற்பு. 68
      2350
      வெற்பென்று வேங்கடம் பாடும் வியன்துழா
      கற்பென்று சூடும் கருங்குழல் மேல் மற்பொன்ற
      நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்
      பூண்டநா ளெல்லாம் புகும். 69
      2351
      புகுமதத்தால் வாய்பூசி கீழ்தாழ்ந்து அருவி
      உகுமதத்தால் கால்கழுவி கையால் மிகுமதத்தேன்
      விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே
      கண்டு வணங்கும் களிறு. 70
      2352
      களிறு முகில்குத்த கையெடு தோடி
      ஒளிறு மருப்பொசிகை யாளி - பிளிறி
      விழகொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
      குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71
      2353
      குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை
      சென்று விளையாடும் தீங்கழைபோய் - வென்று
      விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
      இளங்குமரர் கோமான் இடம். 72
      2354
      இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி
      வடமுக வேங்கடத்து மன்னும் - குடம்நயந்த
      கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே
      நாத்தன்னா லுள்ள நலம். 73
      2355
      நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்
      நிலமே புரண்டுபோய் வீழ - சலமேதான்
      வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்
      தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74
      2356
      சார்ந்தகடு தேய்ப்ப தடாவியகோ டுச்சிவாய்
      ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை - சேர்ந்து
      சினவேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
      புனவேங்கை நாறும் பொருப்பு. 75
      2357
      பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து
      நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய
      வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூ கைதொழுதால்
      அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76
      2358
      ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
      வாய்ந்த குழவியாய் வாளரக்கன் - ஏய்ந்த
      முடிப்போது மூன்றேழன் றெண்ணினான் ஆர்ந்த
      அடிப்போது நங்க கரண். 77
      2359
      அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்
      முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன் - சரணாமேல்
      ஏதுகதி ஏதுநிலை ஏதுபிற பென்னாதே
      ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78
      2360
      ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து
      பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம் - கார்த்த
      விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
      நிரையார மார்வனையே நின்று. 79
      2361
      நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்
      ஒன்றியவீ ரைஞ் றுடன்துணிய - வென்றிலங்கும்
      ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
      நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80
      2362
      நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
      நெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்து
      பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
      ஓராது நிற்ப துணர்வு 81
      2363
      உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
      புணரிலும் காண்பரிய னுண்மை - இணரணை
      கொங்கணைந்து வண்டறையும் தண்டுழா கோமானை
      எங்கணைந்து காண்டும் இனி 82
      2364
      இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்
      இனியவன் காண்பரிய னேலும் -
      கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்
      உள்ளத்தி னுள்ளே யுளன். 83
      2365
      உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ள
      துளனாக தேர்ந்துணர்வ ரேலும் - உளனாய
      வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே
      கண்டா ருகப்பர் கவி 84
      2366
      கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்
      செவியினார் கேள்வியரா சேர்ந்தார் - புவியினார்
      போற்றி யுரைக்க பொலியுமே - பின்னைக்காய்
      ஏற்றுயிரை அட்டான் எழில் 85
      2367
      எழில்கொண்டு மின்னு கொடியெடுத்து வேக
      தொழில்கொண்டு தான்முழங்கி தோன்றும் - எழில் கொண்ட
      நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல
      கார்வானம் காட்டும் கலந்து. 86
      2368
      கலந்து மணியிமைக்கும் கண்ணாநின் மேனி
      மலர்ந்து மரகதமே காட்டும் - நலந்திகழும்
      கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழா கோமானை
      அந்திவான் காட்டும் அது. 87
      2369
      அதுநன் றிதுதீதென் றை படாதே
      மதுநின்ற தண்டுழாய் மார்வன் - பொதுநின்ற
      பொன்னங் கழலே தொழுமின் முழுவினைகள்
      முன்னங் கழலும் முடிந்து. 88
      2370
      முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
      படிந்துழுசால் பைந்தினைகள் வித்த - தடிந்தெழுந்த
      வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே மேலொருநாள்
      தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89
      2371
      சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப விண்ணா
      றலம்பிய சேவடிபோய் அண்டம் - புலம்பியதோள்
      எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ
      வண்டுழாய் மாலளந்த மண் 90
      2372
      மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்
      வெண்ணெய் விழுங்க வெகுண்டுஆய்ச்சி - கண்ணி
      கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்
      வயிற்றினோ டாற்றா மகன். 91
      2373
      மகனொருவர கல்லாத மாமேனி மாயன்
      மகனா மவன்மகன்றன் காதல் - மகனை
      சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
      நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92
      2374
      நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்
      அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல் - கனைத்துலவு
      வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை
      உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93
      2375
      உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி
      வைத்தவனை நாடி வலைப்படுத்தேன் - மெத்தெனவே
      நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து
      பொன்றாமை மாயன் புகுந்து. 94
      2376
      புகுந்திலங்கும் அந்தி பொழுதகத்து அரியாய்
      இகழ்ந்த இரணியன தாகம் சுகிர்ந்தெங்கும்
      சிந்த பிளந்த திருமால் திருவடியே
      வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95
      2377
      வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
      தாழ்த்தி வணங்க தழும்பாமே - கேழ்த்த
      அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்
      அடித்தா மரையாம் அலர். 96
      2378
      அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய
      மலரெடுத்த மாமேனி மாயன் - அலரெடுத்த
      வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்க
      கெண்ணத்தா னாமோ இமை 97
      2379
      இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
      அமஞ்சூழ தறவிளங்கி தோன்றும் - நமஞ்சூழ்
      நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்
      துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98
      2380
      தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
      அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்து
      கோள்முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான்
      தாள் முதலே நங்கட்கு சார்வு. 2 99
      2381
      சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழா
      தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த
      வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்
      தேனமரும் பூமேல் திரு. 2 100
      பேயாழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      திருமழிசைபிரான் அருளிச்செய்த
      நான்முகன் திருவந்தாதி
      சீராமப்பிள்ளை அருளிச்செய்தது
      நேரிசை வெண்பா
      திருமழிசைப்பிரானடி வாழ்த்து
      நாரா யணன்படைத்தான் நான்முகனை நான்முகனு
      கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
      மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
      மழிசை பரனடியே வாழ்த்து
      2382
      நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும்
      தான்முகமா சங்கரனை தான்படைத்தான் - யான் முகமாய்
      அந்தாதி மேலி டறிவித்தேன் ஆழ்பொருளை
      சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து 2 1
      2383
      தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர்
      ஆருமறியார் அவன்பெருமை ஓரும்
      பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
      அருள்முடிவ தாழியான் பால் 2
      2384
      பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்
      ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார் - ஞால
      தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை அப்பில்
      அருபொருளை யானறிந்த வாறு 3
      2385
      ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்
      கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே - வேறொருவர்
      இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
      சொல்லானை சொன்னேன் தொகுத்து 4
      2386
      தொகுத்த வரத்தனா தோலாதான் மார்வம்
      வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே - உகத்தில்
      ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே
      அருநான்கு மானாய் அறி 5
      2387
      அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
      சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
      மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
      ஈனவரே யாதலால் இன்று. 6
      2388
      இன்றாக நாளையே யாக இனிச்சிறிதும்
      நின்றாக நின்னருளென் பாலதே - நன்றாக
      நானுன்னை யன்றி யிலேன்கண்டாய் நாரணனே
      நீயென்னை யன்றி யிலை 7
      2389
      இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
      சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட
      ஈரை தலையான் இலங்கையை யீடழித்த
      கூரம்பன் அல்லால் குறை 8
      2390
      குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
      மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி - கறைகொண்ட
      கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்
      அண்டத்தான் சேவடியை ஆங்கு 9
      2391
      ஆங்கார வாரம் அதுகேட்டு அழலுமிழும்
      பூங்கார் அரவணையான் பொன்மேனி - யாங்காண
      வல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
      வல்லரே யல்லரே வாழ்த்து 10
      2392
      வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
      தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால் - சூழ்த்த
      துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை
      வழாவண்கை கூப்பி மதித்து 11
      2393
      மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
      மதித்தாய் மதிகோள் விடுத்தாய் -
      மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான் ஆழி
      விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12
      2394
      வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்தி
      கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர் - வீடாக்கும்
      மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான் விண்ணவர்க்கு
      நற்பொருள்தான் நாரா யணன் 13
      2395
      நாரா யணனென்னை யாளி நரகத்து
      சேராமல் காக்கும் திருமால்தன் பேரான
      பேச பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
      ஆசைப்ப டாழ்வார் பலர் 14
      2396
      பலர்த்தேவ ரேத்த படிகடந்தான் பாதம்
      மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
      மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
      நீர்க்கண்டன் கண்ட நிலை 15
      2397
      நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று தேவர்
      தலைமன்னர் தாமேமாற் றாக - பலர்மன்னர்
      போர்மாள வெங்கதிரோன் மா பொழில்மறைய
      தேராழி யால்மறைத்தா ரால் 16
      2398
      ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
      மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்- ஞாலம்
      அளந்தானை யாழி கிடந்தானை ஆல்மேல்
      வளர்ந்தானை தான்வணங்கு மாறு 17
      2399
      மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
      கூற கீறிய கோளரியை - வேறாக
      ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரை
      சார்த்தி யிருப்பார் தவம் 18
      2400
      தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
      அவம்செய்த ஆழியா யன்றே உவந்தெம்மை
      காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ வைகுந்தம்
      ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19
      2401
      நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
      நீயே தவத்தேவ தேவனும் -
      எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும் அண்ட
      திருசுடரு மாய இவை 20
      2402
      இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
      இவையா எரிவட்ட கண்கள் -
      எரிபொங்கி காட்டு மிமையோர் பெருமான்
      அரிபொங்கி காட்டும் அழகு 21
      2403
      அழகியான் தானே அரியுருவன்
      பழகியான் தாளே பணிமின் - குழவியா
      தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
      மீனா யுயிரளிக்கும் வித்து 22
      2404
      வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விடையடர்த்த
      பத்தி யுழவன் பழம்புனத்து - மொய்த்தெழுந்த
      கார்மேக மன்ன கருமால் திருமேனி
      நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23
      2405
      நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்பு கார்வண்ணம் நான்கும்
      இகழ்ந்தா யிருவரையும் வீ - புகழ்ந்தாய்
      சினப்போர சுவேதனை சேனா பதியாய்
      மனப்போர் முடிக்கும் வகை 24
      2406
      வகையால் மதியாது மண்கொண்டாய் மற்றும்
      வகையால் வருவதொன் றுண்டே
      வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
      வயிர வழக்கொழித்தாய் மற்று 25
      2407
      மற்று தொழுவா ரொருவரையும் யானின்மை
      கற்றை சடையான் கரிகண்டாய் எற்றைக்கும்
      கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா யானுன்னை
      கண்டுகொள் கிற்குமா று 26
      2408
      மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
      பேறா கொள்வனோ பேதைகாள் நீறாடி
      தான்காண மாட்டாத தாரகல சேவடியை
      யான்காண வல்லேற் கிது 27
      2409
      இதுவிலங்கை யீடழி கட்டிய சேது
      இதுவிலங்கு வாலியை வீழ்த்தது - இதுவிலங்கை
      தானொடுங்க வில்டங்க தண்தா ரிராவணனை
      ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28
      2410
      உகப்புருவன் தானே ஒளியுருவன்
      மகப்புருவன் தானே மதிக்கில் - மிகப்புருவம்
      ஒன்றுக்கொன் றோசனையான் வீழ ஒருகணையால்
      அன்றிக்கொண் டெய்தான் அவன். 29
      2411
      அவனென்னை யாளி அரங்கத்து அரங்கில்
      அவனென்னை எய்தாமல் காப்பான் அவனென்ன
      துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே
      வெள்ள தரவணையின் மேல். 30
      2412
      மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
      தான்நா ரணனொழித்தான் தாரகையுள் வானோர்
      பெருமானை யேத்தாத பேய்காள் பிறக்கும்
      கருமாயம் பேசில் கதை 31
      2413
      கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
      உதைப்பளவு போதுபோ கின்றி - வதை பொருள்தான்
      வாய்ந்த குணத்து படாத தடைமினோ
      ஆய்ந்த குணத்தான் அடி 32
      2414
      அடிச்சகடம் சாடி யரவாட்டி ஆனை
      பிடித்தொசித்து பேய்முலைநஞ் சுண்டு - வடிப்பவள
      வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து
      கோப்பின்னு மானான் குறிப்பு. 33
      2415
      குறிப்பெனக்கு கோட்டியூர் மேயானை யேத்த
      குறிப்பெனக்கு நன்மை பயக்க - வெறுப்பனோ
      வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்
      தான்கடத்தும் தன்மையான் தாள்
      2416
      தாளால் உலகம் அளந்த அசைவேகொல்
      வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீளோதம்
      வந்தலைக்கும் மாமயிலை மாவல்லி கேணியான்
      ஐந்தலைவாய் நாக தணை 35
      2417
      நாக தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
      நாக தணையரங்கம் பேரன்பில் -
      தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்
      அணைப்பார் கருத்தனா வான். 36
      2418
      வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு
      தானுலவு வெங்கதிரும் தண்மதியும் - மேனிலவு
      கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்
      அண்ட திருமால் அகைப்பு. 37
      2419
      அகைப்பில் மனிசரை யாறு சமயம்
      புகைத்தான் பொருகடல்நீர் வண்ணன் - உகைக்குமேல்
      எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்
      அப்போ தொழியும் அழைப்பு. 38
      2420
      அழைப்பன் திருவேங் கடத்தானை காண
      இழைப்பன் திருக்கூடல் கூட - மழைப்பே
      ரருவி மணிவரன்றி வந்திழிய யானை
      வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39
      2421
      வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
      நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற
      ல்வலையில் பட்டிருந்த லாட்டி கேள்வனார்
      கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40
      2422
      காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர
      ஓண விழவில் ஒலியதிர பேணி
      வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்
      திருவேங் கடமதனை சென்று. 41
      2423
      சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
      நின்று வினைகெடுக்கும் நீர்மையால் என்றும்
      கடிக்கமல நான்முகனும் கண்மூன்ற தானும்
      அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42
      2424
      மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
      கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் - திங்கள்
      சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
      குடையேற தாம்குவித்து கொண்டு. 43
      2425
      கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்
      தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி
      போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே
      போம்குமர ருள்ளீர் புரிந்து. 44
      2426
      புரிந்து மலரிட்டு புண்டரிக பாதம்
      பரிந்து படுகாடு நிற்ப - தெரிந்தெங்கும்
      தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
      வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45
      2427
      வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கென்
      றெப்பொழுதும் கைநீட்டும் யானையை - எப்பாடும்
      வேடுவளை கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே
      நாடுவளை தாடுமேல் நன்று. 46
      2428
      நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
      பொன்மணியும் முத்தமும் பூமரமும் - பன்மணிநீ
      ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
      வேடு முடைவேங் கடம்.
      2429
      வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
      வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும் -
      தானவரை வீழத்தன் னாழி படைதொட்டு
      வானவரை காப்பான் மலை. 48
      2430
      மலையாமை மேல்வைத்து வாசுகியை சுற்றி
      தலையாமை தானொருகை பற்றி - அலையாமல்
      பீற கடைந்த பெருமான் திருநாமம்
      கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49
      2431
      கூறமும் சாரா கொடுவினையும் சாராதீ
      மாற்றமும் சாரா வகையறிந்தேன் - ஆற்றங்
      கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
      உரைக்கிடக்கு முள்ள தெனக்கு. 50
      2432
      எனக்காவா ராரொருவ ரேஎம் பெருமான்
      தனக்காவான் தானேமற் றல்லால் புனக்காயா
      வண்ணனே. உன்னை பிறரறியார் என்மதிக்கு
      விண்ணெல்லா முண்டோ விலை 51
      2433
      விலைக்கா படுவர் விசாதியேற் றுண்பர்
      தலைக்கா பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
      விடமுண்ட வேந்தனையே வேறாஏ தாதார்
      கடமுண்டார் கல்லா தவர். 52
      2434
      கல்லா தவரிலங்கை கட்டழித்த காகுத்தன்
      அல்லா லொருதெய்வம் யானிலேன் - பொல்லாத
      தேவரை தேவரல் லாரை திருவில்லா
      தேவரை தேறல்மின் தேவு. 53
      2435
      தேவராய் நிற்கு தேவும்அ தேவரில்
      மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் - யாவராய்
      நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்
      கற்கின்ற தெல்லாம் கடை. 54
      2436
      கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
      இடைநின்ற இன்பத்த ராவர் - புடைநின்ற
      நிரோத மேனி நெடுமாலே நின்னடியை
      யாரோத வல்லா ரவர் 55
      2437
      அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு
      எவரு மெதிரில்லை கண்டீர் - உவரி
      கடல்நஞ்ச முண்டான் கடனென்று வாணற்
      குடனின்று தோற்றா னொருங்கு. 56
      2438
      ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்
      பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில் - மருங்கிருந்த
      வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான் என்னெஞ்சம்
      ஆனவர்தா மல்லாக தென் 57
      2439
      என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்
      மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான் - என்னெஞ்ச
      மேயானை யில்லா விடையேற்றான் வெவ்வினைதீர
      தாயனு காக்கினேன் அன்பு. 58
      2440
      அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனு
      கின்பாவாய் எல்லாமும் நீயாவாய் - பொன்பாவை
      கேள்வா கிளரொளியென கேசவனே கேடின்றி
      ஆள்வா கடியேன்நான் ஆள். 59
      2441
      ஆட்பார துழிதருவாய் கண்டுகொள் என்றுநின்
      தாட்பார துழிதருவேன் தன்மையை கேட்பார
      கரும்பொருளாய் நின்ற அரங்கனே உன்னை
      விரும்புவதே விள்ளேன் மனம் 60
      2442
      மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை
      தனக்கேதான் தஞ்சமா கொள்ளில்- எனக்கேதான்
      இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்
      சென்றொன்றி நின்ற திரு. 61
      2443
      திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்
      கருநின்ற கல்லார குரைப்பர்- திருவிருந்த
      மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்
      தார்தன்னை சூடி தரித்து. 62
      2444
      தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்
      விரித்துரைத்த வெந்நாக துன்னை- தெரித்தெழுதி
      வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்
      பூசித்தும் போக்கினேன் போது. 63
      2445
      போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ பொன்மகர
      காதானை யாதி பெருமானை- நாதானை
      நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
      சொல்லானை சொல்லுவதே சூது. 64
      2446
      சூதாவ தென்னெஞ்ச தெண்ணினேன் சொன்மாலை
      மாதாய மாலவனை மாதவனை - யாதானும்
      வல்லவா சிந்தி திருப்பேற்க்கு வைகுந
      தில்லையோ சொல்லீ ரிடம் 65
      2447
      இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
      படநா கணைநெடிய மாற்க்கு- திடமாக
      வைய்யேன் மதிசூடி தன்னோடு அயனைநான்
      வையேனா செய்யேன் வலம். 66
      2448
      வலமாக மாட்டாமை தானாக வைகல்
      குலமாக குற்றம்தா னாக- நலமாக
      நாரணனை நம்பதியை ஞான பெருமானை
      சீரணனை யேத்தும் திறம். 67
      2449
      திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
      மறந்தும் புறந்தொழா மாந்தர்- இறைஞ்சியும்
      சாதுவரா போதுமின்கள் என்றான் நமனும்தன்
      தூதுவரை கூவி செவிக்கு. 68
      2450
      செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
      புவிக்கும் புவியதுவே கண்டீர்- கவிக்கு
      நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
      மறைப்பொருளும் அத்தனையே தான். 69
      2451
      தானொருவ நாகி தரணி யிடந்தெடுத்து
      ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்- யானொருவன்
      இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தை
      சென்றாங் கடிப்படுத்த சேய். 70
      2452
      சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
      ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்அன்
      றோதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
      ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71
      2453
      இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்
      சொல்லற மல்லனவும் சொல்லல்ல- நல்லறம்
      ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே
      யாவதீ தன்றென்பா ரார் 72
      2454
      ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த
      பேராழி யான்றன் பெருமையை- கார்செறிந்த
      கண்டத்தான் எண்கண்ணான் காணான் அவன் வைத்த
      பண்டைத்தா னத்தின் பதி. 73
      2455
      பதிப்பகைஞர காற்றாது பய்திரைநீர பாழி
      மதித்தடைந்த வாளரவ தன்னை- மத்திவன்றன்
      வல்லாக தேற்றிய மாமேனி மாயவனை
      அல்லதொன் றேத்தாதென் நா. 74
      2456
      நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாக
      தீக்கொண்ட செஞ்சடையான் சென்றுஎன்றும் - பூக்கொண்டு
      வல்லவா றேத்த மகிழாத வைகுந்த
      செல்வனார் சேவடிமேல் பாட்டு. 75
      2457
      பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
      ஈட்டிய தீயும் இருவிசும்பும்- கேட்ட
      மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
      றனமாயை யிற்பட்ட தற்பு. 76
      2458
      தற்பென்னை தானறியா னேலும் தடங்கடலை
      கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன் - எற்கொண்ட
      வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்
      எவ்வினையும் மாயுமால் கண்டு. 77
      2459
      கண்டு வணங்கினார கென்னாங்கொல் காமனுடல்
      கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த - வண்டலம்பும்
      தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து அங்
      காரலங்க லானமையா லாய்ந்து. 78
      2460
      ஆய்ந்துகொண்ட டாதி பெருமானை அன்பினால்
      வாய்ந்த மனதிருத்த வல்லார்கள் - ஏய்ந்ததம்
      மெய்குந்த மாக விரும்புவரே தாமும்தம்
      வைகுந்தம் காண்பார் விரைந்து. 79
      2461
      விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
      கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்
      பாடின ஆடின கேட்டு படுநரகம்
      வீடின வாசற் கதவு. 80
      2462
      கதவு மனமென்றும் காணலா மென்றும்
      குதையும் வினையாவி தீர்ந்தேன் - விதையாக
      நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்
      கற்றமொழி யாகி கலந்து. 81
      2463
      கலந்தானென் னுள்ளத்து காமவேள் தாதை
      நலந்தானு மீதொப்ப துண்டே - அலர்ந்தலர்கள்
      இட்டேத்து மீசனும் நான்முகனும் என்றிவர்கள்
      விட்டேத்த மாட்டாத வேந்து. 82
      2464
      வேந்தராய் விண்ணவராய் விண்ணாகி தண்ணளியாய்
      மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய் - சார்ந்தவர்க்கு
      தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்
      பின்னால்தான் செய்யும் பிதிர். 83
      2465
      பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு
      எதிர்வன் அவனெனக்கு நேரான் - அதிரும்
      கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும்
      தொழக்காதல் பூண்டேன் தொழில். 84
      2466
      தொழிலெனக்கு தொல்லைமால் தன்னாம மேத்த
      பொழுதெனக்கு மற்றதுவே போதும் - கழிசினத்த
      வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த
      வில்லாளன் நெஞ்ச துளன். 85
      2467
      உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
      உளன்கண்டாய் உள்ளுவா ருள்ள - துளன்கண்டாய்
      தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்
      என்னொப்பார கீச னிமை. 86
      2468
      இமை பெருமலைபோ லிந்திரனார கிட்ட
      சமய விருந்துண்டார் காப்பார் சமயங்கள்
      கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
      உண்டா னுலகோ டுயிர். 87
      2469
      உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி
      அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி - செயல்தீர
      சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறுச
      பந்தனையார் வாழ்வேல் பழுது. 88
      2470
      பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்
      வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை
      கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
      விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89
      2471
      வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
      பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள் - மேல்திருந்த
      வாழ்வார் வருமதிபார தன்பினராய் மற்றவர்க்கே
      தாழா யிருப்பார் தமர் 90
      2472
      தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
      அமரர்க்கும் ஆடரவார தாற்கும் - அமரர்கள்
      தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி மால்வண்ணன்
      தாள்தா மரையடைவோ மென்று 91
      2473
      என்றும் மறந்தறியேன் என்னெஞ்ச தேவைத்து
      நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
      திருவிருந்த மார்பன் சிரீதரனு காளாய்
      கருவிருந்த நாள்முதலா காப்பு. 92
      2474
      காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
      ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை
      கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
      விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93
      2475
      மெய்தெளிந்தா ரெஞ்செய்யார் வேறானார் நீறாக
      கைதெளிந்து காட்டி களப்படுத்து பைதெளிந்த
      பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
      வேம்பும் கறியாகும் ஏன்று. 94
      2476
      ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
      ஆன்றேன் அமரர கமராமை -
      கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை
      இடநாடு காண இனி. 2 95
      2477
      இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
      இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை -
      காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை
      நாரணன்நீ நன்கறிந்தேன் நான். 2 96
      திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      நம்மாழ்வார் அருளிச்செய்த
      திருவிருத்தம்
      தனியன்
      கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது
      கருவிரு தக்குழி நீத்தபின் கா கடுங்குழிவீழ்ந்து
      ஒருவிரு தம்பு குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு
      ஒருவிரு தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த
      திருவிரு தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.
      2478
      பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா
      வொழுக்கும் அழுக்குடம்பும்
      இந்நின்ற நீர்மை இனியா
      முறாமை உயிரளிப்பான்
      எந்நின்ற யோனியு மாய்ப்பிற
      தாயிமை யோர்தலைவா.
      மெய்நின்று கேட்டரு ளாய்அடி
      யேன்செய்யும் விண்ணப்பமே. 1
      2479
      செழுநீர தடத்து கயல்மிளிர
      தாலொப்ப சேயரிக்கண்
      அழுநீர் துளும்ப அலமரு
      கின்றன வாழியரோ
      முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண்
      ணாட்டவர் மூதுவராம்
      தொழுநீ ரிணையடி கேஅன்பு
      சூட்டிய சூழ்குழற்கே. 2
      2480
      குழல்கோ வலர்மட பாவையும்
      மண்மக ளும்திருவும்
      நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல்
      மீளுங்கொல் தண்ணந்துழாய்
      அழல்போ லடும்சக்க ரத்தண்ணல்
      விண்ணோர் தொழக்கடவும்
      தழல்போல் சினத்தஅ புள்ளின்பின்
      போன தனிநெஞ கமே. 3
      2481
      தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே
      கவர்ந்தது தண்ணந்துழா
      கினிநெஞ க மிங்கு கவர்வது
      யாமிலம் நீநடுவே
      முனிவஞ்ச பேய்ச்சி முலைசுவை
      தான்முடி சூடுதுழா
      பனிநஞ்ச மாருத மேஎம்ம
      தாவி பனிப்பியல்வே 4
      2482
      பனிபியல் வாக வுடையதண்
      வாடைஇ காலமிவ்வூர்
      பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி
      வீசும் அ தண்ணந்துழாய்
      பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
      மாமைத்தி றத்துக்கொலாம்
      பனிப்புயல் வண்ணண்செங் கோலொரு
      நான்று தடாவியதே 5
      2483
      தடாவிய அம்பும் முரிந்த
      சிலைகளும் போகவிட்டு
      கடாயின கொண்டொல்கும் வல்லியீ
      தேனும் அசுரர்மங
      கடாவிய வேக பறவையின்
      பாகன் மதனசெங்கோல்
      நடாவிய கூற்றங்கண் டீர்உயிர்
      காமின்கள் ஞாலத்துள்ளே. 6
      2484
      ஞாலம் பனிப்ப செரித்துநன்
      நீரிட்டு கால்சிதைந்து
      நீலவல் லேறு பொராநின்ற
      வான மிதுதிருமால்
      கோலம் சுமந்து பிரிந்தார்
      கொடுமை குழறுதண்பூங்
      காலங்கொ லோவறி யேன்வினை
      யாட்டியேன் காண்கின்றவே 7
      2485
      காண்கின் றனகளும் கேட்கின்
      றனகளும் காணில்இந்நாள்
      பாண்குன்ற நாடர் பயில்கின்
      றனஇதெல் லாமறிந்தோம்
      மாண்குன்ற மேந்திதண் மாமலை
      வேங்கட தும்பர்நம்பும்
      சேண்குன்றம் சென்றுபொருள்படை
      பான்கற்ற திண்ணனவே. 8
      2486
      திண்பூஞ் சுடர்தி நேமியஞ்
      செல்வர்விண் ணாடனைய
      வண்பூ மணிவல்லி யாரே
      பிரிபவர் தாம்இவையோ
      கண்பூங் கமலம் கருஞ்சுட
      ராடிவெண் முத்தரும்பி
      வண்பூங் குவளை மடமான்
      விழிக்கின்ற மாயிதழே. 9
      2487
      மாயோன் வடதிரு வேங்கட
      நாடவல் லிக்கொடிகாள்.
      நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி
      லீருரை யீர் மது
      வாயோ அதுவன்றி வல்வினை
      யேனும் கிளியுமெள்கும்
      ஆயோ அடும்தொண்டை யோஅறை
      யோவி தறிவரிதே. 10
      2488
      அரியன யாமின்று காண்கின்
      றனகண்ணன் விண்ணனையாய்.
      பெரியன காதம் பொருட்கோ
      பிரிவெனெ ஞாலமெய்தற்
      குரியென வெண்முத்தும் பைம்பொன்னு
      மேந்தியொ ரோகுடங்கை
      பெரியென கெண்டை குலம்இவை
      யோவந்து பேர்கின்றவே 11
      2489
      பேர்கின் றதுமணி மாமை
      பிறங்கியள் ளல்பயலை
      ஊர்கின் றதுகங்குல் ஊழிக
      ளேஇதெல் லாமினவே
      ஈர்கின்ற சக்கர தெம்பெரு
      மான்கண்ணன் தண்ணந்துழாய்
      சார்கின்ற நன்னெஞ்சி னார்தந்து
      போன் தனிவளமே. 12
      2490
      தனிவளர் செங்கோல் நடாவு
      தழல்வாய் அரசவி
      பனிவளர் செங்கோ லிருள்வீற்
      றிருந்தது பார்முழுதும்
      துனிவளர் காதல் துழாயை
      துழாவுதண் வாடைதடி
      தினிவளை காப்பவ ரார்எனை
      யூழிக ளீர்வனவே. 13
      2491
      ஈர்வன வேலுமஞ் சேலும்
      உயிர்மேல் மிளிர்ந்திவையோ
      பேர்வன வோவல்ல தெய்வநல்
      வேள்கணை பேரொளியே
      சோர்வன நீல சுடர்விடும்
      மேனியம் மான்விசும்பூர்
      தேர்வன தெய்வமன் னீரகண்
      ணோவி செழுங்கயலே 14
      2492
      கயலோ மகண்கள் என்று
      களிறு வினவிநிற்றீர்
      அயலோர் அறியிலு மீதென்ன
      வார்த்தை கடல்கவர்ந்த
      புயலோ டுலாம்கொண்டல் வண்ணன்
      புனவேங் கடத்தெம்மொடும்
      பயலோ விலீர்கொல்லை காக்கின்ற
      நாளும் பலபலவே. 15
      2493
      பலபல வூழிக ளாயிடும்
      அன்றியோர் நாழிகையை
      பலபல கூறிட்ட கூறாயி
      டும்கண்ணன் விண்ணனையாய்.
      பலபல நாளன்பர் கூடிலும்
      நீங்கிலும் யாம்மெலிதும்
      பலபல சூழ லுடைத்துஅம்ம.
      வாழியி பாயிருளே. 16
      2494
      இருள்விரி தாலன்ன மாநீர
      திரைகொண்டு வாழியரோ
      இருள்பிரி தாரன்பர் தேர்வழி
      தூரல் அரவணைமேல்
      இருள்விரி நீல கருநா
      யிறுசுடர் கால்வதுபோல்
      இருள்விரி சோதி பெருமா
      னுறையு மெறிகடலே. 17
      2495
      கடல்கொண் டெழுந்தது வானம்அவ்
      வானத்தை யன்றிச்சென்று
      கடல்கொண் டெழுந்த வதனா
      லிதுகண்ணன் மண்ணும்விண்ணும்
      கடல்கொண் டெழுந்தவ காலங்கொ
      லோ.புயற் காலங்கொலோ.
      கடல்கொண்ட கண்ணீர் அருவிசெய்
      யாநிற்கும் காரிகையே. 18
      2496
      காரிகை யார்நிறை காப்பவர்
      யாரென்று கார்கொண்டின்னே
      மாரிகை யேறி அறையிடும்
      காலத்தும் வாழியரோ
      சாரிகை புள்ளர்அ தண்ண
      துழாயிறை கூயருளார்
      சேரிகை யேரும் பழியா
      விளைந்தென் சின்மொழிக்கே. 19
      2497
      சின்மொழி நோயோ கழிபெரு
      தெய்வம்இ நோயினதென்
      றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ
      மன்றிது வேல.நில்நீ
      என்மொழி கேண்மினென் அம்மனை
      மீர்.உல கேழுமுண்டான்
      சொல்மொழி மால தண்ணந்து
      ழாய்கொண்டு சூட்டுமினே. 20
      2498
      சூட்டுநன் மாலைகள் தூயன
      வேந்திவிண் ணோர்கள்நன்னீர்
      ஆட்டி தூபம் தராநிற்க
      வேயங்குஓர் மாயையினால்
      ஈட்டிய வெண்ணை தொடுவுண்ண
      போந்திமி லேற்றுவன்கூன்
      கோட்டிடை யாடினை கூத்துஅட
      லாயர்தம் கொம்பினுக்கே. 21
      2499
      கொம்பார் தழைகை சிறுநா
      ணெறிவிலம் வேட்டைகொண்டா
      டம்பார் களிறு வினவுவ
      தையர்புள் ளூரும்கள்வர்
      தம்பா ரகத்தென்று மாடா
      தனதம்மில் கூடாதன
      வம்பார் வினாச்சொல்ல வோஎம்மை
      வைத்ததிவ் வான்புனத்தே 22
      2500
      புனமோ புனத்தய லேவழி
      போகும் அருவினையேன்
      மனமோ மகளிர்ங் காவல்சொல்
      லீர்புண்ட ரீகத்தங்கேழ்
      வனமோ ரனையகண் ணான்கண்ணன்
      வானா டமரும்தெய்வ
      தினமோ ரனையீர்க ளாய்இவை
      யோம் இயல்புகளே 23
      2501
      இயல்வா யினவஞ்ச நோய்கொண்
      டுலாவும் ஓரோகுடங்கை
      கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள்
      தம்மொடும் குன்றமொன்றால்
      புயல்வா யினநிரை காத்தபுள்
      ளூர்திகள் ளூரும்துழா
      கொயல்வாய் மலர்மேல் மனத்தொடென்
      னாங்கொலெம் கோல்வளைக்கே 24
      2502
      எங்கோல் வளைமுத லாகண்ணன்
      மண்ணும்விண் ணும்அளிக்கும்
      செங்கோல் வளைவு விளைவிக்கும்
      மால்திறல் சேரமர்
      தங்கோ னுடையதங் கோனும்ப
      ரெல்லா யவர்க்கும்தங்கோன்
      நங்கோ னுகக்கும் துழாய்எஞ்செய்
      யாதினி நானிலத்தே 25
      2503
      நானிலம் வாய்க்கொண்டு நன்னீ
      ரறமென்று கோதுகொண்ட
      வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ்
      பாலை கடந்தபொன்னே.
      கால்நில தோய்ந்துவிண் ணோர்தொழும்
      கண்ணன்வெஃ காவுதுஅம்பூ
      தேனிளஞ் சோலை பாலதுஎ
      பாலைக்கும் சேமத்ததே. 26
      2504
      சேமம்செங் கோனரு ளேசெரு
      வாரும்ந பாகுவரென்
      றேமம் பெறவையம் சொல்லும்மெய்
      யேபண்டெல் லாம்மறைகூய்
      யமங்க டோ றெரி வீசும்நங்
      கண்ணன தண்ணந்துழா
      தாமம் புனையஅவ் வாடையீ
      தோவந்து தண்ணென்றதே. 27
      2505
      தண்ண துழாய்வளை கொள்வது
      யாமிழ போம் நடுவே
      வண்ணம் துழாவியோர் வாடை
      யுலாவும்வள் வாயலகால்
      புள துழாமே பொருநீர
      திருவரங் கா.அருளாய்
      எண்ண துழாவு மிடத்துஉள
      வோபண்டும் இன்னன்னவே 28
      2506
      இன்னன்ன தூதெம்மை ஆளற்ற
      பட்டிர தாளிவளென்று
      அன்னன்ன சொல்லா பெடையொடும்
      போய்வரும் நீலமுண்ட
      மின்னன்ன மேனி பெருமா
      னுலகில்பெண் தூதுசெல்லா
      அன்னன்ன நீர்மைகொ லோகுடி
      சீர்மையி லன்னங்களே . 29
      2507
      அன்னம்செல் வீரும்வண் டானம்செல்
      வீரும் தொழுதிரந்தேன்
      முன்னம்செல் வீர்கள் மறவேல்மி
      னோகண்ணன் வைகுந்தனோ
      டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னை
      சொல்லி அவரிடைநீர்
      இன்னஞ்செல் லீரோ இதுவோ
      தகவென் றிசைமின்களே . 30
      2508
      இசைமின்கள் தூதென் றிசைத்தா
      லிசையிலம் என்தலைமேல்
      அசைமின்க ளென்றா லசையிங்கொ
      லாம்அம்பொன் மாமணிகள்
      திசைமின் மிளிரும் திருவேங்
      கட்த்துவன் தாள்சிமயம்
      மிசைமின் மிளிரிய போவான்
      வழி கொண்ட மேகங்களே . 31
      2509
      மேகங்க ளோ.உரை யீர்திரு
      மால்திரு மேனியொக்கும்
      யோகங்க ளுங்களு கெவ்வாறு
      பெற்றீர் உயிரளிப்பான்
      மாகங்க ளெல்லாம் திரிந்துநன்
      னீர்கள் சுமந்துந்தம்
      ஆகங்கள் நோவ வருந்தும்
      தவமாம் அருள்பெற்றதே 32
      2510
      அருளார் திருச்ச கரத்தால்
      அகல்விசும் பும்நிலனும்
      இருளார் வினைகெட செங்கோல்
      நடாவுதிர் ஈங்கோர்பெண்பால்
      பொருளோ எனுமிகழ் வோஇவற்
      றின்புற தாளென்றெண்ணோ
      தெருளோம் அரவணை யீர்இவள்
      மாமை சிதைக்கின்றதே. 33
      2511
      சிதைக்கின்ற தாழியென் றாழியை
      சீறிதன் சீறடியால்
      உதைக்கின்ற நாயக தன்னொடும்
      மாலே உனதுதண்தார்
      ததைக்கின்ற தண்ண துழாயணி
      வானது வேமனமா
      பதைக்கின்ற மாதின் திறத்துஅறி
      யேஞ்செயற் பாலதுவே. 34
      2512
      பால்வா பிறைப்பிள்ளை ஒக்கலை
      கொண்டு பகலிழந்த
      மேல்பால் திசைப்பெண் புலம்புறு
      மாலை உலகளந்த
      மால்பால் துழாய்க்கு மனமுடை
      யார்க்குநல் கிற்றையெல்லாம்
      சோல்வான் புகுந்துஇது வோர்பனி
      வாடை துழாகின்றதே. 35
      2513
      துழாநெடுஞ் சூழிரு ளென்றுதன்
      தண்தா ரதுபெயரா
      எழாநெடு வூழி யெழுந்தவி
      காலத்தும் ஈங்கிவளோ
      வழாநெடு துன்பத்த ளென்றிரங்
      காரம்ம னோ.இலங்கை
      குழாநெடு மாடம் இடித்த
      பிரானார் கொடுமைகளே . 36
      2514
      கொடுங்கால் சிலையர் நிரைகோ
      ளுழவர் கொலையில்வெய்ய
      கடுங்கால் இளைஞர் துடிபடும்
      கவ்வைத்து அருவினையேன்
      நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர
      பாதம் பரவி பெற்ற
      தொடுங்கா லொசியு மிடைஇள
      மாஞ்சென்ற சூழ்கடமே. 37
      2515
      கடமா யினகள் கழித்துதம்
      கால்வன்மை யால்பலநாள்
      தடமா யினபுக்கு நீர்நிலை
      நின்ற தவமிதுகொல்
      குடமாடி யிம்மண்ணும் விண்ணும்
      குலுங்க வுலகளந்து
      நடமா டியபெரு மான்உரு
      வொத்தன நீலங்களே. 38
      2516
      நீல தடவரை மேல்புண்ட
      ரீக நெடுந்தடங்கள்
      போல பொலிந்தெ கெல்லா
      விடத்தவும் பொங்குமுந்நீர்
      ஞால பிரான்விசும் புக்கும்
      பிரான்மற்றும் நல்லோர்பிரான்
      கோலம் கரிய பிரான்எம்
      பிரான்கண்ணின் கோலங்களே. 39
      2517
      கோல பகற்களி றொன்றுகற்
      புய்ய குழாம்விரிந்த
      நீலக்கங் குற்களி றெல்லாம்
      நிறைந்தன நேரிழையீர் .
      ஞாலப்பொன் மாதின் மணாளன்
      துழாய்நங்கள் சூழ்குழற்கே
      ஏல புனைந்தென்னை மார்எம்மை
      நோக்குவ தென்றுகொலோ. 40
      2518
      என்றும்புன் வாடை யிதுகண்
      டறிதும்இவ் வாறுவெம்மை
      ஒன்றுமுருவும் சுவடும்
      தெரியிலம் ஓங்கசுரர்
      பொன்றும் வகைபுள்ளை யூர்வான்
      அருளரு ளாதவிந்நாள்
      மன்றில் நிறைபழி தூற்றிநின்
      றென்னைவன் காற்றடுமே. 41
      2519
      வன்காற் றறைய ஒருங்கே
      மறிந்து கிடந்தலர்ந்த
      மென்காற் கமல தடம்போற்
      பொலிந்தன மண்ணும்விண்ணும்
      என்காற் களவின்மை காண்மினென்
      பானொத்து வான்நிமிர்ந்த
      தன்கால்பணிந்தவென் பால்எம்பி
      ரான தடங்கண்களே. 42
      2520
      கண்ணும்செ தாமரை கையு
      மவைஅடி யோஅவையே
      வண்ணம் கரியதோர் மால்வரை
      போன்று மதிவிகற்பால்
      விண்ணும் கடந்தும்பர் அப்பால்மி
      குமற்றெ பால்எவர்க்கும்
      எண்ணு மிடத்தது வோஎம்பி
      ரான தெழில்நிறமே 43
      2521
      நியமுயர் கோலமும் பேரும்
      உருவும் இவையிவையென்று
      அறமுயல் ஞான சமயிகள்
      பேசிலும் அங்கங்கெல்லாம்
      உறவுயர் ஞான சுடர்விள
      காய்நின்ற தன்றியொன்றும்
      பெறமுயன் றாரில்லை யால்எம்பி
      ரான்றன் பெருமையையே. 44
      2522
      பெருங்கேழ லார்தம் பெருங்கண்
      மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
      ஒருங்கே பிறழவை தாரிவ்வ
      காலம் ஒருவர்நம்போல்
      வரும்கேழ் பவருள ரேதொல்லை
      வாழியம் சூழ்பிறப்பும்
      மருங்கே வரப்பெறு மேசொல்லு
      வாழி மடநெஞ்சமே. 45
      2523
      மடநெஞ்ச மென்றும் தமதென்றும்
      ஓர்கரு மம்கருதி
      விடநெஞ்சை யுற்றார் விடவோ
      அமையும்அ பொன்பெயரோன்
      தடநெஞ்சம் கீண்ட பிரானார்
      தமதடி கீழ்விடப்போ
      திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று
      தாறும் திரிகின்றதே. 46
      2524
      திரிகின் றதுவட மாருதம்
      திங்கள்வெ தீமுகந்து
      சொரிகின் றதுஅது வும்அது
      கண்ணன்விண் ணூர்தொழவே
      சரிகின் றதுசங்கம் தண்ணந்து
      ழாய்க்குவண் ணம்பயலை
      விரிகின் றதுமுழு மெய்யும்என்
      னாங்கொலென் மெல்லியற்கே 47
      2525
      மெல்லிய லாக்கை கிருமி
      குருவில் மிளிர்தந்தாங்கே
      செல்லிய செல்கை துலகையென்
      காணும்என் னாலும்தன்னை
      சொல்லிய சூழல் திருமா
      லவன்கவி யாதுகற்றேன்
      பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ
      தோவுண்டு பண்டுபண்டே. 48
      2526
      பண்டும் பலபல வீங்கிருள்
      காண்டும்இ பாயிருள்போல்
      கண்டு மறிவதும் கேட்பதும்
      யாமிலம் காளவண்ண
      வண்டுண் துழாய்ப்பெரு மான்மது
      சூதனன் தாமோதரன்
      உண்டும் உமிழ்ந்தும் கடாயமண்
      ணேரன்ன ஒண்ணுதலே. 49
      2527
      ஒண்ணுதல் மாமை ஒளிபய
      வாமை விரைந்துநந்தேர்
      நண்ணுதல் வேண்டும் வலவ.
      கடாகின்று தேன்நவின்ற
      வண்முதல் நாயகன் நீள்முடி
      வெண்முத்த வாசிகைத்தாய்
      மண்முதல் சேர்வுற்று அருவிசெய்
      யாநிற்கும் மாமலைக்கே. 50
      2528
      மலைகொண்டு மத்தா அரவால்
      சுழற்றிய மாயப்பிரான்.
      அலைகண்டு கொண்ட அமுதம்கொள்
      ளாது கடல்பரதர்
      விலைகொண்டு தந்தசங் கம்இவை
      வேரி துழாய்துணையா
      துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள்
      வானொ தழைக்கின்றதே. 51
      2529
      அழைக்கும் கருங்கடல் வெண்திரை
      கைகொண்டு போய்அலர்வாய்
      மழைக்கண் மடந்தை அரவணை
      யேறமண் மாதர்விண்வாய்
      அழைத்து புலம்பி முலைமலை
      மேல்நின்றும் ஆறுகளாய்
      மழைக்கண்ண நீர்திரு மால்கொடி
      யானென்று வார்கின்றதே. 52
      2530
      வாரா யினமுலை யாளிவள்
      வானோர் தலைமகனாம்
      சேரா யினதெய்வ நன்னோ
      யிதுதெய்வ தண்ணந்துழா
      தாரா யினும்தழை யாயினும்
      தண்கொம்ப தாயினும்கீழ்
      வேரா யினும்நின்ற மண்ணாயி
      னும்கொண்டு வீசுமினே. 53
      2531
      வீசும் சிறகால் பறத்திர்விண்
      ணாடுங் கட்கெளிது
      பேசும் படியன்ன பேசியும்
      போவது நெய்தொடுவுண்
      டேசும் படியன்ன செய்யுமெம்
      மீசர்விண் ணோர்பிரானார்
      மாசின் மலரடி கீழ்எம்மை
      சேர்விக்கும் வண்டுகளே 54
      2532
      வண்டுக ளோ.வம்மின் நீர்ப்பூ
      நிலப்பூ மரத்திலொண்பூ
      உண்டுகளித்துழல் வீர்க்கொன்
      றுரைக்கியம் ஏனமொன்றாய்
      மண்துக ளாடிவை குந்தமன்
      னாள்குழல் வாய்விரைபோல்
      விண்டுகள் வாரும் மலருள
      வோம் வியலிடத்தே 55
      2533
      வியலிட முண்ட பிரானா
      விடுத்த திருவருளால்
      உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்
      தோழிஓர் தண்தென்றல்வ
      தயலிடை யாரும் அறிந்திலர்
      அம்பூ துழாயினின்தேன்
      புயலுடை நீர்மையி னால்தட
      விற்றென் புலன்கலனே. 56
      2534
      புலக்குண் டலப்புண்ட ரீகத்த
      போர்க்கொண்டை வல்லியொன்றால்
      விலக்குண் டுலாகின்று வேல்விழி
      கின்றன கண்ணன் கையால்
      மலக்குண் டமுதம் சுரந்த
      மறிகடல் போன்றவற்றால்
      கலக்குண்ட நான்றுகண் டார்எம்மை
      யாரும் கழறலரே. 57
      2535
      கழல்தலம் ஒன்றே நிலமுழு
      தாயிற்று ஒருகழல்போய்
      நிழல்தர எல்லா விசும்பும்
      நிறைந்தது நீண்ட அண்டத்து
      உழறலர் ஞான சுடர்விள
      காயுயர தோரையில்லா
      அழறலர் தாமரை கண்ணன் என்
      னோவிங் களக்கின்றதே 58
      2536
      அளப்பரு தன்மைய ஊழியங்
      கங்குல்அ தண்ணந்துழாய்க்கு
      உளப்பெருங் காதலில் நீளிய
      வாயுள ஓங்குமுந்நீர்
      வளப்பெரு நாடன் மதுசூ
      தனனென்னும் வல்வினையேன்
      தளப்பெரு நீண்முறு வல்செய்ய
      வாய தடமுலையே. 59
      2537
      முலையோ முழுமுற்றும் போந்தில
      மொய்பூங் குழல்குறிய
      கலையோ அரையில்லை நாவோ
      குழறும் கடல்மண்ணெல்லாம்
      விலையோ எனமிளி ருங்கண்
      ணிவள்பர மே.பெருமான்
      மலையோ திருவேங் கடமென்று
      கற்கின்றா வாசகமே 2 60
      2538
      வாசகம் செய்வது நம்பர
      மே தொல்லை வானவர்தம்
      நாயகன் நாயக ரெல்லாம்
      தொழுமவன் ஞாலமுற்றும்
      வேயக மாயினும் சோரா
      வகையிரண் டேயடியால்
      தாயவன் ஆய்க்குல மாய்வந்து
      தோன்றிற்று நம்மிறையே. 61
      2539
      இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்
      டால்என வும்மிரங்காது
      அறையோ. எனநின் றதிரும்
      கருங்கடல் ஈங்க்கிவள்தன்
      நிறையோ இனியுன் திருவரு
      ளாலன்றி காப்பரிதால்
      முறையோ அரவணை மேல்பள்ளி
      கொண்ட முகில்வண்ணனே. 62
      2540
      வண்ணம் சிவந்துள வானா
      டமரும் குளிர்விழிய
      தண்மென் கமல தடம்போல்
      பொலிந்தன தாமிவையோ
      கண்ணன் திருமால் திருமுக
      தன்னொடும் காதல்செய்தேற்
      கெண்ணம் புகுந்துஅடி யேனொடி
      கால மிருகின்றதே. 63
      2541
      இருக்கார் மொழியால் நெறியிழு
      காமை உலகளந்த
      திருத்தா ளிணைநில தேவர்
      வணங்குவர் யாமும் அவா
      ஒருக்கா வினையொடும் எம்மொடும்
      நொந்து கனியின்மையின்
      கருக்காய் கடிப்பவர் போல்திரு
      நாமச்சொல் கற்றனமே. 64
      2542
      கற்று பிணைமலர கண்ணின்
      குலம்வென்றுஓ ரோகருமம்
      உற்று பயின்று செவியொடு
      சாவி உலகமெல்லாம்
      முற்றும் விழுங்க்கி யுமிழ்ந்த
      பிரானார் திருவடிக்கீழ்
      உற்றும் உறாதும் மிளீர்ந்தகண்
      ணாயெம்மை உண்கின்றவே. 65
      2543
      உண்ணா துறங்கா துணர்வுறும்
      எத்தனை யோகியர்க்கும்
      எண்ணாய் மிளிரும் இயல்பின
      வாம்எரி நீர்வளிவான்
      மண்ணா கியவெம் பெருமான்
      றனதுவை குந்தமன்னாள்
      கண்ணாய் அருவினை யேன்உயி
      ராயின காவிகளே. 66
      2544
      காவியும் நீலமும் வேலும்
      கயலும் பலபலவென்று
      ஆவியின் தன்மை அளவல்ல
      பாரிப்பு அசுரர்செற்ற
      மாவியம் புள்வல்ல மாதவன்
      கோவிந்தன் வேங்கடம்சேர்
      தூவியம் பேடையன் னாள்கண்க
      ளாய துணைமலரே. 67
      2545
      மலர்ந்தே யொழிலிந்தில மாலையும்
      மாலைபொன் வாசிகையும்
      புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற
      நாற்றி பொருகடல்சூழ்
      நிலந்தா வியவெம் பெருமான்
      தனதுவை குந்தமன்னாய்.
      கலந்தார் வரவெதிர் கொண்டுவன்
      கொன்றைகள் கார்த்தனவே. 68
      2546
      காரேற் றிருள்செகி லேற்றின்
      சுடரு குளைந்து வெல்வான்
      போரேற் றெதிர்ந்தது புன்தலை
      மாலை புவனியெல்லாம்
      நீரேற் றளந்த நெடிய
      பிரானரு ளாவிடுமே
      வாரேற் றிளமுலை யாய்வரு
      தேலுன் வளைத்திறமே. 69
      2547
      வளைவா திருச்ச கரத்தெங்கள்
      வானவ னார்முடிமேல்
      தளைவாய் நறுங்கண்ணி தண்ண
      துழாய்க்குவண் ணம்பயலை
      விளைவான் மிகவந்து நாள்திங்க
      ளாண்டூழி நிற்கவெம்மை
      உளைவான் புகுந்துஇது வோர்கங்குல்
      ஆயிரம் ஊழிகளே. 70
      2548
      ஊழிக ளாயுல கேழுமுண்
      டானென் றிலம்பழங்கண்டு
      ஆழிக ளாம்பழ வண்ணமென்
      றேற்க்குஅஃ தேகொண்டன்னை
      நாழிவ ளோவெனும் ஞாலமுண்
      டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
      தோழிக ளோ.உரை யீர்எம்மை
      அம்மனை சூழ்கின்றவே. 71
      2549
      சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா
      இருளின் கருந்திணிம்பை
      போழ்கின்ற திங்களம் பிள்ளையும்
      போழ்க துழாய்மலர்க்கே
      தாழ்கின்ற நெஞ்ச தொருதமி
      யாட்டியேன் மாமைக்கின்று
      வாழ்கின்ற வாறிது வோவந்து
      தோன்றிறு வாலியதே. 72
      2550
      வால்வெண் ணிலவுல கார
      சுரக்கும்வெண் திங்களென்னும்
      பால்விண் சுரவி சுரமுதிர்
      மாலை பரிதிவட்டம்
      போலும் சுடரட லாழிப்பி
      ரான்பொழில் ஏழளிக்கும்
      சால்பின் தகைமைகொ லாம்தமி
      யாடி தளர்ந்ததுவே 73
      2551
      தளர்ந்தும் முறிந்தும் வருதிரை
      பாயல் திருநெடுங்கண்
      வளர்ந்தும் அறிவுற்றும் வையம்
      விழுங்கியும் மால்வரையை
      கிளர்ந்தும் அறிதர கீண்டெடு
      தான்முடி சூடுதுழாய்
      அளைந்துண் சிறுபசு தென்றல்அ
      தோவ துலாகின்றதே. 74
      2552
      உலாகின்ற கெண்டை ஒளியம்புஎம்
      ஆவியை ஊடுருவ
      குலாகின்ற வெஞ்சிலை வாண்முக
      தீர்குனி சங்கிடறி
      புலாகின்ற வேலை புணரியம்
      பள்ளியம் மானடியார்
      நிலாகின்ற வைகுந்த மோவைய
      மோம் நிலையிடமே 75
      2553
      இடம்போய் விரிந்திவ் வுலகள
      தானெழி லார்தண்டுழாய்
      வடம்போ தினையும் மடநெஞ்ச
      மேநங்கள் வெள்வளைக்கே
      விடம்போல் விரித லிதுவி
      பேவியன் தாமரையின்
      தடம்போ தொடுங்கமெல் லாம்பல்
      அலர்விக்கும் வெண்திங்களே. 76
      2554
      திங்களம் பிள்ளை புலம்பத்தன்
      செங்கோ லரசுபட்ட
      செங்களம் பற்றிநின் றெள்குபுன்
      மாலைதென் பாலிலங்கை
      வெங்களம் செய்தனம் விண்ணோர்
      பிரானார் துழாய்துணையா
      நங்களை மாமைகொள் வான்வந்து
      தோன்றி நலிகின்றதே. 77
      2555
      நலியும் நரகனை வீட்டிற்றும்
      வாணன்திண் டோ ள்துணித்த
      வலியும் பெருமையும் யாஞ்சொல்லும்
      நீர்த்தல்ல மைவரைபோல்
      பொலியும் உருவில் பிரானார்
      புனைபூ துழாய்மலர்க்கே
      மெலியும் மடநெஞ்சி நார்தந்து
      போயின வேதனையே. 78
      2556
      வேதனை வெண்புரி லனை
      விண்ணோர் பரவநின்ற
      நாதனை ஞாலம் விழுங்கும்
      அநாதனை ஞாலம்தத்தும்
      பாதனை பாற்கடல் பாம்பணை
      மேல்பள்ளி கொண்டருளும்
      சீதனை யேதொழு வார்விண்ணு
      ளாரிலும் சேரியரே. 79
      2557
      சீரர சாண்டுதன் செங்கோல்
      சிலநள் செலீஇக்கழிந்த
      பாரர சொத்து மறைந்தது
      நாயிறு பாரளந்த
      பேரர சே.எம் விசும்பர
      சே.எம்மை நீத்துவஞ்சித்த
      ஓரர சே.அரு ளாய்இரு
      ளாய்வ துறுகின்றதே. 80
      2558
      உருகின்ற கன்மங்கள் மேலான
      ஓர்ப்பில ராய்இவளை
      பெருகின்ற தாயர்மெ நொந்து
      பெறார்கொல் துழாய்குழல்வா
      துறுகின் றிலர்தொல்லை வேங்கட
      மாட்டவும் சூழ்கின்றிலர்
      இருகின்ற தாலிவ ளாகம்மெல்
      லாவி எரிகொள்ளவே. 81
      2559
      எரிகொள்செ நாயி றிரண்டுட
      னேயுத யம்மலைவாய்
      விரிகின்ற வண்ணத்த எம்பெரு
      மான்கண்கள் மீண்டவற்றுள்
      எரிகொள்செ தீவீழ் அசுரரை
      போலஎம் போலியர்க்கும்
      விரிவசொல் லீரிது வோவைய
      முற்றும் விளரியதே 82
      2560
      விளரி குரலன்றில் மென்படை
      மேகின்ற முன்றில்பெண்ணை
      முளரி குரம்பை யிதுவிது
      வாக முகில்வண்ணன்பேர்
      கிளரி கிளரி பிதற்றும்மெல்
      லாவியும் நைவுமெல்லாம்
      தளரில் கொலோவறி யேன்உய்ய
      லாவதி தையலுக்கே. 83
      2561
      தையல்நல் லார்கள் குழாங்கள்
      குழிய குழுவினுள்ளும்
      ஐயநல் லார்கள் குழிய
      விழவினும் அங்கங்கெல்லாம்
      கையபொன் னாழிவெண் சங்கொடும்
      காண்பான் அவாவுவன்நான்
      மையவண் ணா.மணியேமுத்த
      மே.என்றன் மாணிக்கமே. 84
      2562
      மாணிக்கங் கொண்டு குரங்கெறி
      வொத்திரு ளோடுமுட்டி
      ஆணிப்பொன் னன்ன சுடர்படு
      மாலை உலகளந்த
      மாணிக்க மே.என் மரகத
      மே.மற்றொ பாரையில்லா
      ஆணிப்பொன் னேஅடி யேனுடை
      யாவி யடைக்கலமே. 85
      2563
      அடைக்கல தோங்கு கமல
      தலரயன் சென்னியென்னும்
      முடைக்கல தூண்முன் அரனுக்கு
      நீக்கியை ஆழிசங்கம்
      படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன்
      றாய்ச்சிவன் தாம்புகளால்
      புடைக்கல தானைஎம் மானையென்
      சொல்லி புலம்புவனே 86
      2564
      புலம்பும் கனகுரல் போழ்வாய
      அன்றிலும் பூங்கழிபா
      தலம்பும் கனகுரல் சூழ்திரை
      யாழியும் ஆங்கவைநின்
      வலம்புள் ளதுநலம் பாடு
      மிதுகுற்ற மாகவையம்
      சிலம்பும் படிசெய்வ தேதிரு
      மால்இ திருவினையே 87
      2565
      திருமால் உருவொக்கும் மேருஅம்
      மேருவில் செஞ்சுடரோன்
      திருமால் திருக்கை திருச்ச
      கரமொக்கும் அன்னகண்டும்
      திருமால் உருவோ டவஞ்சின்ன
      மேபிதற் றாநிற்பதோர்
      திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங்
      கேவரும் தீவினையே 88
      2566
      தீவினை கட்கரு நஞ்சினை
      நல்வினை கின்னமுதை
      பூவினை மேவிய தேவி
      மணாளனை புன்மையெள்காது
      ஆவினை மேய்க்கும்வல் லாயனை
      அன்றுல கீரடியால்
      தாவின ஏற்றையெம் மானைஎஞ்
      ஞான்று தலைப்பெய்வனே 89
      2567
      தலைப்பெய்து யானுன் திருவடி
      சூடு தகைமையினால்
      நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம்
      மாயமும் மாயம்செவ்வே
      நிலைப்பெய் திலாத நிலைமையுங்
      காண்டோ றசுரர்குழாம்
      தொலைப்பெய்த நேமியெ தாய்தொல்லை
      யூழி சுருங்கலதே. 90
      2568
      சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட
      கள்வனை வையமுற்றும்
      ஒருங்குர வுண்ட பெருவயிற்
      றாளனை மாவலிமாட்டு
      இருங்குறள் ஆகி இசையவோர்
      மூவடி வேண்டிச்சென்ற
      பெருங்கிறி யானையல் லால்அடி
      யேன்நெஞ்சம் பேணலதே. 91
      2569
      பேணல மில்லா அரக்கர்மு
      நீர பெரும்பதிவாய்
      நீணகர் நீளெரி வைத்தரு
      ளாயென்று நீன்னைவிண்ணோர்
      தாணில தோய்ந்து தொழுவர்நின்
      மூர்த்திபல் கூற்றிலொன்று
      காணலு மாங்கொலன் றேவைகல்
      மாலையுங் காலையுமே. 92
      2570
      காலைவெய் யோற்குமுன் னோட்டு
      கொடுத்தகங் குற்குறும்பர்
      மாலைவெய் யோன்பட வையகம்
      பாவுவர் அன்னகண்டும்
      காலைநன் ஞான துறைபடி
      தாடிக்கண் போதுசெய்து
      மாலைநன் னாவில்கொள் ளார்நினை
      யாரவன் மைப்படியே. 93
      2571
      மைப்படி மேனியும் செந்தா
      மரைக்கண்ணும் வைதிகரே
      மெய்ப்படி யலுன் திருவடி
      சூடும் தகைமையினார்
      எப்படி யூர மிலை
      குருட்டா மிலைக்குமென்னும்
      அப்படி யானும்சொன் னேன்அடி
      யேன்மற்று யாதென்பனே 94
      2572
      யாதானு மோரா கையில்புக்குஅங்
      காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
      மூதாவி யில்தடு மாறும்
      உயிர்முன்ன மேஅதனால்
      யாதானும் பற்றிநீங் கும்விர
      தத்தைநல் வீடுசெய்யும்
      மாதா வினைப்பிது வைதிரு
      மாலை வணங்குவனே. 95
      2573
      வணங்கும் துறைகள் பலபல
      ஆக்கி மதிவிகற்பால்
      பிணங்கும் சமயம் பலபல
      ஆக்கி அவையவைதோ
      றணங்கும் பலபல ஆக்கிநின்
      மூர்த்தி பரப்பிவைத்தாய்
      இணங்குநின் னோரையில் லாய்நின்கண்
      வேட்கை எழுவிப்பனே. 96
      2574
      எழுவதும் மீண்டே படுவதும்
      பட்டுஎனை யூழிகள்போ
      கழிவதும் கண்டுகண் டெள்கலல்
      லால்இமை யோர்கள்குழாம்
      தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை
      மாலைக்கண் ணாரக்கண்டு
      கழிவதோர் காதலுற் றார்க்கும்உண்
      டோ கண்கள் துஞ்சுதலே 97
      2576
      துஞ்சா முனிவரும் அல்லா
      தவரு தொடரநின்ற
      எஞ்சா பிறவி இடர்கடி
      வான்இமை யோர்தமக்கும்
      தஞ்சார்வி லாத தனிப்பெரு
      மூர்த்திதன் மாயம்செவ்வே
      நெஞ்சால் நினைப்பரி தால்வெண்ணெ
      யூணென்னும் ஈனச்சொல்லே. 98
      2576
      ஈனச்சொல் லாயினு மாக
      எறிதிரை வையம்முற்றும்
      ஏன துருவாய் இடந்தபி
      ரான்இருங் கற்பகம்சேர்
      வான தவர்க்குமல் லாதவர
      கும்மற்றெல் லாயவர்க்கும்
      ஞான பிரானையல் லாலில்லை
      நான் கண்ட நல்லதுவே 2 99
      2577
      நல்லார் நவில்குரு கூர்நக
      ரான்திரு மால்திருப்பேர்
      வல்லார் அடிக்கண்ணி சூடிய
      மாறன்விண் ணப்பஞ்செய்த
      சொல்லார் தொடையலி றும்வல்
      லார்அழு தார்பிறப்பாம்
      பொல்லா அருவினை மாயவன்
      சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே 2 100
      நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      நம்மாழ்வார் அருளிச்செய்த
      திருவாசிரியம்
      தனியன்
      அருளாள பெருமான் எம்பெருமானாரருளி செய்தது
      கலிவிருத்தம்
      கானியோர் தாம்வாழ கலியுகத்தே வந்துதித்து
      ஆசிரி பாவதனால் அருமறைல் விரித்தானை
      தேசிகனை பராங்குசனை திகழ்வகுள தாரானை
      மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே .
      ஆசிரியப்பா
      2578
      செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர
      பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
      பலசுடர் புனைந்த பவள செவ்வாய்
      திகழ்பசுஞ் சோதி மரகத குன்றம்
      கடலோன் கைமிசை கண்வளர் வதுபோல்
      பீதக ஆடை முடிபூண் முதலா
      மேதகு பல்கலன் அணிந்து சோதி
      வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டு
      பச்சை மேனி மிகப்ப கைப்ப
      நச்சுவினை கவர்தலை அரவினமளி யேறி
      எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து
      சிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்
      தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த
      தாமரை யுந்தி தனிப்பெரு நாயக
      மூவுல களந்த சேவடி யோயே. 2
      2579
      உலகுபடை துண்ட எந்தை அறைகழல்
      சுடர்ப்பூ தாமரை சூடுதற்கு அவாவா
      ருயிருகி யுக்கநேரிய காதல்
      அன்பி லின்பீன் தேறல் அமுத
      வெள்ள தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
      அசைவோர் அசைக திருவொடு மருவிய
      இயற்கை மாயா பெருவிற லுலகம்
      மூன்றி னொடுநல்வீடு பெறினும்
      கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே
      2580
      குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
      மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை
      மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
      முதல்வ னாகி சுடர்விளங் ககலத்து
      வரைபுரை திரைபொர பெருவரை வெருவர
      உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
      வரசுடல் தடவரை சுழற்றிய தனிமா
      தெய்வ தடியவர கினிநாம் ஆளாகவே
      இசையுங்கொல் ஊழிதோ றூழியோ வாதே
      2581
      ஊழிதோ றூழி ஓவாது வாழியே.
      என்று யாம்தொழ இசையுங் கொல்லோ
      யாவகை யுலகமும் யாவரு மில்லா
      மேல்வரும் பெரும்பாழ காலத்து இரும்பொரு
      கெல்லா மரும்பெறல் தனிவித்து ஒருதான்
      ஆகி தெய்வ நான்மு கொழுமுளை
      ஈன்று முக்கண் ஈசனொடு தேவுபல
      தலிமூ வுலகம் விளைத்த உந்தி
      மா கடவுள் மாமுத லடியே
      2582
      மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ தலர்த்தி
      மண்முழுதும் அகப்படுத்து ஒண்சுடர் அடிப்போது
      ஒன்றுவிண் செலீஇ நான்முக புத்தேள்
      நாடுவி துவப்ப வானவர் முறைமுறை
      வழிபட நெறீஇ தாமரை காடு
      மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
      மாய்இரு நாயிறா யிரம்மலர தன்ன
      கற்ப காவு பற்பல வன்ன
      முடிதோ ளாயிரம் தழைத்த
      நெடியோ கல்லதும் அடியதோ வுலகே
      2583
      ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க
      மணைநீ ராட்டி படைத்திட துண்டுமிழ
      தளந்து தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்
      கடவுள் நிற்ப புடைப்பல தானறி
      தெய்வம் பேணுதல் தனாது
      புல்லறி வாண்மை பொருந்த காட்டி
      கொல்வன முதலா அல்லன முயலும்
      இனைய செய்கை யின்பு துன்பளி
      தொன்மா மா பிறவியுள் நீங்கா
      பன்மா மா தழுந்துமா நளிர்ந்தே.
      2584
      நளிர்மதி சடையனும் நான்மு கடவுளும்
      தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா
      யாவகை யுலகமும் யாவரும் அகப்பட
      நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
      மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
      ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
      அகப்ப்பட கரந்துஓர் ஆலிலை சேர்ந்தவெம்
      பெருமா மாயனை யல்லது
      ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே 2
      நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
      நம்மாழ்வார் அருளிச்செய்த
      பெரிய திருவந்தாதி
      தனியன்
      எம்புருமானார் அருளிச்செய்தது
      முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
      வந்தித்து வாயார வாழ்த்தியே-சந்த
      முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
      குருகூரன் மாறன் பேர் கூறு.
      2585
      முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே
      இயற்றுவாய் எம்மொடுநீ கூடி-நயப்புடைய
      நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம் நற்பூவை
      பூவீன்ற வண்ணன் புகழ்
      2586
      புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
      இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்
      றெங்கள் மால். செங்கண் சீறல்நீ தீவினையோம்
      எங்கள் மால் கண்டாய் இவை.
      2587
      இவையன்றே நல்ல தீய
      இவையென் றிவையறிவ னேலும்-இவையெல்லாம்
      என்னால் அடைப்புநீ கொண்ணா திறையவனே
      என்னால் செயற்பால தென்
      2588
      என்னின் மிகுபுகழார் யாவரே பின்னையும்மற்
      றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்-என்ன
      கருஞ்சோதி கண்ணன் கடல்புரையும் சீல
      பெருஞ்சோதி கென்னெஞ்சா பெற்று
      2589
      பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
      மற்றையா ராவாரும் நீபேசில் எற்றேயோ
      மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
      நீயம்மா. காட்டும் நெறி.
      2590
      நெறிகாட்டி நீக்குதியோ நின்பால் கருமா
      முறிமேனி காட்டுதியோ மேனாள்-அறியோமை
      எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
      எஞ்செய்தா லென்படோ ம் யாம்
      2591
      யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
      தாமே யணுக்கரா சார்ந்தொழிந்தார்-பூமேய
      செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
      அம்மா. நின் பா தருகு.
      2592
      அருகும் சுவடும் தெரிவுணரோம் அன்பே
      பெருகும் மிகவிதுவென் பேசீர்-பருகலாம்
      பண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய
      ண்புடையீர் ம்மை மக்கு.
      2593
      மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென் மாலார்
      தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்-எமக்கினி
      யாதானு மாகிடுகாண் நெஞ்சே அவர்த்திறத்தே
      யாதானும் சிந்தி திரு.
      2594
      இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர் எட்டோ
      டொருநால்வர் ஓரிருவர் அல்லால் திருமாற்கு
      யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
      நாமா மிகவுடையோம் நாழ்
      2595
      நாழால் அமர்முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
      வாழா வகைவலிதல் நின்வலியே-ஆழாத
      பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ
      நீரும்நீ யாய்நின்ற நீ.
      2596
      நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்
      போயொன்று சொல்லியென் போநெஞ்சே-நீயென்றும்
      காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய் கண்ணன் தாள்
      வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
      2597
      வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட
      இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே
      எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட என்கண்கள்
      தம்மால்கா டுன்மேனி சாய்
      2598
      சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே
      பேயார் முலைகொடுத்தார் பேயராய்-நீயார்போ
      தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும் தீவினையாம்
      பாம்பார்வா கைநீட்டல் பார்த்து.
      2599
      பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே படுதுயரம்
      பேர்த்தோத பீடழிவாம் பேச்சில்லை-ஆர்த்தோதம்
      தம்மேனி தாள்தடவ தாங்கிடந்து தம்முடைய
      செம்மேனி கண்வளர்வார் சீர்.
      2600
      சீரால் பிறந்து சிறப்பால் வளராது
      பேர்வாம னாகாக்கால் பேராளா-மார்பார
      புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே
      சொல்லுநீ யாமறி சூழ்ந்து.
      2601
      சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
      வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்-சூழ்ந்தெங்கும்
      வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய
      தாள்வரைவில் லேந்தினார் தாம்.
      2602
      தாம்பாலா புண்டாலும் அத்தழும்பு தானிளக
      பாம்பாலா புண்டுபா டுற்றாலும்-சோம்பாதி
      பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா உன்
      தொல்லுருவை யாரறிவார் சொல்லு
      2603
      சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
      எல்லி பகலென்னா தெப்போதும்-தொல்லை கண்
      மாத்தானை கெல்லாமோர் ஐவரையே மாறாக
      காத்தானை காண்டும்நீ காண்.
      2604
      காண புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
      நாண படுமன்றே நாம்பேசில்-மாணி
      உருவாகி கொண்டுலகம் நீரேற்ற சீரான்
      திருவாகம் தீண்டிற்று சென்று.
      2605
      சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
      இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட-அன்றங்கு
      பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய
      காருருவன் தன் நிமிர்த்த கால்
      2606
      காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்
      மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே-மேலால்
      தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம் வீற்
      றிருக்குமிடம் காணா திளைத்து.
      2607
      இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்
      இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த
      நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
      தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
      2608
      தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
      தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்-தானே
      இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்
      அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்
      2609
      ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
      ஆரா ததுதிருத்த லாவதே-சீரார்
      மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
      இனத்தலைவன் கண்ணனால் யான்.
      2610
      யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையை
      கானும் மலையும் புகக்கடிவான்-தானோர்
      இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த
      அருளென்னும் தண்டால் அடித்து.
      2611
      அடியால் படிகடந்த முத்தோஅ தன்றேல்
      முடியால் விசும்பளந்த முத்தோ-நெடியாய்.
      செறிகழல்கள் தாள்நிமிர்த்து சென்றுலக மெல்லாம்
      அறிகிலாமால் நீயளந்த அன்று.
      2612
      அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
      இன்றேநாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
      கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
      உட்கண்ணால் காணு முணர்ந்து.
      2613
      உணர ஒருவர கெளியனே செவ்வே
      இணரும் துழாயலங்கல் எந்தை-உணர
      தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்
      எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.
      2614
      இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
      செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்-அங்கே
      மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்
      டடியெடுப்ப தன்றோ அழகு
      2615
      அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்
      நிழலும் அடிதோறும் ஆனோம்-சுழல
      குடங்கள்தலை மீதெடுத்து கொண்டாடி அன்ற
      தடங்கடலை மேயார் தமக்கு.
      2616
      தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்
      தமக்கடிமை செய்யென்றால் செய்யாது-எமக்கென்று
      தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
      யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது
      2617
      யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ
      யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்-யாதானும்
      தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
      பாறுபா றாக்கினான் பால்.
      2618
      பாலாழி நீகிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
      காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்-நீலாழி
      சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்
      நீதியாய். நிற்சார்ந்து நின்று.
      2619
      நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
      ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்-அன்றங்கை
      வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்
      அன்புடைய னன்றே யவன்
      2620
      அவனாம் இவனாம் உவனாம் மற் றும்பர்
      வனாம் அவனென் றிராதே-அவனாம்
      அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
      அவனே எவனேலும் ஆம்.
      2621
      ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே
      நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே-பூமேய்
      மதுகரமே தண்டுழாய் மாலாரை வாழ்த்தாம்
      அதுகரமே அன்பால் அமை.
      2622
      அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே
      இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள்
      ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே
      பேசியே போக்காய் பிழை.
      2623
      பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்
      தழைக்கும் துழாய்மார்வன் றன்னை-அழைத்தொருகால்
      போயுபகா ரம்பொலி கொள்ளாது அவன் புகழே
      வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு
      2624
      வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே
      போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
      பேய்த்தாய் உயிர்க்களா பாலுண்டு அவளுயிரை
      மாய்த்தானை வாழ்தே வலி.
      2625
      வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
      வலிய முடியிடிய வாங்கி-வலியநின்
      பொன்னாழி கையால் புடைத்திடுதி கீளாதே
      பன்னாளும் நிற்குமி பார்.
      2626
      பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
      பாரிடம் முன்படைத்தா னென்பரால்-பாரிடம்
      ஆவானும் தானானா லாரிடமே மற்றொருவர்க்கு
      ஆவான் பூகாவால் அவை.
      2627
      அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே
      நவையை நளிர்விப்பான் றன்னை-கவையில்
      மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார குண்டோ
      மனத்துயரை மாய்க்கும் வகை
      2628
      வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்
      மிகவாய்ந்து வீழா எனிலும்-மிகவாய்ந்து
      மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே
      மேலைத்தாம் செய்யும் வினை
      2629
      வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி
      தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது
      வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்
      நாயகத்தான் பொன்னடிகள் நான்.
      2630
      நான்கூறும் கூற்றவ தித்தனையே நாணாளும்
      தேங்கோத நீருருவன் செங்கண்மால்-நீங்காத
      மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
      நீகதியா நெஞ்சே. நினை.
      2631
      நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே
      நினைத்திடவும் வேண்டாநீ நேரே-நினைத்திறஞ்ச
      எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே அதுதானும்
      எவ்வளவு முண்டோ எமக்கு
      2632
      எமக்கியாம் விண்ணாட்டு குச்சமதாம் வீட்டை
      அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு-அமை பொலிந்த
      மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே
      கொன்றானை யேமனத்து கொண்டு
      2633
      கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
      வண்டறா பூவதான் மற்றுத்தான்-கண்டநாள்
      காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
      பேருருவென் றெம்மை பிரிந்து.
      2634
      பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே
      திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை-புரிந்தொருகால்
      ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்
      மாவை பிளந்தார் மனம்
      2635
      மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை
      சினமாள்வி தோரிடத்தே சேர்த்து-புனமேய
      தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே
      வண்டுழாம் சீராக்கு மாண்பு
      2636
      மாண்பாவி தந்நான்று மண்ணிரந்தான் மாயவள்நஞ்
      சூண்பாவி துண்டான தோருருவம்-காண்பான்நங்
      கண்ணவா மற்றொன்று காணுறா சீர்பரவா
      துண்ணவாய் தானுறுமோ ஒன்று
      2637
      ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது உன்னடியார
      கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ-நின்புகழில்
      வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ நீயவர்க்கு
      வைகுந்த மென்றருளும் வான்
      2638
      வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
      கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் ஆனீன்ற
      கன்றுயர தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
      வன்துயரை யாவா. மருங்கு.
      2639
      மருங்கோத மோதும் மணிநா கணையார்
      மருங்கே வரவரிய ரேலும்-ஒருங்கே
      எமக்கவரை காணலா மெப்போது முள்ளால்
      மனக்கவலை தீர்ப்பார் வரவு.
      2640
      வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால் எல்லே.
      ஒருவா றொருவன் புகவாறு-உருமாறும்
      ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்
      மாயவர்தாம் காட்டும் வழி.
      2641
      வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
      தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை-சுழித்தெங்கும்
      தாழ்விடங்கள் பற்றி புலால்வெள்ளம் தானுகள
      வாழ்வடங்க மார்விடந்த மால்
      2642
      மாலே. படிச்சோதி மாற்றேல் இனியுனது
      பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்-மேலால்
      பிறப்பின்மை பெற்றடிக்கீழ குற்றேவ லன்று
      மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
      2643
      மாடே வரப்பெறுவ ராமென்றே வல்வினையார்
      காடானும் ஆதானும் கைகொள்ளார்-ஊடேபோ
      போரோதம் சிந்துதிரை கண்வளரும் பேராளன்
      பேரோத சிந்திக்க பேர்ந்து.
      2644
      பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
      ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே பேர்ந்தெங்கும்
      தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
      இல்லைகாண் மற்றோர் இறை.
      2645
      இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்
      மறைமுறையால் வானாடர் கூடி-முறைமுறையின்
      தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே தாழ்விசும்பின்
      மீதிலகி தாங்கிடக்கும் மீன்.
      2646
      மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
      வானென்னும் கேடிலா வான்குடைக்கு-தானோர்
      மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
      பிணிக்காம் பெருமருந்து பின்.
      2647
      பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்
      வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே அன்று
      திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்
      பருச்செவியு மீர்ந்த பரன்.
      2648
      பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்
      உரனா லொருமூன்று போதும்-மரமேழன்
      றெய்தானை புள்ளின்வாய் கீண்டானையேஅமரர்
      கைதான் தொழாவே கலந்து
      2649
      கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
      மலங்க அடித்து மடிப்பான்-விலங்கல்போல்
      தொன்மாலை கேசவனை நாரணனை மாதவனை
      சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
      2650
      சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
      மாட்டே துயரிழைத்த மாயவனை-ஈட்ட
      வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை நெஞ்சே.
      அறிகண்டாய் சொன்னேன் அது.
      2651
      அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்
      அதுவோ பொருளில்லை யன்றே அதுவொழிந்து
      மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே
      கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.
      2652
      கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
      புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல
      நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்
      அடியேன துள்ள தகம்.
      2653
      அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்
      முகம்சிதைவ ராமன்றே முக்கி-மிகுந்திருமால்
      சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை
      ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து
      2654
      அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை
      சுடர்கொள் சுடராழி யானை-இடர்கடியும்
      மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே
      யாதாகில் யாதே இனி
      2655
      இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே
      தனிநின்ற சார்விலா மூர்த்தி-பனிநீர்
      அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
      முகத்தான்நின் உந்தி முதல்.
      2656
      முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
      முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா
      நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே
      புகரிலகு தாமரையின் பூ
      2657
      பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
      காவி மலரென்றும் காண்தோறும் பாவியேன்
      மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
      எல்லாம் பிரானுருவே என்று.
      2658
      என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்
      ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்-குன்று
      குடையாக ஆகாத்த கோவலனார் நெஞ்சே.
      புடைதான் பெரிதே புவி.
      2659
      புவியும் இருவிசும்பும் நினகத்த நீயென்
      செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்-அவிவின்றி
      யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்
      ஊன்பருகு நேமியாய். உள்ளு.
      2660
      உள்ளிலும் உள்ள தடிக்கும் வினைப்படலம்
      விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்-உள்ள
      உலகளவு யானும் உளனாவன் என்கொல்
      உலகளந்த மூர்த்தி. உரை.
      2661
      உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே
      இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்-உரைப்பெல்லாம்
      நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனதுயிர்க்கோர்
      சொல்நன்றி யாகும் துணை.
      2662
      துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்ற
      திணைநாளு மின்புடைத்தா மேலும் கணைநாணில்
      ஓவா தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே
      ஓவாத வூணாக உண்.
      2663
      உண்ணாட்டு தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே
      விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
      ஆராகி எவ்விழிவிற் றானாலும் ஆழியங்கை
      பேராயற் காளாம் பிறப்பு
      2664
      பிறப்பிறப்பு மூப்பு பிணிதுறந்து பின்னும்
      இறக்கவும் இன்புடைத்தா மேலும்-மறப்பெல்லாம்
      ஏதமே யென்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
      பாதமே யேத்தா பகல்
      2665
      பகலிரா என்பதுவும் பாவியாது எம்மை
      இகல்செய் திருபொழுதும் ஆள்வர்--தகவா
      தொழும்பர் இவர் சீர்க்கும் துணையிலர் என் றோரார்
      செழும்பரவை மேயார் தெரிந்து.
      2666
      தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
      இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்-கரந்துருவில்
      அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
      அம்மானை யேத்தா தயர்ந்து.
      2667
      அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
      உயப்போம் நெறியிதுவே கண்டாய் செயற்பால
      அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்
      மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
      2668
      வாழ்த்தி அவனடியை பூப்புனைந்து நிந்தலையை
      தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி
      எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே
      தங்கத்தா னாமேலும் தங்கு.
      2669
      தங்கா முயற்றியவா தாழ்விசும்பின் மீதுபாய்ந்து
      எங்கேபு கெத்தவம்செய் திட்டனகொல்-பொங்கோ
      தண்ணம்பால் வேலைவா கண்வளரும் என்னுடைய
      கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்
      2670
      கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
      பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்-சீர்கலந்த
      சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
      என்நினைந்து போக்குவரி போது
      2671
      இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
      எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்
      கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
      மெய்கழலே ஏத்த முயல்.
      நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
      திருவெழுகூற்றிருக்கை
      தனியன்கள்
      எம்பெருமானார் அருளிச்செய்தவை
      வாழிபரகாலன் வாழிகலிகன்றி
      வாழி குறையலூர் வாழ்வேந்தன் - வாழியரோ
      மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
      தூயோன் சுடர்மான வேல்.
      சீரார் திருவெழு கூற்றிரு கையென்னும் செந்தமிழால்
      ஆரா வமுதன் குடந்தை பிரான்றன் அடியிணைக்கீழ்
      ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
      சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.
      2672
      ஒருபே ருந்தி யிருமலர தவிசில்
      ஒருமுறை அயனை யீன்றனை
      இருசுடர் மீதினி லியங்கா மும்மதிள்
      இலங்கை யிருகால் வளைய ஒருசிலை
      ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
      அட்டனை மூவடி நானிலம் வேண்டி
      முப்புரி லொடு மானுரி யிலங்கும்.
      மார்வினில் இருபிற பொருமா ணாகி
      ஒருமுறை யீரடிமூவுல களந்தானை
      நாற்றிசை நடுங்க அஞ்சிறை பறவை
      ஏறி நால்வாய் மு திருசெவி
      ஒருதனி வேழ தரந்தையை ஒருநாள்
      இருநீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ
      நான்மறை ஐவகை வேள்வி அறுதொழில்
      அந்தணர் வணங்கும் தன்மையைஐம்புலன்
      அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
      முக்குண திரண்டவை யகற்றி ஒன்றினில்
      ஒன்றி நின்றுஆங் கிருபிற பறுப்போர்
      அறியும் தன்மையை முக்கண் நாற்றோள்
      ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்
      அறிவரு தன்மை பெருமையுள் நின்றனை
      ஏழுல கெயிற்றினில் கொண்டனை கூறிய
      அறுசுவை பயனும் ஆயினை சுடர்விடும்
      ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
      நாற்றோள் முந்நீர் வண்ணநின் ஈரடி
      ஒன்றிய மனத்தால் ஒருமதி முகத்து
      மங்கையர் இருவரும் மலரன அங்கையில்
      முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
      நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை
      மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே
      அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
      ஏழ்விடை யடங்க செற்றனை அறுவகை
      சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால்
      ஓதியை ஆக திருத்தினை அறமுதல்
      நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
      இருவகை பயனாய் ஒன்றாய் விரிந்து
      நின்றனை குன்றா மதுமலர சோலை
      வண்கொடி படப்பை வருபுனல் பொன்னி
      மாமணி யலைக்கும் செந்நெலொண் கழனி
      திகழ்வன முடுத்த கற்போர் புரிசை
      கனக மாளிகை நிமிர்கொடி விசும்பில்
      இளம்பிறை துவக்கும் செல்வம் மல்குதென்
      திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன்
      வணங்க ஆடர வமளியில் அறிதுயில்
      அமர்ந்த பரமநின் அடியிணை பணிவன்
      வருமிடர் அகல மாற்றோ வினையே. 2
      திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
      எம்பெருமானார் திருவடிகளே சரணம்
      திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
      சிறிய திருமடல்
      ஸ்ரீமதே ராமனுஜாய நம
      ஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம
      ராமானுஜ தய பாற்றம் ஜ்ன்யன வ்ய்ராக்ய ப்கூஷணம்
      ஸ்ரீ வெங்கட நாதர்யம் வந்தெ வெதண்ட டெசிகம்
      லக்ஷ்மி நாத சமாரம்ப்காம் யாமுன மத்யமாம்
      அச்மதாசார்ய பர்யந்தாம் வந்தெ குரு பரம்பராம்
      யொனொட்யமச்யட படாம்புஜ யுக்ம ருக்ம
      வ்யாமொகடச்ததிதராணி த்ரிணாய மெனெ
      அச்மத்குரொப்கக்கவடொச்ய டயைக சிந்தொ
      ராமானுஜச்ய சரணொஉ சரணம் ப்ரபத்யெ
      மாதா பிதா யுவதயச்தனயா விப்குதி
      சர்வம் யதெவ நியமென மதன்வயானாம்
      ஆத்யச்தனக்குலபதெர் வகுளாப்கிராமம்
      ஸ்ரீ ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூஒர்த்னம்
      பூதம் சகஷ்ய மகதாக்வய ப்கட்டனாத
      ஸ்ரீப்கக்திசார குலசெக்கர யொகிவாகான்
      ப்கக்தண்க்ரிகெணு பரகால யடீன்றமிச்ரான்
      ஸ்ரீமட்பராங்குசமுனிம் பரணதொச்மி நிட்யம்
      தனியன்
      முள்ளி செழுமலரொ தாரன் முளைமதியம்
      கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
      திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
      மருவாளன் தந்தான் மடல்
      2673-2710
      ------
      காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
      சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1
      பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
      நீராரவெலி நிலமண்கையென்னும் -- இ 2
      பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ -- அம்மூன்றும்
      ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று 3
      ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
      சீரார் இருகலயும் எய்துவர் -- சிக்கெனமது 4
      ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
      ஒராமையன்றெ உலகதார் சொல்லும்சொல் 5
      ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌ஑மெ
      காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி 6
      தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
      ஆராவமுதமண்கய்தி -- அதுனின்றும் 7
      வாரதொழிவதன்னுண்டு -- அகுனிர்க்க
      யெரார்முயல்விட்டு காக்கைப்பின் பொவதெ 8
      எராயிளமுலயீர் எந்தனக்குத்ததுதான்
      காரார்க்குழலெடுதுக்கட்டி -- கதிர்முலயை 9
      வாராரவீக்கி மணிமெகலைதிருத்தி
      ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின் நீரணிந்து 10
      சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்
      நீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன் 11
      பாரொர்களெல்லாம் மகிழ பரைகரண்க
      சீரார் குடமரியண்டெந்தி -- செழுந்தெருவெ 12
      ஆரானெனைச்சொல்லி ஆடுமதுகண்டு
      ஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும் 13
      வாராயொவென்னர்க்கு சென்றென் என்வல்வினையால்
      காரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான் 14
      ஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் -- அரிவழிந்து
      தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி 15
      ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை
      சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு -- செங்குரிஞ்ஜி 16
      தாரார் நௌமாலை சாதர்க்கு
      தான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் -- அதனாலம் 17
      தெராதெஞ்சிந்தனொஇ தீராதென்பெதுரவு
      வாராதுமாமை அதுகண்டுமதாண்கெ 18
      ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்
      பாரொர்ச்சொலப்படும் கட்டுப்படித்திரேல் 19
      ஆரானும் மெய்படுவன் நென்றர் -- அதுகேட்டு
      காரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி 20
      சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா
      வெராவிதிர்விதிரா மெய்சிலிரக்கைமொவ 21
      பெராயிரமுடயான் நென்றாள் -- பெர்த்தெயும்
      காரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும் 22
      சீரார் வலம்புரியெ யென்றள் -- திருதுழா
      தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா 23
      நீரெதுமண்ஜேல்மின் ம்மகளை நொஇசெய்தான்
      ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான் 24
      கூரார்வெல்கண்ணீர் உமக்கரி கூருகெனொ
      ஆராலிவய்யம் அடியளப்புண்டதுதான் 25
      ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்து
      ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர் 26
      ஆரால் கடைந்திட ப்பட்டது -- அவன் காண்மின்
      ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் 27
      ஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி
      சீரார்க்கலயல்குல் சீரடிச்செந்துவர்வை 28
      வாரார் வனமுலயாள் மத்தார பற்றிகொண்டு
      ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ 29
      சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை
      வேரார் தல் மடவாள் வேரோர் கலத்திட்டு 30
      நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை
      போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம் 31
      ஓராதவன்பொல் உர-ண்கியரிவுற்று
      தாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ 32
      ஆராத வெண்ணைவிழு-ண்கி -- அருகிருந்த
      மோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே 33
      ஓராதவன்பொல் கிடந்தானை கண்டவளும்
      வாராத்தான் வைதது காணாள் -- வயிரடுத்தி-ண்கு 34
      ஆஅரார் புகுதுவார் ஆஇய்யரிவரல்லால்
      நீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல் 35
      ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ
      தீராவெகுளியளாஇ சிக்கெனவார்த்தடிப்ப 36
      ஆராவயிதினோடர்த்தாதான் -- அன்னியும்
      நீரார் டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி 37
      ஒராயிரம்பணவெ-ண் கொவியல்னாகதை
      வாராயெனக்கெண்ரு மததன் மதகது 38
      சீரார் திருவடியால்பயிந்தான் -- தஞ்சீதய்க்கு
      நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை 39
      கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்
      ஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை -- வென்னரகம் 40
      செராவகையெ சிலைகுனித்தன் -- செந்துவர்வல்
      வாரார் வனமுலயால் வைதெவி காரணமா 41
      எரார்த்தடந்தொளிராவணனை -- ஈரயிந்து
      சீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால் 42
      போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை
      கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு -- குடல் மாலை 43
      சீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி -- செங்குருதி
      சொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி 44
      ஆரவெழுந்தன் அரியுருவாஇ
      அன்னியும்பெர் வாமனனாகிய காலது 44
      மூவடிமண் தாராயெனகென்று வேண்டிச்சலதினால்
      நீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை 45
      ஆராதபொரில் அசுரர்களும் தானுமாஇ
      காரார்வரைனட்டு நாகம் கய்ராக 46
      பேராமல் தாண்கி கடைண்தான் -- திருதுழய்
      தாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும் 47
      போரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி
      நீராமலர்க்கமலம் கொண்டொர்னெடும்கய்யால் 48
      நாராயணா வோ மணிவண்ண நாகனையாய்
      வாரய். யென்னாரிடரய் நீக்காய் -- எனவுகண்டு 49
      தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக
      ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான் 50
      பேராயிரமுடயான் பேய்பெண்டீர்னும்மகளை
      தீரானொஇ செய்தானெனவுரைதாள் -- சிக்கனுமத்து 51
      ஆரானும் அல்லாமை கேட்டெ-ண்கள் அம்மனையும்
      போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ 52
      தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே -- மத்து
      ஆரானுமல்லனே யென்னொழிண்தாள் -- நானவனை 53
      காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா
      பேராபிதற்ற திரிதருவன் -- பின்னையும் 54
      ஈராப்புகுதலும் இவ்வுடலை தன்வாடை
      சோராமருக்கும் வகையரியேன் -- சூழ் குழலாஅர் 55
      ஆரானுமேசுவர் என்னுமதன் பழியெ
      வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன் 56
      வாராஇ மடனெ-ஞ்சே வந்து -- மணிவண்ணன்
      சீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி 57
      தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை
      ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் 58
      ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்
      போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு 59
      காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்
      வாராதே யென்னை மரந்ததுதான் -- வல்வினையீன் 60
      ஊரார் உகப்பதே ஆயினேன் -- மற்றெனக்கி-ங்கு
      ஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல் 61
      நீரை உருகும் என்னாவி -- நெடு-ண்கண்கல்
      ஊரார் உர-ண்கிலும் தானுர-ண்க -- உட்டமந்தன் 62
      பேராயினவே பிதத்துவன் -- பின்னையும்
      காரார் கடல் பொலும் காமத்தராயினார் 63
      ஆரேபொல்லாமை அணிவார் அதுனிற்க
      ஆரானுமாதானும் அல்லலவள்காணீர் 64
      வாரார் வனமுலை வாசமததை வென்று
      ஆரானும் சொல்லப்படுவாள் -- அவளும்தன் 65
      பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ
      தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் 66
      ஊராரிகழ்ண்திட பட்டாளே -- மற்றெனக்கி-ங்கு
      ஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே -- நானவனை 67
      காரார் திருமேனி காணுமலவும்போஇ
      சீரார் திருவே-ண்கடமே திருக்கொவல் 68
      ஊரே -- மதிழ் கச்சி ஊரகமே பேரகமே
      பேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஃஆவே 69
      பேராலித-ண்கால் நரையூர் திருப்புலியூர்
      ஆராமம் சூழ்ந்தவர-ண்கம் -- கணம-ண்கை 70
      காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
      சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் 71
      காரார்க்குதந்தை கடிகை கடல்மல்லை
      ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை 72
      சீராரும் மாலிரும் சொலை திரு மூகூர்
      பாரோர் புகழும் வதரி வடமதுரை 73
      ஊராயவெல்லாம் ஒழியமெ நானவனை
      ஓரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த 74
      சீரானை -- செ-ண்கணெடியானை தேந்துழாஇ
      தாரானை -- தாமரைபொல் கண்ணனை 75
      யெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி -- பெருந்தெருவெ
      ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான் 76
      வாரார் பூம் பெண்ணை மடல்
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமானுஜாய நம
      திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
      பெரிய திருமடல்
      தனியன்
      பிள்ளை திருநறையூர் அரையர் அருளிச்செய்தது
      பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
      நன்னுதலீர். நம்பி நறையூரர் - மன்னுலகில்
      என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்
      மன்னு மடலூர்வன் வந்து.
      மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி
      ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்
      தாள் என்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
      வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே
      திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
      பெரிய திருமடல்
      கலி வெண்பா
      2713
      மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்
      சென்னி மணிக்குடுமி தெய்வ சுடர்நடுவுள்
      மன்னிய நாக தணைமேலோர் மாமலைபோல்
      மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச
      2714
      துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்
      என்னும் விதானத்தைன் கீழால் - இருசுடரை
      மின்னும் விளக்காக ஏற்றி மறிகடலும்
      பன்னு திரைக்கவரி வீச - நிலமங்கை
      2715
      தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்
      மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்
      என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த - மழைக்கூந்தல்
      தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
      2716
      என்னும் இவையே முலையா வடிவமைந்த
      அன்ன நடைய அணங்கே - அடியிணையை
      தன்னுடைய அங்கைகளால் தான்தடவ தான்கிடந்துஓர்
      உன்னிய யோக துறக்கம் தலைக்கொண்ட
      2717
      பின்னைதன் னாபி வலயத்து பேரொளிசேர்
      மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து அம்மலர்மேல்
      முன்னம் திசைமுகனை தான்படைக்க மற்றவனும்
      முன்னம் படைத்தனன் நான்மறைகள் - அம்மறைதான்
      2718
      மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்
      நன்னெறிமேம் பட்டன நான்கன்றே - நான்கினிலும்
      பின்னையது பின்னை பெயர்த்தரு மென்பதுஓர்
      தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்
      2719
      என்னும் இவையே கர்ந்துடலம் தாம்வருந்தி
      துன்னும் இலைக்குரம்பை துஞ்சியும் - வெஞ்சுடரோன்
      மன்னும் அழல்கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்
      இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து
      2720
      தொன்னெறிக்க சென்றார் எனப்படும் சொல்லல்லால்
      இன்னதோர் கால தினையா ரிதுபெற்றார்
      என்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில்
      மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்
      2721
      அன்னதோர் இல்லியி னூடுபோய் - வீடென்னும்
      தொன்னெறிக்க சென்றாரை சொல்லுமின்கள் சொல்லாதே
      அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்துஆங்
      கன்னவரை கற்பிப்போம் யாமே - அதுநிற்க
      2722
      முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற
      அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்
      பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப - பொங்கொளிசேர்
      கொன்னவிலும் கோளரிமா தாஞ்சுமந்த கோலம்சேர்
      2723
      மன்னிய சிங்கா சனத்தின்மேல் - வாணொடுங்கண்
      கன்னியரா லிட்ட கவரி பொதியவிழ்ந்துஆங்
      கின்னளம்பூ தென்றல் இயங்க - மருங்கிருந்த
      மின்னனைய ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்
      2724
      முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப
      அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்
      பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்
      மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை
      2725
      இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்
      மன்னிய மாமயில்போல் கூந்தல் - மழைத்தடங்கண்
      மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து
      மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்
      2726
      மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த
      மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்
      அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த
      இன்னிசையாழ் பாடல்கே டின்புற்று - இருவிசும்பில்
      2727
      மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்
      மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்
      மன்னும் மளிவிளக்கை மாட்டி - மழைக்கண்ணார்
      பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளிமேல்
      2728
      துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப
      அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீல
      சின்ன நறுந்தாது சூடி - ஓர் மந்தாரம்
      துன்னும் நறுமலரால் தோள்கொட்டி கற்பகத்தின்
      2729
      மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
      இன்னிளம்பூ தென்றல் புகுந்துஈங கிளைமுலைமேல்
      நன்னருஞ் சந்தன சேறுலர்த்த - தாங்கருஞ்சீர்
      மின்னிடைமேல் கைவை திருந்தே திளைமுலைமேல்
      2730
      பொன்னரும் பாரம் புலம்ப - அகங்குழைந்தாங்
      கின்ன வுருவின் இமையா தடங்கண்ணார்
      அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்
      இன்னமுதம் மாந்தி யிருப்பர் - இதுவன்றே
      2731
      அன்ன அறத்தின் பயனாவது ஒண்பொருளும்
      அன்ன திறத்ததே ஆதலால் - காமத்தின்
      மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
      அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
      2732
      மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
      தென்னுறையில் கேட்டறிவ துண்டு - அதனை யாம்தெளியோம்
      மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார்
      தென்னன் பொதியில் செழுஞ்ச தனக்குழம்பின்
      2733
      அன்னதோர் தன்மை அறியாதார் - ஆயன்வேய்
      இன்னிசை ஓசை கிரங்காதார் மால்விடையின்
      மன்னும் மணிபுலம்ப வாடாதார் - பெண்ணைமேல்
      பின்னுமவ் வன்றில் பெடைவா சிறுகுரலுக்கு
      2734
      உன்னி யுடலுருகி நையாதார் - உம்பவர்வா
      துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்
      தம்முடலம் வேவ தளராதார் - காமவேள்
      மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய
      2735
      பொன்னொடு வீதி புகாதார் - தம் பூவணைமேல்
      சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்
      இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்
      பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்
      2736
      தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து
      பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு
      மன்னும் வளநாடு கைவிட்டு - மாதிரங்கள்
      மின்னுருவில் விண்டோ ர் திரிந்து வெளிப்பட்டு
      2737
      கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று
      பின்னும் திரைவயிற்று பேயே திரிந்துலவா
      கொன்னவிலும் வெங்கான தூடு-கொடுங்கதிரோன்
      துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்
      2738
      மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்
      அன்ன நடைய அணங்கு நடந்திலளே
      பின்னும் கருநெடுங்கண் செவ்வ பிணைநோக்கின்
      மின்னனைய ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
      2739
      கன்னிதன் இன்னுயிராம் காதலனை காணது
      தன்னுடைய முந்தோன்றல் கொண்டேக தாஞ்சென்றுஅங்
      கன்னவனை நோக்கா தழித்துரப்பி - வாளமருள்
      கன்ன்வில்தோள் காளையை கைப்பிடித்து மீண்டும்போய்
      2740
      பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே பூங்கங்கை
      முன்னம் புனல்பரக்கும் நன்னாடன் மின்னாடும்
      கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை
      தன்னிகரொன் றில்லாத வென்றி தனஞ்சயனை
      2741
      பன்னாக ராயன் மடப்பாவை - பாவைதன்
      மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல
      தன்னுடைய கொங்கை முகநெரிய - தான் அவன்றன்
      பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்தனது
      2742
      நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்
      முன்னுரையில் கேட்டறிவ தில்லையே - சூழ்கடலுள்
      பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்
      மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்
      2743
      தன்னுடைய பாவை உலகத்து தன்னொக்கும்
      கன்னியரை யில்லாத காட்சியாள் - தன்னுடைய
      இன்னுயிர தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்
      மன்னும் மணிவரைத்தோள் மாயவன் - பாவியேன்
      2744
      என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்
      மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
      கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ
      மன்னிய பேரின்பம் எய்தினாள் - மற்றிவைதான்
      2745
      என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
      மன்னும் மலையரயன் பொற்பாவை - வாணிலா
      மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்
      அன்ன நடைய அணங்கு டங்கிடைசேர்
      2746
      பொன்னுடம்பு வாட புலனைந்தும் நொந்தகல
      தன்னுடைய கூழை சடாபாரம் தாந்தரித்துஆங்
      கன்ன அருந்தவத்தி னூடுபோய் - ஆயிரந்தோள்
      மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள
      2747
      மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
      தன்னி னுடனே சுழல சுழன்றாடும்
      கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி
      அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே
      2748
      பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு
      என்னுறுநோய் யானுரைப்ப கேண்மின் இரும்பொழில்சூழ்
      மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்
      பொன்னியலும் மாட கவாடம் கடந்துபுக்கு
      2749
      என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் - நோக்குதலும்
      மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்
      பன்னு கரதலமும் கண்களும் - பங்கயத்தின்
      பொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல்
      2750
      மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்
      மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்
      துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப
      மன்னும் மரகத குன்றின் மருங்கே - ஓர்
      2751
      இன்னிள வஞ்சி கொடியொன்று நின்றதுதான்
      அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே
      மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்
      முன்னாய தொண்டையா கொண்டை குலமிரண்டாய்
      2752
      அன்ன திருவுருவம் நின்ற தறியாதே
      என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்
      பொன்னியலும் மேகலையும் ஆங்கொழி போந்தேற்கு
      மன்னும் மறிகடலும் ஆர்க்கும் - மதியுகுத்த
      2753
      இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
      தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ -
      தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து
      மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்
      2754
      இன்னிளம்பூ தென்றலும் வீசும் எரியெனக்கே
      முன்னிய பெண்ணைமேல் முள்முளரி கூட்டகத்து
      பின்னுமவ் வன்றில் பெடைவா சிறுகுரலும்
      என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்
      2755
      கன்னவில்தோள் காமன் கருப்பு சிலைவளைய
      கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌ பொதவணைந்து
      தன்னுடைய தோள்கழிய வாங்கி - தமியேன்மேல்
      என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்
      2756
      பின்னிதனை காப்பீர்தாம் இல்லையே - பேதையேன்
      கன்னவிலும் காட்டகத்தோர் வல்லி கடிமலரின்
      நன்னறு வசமற் றாரானும் எய்தாமே
      மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்
      2757
      என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்
      மன்னு மலர்மங்கை மைந்தன் கணபுரத்து
      பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
      என்னிவைதான் வாளா எனக்கே பொறையாகி
      2758
      முன்னிருந்து மூக்கின்றுமூவாமை காப்பதோர்
      மன்னும் மருந்தறிவி ரில்லையே - மல்விடையின்
      துன்னு பிடரெருத்து தூக்குண்டு வன்தொடரால்
      கன்னியர் கண்மிளிர கட்டுண்டு மாலைவாய்
      2759
      தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்
      இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே
      கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்
      என்னிதனை காக்குமா சொல்லீர் இதுவிளைத்த
      2760
      மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்
      முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின்
      சின்ன நறும்பூ திகழ்வண்ணன் - வண்ணம்போல்
      அன்ன கடலை மலையி டணைகட்டி
      2761
      மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து
      பொன்முடிகள் பத்தும் புரள சரந்துரந்து
      தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை - ஆயிரங்கண்
      மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்
      2762
      தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை
      பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து
      கொன்னவிலும் வெஞ்சமது கொல்லாதே - வல்லாளன்
      மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து
      2763
      தன்னுடைய தாள்மேல் கிடாத்தி - அவனுடைய
      பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
      மின்னலங்கும் ஆழி படைத்தடக்கை வீரனை
      மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க
      2764
      பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்
      கொன்னவிலும் கூர்திமேல் வைத்தெடுத்த கூத்தனை
      மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
      மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்
      2765
      தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்துஆங்கு
      இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய
      மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை மற் றன்றியும்
      தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்
      2766
      மன்னும் குறளுருவில் மாணியாய் - மாவலிதன்
      பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்
      மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
      என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்
      2767
      மன்னா. தரு கென்று வாய்திறப்ப - மற்றவனும்
      என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக்கண்
      மின்னார் மணிமுடிபோய் விண்தடவ மேலெடுத்த
      பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்துஅங்
      2768
      கொன்னா அசுரர் துளங்க செலநீட்டி
      மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து
      தன்னுலகம் ஆக்குவித்த தாளானை - தாமரைமேல்
      மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை
      2769
      பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தை போர்விடையை
      தென்னன் குறுங்குடியுள் செம்பவள குன்றினை
      மன்னிய தண்சேறை வள்ளலை - மாமலர்மேல்
      அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி
      2770
      என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை
      கன்னி மதிள்சூழ் கணமங்கை கற்பகத்தை
      மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
      பொன்னை மரகத்தை புட்குழியெம் போரேற்றை
      2771
      மன்னும் அரங்கத்தெம் மாமணியை - வல்லவாழ்
      பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
      தொன்னீர கடல்கிடந்த தோளா மணிச்சுடரை
      என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை
      2772
      மன்னும் கடன்மல்லை மாயவனை - வானவர்தம்
      சென்னி மணிச்சுடரை தண்கால் திறல்வலியை
      தன்னை பிறரறியா தத்துவத்தை முத்தினை
      அன்னத்தை மீனை அரியை அருமறையை
      2773
      முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை - கோவலூர்
      மன்னும் இடைகழியெம் மாயவனை பேயலற
      பின்னும் முலையுண்ட பிள்ளையை - அள்ளல்வாய்
      அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை
      2774
      தெந்தில்லை சித்திர கூடத்தென் செல்வனை -
      மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை
      மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை
      கொன்னவிலும் ஆழி படையானை - கோட்டியூர்
      2775
      அன்ன வுருவில் அரியை திருமெய்யத்து
      இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
      மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை
      மன்னிய பாடகத்தெம் மைந்தனை - வெஃகாவில்
      2776
      உன்னிய யோக துறக்கத்தை ஊரகத்துள்
      அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை
      என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்த்தம்
      முன்னவனை மூழி களத்து விளக்கினை
      2777
      அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை
      நென்னலை யின்றினை நாளையை - நீர்மலைமேல்
      மன்னும் மறைநான்கும் ஆனானை புல்லாணி
      தென்னன் தமிழி வடமொழியை நாங்கூரில்
      2778
      மன்னும் மணிமாட கோயில் மணாளனை
      நன்னீர தலைச்சங்க நான்மதியை - நான்வணங்கும்
      கண்ணனை கண்ண புரத்தானை தென்னறையூர்
      மன்னும் மணிமாட கோயில் மணாளனை
      2779
      கன்னவில்தோள் காளையை கண்டாங்கு கைதொழுது
      என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
      தன்னருளும் ஆகமும் தாரானேல் - தன்னைநான்
      மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்
      2780
      தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
      கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
      தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன் - தான்முனநாள்
      மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரி களவிங்கண்
      2781
      துன்னு படல்திறந்து புக்கு - தயிர்வேண்ணெய்
      தன்வயி றார விழுங்க கொழுங்கயல்கண்
      மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்
      பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
      2782
      அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
      துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை
      2783
      முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்
      மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்
      2784
      தன்னை யிகழ்ந்துரைப்ப தான்முனநாள் சென்றதுவும்
      மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப
      2785
      கொன்னவிலும் கூத்தனா பேர்த்தும் குடமாடி
      என்னிவ னென்ன படுகின்ற ஈடறவும்
      2786
      தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை
      மன்னன் இராவணன்றன் நல்தங்கை - வாளெயிற்று
      2787
      துன்னு சுடுசினத்து சூர்ப்பணகா சோர்வெய்தி
      பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்
      2788
      தன்னை நயந்தாளை தான்முனிந்து மூக்கரிந்து
      மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்
      2789
      தன்னிகரொன் றில்லாத தாடகையை மாமுனிக்காக
      தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்
      2790
      உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்
      முன்னி முளைத்தெழு தோங்கி யொளிபரந்த
      மன்னியம்பூம் பெண்ணை மடல்.
      திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
      ------------------------------------------------------------------------
      - 2791-3342
      -8
      நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 2791-3342
      ------------------------------------------------------------------------
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      2001



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள் 2791-3342
      ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய
      திருவாய்மொழி
      ஸ்ரீ
      ஸ்ரீமதே ராமாநுஜாய நம
      திருவாய்மொழி தனியன்கள்
      நாதமுனிகள் அருளிச்செய்தது
      பக்தாம்ருதம் வி வஜநா நுமோதநம்
      ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
      ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
      நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
      வெண்பாக்கள்
      ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
      திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்
      மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
      அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
      சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
      சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
      மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
      இனத்தாரை யல்லா திறைஞ்சேன் - தனத்தாலும்
      ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்
      பாதங்கள் யாமுடைய பற்று.
      அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
      ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
      வாய்ந்தமலர பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ
      சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்
      பேராத வுள்ளம் பெற.
      பட்டர் அருளிச்செய்தவை
      வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
      ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
      முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
      இதத்தாய் இராமுனுசன்.
      மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
      தக்க நெறியும் தடையாகி - தொக்கியலும்
      ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
      யாழினிசை வே தியல்.
      ஸ்ரீமதே ராமாநுஜாய நம
      நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி.
      திருவாய் மொழி முதற் பத்து.
      2791
      உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
      மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
      அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
      துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. 2 1.1.1
      2792
      மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
      மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
      இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
      இனனிலன் னெனனுயிர் மிகுநரை யிலனே. 1.1.2
      2793
      இலனது வுடையனி தெனநினை வரியவன்
      நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
      புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அ
      நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3
      2794
      நாமவ னிவனுவன் அவளிவளுவளெவள்
      தாமவரிவருவர் அதுவிது வுதுவெது
      வீமவை யிவையுவை யவைநல தீங்கவை
      ஆமவை யாயவை யாய்நின்ற அவரே. 1.1.4
      2795
      அவரவர் தமதம தறிவறி வகைவகை
      அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
      அவரவர் ரிறையவர் குறைவில
      அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5
      2796
      நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
      நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
      என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்
      என்றுமொ ரியல்வொடு நின்றவெ திடரே. 1.1.6
      2797
      திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
      படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
      உடல்மிசை யுயிரென கரந்தெங்கும் பரந்துளன்
      சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7
      2798
      சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
      வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
      புரமொரு மூன்றெரி தமரர்க்கு மறிவியந்து
      அரனயன் எனவுல கழித்தமை துளனே. 1.1.8
      2799
      உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
      உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
      உளனென விலனென விவைகுண முடைமையில்
      உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9
      2800
      பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
      பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற
      கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
      கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10
      2801
      கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
      வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
      பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
      நிரனிறை யாயிர திவைபத்தும் வீடே. 2 1.1.11
      2802
      வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர்
      வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே. 2 1.2.1
      2803
      மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்
      என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே. 1.2.2
      2804
      நீர்நும தென்றிவை--வேர்முதல் மாய்த்து இறை
      சேர்மின் உயிர்க்கு அத--னேர்நிறை யில்லே. 1.2.3
      2805
      இல்லது முள்ளதும்--அல்ல தவனுரு
      எல்லையி லந்நலம்--புல்குபற் றற்றே. 1.2.4
      2806
      அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
      செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5
      2807
      பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
      பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6
      2808
      அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
      அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7
      2809
      உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
      உள்ளி கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8
      2810
      ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
      விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9
      2811
      எண்பெரு கந்நலத்து--ஒண்பொரு ளீறில
      வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. 2 1.2.10
      2812
      சேர்த்தட தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
      சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவி பத்தே. 2 1.2.11
      2813
      பத்துடை யடியவர கெளியவன் பிறர்களு கரிய
      வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
      மத்துறு கடைவெண்ணெய் களவினில் உ ரவிடை யாப்புண்டு
      எத்திறம் உரலினோ டிணைந்திரு தேங்கிய எளிவே. 2 1.3.1
      2814
      எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்
      ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்
      தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும் மிறையோன்
      அளிவரு மருளினோ டகத்தனன் புறத்தன னமைந்தே. 1.3.2
      2815
      அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த
      அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்
      அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம
      அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே 1.3.3
      2816
      யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்
      யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்
      பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்
      பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே. 1.3.4
      2817
      பிணக்கற அறுவகை சமயமும் நெறியுள்ளி யுரைத்த
      கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்
      வணக்குடை தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
      உணக்குமின் பசையற அவனுடை யுணர்வுகொண் டுணர்ந்தே. 1.3.5
      2818
      உணர்ந்துணர திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை
      உணர்ந்துணர துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்
      உணர்ந்துணர துரைத்துரை தரியய னரனென்னுமிவரை
      உணர்ந்துணர துரைத்துரை திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே. 1.3.6
      2819
      ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
      நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை
      ஒன்றநும் மனத்துவை துள்ளிநும் இருபசை யறுத்து
      நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே. 1.3.7
      2820
      நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
      மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமற கழுவி
      நாளூ திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி
      மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே. 1.3.8
      2821
      வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெற துந்தி
      தலத்து எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
      புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
      சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே. 1.3.9
      2822
      துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரை துயக்கும்
      மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
      பு
      அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே. 1.3.10
      2823
      அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை
      அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்
      அமர்சுவை யாயிர தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
      அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. 2 1.3.11
      2824
      அஞ்சிறைய மடநாராய். அளியத்தாய். நீயும்நின்
      அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
      வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதா சென்றக்கால்
      வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ 2 1.4.1
      2825
      என்செய்ய தாமரைக்கண் பெருமானார கென்தூதாய்
      என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே
      முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ குற்றேவல்
      முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே 1.4.2
      2826
      விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
      மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
      மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
      மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே. 1.4.3
      2827
      என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
      என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
      நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
      நன்னீல மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ 1.4.4
      2828
      நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே
      நல்கத்தா னாகாதொ நாரணனை கண்டக்கால்
      மல்குநீர புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
      மல்குநீர கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே. 1.4.5
      2829
      அருளாத நீரருளி யவராவி துவராமுன்
      அருளாழி புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
      அருளாழி யம்மானை கண்டக்கா லிதுசொல்லி
      யருள் ஆழி வரிவண்டே. யாமுமென் பிழைத்தோமே 1.4.6
      2830
      என்பிழைகோ பதுபோல பனிவாடை யீர்கின்றது
      என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
      என்பிழைத்தாள் திருவடியின் தகவினு கென் றொருவாய்ச்சொல்
      என்பிழைக்கும் இளங்கிளியே. யான்வளர்த்த நீயலையே 1.4.7
      2831
      நீயலையே சிறுபூவாய். நெடுமாலார கென்தூதாய்
      நோயெனது நுவலென்ன நுவலாதே யிருந்தொழிந்தாய்
      சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
      வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே. 1.4.8
      2832
      நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்
      வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
      வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ
      ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே. 1.4.9
      2833
      உடலாடி பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்
      கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
      அடலாழி யம்மானை கண்டக்கா லிதுசொல்லி
      விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே. 1.4.10
      2834
      அளவியன்ற ஏழுலக தவர்பெருமான் கண்ணனை
      வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த
      அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
      வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே. 2 1.4.11
      2835
      வளவே ழுலகின் முதலாய்
      வானோ ரிறையை அருவினையேன்
      களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
      கள்வா. என்பன் பின்னையும்
      தளவேழ் முறுவல் பின்னைக்காய்
      வல்லா னாயர் தலைவனாய்
      இளவே றேழும் தழுவிய
      எந்தாய். என்பன் நினைந்துநைந்தே. 2 1.5.1
      2836
      நினைந்து நைந்துள் கரைந்துருகி
      இமையோர் பலரும் முனிவரும்
      புனைந்த கண்ணி நீர்சாந்தம்
      புகையோ டேந்தி வணங்கினால்
      நினைந்த எல்லா பொருள்கட்கும்
      வித்தாய் முதலில் சிதையாமே
      மனஞ்செய் ஞான துன்பெருமை
      மாசூ ணாதோ மாயோனே. 1.5.2
      2837
      மாயோ னிகளாய் நடைகற்ற
      வானோர் பலரும் முனிவரும்
      நீயோ னிகளை படை என்று
      நிறைநான் முகனை படைத்தவன்
      சேயோ னெல்லா அறிவுக்கும்
      திசைக ளெல்லாம் திருவடியால்
      தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும்
      தாயோன் தானோ ருருவனே. 1.5.3
      2838
      தானோ ருருவே தனிவித்தா
      தன்னில் மூவர் முதலாய
      வானோர் பலரும் முனிவரும்
      மற்றும்
      தானோர் பெருநீர் தன்னுள்ளே
      தோற்றி அதனுள் கண்வளரும்
      வானோர் பெருமான் மாமாயன்
      வைகு தன்எம் பெருமானே. 1.5.4
      2839
      மானேய் நோக்கி மடவாளை
      மார்வில் கொண்டாய். மாதவா.
      கூனே சிதைய வுண்டைவில்
      நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.
      வானார் சோதி மணிவண்ணா.
      மதுசூ தா.நீ யருளாய் உ ன்
      தேனே மலரும் திருப்பாதம்
      சேரு மாறு வினையேனே. 1.5.5
      2840
      வினையேன் வினைதீர் மருந்தானாய்.
      விண்ணோர் தலைவா. கேசவா.
      மனைசே ராயர் குலமுதலே.
      மாமா யன்னே. மாதவா.
      சினையேய் தழைய மராமரங்கள்
      ஏழும் எய்தாய். சிரீதரா.
      இனையா யினைய பெயரினாய்.
      என்று நைவன் அடியேனே. 1.5.6
      2841
      அடியேன் சிறிய ஞானத்தன்
      அறித லார்க்கு மரியானை
      கடிசேர் தண்ண துழாய்க்கண்ணி
      புனைந்தான் தன்னை கண்ணனை
      செடியார் ஆக்கை யடியாரை
      சேர்தல் தீர்க்கும் திருமாலை
      அடியேன் காண்பான் அலற்றுவன்
      இதனில் மிக்கோர் அயர்வுண்டே 1.5.7
      2842
      உண்டா யுலகேழ் முன்னமே
      உமிழ்ந்து மாயை யால்புக்கு
      உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
      உவலை யாக்கை நிலையெய்தி
      மண்டான் சோர்ந்த துண்டேலும்
      மனிசர காகும் பீர் சிறிதும்
      அண்டா வண்ணம் மண்கரைய
      நெய்யூண் மருந்தோ மாயோனே. 1.5.8
      2843
      மாயோம் தீய அலவலை
      பெருமா வஞ்ச பேய்வீய
      தூய குழவி யாய்விடப்பால்
      அமுதா அமுது செய்திட்ட
      மாயன் வானோர் தனித்தலைவன்
      மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
      தாயோன் தம்மா னென்னம்மான்
      அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே. 1.5.9
      2844
      சார்ந்த இருவல் வினைகளும்
      சரித்து மா பற்றறுத்து
      தீர்ந்து தன்பால் மனம்வைக்க
      திருத்தி வீடு திருத்துவான்
      ஆர்ந்த ஞான சுடராகி
      அகலம் கீழ்மேல் அளவிறந்து
      நேர்ந்த வுருவாய் அருவாகும்
      இவற்றி னுயிராம் நெடுமாலே. 1.5.10
      2845
      மாலே. மா பெருமானே.
      மாமா யனே. என்றென்று
      மாலே யேறி மாலருளால்
      மன்னு குருகூர சடகோபன்
      பாலேய் தமிழ ரிசைகாரர்
      பத்தர் பரவும் ஆயிரத்தின்
      பாலே பட்ட இவைபத்தும்
      வல்லார கில்லை பரிவதே. 1.5.11
      2846
      பரிவதி லீசனை பாடி
      விரிவது மேவ லுறுவீர்.
      பிரிவகை யின்றிநன் னீர்தூய்
      புரிவது வும்புகை பூவே. 2 1.6.1
      2847
      மதுவார் தண்ண துழாயான்
      முதுவே தமுதல் வனுக்கு
      எதுவே தென்பணி என்னா
      ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2
      2848
      ஈடு மெடுப்புமி லீசன்
      மாடு விடாதென் மனனே
      பாடுமென் நாவலன் பாடல்
      ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3
      2849
      அணங்கென ஆடுமெ னங்கம்
      வணங்கி வழிபடு மீசன்
      பிணங்கி யமரர் பிதற்றும்
      குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4
      2850
      கொள்கைகொ ளாமையி லாதான்
      எள்கலி ராகமி லாதான்
      விள்கைவிள் ளாமைவி ரும்பி
      உள்கல தார்க்கோ ரமுதே. 1.6.5
      2851
      அமுதம் அமரக கீந்த
      நிமிர்சுட ராழி நெடுமால்
      அமுதிலு மாற்ற இனியன்
      நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6
      2852
      நீள்கடல் சூழிலங் கைக்கோன்
      தோள்கள் தலைதுணி செய்தான்
      தாள்கள் தலையில் வணங்கி
      நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7
      2853
      கழிமின்தொண் டீர்கள் கழித்து
      தொழுமின் அவனை தொழுதால்
      வழிநின்ற வல்வினை மாள்வித்து
      அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8
      2854
      தரும அரும்பய னாய
      திருமக ளார்தனி கேள்வர்
      பெருமை யுடைய பிரானார்
      இருமை வினைகடி வாரே. 1.6.9
      2855
      கடிவார் தீய வினைகள்
      நொடியா ருமள வைக்கண்
      கொடியா அடுபுள் ளுயர்த்த
      வடிவார் மாதவ னாரே. 1.6.10
      2856
      மாதவன் பால்சட கோபன்
      தீதவ மின்றி யுரைத்த
      ஏதமி லாயிர திப்பத்து
      ஓதவல் லார்பிற வாரே. 1.6.11
      2857
      பிறவித்துயரற ஞானத்துள்நின்று
      துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார்
      அறவனை யாழி படையந தணனை
      மறவியை யின்றி மனத்துவை பாரே. 1.7.1
      2858
      வைப்பாம்மருந்தா மடியரை வல்வினை
      துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்
      எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து
      அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே. 1.7.2
      2859
      ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்
      மா பிரானையென் மாணிக்க சோதியை
      தூய அமுதை பருகிப்பருகி என்
      மா பிறவி மயர்வறு தேனே. 1.7.3
      2860
      மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை
      உயர்வினை யேதரும் ஒண்சுடர கற்றையை
      அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
      இசைவினையென்சொல்லி யான்விடுவேனே. 1.7.4
      2861
      விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை
      நடுவேவந்து கொள்கின்றநாதனை
      தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள்
      விடவேசெய்து விழிக்கும்பிரானையே. 1.7.5
      2862
      பிரான்பெருநிலங் கீண்டவன் பின்னும்
      விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்
      மராமரமெய்த மாயவன் என்னுள்
      இரானெனில்பின்னை யானொட்டுவேனோ. 1.7.6
      2863
      யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்
      தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து
      ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து இயல்
      வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே. 1.7.7
      2864
      என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்ச
      தன்னை அகல்விக்க தானும்கில்லானினி
      பின்னை நெடும்பணை தோள்மகிழ பீடுடை
      முன்னை யமரர் முழுமுத லானே. 1.7.8
      2865
      அமரர முழுமுத லாகிய ஆதியை
      அமரர கமுதீந்த ஆயர் கொழுந்தை
      அமர அழும்ப துழாவியென் னாவி
      அமரர தழுவிற் றினிய கலுமோ. 1.7.9
      2866
      அகலில் அகலும் அணுகில் அணுகும்
      புகலு மரியன் பொருவல்ல னெம்மான்
      நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்
      பகலு மிரவும் படிந்து குடைந்தே. 1.7.10
      2867
      குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை
      அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்
      மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து
      உடைந்து நோய்களை யோடு விக்குமே. 1.7.11
      2868
      ஓடும்புள்ளேரி சூடும தண்டுழாய்
      நீடு நின்றவை ஆடும் அம்மானே. 1.8.1
      2869
      அம்மானா பின்னும் எம்மாண புமானான
      வெம்மா வாய்கீண்ட செம்மா கண்ணனே. 1.8.2
      2870
      கண்ணா வானென்றும் மண்ணோர்விண்ணோர்க்கு
      தண்ணார் வேங்கட விண்ணோர வெற்பனே. 1.8.3
      2871
      வெற்பை யொன்றெடுத்து ஒற்க மின்றியே
      நிற்கும் அம்மான்சீர் கற்பன் வைகலே. 1.8.4
      2872
      வைக லும்வெண்ணெய் கைக லந்துண்டான்
      பொய்க லவாது என் - மெய்க லந்தானே. 1.8.5
      2873
      கலந்தென்னாவி நலங்கொள் நாதன்
      புலங்கொள் மாணாய் நிலம்கொண் டானே. 1.8.6
      2874
      கொண்டா னேழ்விடை உண்டா னேழ்வையம்
      தண்டா மஞ்செய்து என் - எண்டா னானானே. 1.8.7
      2875
      ஆனா னானாயன் மீனோ டேனமும்
      தானா னானென்னில் யசங்கே.
      2876
      சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
      எங்கும் தானாய நங்கள் நாதனே. 1.8.9
      2877
      நாதன்ஞாலங்கொள் - பாதன் என்னம்மான்
      ஓதம் போல்கிளர் வேதநீரனே. 1.8.10
      2878
      நீர்புரை வண்ணன் சீர்ச்சடகோபன்
      நெர்த லாயிரத்து ஓர்தலிவையே. 1.8.11
      2879
      இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்
      அவையும யவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
      அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்
      சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே. 1.9.1
      2880
      சூழல பலபல வல்லான் தொல்லையங் கால துலகை
      கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்
      வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர கெண்ணல் அரியான்
      ஆழ நெடுங்கடல சேர்ந்தான் அவனென னருகலி லானே. 1.9.2
      2881
      அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்
      கருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரை கண்ணன்
      பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்
      ஒருகதியின்சுவைதந்தி டொழிவிலனென்னோடுடனே. 1.9.3
      2882
      உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
      மடமகள் என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே
      உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்
      கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே. 1.9.4
      2883
      ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி
      செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்
      நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக
      ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே. 1.9.5
      2884
      மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே
      காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே
      சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்
      தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே. 1.9.6
      2885
      தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்
      தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்
      கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி
      நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே. 1.9.7
      2886
      நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்
      ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே
      பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்
      காவிநன்மேனிக்கமல கண்ணனென்கண்ணினுளானே. 1.9.8
      2887
      கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே
      அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி
      கமலத்தயன்நம்பிதன்னை கண்ணுதலானொடும்தோற்றி
      அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே. 1.9.9
      2888
      நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி
      கற்றைத்துழாய்முடிக்கோல கண்ணபிரானைத்தொழுவார்
      ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
      மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே. 1.9.10
      2889
      உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு
      இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்
      இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு
      நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே. 1.9.11
      2890
      பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு
      திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ
      ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த அ
      கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1
      2891
      கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்
      எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்
      மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்
      விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2
      2892
      எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
      தம்பிரானை தண்தாமரைக்கண்ணனை
      கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை
      எம்பிரானை தொழாய்மடநெஞ்சமே. 1.10.3
      2893
      நெஞ்சமேநல்லை நல்லைஉன்னைப்பெற்றால்
      என்செய்யோம் இனியென்னகுறைவினம்
      மைந்தனை மலராள்மணவாளனை
      துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4
      2894
      கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று ஓர்
      எண்டானுமின்றியே வந்தியலுமாறு
      உண்டானையுலகேழு மோர்மூவடி
      கொண்டானை கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5
      2895
      நீயும்நானுமி நேர்நிற்கில் மேல்மற்றோர்
      நோயும்சார்க்கொடான் நெஞ்சமே சொன்னேன்
      தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்
      வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6
      2896
      எந்தையேயென்று மெம்பெருமானென்றும்
      சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்
      எந்தையெம்பெருமானென்று வானவர்
      சிந்தையுள் வைத்து சொல்லும்செல்வனையே. 1.10.7
      2897
      செல்வநாரண னென்றசொல்கேட்டலும்
      மல்கும்கண்பனி நாடுவன்மாயமே
      அல்லும்நன்பகலு மிடைவீடின்றி
      நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8
      2898
      நம்பியைத்தென் குறுங்குடிநின்ற அ
      செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை
      உம்பர்வானவ ராதியஞ்சோதியை
      எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9
      2899
      மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்
      மறக்குமென்றுசெ தாமரைக்கண்ணொடு
      மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை
      மறப்பனோவினி யானென்மணியையே 1.10.10
      2900
      மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
      அணியை தென்குரு கூர்ச்சடகோபன் சொல்
      பணிசெயாயிர துள்ளிவைபத்துடன்
      தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11
      நறஸபஇ
      திருவாய் மொழி இரண்டாம் பத்து
      2901
      வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்
      ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்
      நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்
      நீயும்திருமாலால் நெஞ்சம்கோ பட்டாயே. 2.1.1
      2902
      கோட்பட்டசிந்தையா கூர்வாய அன்றிலே
      சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்
      ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
      தாட்பட்ட தண்டுழா தாமம்கா முற்றாயே. 2.1.2
      2903
      காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்
      நீமுற்ற கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
      தீமுற்ற தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த
      யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3
      2904
      கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்
      சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்
      அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ
      உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4
      2905
      ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு
      தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற
      வாழியவானமே நீயும மதுசூதன்
      பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5
      2906
      நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்
      மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்
      ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்
      மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6
      2907
      தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
      ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே
      வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி
      மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7
      2908
      இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய்
      மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்
      உருளும்சகடம் உதைத்தபெருமானார்
      அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8
      2909
      நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த
      நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்
      செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்
      அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9
      2910
      வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த
      ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்
      மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த
      மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10
      2911
      சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே
      ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்
      ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்
      சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11
      2912
      திண்ணன்வீடு முதல்முழுதுமாய்
      எண்ணின்மீதிய னெம்பெருமான்
      மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட நங்
      கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1
      2913
      ஏபாவம்பரமே யேழுலகும்
      ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்
      மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்
      கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2
      2914
      ஏறனைப்பூவனை பூமகள்தன்னை
      வேறின்றிவிண்தொழ தன்னுள்வைத்து
      மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட
      மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3
      2915
      தேவுமெ பொருளும்படைக்க
      பூவில்நான் முகனைப்படைத்த
      தேவனெம் பெருமானுக்கல்லால்
      பூவும்பூசனையும் தகுமே. 2.2.4
      2916
      தகும்சீர தன்தனிமுதலினுள்ளே
      மிகும்தேவு மெப்பொருளும்படைக்க
      தகும்கோல தாமரைக்கண்ணனெம்மான்
      மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5
      2917
      யவரும்யாவையு மெல்லாப்பொருளும்
      கவர்வின்றி தன்னுளொடுங்கநின்ற
      பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி
      அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6
      2918
      பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்
      வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்
      உள்ளுளா ரறிவார் அவன்றன்
      கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7
      2919
      கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்
      வருத்தித்தமா பிரானையன்றி ஆரே
      திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
      இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8
      2920
      காக்குமியல்வினன் கண்ணபெருமான்
      சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே
      வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்
      ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9
      2921
      கள்வா எம்மையு மேழுலகும் நின்
      னுள்ளேதோற்றிய இறைவா. என்று
      வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்
      புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10
      2922
      ஏத்தவேழுலகுங் கொண்டகோல
      கூத்தனை குருகூர்ச்சடகோபன்சொல்
      வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்
      ஏத்தவல்லவர கில்லையோர்ஊனமே. 2.2.11
      2923
      ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று
      வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்
      தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்
      தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1
      2924
      ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய
      ஒத்தாயெப்பொருட்கு முயிராய் என்னைப்பெற்ற
      அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த
      அத்தா நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2
      2925
      அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து
      அறியாமாமா தடியேனைவைத்தாயால்
      அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று
      அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3
      2926
      எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு
      எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே
      எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்
      எனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4
      2927
      இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்
      கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே
      தனியேன்வாழ்முதலே பொழிலேழுமேனமொன்றாய்
      நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5
      2928
      சேர்ந்தார்தீவினைக கருநஞ்சைத்திண்மதியை
      தீர்ந்தார்தம்மனத்து பிரியாதவருயிரை
      சோர்ந்தேபோகல்கொடா சுடரை அரக்கியைமூ
      கீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6
      2929
      முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே
      பன்னலார்பயிலும் பரனேபவித்திரனே
      கன்னலேஅமுதே கார்முகிலேஎன்கண்ணா
      நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7
      2930
      குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்
      கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்
      உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்
      நெறிக்கொண்டநெஞ்சனா பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8
      2931
      கடிவார்தண்ணந்துழா கண்ணன்விண்ணவர்பெருமான்
      படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்
      செடியார்நோய்கள்கெட படிந்துகுடைந்தாடி
      அடியேன்வாய்மடுத்து பருகிக்களித்தேனே. 2.3.9
      2932
      களிப்பும்கவர்வுமற்று பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று
      ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ
      துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி
      அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10
      2933
      குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை
      குழாங்கொள்தென்குருகூர சடகோபன்தெரிந்துரைத்த
      குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி
      குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11
      2934
      ஆடியாடி யகம்கரைந்து இசை
      பாடிப்பாடி கண்ணீர்மல்கி எங்கும்
      நாடிநாடி நரசிங்காவென்று
      வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1
      2935
      வாணுதலிம்மடவரல் உம்மை
      காணுமாசையுள் நைகின்றாள் விறல்
      வாணனாயிரந்தோள்துணித்தீர் உம்மை
      காண நீரிரக்கமிலீரே. 2.4.2
      2936
      இரக்கமனத்தோ டெரியணை
      அரக்குமெழுகு மொக்குமிவள்
      இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்
      அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3
      2937
      இலங்கைசெற்றவனே என்னும் பின்னும்
      வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
      மலங்கவெவ்வுயிர்க்கும் கண்ணீர்மி
      கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4
      2938
      இவளிராப்பகல் வாய்வெரீஇ தன
      குவளையொண்கண்ணநீர் கொண்டாள் வண்டு
      திவளும்தண்ண துழாய்கொடீர் என
      தவளவண்ணர் தகவுகளே. 2.4.5
      2939
      தகவுடையவனே யென்னும் பின்னும்
      மிகவிரும்பும்பிரான் என்னும் என
      தகவுயிர்க்கமுதே என்னும் உள்ளம்
      உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6
      2940
      உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து என
      வள்ளலேகண்ணனேயென்னும் பின்னும்
      வெள்ளநீர்க்கிடந்தாய்என்னும் என்
      கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7
      2941
      வஞ்சனே என்னும் கைதொழும் தன்
      நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும் விறல்
      கஞ்சனைவஞ்சனை செய்தீர் உம்மை
      தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8
      2942
      பட்டபோதெழு போதறியாள் விரை
      மட்டலர்தண்துழாய் என்னும் சுடர்
      வட்டவாய்நுதி நேமியீர் நும
      திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9
      2943
      ஏழைபேதை யிராப்பகல் தன
      கேழிலொண்கண்ணநீர் கொண்டாள் கிளர்
      வாழ்வைவேவ விலங்கை செற்றீர் இவள்
      மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10
      2944
      வாட்டமில்புகழ் வாமனனை இசை
      கூட்டிவண்சடகோபன் சொல் அமை
      பாட்டோ ராயிரத்தி பத்தால் அடி
      குட்டலாகு மந்தாமமே. 2.4.11
      2945
      அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு
      அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள
      செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்
      செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1
      2946
      திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்
      திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்
      ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ
      ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2
      2947
      என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்
      மின்னும்சுடர்மலைக்கு கண்பாதம்கைகமலம்
      மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள
      தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3
      2948
      எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்
      அப்பொழுதைத்தாமரைப்பூ கண்பாதம்கைகமலம்
      எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்
      அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4
      2949
      ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த
      காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு
      நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்
      பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 2.5.5
      2950
      பலபலவேயாபரணம் பேரும்பலபலவே
      பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்
      பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்
      பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6
      2951
      பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்
      காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்
      தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்
      பூம்பிணையதண்துழா பொன்முடியம்போரேறே. 2.5.7
      2952
      பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்
      தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை
      என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை
      சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 2.5.8
      2953
      சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை
      எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை
      நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்
      அல்லிமலர்விரையொ தாணல்லன்பெண்ணல்லனே. 2.5.9
      2954
      ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
      காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
      பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்
      கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 2.5.10
      2955
      கூறுதலொன்றாரா குடக்கூத்தவம்மானை
      கூறுதலேமேவி குருகூர்ச்சடகோபன்
      கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்
      கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 2.5.11
      2956
      வைகுந்தாமணிவண்ணனே என்பொல்லாத்திருக்குறளா என்னுள்மன்னி
      வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே
      செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
      செய்குந்தா உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே. 2.6.1
      2957
      சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே உலகுகள்
      ஒக்கவேவிழுங்கி புகுந்தான்புகுந்ததற்பின்
      மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்கா துளக்கற்றமுதமாய் எங்கும்
      பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே. 2.6.2
      2958
      தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை துழாய்விரை
      பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை
      நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட நாவலர்
      பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே. 2.6.3
      2959
      வள்ளலேமதுசூதனா என்மரகதமலையே உனைநினைந்து
      தெள்கல்தந்த எந்தாய் உ
      வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
      உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே. 2.6.4
      2960
      உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
      தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ
      ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை
      சிந்தைசெய்தவெந்தாய் உ
      2961
      உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
      முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்
      உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்டஎன்
      முன்னைகோளரியே முடியாததென்னெனக்கே. 2.6.6
      2962
      முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்உகந்துவ
      தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி
      செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்
      விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே. 2.6.7
      2963
      மாறிமாறிப்பலபிறப்பும்பிற தடியையடைந்துள்ளந்தேறி
      ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்
      பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ பாய்பறவையொன்
      றேறிவீற்றிருந்தாய் உ
      2964
      எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய் மராமரம்
      பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா
      கொந்தார்தண்ணந்துழாயினாய் அமுதேஉன்னையென்னுள்ளேகுழைத்தவெ
      மைந்தா வானேறே இனியெங்குப்போகின்றதே 2.6.9
      2965
      போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள் தாய்தந்தையுயி
      ராகின்றாய் உ
      பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா தண்வேங்கட
      மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10
      2966
      கண்ணித்தண்ணந்துழாய்முடி கமலத்தடம்பெருங்
      கண்ணனை புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன
      எண்ணில்சோர்விலந்தாதியாயிர துள்ளிவையுமோர்பத்திசையொடும்
      பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே. 2.6.11
      நறஸபஇ
      2967
      கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்
      மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா
      ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்
      நாயகன் எம்பிரானெம்மான்நாராயணனாலே. 2.7.1
      2968
      நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்
      காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை
      சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று
      வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 2.7.2
      2969
      மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது
      யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து
      தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்
      கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 2.7.3
      2970
      கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
      தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி என்னைக்கொண் டென்
      பாவந்தன்னையும்பாறக்கை தெமரேழெழுபிறப்பும்
      மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 2.7.4
      2971
      விட்டிலங்குசெஞ்சோதி தாமரைபாதம்கைகள்கண்கள்
      விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு
      விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி
      விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 2.7.5
      2972
      மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி
      துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்
      எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய
      விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 2.7.6
      2973
      திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
      உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று உள்ளி
      பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே
      மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 2.7.7
      2974
      வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
      காமனைப்பயந்தாய் என்றென்றுன்கழல்பாடியேபணிந்து
      தூமனத்தனனா பிறவித்துழதிநீங்க என்னை
      தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8
      2975
      சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
      வெரீஇ அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
      மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
      இரீஇ உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9
      2976
      இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்
      முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று
      தெருடியாகில்நெஞ்சேவணங்கு திண்ணமறியறிந்து
      மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 2.7.10
      2977
      பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்
      எற்பரனென்னையாக்கி கொண்டெனக்கேதன்னைத்தந்த
      கற்பகம் என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
      வெற்பன் விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11
      2978
      தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை
      ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்
      தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்
      ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 2.7.12
      2979
      வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை
      கண்ணனைநெடுமாலை தென்குருகூர்ச்சடகோபன்
      பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்
      பண்ணில்பன்னிருநா பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 2.7.13
      2980
      அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
      புணர்வது இருவரவர்முதலும்தானே
      இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்
      புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 2.8.1
      2981
      நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்
      நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்
      பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த
      பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2
      2982
      புணர்க்குமயனா மழிக்குமரனாம்
      புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி
      புணர்ததிருவாகி தன்மார்வில்தான்சேர்
      புணர்ப்பன்பெரும்புணர பெங்கும்புலனே. 2.8.3
      2983
      புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி
      நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்
      அலமந்துவீய வசுரரைச்செற்றான்
      பலமுந்துசீரில் படிமினோவாதே. 2.8.4
      2984
      ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்
      மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்
      மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்
      தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 2.8.5
      2985
      தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்
      சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு
      பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை
      பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே 2.8.6
      2986
      கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்பு
      கிடந்திடும் தன்னுள்கரக்குமுமிழும்
      தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
      மடந்தையை மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 2.8.7
      2987
      காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு
      ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா
      சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்
      ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8
      2988
      எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து
      இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப
      அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய என்
      சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9
      2989
      சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா
      ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்
      வேர்முதலாய்வித்தா பரந்துதனிநின்ற
      கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10
      2990
      கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை
      வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்
      பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்
      விண்டலையில்வீற்றிரு தாள்வரெம்மாவீடே. 2.8.11
      2991
      எம்மாவீட்டு திறமும்செப்பம் நின்
      செம்மாபாதபற்பு தலைசேர்த்தொல்லை
      கைம்மாதுன்பம் கடிந்தபிரானே
      அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1
      2992
      இதேயானுன்னை கொள்வதெஞ்ஞான்றும் என்
      மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்
      எய்தாநின்கழல் யானெய்த ஞான
      கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2
      2993
      செய்யேல்தீவினையென் றருள்செய்யும் என்
      கையார்ச்சக்கர கண்ணபிரானே
      ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
      எய்யாதேத்த அருள்செய்யெனக்கே. 2.9.3
      2994
      எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று என்
      மனக்கேவ திடைவீடின்றிமன்னி
      தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே
      எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4
      2995
      சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்
      இறப்பிலெய்துகவெய்தற்க யானும்
      பிறப்பில் பல்பிறவிப்பெருமானை
      மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5
      2996
      மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்
      மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே
      மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு என்றும்
      மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6
      2997
      வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்
      பேராதேயான் வந்தடையும்படி
      தாராதாய் உன்னையென்னுள்வைப்பிலென்றும்
      ஆராதாய் எனக்கென்றுமெக்காலே. 2.9.7
      2998
      எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில் மற்
      றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்
      மிக்கார்வேத விமலர்விழுங்கும் என்
      அக்காரக்கனியே உன்னையானே. 2.9.8
      2999
      யானேயென்னை அறியகிலாதே
      யானேயென்தனதே யென்றிருந்தேன்
      யானேநீயென் னுடைமையும்நீயே
      வானேயேத்து மெம்வானவரேறே. 2.9.9
      3000
      ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை
      நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி
      தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை
      வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 2.9.10
      3001
      விடலில்சக்கர தண்ணலை மேவல்
      விடலில்வண்குருகூர சடகோபன்சொல்
      கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்
      கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 2.9.11
      3002
      கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்
      வளரொளிமாயோன் மருவியகோயில்
      வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை
      தளர்விலராகில் சார்வதுசதிரே. 2.10.1
      3003
      சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது
      அதிர்க்குரல்சங்க தழகர்தம்கோயில்
      மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை
      பதியதுவேத்தி யெழுவதுபயனே. 2.10.2
      3004
      பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே
      புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்
      மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை
      அயன்மலையடைவததுகருமமே. 2.10.3
      3005
      கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே
      பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்
      வருமழைதவழும் மாலிருஞ்சோலை
      திருமலையதுவே யடைவதுதிறமே. 2.10.4
      3006
      திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது
      அறமுயல் ஆழி படையவன்கோயில்
      மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை
      புறமலைசார போவதுகிறியே. 2.10.5
      3007
      கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே
      உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில்
      மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை
      நெறிபட அதுவே நினைவதுநலமே. 2.10.6
      3008
      நலமெனநினைமின் நரகழுந்தாதே
      நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்
      மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை
      வலமுறையெய்தி மருவுதல்வலமே. 2.10.7
      3009
      வலம்செய்துவைகல் வலங்கழியாதே
      வலம்செய்யும்ஆய மாயவன் கோயில்
      வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை
      வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 2.10.8
      3010
      வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது
      அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில்
      மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை
      தொழுக்கருதுவதே துணிவதுசூதே. 2.10.9
      3011
      சூதென்றுகளவும் சூதும்செய்யாதே
      வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்
      மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை
      போதவிழ்மலையே புகுவதுபொருளே. 2.10.10
      3012
      பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல்
      மருளில்வண்குருகூர் வண்சடகோபன்
      தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து
      அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே. 2.10.11
      திருவாய் மொழி மூன்றாம் பத்து
      3013
      முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ
      அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
      படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
      கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே. கட்டுரையே. 2 3.1.1.
      3014
      கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா
      கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது
      ஒட்டுரைத்திவ் வுலகுன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும்
      பட்டுரையா புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2.
      3015
      பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
      பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற
      பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்தஎம்
      பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.
      3016
      மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்நின்
      மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
      மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
      மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே 3.1.4.
      3017
      வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்
      வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
      வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்உலகை
      ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே 3.1.5.
      3018
      ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலக தெவ்வெவையும்
      சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை
      போதுவாழ் புனந்துழாய் முடியினாய் பூவின்மேல்
      மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே 3.1.6.
      3019
      வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
      மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
      கேழ்த்தசீ ரரன்முதலா கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து
      சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே 3.1.7.
      3020
      மாசூணா சுடருடம்பாய் மலராது குவியாது
      மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
      மாசூணா வான்கோல தமரர்க்கோன் வழிபட்டால்
      மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே 3.1.8.
      3021
      மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்
      தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
      மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
      தொழும்பாயார களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே 3.1.9.
      3022
      மறையாய நால்வே துள்நின்ற மலர்சுடரே
      முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்
      பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
      இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே 3.1.10.
      3023
      வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
      சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்
      துயக்கின்றி தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்
      உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. 2 3.1.11
      3024
      முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே
      அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்
      வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து
      எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே 2 3.2.1.
      3025
      வன்மா வையம் அளந்த எம் வாமனாநின்
      பன்மா மா பல்பிறவியில் படிகின்றயான்
      தொன்மா வல்வினை தொடர்களை முதலரிந்து
      நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ 3.2.2.
      3026
      கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்
      எல்லா சேனையும் இருநில தவித்தவெந்தாய்
      பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா
      சொல்லாய்யா னுன்னை சார்வதோர் சூழ்ச்சியே. 3.2.3.
      3027
      சூழ்ச்சி ஞான சுடரொளி யாகிஎன்றும்
      ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்
      தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
      வாழ்ச்சியான் சேரும் வகையருளாய் வந்தே. 3.2.4.
      3028
      வந்தாய்போ லேவந்தும் என்மன தினைநீ
      சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்
      கொந்தார்க்கா யாவின் கொழுமலர திருநிறத்த
      எந்தாய்யா னுன்னை எங்குவ தணுகிற்பனே 3.2.5.
      3029
      கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்
      அற்பசா ரங்கள் அவைசுவை தகன்றொழிந்தேன்
      பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமாநின்
      நற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே 3.2.6.
      3030
      எஞ்ஞான்று நாமிரு திருந்திரங்கி நெஞ்சே.
      மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி
      எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற
      மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே 3.2.7.
      3031
      மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
      ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்
      பாவுதொல் சீர்க்கண்ணா. என் பரஞ்சுடரே
      கூவுகின்றேன் காண்பாலன் எங்கொய்த கூவுவனே 3.2.8.
      3032
      கூவிக்கூவி கொடுவினை தூற்றுள் நின்று
      பாவியேன் பலகாலம் வழிதிகை தலமர்க்கின்றேன்
      மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்
      தாவிய அம்மானை எங்கினி தலைப்பெய்வனே 3.2.9.
      3033
      தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்
      அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல
      கலைப்பல் ஞானத்தென் கண்ணனை கண்டுகொண்டு
      நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10.
      3034
      உயிர்க ளெல்லா உலகமு முடையவனை
      குயில்கொள் சோலை தென்குருகூர சடகோபன்
      செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்
      உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே. 2 3.2.11
      3035
      ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
      வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்
      தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து
      எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே 2 3.3.1
      3036
      எந்தை தந்தை
      முந்தை வானவர்
      சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து
      அந்த மில்புகழ காரெழில் அண்ணலே. 3.3.2
      3037
      அண்ணல் மாயன் அணிகொள்செ தாமரை
      கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
      தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து
      எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3
      3038
      ஈசன் வானவர கென்பனென் றால்அது
      தேச மோதிரு வேங்கட தானுக்கு
      நீச னென்நிறை வொன்றுமி லேன்என்கண்
      பாசம் வைத்த பரஞ்சுடர சோதிக்கே. 3.3.4
      3039
      சோதி யாகியெல் லாவுல கும்தொழும்
      ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ
      வேதி யர்முழு வே தமுதத்தை
      தீதில் சீர்த்திரு வேங்கட தானையே. 3.3.5
      3040
      வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்
      தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்
      வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
      லாங்க டமைஅ துசு தார்க்கட்கே. 3.3.6
      3041
      சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு
      அமர்ந்து வானவர்
      நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
      சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7
      3042
      குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
      அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
      சென்று சேர்திரு வேங்கட மாமலை
      ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. 2 3.3.8
      3043
      ஓயு மூப்பு பிறப்பிற புப்பிணி
      வீயு மாறுசெய் வான்திரு வேங்கட
      தாயன் நாண்மல ராமடி தாமரை
      வாயுள் ளும்மன துள்ளும்வை பார்கட்கே. 3.3.9
      3044
      வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று
      எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ
      பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்
      மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே. 3.3.10
      3045
      தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை
      நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்
      கேழில் ஆயிர திப்பத்தும் வல்லவர்
      வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே. 2 3.3.11
      3046
      புகழுநல் ஒருவன் என்கோ.
      பொருவில்சீர பூமி யென்கோ
      திகழும்தண் பரவை என்கோ.
      தீயென்கோ. வாயு என்கோ
      நிகழும்ஆ காச மென்கோ.
      நீள்சுடர் இரண்டும் என்கோ
      இகழ்விலிவ் வனைத்தும் என்கோ
      கண்ணனை கூவுமாறே. 2 3.4.1
      3047
      கூவுமா றறிய மாட்டேன்
      குன்றங்கள் அனைத்தும் என்கோ
      மேவுசீர் மாரி என்கோ.
      விளங்குதா ரகைகள் என்கோ
      நாவியல் கலைகள் என்கோ.
      ஞானநல் லாவி என்கோ
      பாவுசீர கண்ணன் எம்மான்
      பங கண்ண னையே. 3.4.2
      3048
      பங்கை கண்ணன் என்கோ.
      பவளச்செவ் வாயன் என்கோ
      அங்கதிர் அடியன் என்கோ.
      அஞ்சன வண்ணன் என்கோ
      செங்கதிர் முடியன் என்கோ.
      திருமறு மார்வன் என்கோ
      சங்குச கரத்தன் என்கோ.
      சாதிமா ணிக்க தையே. 3.4.3
      3049
      சாதிமா ணிக்கம் என்கோ.
      சவிகோள்பொன் முத்தம் என்கோ
      சாதிநல் வயிரம் என்கோ
      தவிவில்சீர் விளக்கம் என்கோ
      ஆதியஞ் சோதி என்கோ.
      ஆதியம் புருடன் என்கோ
      ஆதுமில் கால தெந்தை
      அச்சுதன் அமல னையே. 3.4.4
      3050
      அச்சுதன் அமலன் என்கோ
      அடியவர் வினைகெடுக்கும்
      நச்சுமா மருந்தம் என்கோ.
      நலங்கடல் அமுதம் என்கோ
      அச்சுவை கட்டி என்கோ.
      அறுசுவை அடிசில் என்கோ
      நெய்ச்சுவை தேறல் என்கோ.
      கனியென்கோ. பாலென் கேனோ. 3.4.5
      3051
      பாலென்கோ. நான்கு வேத
      பயனென்கோ சமய நீதி
      நூலென்கோ. நுடங்கு கேள்வி
      இசையென்கோ. இவற்றுள் நல்ல
      மேலென்கோ வினையின் மிக்க
      பயனென்கோ கண்ணன் என்கோ.
      மாலென்கோ. மாயன் என்கோ
      வானவர் ஆதி யையே. 3.4.6
      3052
      வானவர் ஆதி என்கோ.
      வானவர் தெய்வம் என்கோ
      வானவர் போகம் என்கோ.
      வானவர் முற்றும் என்கோ
      ஊனமில் செல்வம் என்கோ.
      ஊனமில் சுவர்க்கம் என்கோ
      ஊனமில் மோக்கம் என்கோ.
      ஒளிமணி வண்ண னையே. 3.4.7
      3053
      ஒளிமணி வண்ணன் என்கோ.
      ஒருவனென் றேத்த நின்ற
      நளிர்மதி சடையன் என்கோ.
      நான்மு கடவுள் என்கோ
      அளிமகிழ துலகமெல்லாம்
      படைத்தவை ஏத்த நின்ற
      களிமலர துளவ னெம்மான்
      கண்ணனை மாய னையே. 3.4.8
      3054
      கண்ணனை மாயன் றன்னை
      கடல்கடை தமுதங் கொண்ட
      அண்ணலை அச்சு தன்னை
      அனந்தனை அனந்தன் தன்மேல்
      நண்ணிநன் குறைகின் றானை
      ஞாலமுண் டுமிழ்ந்த மாலை
      எண்ணுமா றறிய மாட்டேன்
      யாவையும் யவரும் தானே. 3.4.9
      3055
      யாவையும் யவரும் தானாய்
      அவரவர் ச தோறும்
      தோய்விலன் புலனை துக்கும்
      சொலப்படான் உணர்வின் மூர்த்தி
      ஆவிசேர் உயிரின் உள்ளால்
      அதுமோர் பற்றி லாத
      பாவனை அதனை கூடில்
      அவனையும் கூட லாமே. 3.4.10
      3056
      கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
      மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன
      பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்
      வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே 2 3.4.11
      3057
      மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
      முதலை சிறைப்பட்டு நின்ற
      கைம்மா வுக்கருள் செய்த
      கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
      எம்மா னைச்சொல்லி பாடி
      எழுந்தும் பறந்தும்துள் ளாதார்
      தம்மால் கருமமென் சொல்லீர்
      தண்கடல் வட்டத்துள் ளீரே. 2 3.5.1
      3058
      தண்கடல் வட்டத்துள் ளாரை
      தமக்கிரை யாத்தடி துண்ணும்
      திண்கழற் காலசு ரர்க்கு
      தீங்கிழை கும்திரு மாலை
      பண்கள் தலைக்கொள்ள பாடி
      பறந்தும் குனித்துழ லாதார்
      மண்கொள் உலகில் பிறப்பார்
      வல்வினை மோத மலைந்தே. 3.5.2
      3059
      மலையை யெடுத்துக்கல் மாரி
      காத்து பசுநிரை தன்னை
      தொலைவு தவிர்த்த பிரானை
      சொல்லிச்சொல் லிநிறெ போதும்
      தலையினோ டாதனம் தட்ட
      தடுகுட்ட மாய்ப்பற வாதார்
      அலைகொள் நரக தழுந்தி
      கிடந்துழை கின்ற வம்பரே. 3.5.3
      3060
      வம்பவிழ் கோதை பொருட்டா
      மால்விடை யேழும் அடர்த்த
      செம்பவ ளத்திரள் வாயன்
      சிரீதரன் தொல்புகழ் பாடி
      கும்பிடு நட்டமி டாடி
      கோகுக டுண்டுழ லாதார்
      தம்பிற பால்பய னென்னே
      சாது சனங்க ளிடையே 3.5.4
      3061
      சாது சனத்தை நலியும்
      கஞ்சனை சாதிப்ப தற்கு
      ஆதியஞ் சோதி யுருவை
      அங்குவை திங்கு பிறந்த
      வேத முதல்வனை பாடி
      வீதிகள் தோறும்துள் ளாதார்
      ஓதி யுணர்ந்தவர் முன்னா
      என்சவி பார்ம னிசரே 3.5.5
      3062
      மனிசரும் மற்றும் முற்றுமாய்
      மா பிறவி பிறந்த
      தனியன் பிறப்பிலி தன்னை
      தடங்கடல் சேர்ந்த பிரானை
      கனியை கரும்பினின் சாற்றை
      கட்டியை தேனை அமுதை
      முனிவின்றி ஏத்தி குனிப்பார்
      முழுதுணர் நீர்மையி னாரே. 3.5.6
      3063
      நீர்மை நூற்றுவர் வீய
      ஐவர கருள்செய்து நின்று
      பார்மல்கு சேனை அவித்த
      பரஞ்சுட ரைநினை தாடி.
      நீர்மல்கு கண்ணின ராகி
      நெஞ்சம் குழைந்துநை யாதே
      ஊர்மல்கி மோடு பருப்பார்
      உத்தமர்க்க கென்செய் வாரே 3.5.7
      3064
      வார்ப்புனல் அந்தண் ணருவி
      வடதிரு வேங்கட தெந்தை
      பேர்ப்பல சொல்லி பிதற்றி
      பித்தரென் றேபிறர் கூற
      ஊர்ப்பல புக்கும் புகாதும்
      உலோகர் சிரிக்கநின் றாடி
      ஆர்வம் பெருகி குனிப்பார்
      அமரர் தொழப்படு வாரே. 3.5.8
      3065
      அமரர் தொழப்படு வானை
      அனைத்துல குக்கும் பிரானை
      அமரர் மனத்தினுள் யோகு
      புணர்ந்தவன் தன்னோடொன் றாக
      அமர துணியவல் லார்கள்
      ஒழியஅல் லாதவ ரெல்லாம்
      அமர நினைந்தெழு தாடி
      அலற்றுவ தேகரு மமே. 3.5.9
      3066
      கருமமும் கரும பலனும்
      ஆகிய காரணன் தன்னை
      திருமணி வண்ணனை செங்கண்
      மாலினை தேவ பிரானை
      ஒருமை மனத்தினுள் வைத்து
      உள்ளங் குழைந்தெழு தாடி
      பெருமையும் நாணும் தவிர்ந்து
      பிதற்றுமின் பேதமை தீர்ந்தே. 3.5.10
      3067
      தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்தி பணிகொள்ள வல்ல
      ஆர்ந்த புகழ சுதனை அமரர் பிரானையெம் மானை
      வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்
      நேர்ந்தவோ ராயிர திப்ப தருவினை நீறு செய்யுமே. 2 3.5.11
      3068
      செய்ய தாமரை கண்ண னாயுல
      கேழு முண்ட அவன்கண்டீர்
      வையம் வானம் மனிசர் தெய்வம்
      மற்றும்
      செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளி
      பட்டி வைபடை தான்பின்னும்
      மொய்கொள் சோதியொ டாயி னானொரு
      மூவ ராகிய மூர்த்தியே. 2 3.6.1
      3069
      மூவ ராகிய மூர்த்தி யைமுதல்
      மூவர குமுதல் வன்றன்னை
      சாவ முள்ளன நீக்கு வானை
      தடங்க டல்கிட தான்தன்னை
      தேவ தேவனை தென்னி லங்கை
      எரியெ ழச்செற்ற வில்லியை
      பாவ நாசனை பங்க யத்தடங்
      கண்ண னைப்பர வுமினோ. 3.6.2
      3070
      பரவி வானவ ரேத்த நின்ற
      பரம னைப்பரஞ் சோதியை
      குரவை கோத்த குழக னைமணி
      வண்ண னைக்குட கூத்தனை
      அரவ மேறி யலைக டலம
      ரும்து யில்கொண்ட அண்ணலை
      இரவும் நன்பக லும்வி டாதென்றும்
      ஏத்து தல்மனம் வைம்மினோ. 3.6.3
      3071
      வைம்மின் நும்மன தென்று யானுரை
      கின்ற மாயவன் சீர்மையை
      எம்ம னோர்க ளுரைப்ப தென் அது
      நிற்க நாடொறும் வானவர்
      தம்மை யாளும் அவனும் நான்முக
      னும்ச டைமுடி அண்ணலும்
      செம்மை யாலவன் பாத பங்கயம்
      சிந்தி தேத்தி திரிவரே. 3.6.4
      3072
      திரியும் கற்றொ டகல்வி சும்பு
      திணிந்த மண்கிட தகடல்
      எரியும் தீயொ டிருசு டர்தெய்வம்
      மற்றும்
      கரிய மேனியன் செய்ய தாமரை
      கண்ணன் கண்ணன்விண் ணோரிறை
      சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்
      சுடர்மு டியண்ணல் தோற்றமே. 3.6.5
      3073
      தோற்ற கேடவை யில்ல வனுடை
      யான வனொரு மூர்த்தியாய்
      சீற்ற தோடருள் பெற்ற வனடி
      கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்
      நாற்ற தோற்ற சுவையொ லிஊ றல்
      ஆகி நின்றஎம் வானவர்
      ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை
      யானி லேனெழு மைக்குமே. 3.6.6
      3074
      எழுமை குமென தாவி கின்னமு
      தத்தி னைஎன தாருயிர்
      கெழுமி யகதிர சோதி யைமணி
      வண்ண னைக்குட கூத்தனை
      விழுமி யவம ரர்மு நிவர்வி
      ழுங்கும் கன்னல் கனியினை
      தொழுமின் தூயம னத்த ராயிறை
      யும்நில் லாதுய ரங்களே. 3.6.7
      3075
      துயர மேதரு துன்ப இன்ப
      வினைக ளாய்அ வை அல்லனாய்
      உயர நின்றதோர் சோதி யாயுல
      கேழு முண்டுமிழ தான்தன்னை
      அயர வாங்கு நமன்த மர்க்கரு
      நஞ்சி னையச்சு தன்தன்னை
      தயர தற்கும கனறன் னையன்றி
      மற்றி லேன்தஞ்ச மாகவே. 3.6.8
      3076
      தஞ்ச மாகிய தந்தை தாயொடு
      தானு மாயவை அல்லனாய்
      எஞ்ச லிலம ரர்க்கு லமுதல்
      மூவர் தம்முள்ளு மாதியை
      அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்.
      அவனி வனென்று கூழேன்மின்
      நெஞ்சி னால்நினை பான்ய வனவன்
      ஆகும் நீள்கடல் வண்ணனே. 3.6.9
      3077
      கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு
      மாணி கமென தாருயிர்
      படவ ரவின ணைக்கி டந்த
      பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்
      அடவ ரும்படை மங்க ஐவர்க்க
      காகி வெஞ்சமத்து அன்றுதேர்
      கடவி யபெரு மான்க னைகழல்
      காண்ப தென்றுகொல் கண்களே 3.6.10
      3078
      கண்கள் காண்டற் கரிய னாய்க்கரு
      துக்கு நன்றுமெ ளியனாய்
      மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்
      செய்யும் வானவ ரீசனை
      பண்கொள் சோலை வழுதி நாடன்
      குருகை கோன்சட கோபன்சொல்
      பண்கொள் ஆயிர திப்ப தால்பத்த
      ரா கூடும் பயலுமினே. 2 3.6.11
      3079
      பயிலும் சுடரொளி மூர்த்தியை பங கண்ணனை
      பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை
      பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்
      பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே. 2 3.7.1
      3080
      ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்றன்னை
      தோளுமோர் நான்குடை தூமணி வண்ணனெம் மான்தன்னை
      தாளும் தடக்கையும் கூப்பி பணியும் அவர்க்கண்டீர்
      நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே. 3.7.2
      3081
      நாதனை ஞாலமும் வானமும்
      ஏத்தும் நறுந்துழா
      போதனை பொன்னெடுஞ் சக்கர
      தெந்தை பிரான்தன்னை
      பாதம் பணியவல் லாரை
      பணியும் அவர்க்கண்டீர்
      ஓதும் பிறப்பிடை தோறெம்மை
      யாளுடை யார்களே. 3.7.3
      3082
      உடையார்ந்த வாடையன் கண்டிகை
      யன்உ டை நாணினன்
      புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி
      யன்மற்றும் பல்கலன்
      நடையா வுடைத்திரு நாரணன்
      தொண்டர்தொண் டர்க்கண்டீர்
      இடையார் பிறப்பிடை தோறெ
      கெம்பெரு மக்களே. 3.7.4
      3083
      பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
      மானை அமரர்க
      கருமை யொழியஅ ன் றாரமு
      தூட்டிய அப்பனை
      பெருமை பிதற்றவல் லாரை
      பிதற்றும் அவர்க்கண்டீர்
      வருமையு மிம்மையும் நம்மை
      யளிக்கும் பிராக்களே. 3.7.5
      3084
      அளிக்கும் பரமனை கண்ணனை
      ஆழி பிரான்தன்னை
      துளிக்கும் நறுங்கண்ணி தூமணி
      வண்ணனெம் மான்தன்னை
      ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்து
      கொள்ளும் அவர்க்கண்டீர்
      சலிப்பின்றி யாண்டெம்மை சன்மசன்
      மாந்தரங் காப்பரே. 3.7.6
      3085
      சன்மசன் மாந்தரங் காத்தடி
      யார்களை கொண்டுபோய்
      தன்மை பொறுத்தித்தன் தாளிணை
      கீழ்க்கொள்ளும் அப்பனை
      தொன்மை பிதற்றவல் லாறை
      பிதற்றும் அவர்கண்டீர்
      நம்மை பெறுத்தெம்மை நாளு
      கொள்கின்ற நம்பரே. 3.7.7
      3086
      நம்பனை ஞாலம் படைத்தவ
      னைதிரு மார்பனை
      உம்பர் உலகினில் யார்க்கும்
      உணர்வரி யான்தன்னை
      கும்பி நரகர்கள் ஏத்துவ
      ரேலும் அவர்கண்டீர்
      எம்பல் பிறப்பிடை தோறெம்
      தொழுகுலம் தாங்களே. 3.7.8
      3087
      குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
      கீழிழிந்து எத்தனை
      நலந்தா னிலாதசண் டாளசண்
      டாளர்க ளாகிலும்
      வலந்தாங்கு சக்கர தண்ணல்
      மணிவண்ணற் காளென்றுள்
      கலந்தார் அடியார் தம்மடி
      யாரெம் மடிகளே. 3.7.9
      3088
      அடியார்ந்த வையமுண் டாலிலை
      யன்ன சஞ்செய்யும்
      படியாது மில்குழ விப்படி
      யெந்தைபி ரான்றனக்கு
      அடியார்
      யார்அ டி யார்த
      கடியார் அடியார் தம்அடி
      யாரடி யோங்களே. 3.7.10
      3089
      அடியோங்கு நூற்றவர் வீயஅ ன்
      றைவரு கருள்செய்த
      நெடியோனை தென்குரு கூர்ச்சட
      கோபன்குற் றேவல்கள்
      அடியார்ந்த ஆயிர துள்ளிவை
      பத்தவன் தொண்டர்மேல்
      முடிவுஆர கற்கில் சன்மம்செய்
      யாமை முடியுமே. 2 3.7.11
      3090
      முடியானே. மூவுலகும் தொழுதே தும்சீர்
      அடியானே ஆழ்கடலை கடைந்தாய். புள்ளூர்
      கொடியானே கொண்டல்வண் ணா.அண்ட துமபரில்
      நெடியானே. என்று கிடக்குமென் நெஞ்சமே. 2 3.8.1
      3091
      நெஞ்சமே. நீள்நக ராக இருந்தவென்
      தஞ்சனே தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
      நஞ்சனே ஞாலங்கொள் வான்குற ளாகிய
      வஞ்சனே என்னுமெ போதுமென் வாசகமே. 3.8.2
      3092
      வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
      நாயகனே நாளிள திங்களை கோள்விடுத்து
      வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
      தாயவனே என்று தடவுமென் கைகளே. 3.8.3
      3093
      கைகளால் ஆர தொழுது தொழுதுன்னை
      வைகலும் மாத்திரை போதுமோர் வீடின்றி
      பைகொள் பாம்பேறி உறைபர னேஉன்னை
      மெய்கொள்ள காண விரும்புமென் கண்களே. 3.8.4
      3094
      கண்களால் காண வருங்கொலைன் றாசையால்
      மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்
      பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து
      திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே. 3.8.5
      3095
      செவிகளால் ஆரநின் கீர்த்தி கனியென்னும்
      கவிகளே காலப்பண் தேனுறை பத்துற்று
      புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கர துன்னையே
      அவிவின்றி யாதரி கும்என தாவியே. 3.8.6
      3096
      ஆவியே. ஆரமு தே.என்னை ஆளுடை
      தூவியம் புள்ளுடை யாய்.சுடர் நேமியாய்
      பாவியேன் நெஞ்சம் புல பலகாலும்
      கூவியும் காண பெறேனுன கோலமே. 3.8.7
      3097
      கோலமே. தாமரை கண்ணதோர் அஞ்சன
      நீலமே நின்றென தாவியை யீர்கின்ற
      சீலமே சென்றுசொல் லாதன முன்நிலாம்
      காலமே உன்னையெ நாள்கண்டு கொள்வனே 3.8.8
      3098
      கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
      கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
      உள்வன்மை தீரஓ ராயிரம் தோள்துணித்த
      புள்வல்லாய் உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே 3.8.9
      3099
      பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
      பெருந்தகாய் உன்கழல் காணிய பேதுற்று
      வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
      இருந்திரு தெத்தனை காலம் புலம்புவனே. 3.8.10
      3100
      புலம்புசீர பூமி அளந்த பெருமானை
      நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்சொல்
      வலங்கொண்ட ஆயிர துள்ளிவை யுமோர்ப்பத்து
      இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே. 2 3.8.11
      3101
      சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ
      என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்
      தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து
      என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1
      3102
      உளனாக வேயெண்ணி தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
      வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்
      குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
      உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே 3.9.2
      3103
      ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவபோம்
      வழியை தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்
      கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்
      இழி கருதியோர் மானிடம் பாடலென் னாவதே. 3.9.3
      3104
      என்னாவ தெத்தெனை நாளைக்கு போதும் புலவீர்காள்
      மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும்பொருள்
      மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையை பாடினால்
      தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே. 3.9.4
      3105
      கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
      வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
      கொள்ள குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்என்
      வள்ளல் மணிவண்ணன் தன்னை கவி சொல்ல வம்மினோ. 3.9.5
      3106
      வம்மின் புலவீர்.நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ
      இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்
      நும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்
      செம்மின் சுடர்முடி என்திருமாலுக்கு சேருமே. 3.9.6
      3107
      சேரும் கொடைபுகழ் எல்லையிலானைஓ ராயிரம்
      பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன்
      மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று
      பாரிலோர் பற்றையை பச்சைப்பசும்பொய்கள் வேயவே. 3.9.7
      3108
      வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை
      ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்
      காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்
      மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே 3.9.8
      3109
      வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்
      ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானென கேயுளன்
      சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
      நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே. 3.9.9
      3110
      நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்
      சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழி பானெண்ணி
      ஒன்றியொன் றியுல கம்படை தாங்கவி யாயினேற்கு
      என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே 3.9.10
      3111
      ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு
      ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்
      ஏற்கும் பெரும்புகழ் ஆயிர துள்ளிவையும் ஓர்ப்பத்து
      ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே. 3.9.11
      3112
      சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
      சங்கொடு சக்கரம்வில்
      ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு
      கொண்டுபுள் ளூர்ந்துஉலகில்
      வன்மை யுடைய அரக்கர் அசுரரை
      மாள படைபொருத
      நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற
      நானோர் குறைவிலனே. 2 3.10.1
      3113
      குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்
      கோலச்செ தாமரைக்கண்
      உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த
      ஒளிமணி வண்ணன் கண்ணன்
      கறையணி மூக்குடை புள்ளி கடாவி
      அசுரரை காய்ந்தவம்மான்
      நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
      யானொரு முட்டிலனே. 3.10.2
      3114
      முட்டில்பல் போக தொருதனி நாயகன்
      மூவுல குக்குரிய
      கட்டியை தேனை அமுதைநன் பாலை
      கனியை கரும்புதன்னை
      மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை
      வணங்கி அவன்திறத்து
      பட்டபின் னைஇறை யாகிலும் யானென்
      மனத்து பரிவிலனே. 3.10.3
      3115
      பரிவின்றி வாணனை காத்தும் என் றன்று
      படையொடும் வந்தெதிர்ந்த
      திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
      அங்கியும் போர்தொலைய
      பொருசிறை புள்ளை கடாவிய மாயனை
      ஆயனை பொற்சக்கர
      தரியினை அச்சுத னைப்பற்றி யானிறை
      யேனும் இடரிலனே. 3.10.4
      3116
      இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்
      லாவுல கும்கழிய
      படர்ப்புகழ பார்த்தனும் வைதிக னுமுடன்
      ஏறத்திண் தேர்க்கடவி
      சுடரொளி யாய்நின்ற தன்னுடை சோதியில்
      வைதிகன் பிள்ளைகளை
      உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
      ஒன்றும் துயரிலனே. 3.10.5
      3117
      துயரில் சுடரொளி தன்னுடை சோதி
      நின்ற வண்ணம் நிற்கவே
      துயரில் மலியும் மனிசர் பிறவியில்
      தோன்றிக்கண் காணவந்து
      துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில்
      புக வுய்க்குமம்மான்
      துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
      யானோர்து ன்பமிலனே. 3.10.6
      3118
      துன்பமும் இன்பமு மாகிய செய்வினை
      யாயுல கங்களுமாய்
      இன்பமில் வெந்நர காகி இனியநல்
      வான் சுவர கங்களுமாய்
      மன்பல் லுயிர்களு மாகி பலபல
      மாய மயக்குகளால்
      இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்
      றேதுமல் லலிலனே. 3.10.7
      3119
      அல்லலில் இன்பம் அளவிற தெங்கும்
      அழகமர் சூழொளியன்
      அல்லி மலர்மகள் போக மயக்குகள்
      ஆகியும் நிற்குமம்மான்
      எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல்
      லாக்கரு மங்களும்செய்
      எல்லையில் மாயனை கண்ணனை தாள்பற்றி
      யானோர்து கமிலனே. 3.10.8
      3120
      துக்கமில் ஞான சுடரொளி மூர்த்தி
      துழாயலங் கல்பெருமான்
      மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து
      வேண்டும் உருவுகொண்டு
      நக்கபி ரானோ டயன்முத லாகஎல்
      லாரும் எவையும்தன்னுள்
      ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்
      றொன்றும் தளர்விலனே. 3.10.9
      3121
      தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த
      தனிமுதல் ஞானமொன்றாய்
      அளவுடை யைம்புலன் களறி யாவகை
      யாலரு வாகிநிற்கும்
      வளரொளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
      ஐந்தை யிருசுடரை
      கிளரொளி மாயனை கண்ணனை தாள்பற்றி
      யானென்றும் கேடிலனே. 3.10.10
      3122
      கேடில்வி ழுப்புகழ கேசவ னைக்குரு
      கூர்ச்சட கோபன் சொன்ன
      பாடலோ ராயிர துளிவை பத்தும்
      பயிற்றவல் லார்கட்குஅவன்
      நாடும் நகரமும் நன்குடன் காண
      நலனிடை யூர்தி பண்ணி
      வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்
      தருமொரு நாயகமே. 2 3.10.11
      திருவாய் மொழி நான்காம் பத்து
      3123
      ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்
      கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
      பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்
      திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தி துய்ம்மினோ. 4.1.1
      3124
      உய்ம்மின் திறைகொணர தென்றுலகாண்டவர் இம்மையே
      தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ள தாம்விட்டு
      வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்
      செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ. 4.1.2
      3125
      அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ
      இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
      பொடிசேர் துகளா போவர்களாதலின் நொக்கென
      கடிசேர் துழாய்முடி கண்ணன் கழல்கள் நினைமினோ. 4.1.3
      3126
      நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்
      எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்
      மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்று கண்டிலம்
      பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ. 4.1.4
      3127
      பணிமின் திருவருள் என்னும்அஞ்சீத பைம்பூம்பள்ளி
      அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்
      துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழி பச்செல்வர்
      மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ. 4.1.5
      3128
      வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
      ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா
      வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்
      ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ. 4.1.6
      3129
      ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்
      தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்
      ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்
      கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே. 4.1.7
      3130
      குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து
      இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்
      மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை
      பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ. 4.1.8
      3131
      படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று
      செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்
      குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை
      கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. 4.1.9
      3132
      குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட
      இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்
      சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை
      மறுபகலில் ஈசனை பற்றி விடாவிடில் வீடஃதே. 4.1.10
      3133
      அஃதே உ புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்
      கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்
      செய்கோல தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்
      அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே. 2 4.1.11
      3134
      பாலனா யேழுல குண்டு பரிவின்றி
      ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்
      தாளிணை மேலணி தண்ண துழாயென்றே
      மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே. 2 4.2.1
      3135
      வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்
      கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
      நல்லடி மேலணி நாறு துழாயென்றே
      சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே. 4.2.2
      3136
      பாவியல் வேதநன் மாலை பலகொண்டு
      தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
      சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
      கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே. 4.2.3
      3137
      கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்
      பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான்பரன்
      பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
      ஓதுமால் ஊழ்வினை யேன்தட தோளியே. 4.2.4
      3138
      தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ
      கோளியார் கோவல னார்க்குட கூத்தனார்
      தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
      நாளுநாள் நைகின்ற தால்எ ன்தன் மாதரே. 4.2.5
      3139
      மாதர்மா மண்மட தைபொரு டேனமாய்
      ஆதியங் கால தகலிடம் கீண்டவர்
      பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
      ஓதும்மால் எய்தினள் என்தன் மடந்தையே. 4.2.6
      3140
      மடந்தையை வண்கம லத்திரு மாதினை
      தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
      வடங்கொள்பூ தண்ண துழாய்மலர கேயிவள்
      மடங்குமால் வாணுத லீர்.என் மடக்கொம்பே. 4.2.7
      3141
      கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
      அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி
      வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர கேயிவள்
      நம்புமால் நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். 4.2.8
      3142
      நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர்
      எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை
      சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்
      இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன் 4.2.9
      3143
      என்செய்கேன் என்னுடை பேதையென் கோமளம்
      என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்
      மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்
      பொன்செய்பூண் மென்முலை கென்று மெலியுமே. 4.2.10
      3144
      மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்
      மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
      ஒலிபுகழ் ஆயிர திப்பத்தும் வல்லவர்
      மலிபுகழ் வானவர காவர்நற் கோவையே.2 4.2.11
      3145
      கோவை வாயாள் பொருட்டேற்றின்
      எருத்தம் இறுத்தாய் மதிளிலங்கை
      கோவை வீ சிலைகுனித்தாய்.
      குலநல் யானை மருப்பொசித்தாய்
      பூவை வீயா நீர்தூவி
      போதால் வணங்கே னேலும்நின்
      பூவை வீயாம் மேனிக்கு
      பூசும் சாந்தென் னெஞ்சமே. 2 4.3.1
      3146
      பூசும் சாந்தென் னெஞ்சமே
      புனையும் கண்ணி எனதுடைய
      வாச கம்செய் மாலையே
      வான்ப டாடை யுமஃதே
      தேச மான அணிகலனும்
      என்கை கூப்பு செய்கையே
      ஈசன் ஞால முண்டுமிழ்ந்த
      எந்தை யேக மூர்த்திக்கே. 4.3.2
      3147
      ஏக மூர்த்தி இருமூர்த்தி
      மூன்று மூர்த்தி பலமூர்த்தி
      ஆகி ஐந்து பூதமாய்
      இரண்டு சுடராய் அருவாகி
      நாகம் ஏறி நடுக்கடலுள்
      துயின்ற நாரா யணனேஉன்
      ஆகம் முற்றும் அகத்தடக்கி
      ஆவி யல்லல் மாய்த்ததே. 4.3.3
      3148
      மாய்த்தல் எண்ணி வாய்முலை
      தந்த மா பேயுயிர்
      மாய்த்த ஆய மாயனே.
      வாம னனே மாதவா
      பூத்தண் மாலை கொண்டுன்னை
      போதால் வணங்கே னேலும்நின்
      பூத்தண் மாலை நெடுமுடிக்கு
      புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4
      3149
      கண்ணி யெனதுயிர் காதல் கனக சோதி முடிமுதலா
      எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே
      நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே
      கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கர தானுக்கே. 4.3.5
      3150
      கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்
      ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று
      ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்
      கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 4.3.6
      3151
      குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா
      குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே
      விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்உன்
      உரைகொள் சோதி திருவுருவம் என்ன தாவி மேலதே. 4.3.7
      3152
      என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்
      துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்
      உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன
      இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே 4.3.8
      3153
      உரைக்க வல்லேன் அல்லேனுன்
      உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
      கரைக்கண் என்று செல்வன்நான்
      காதல் மையல் ஏறினேன்
      புரைப்பி லாத பரம்பரனே.
      பொய்யி லாத பரஞ்சுடரே
      இரைத்து நல்ல மேன்மக்கள்
      ஏத்த யானும் ஏத்தினேன். 4.3.9
      3154
      யானும் ஏத்தி ஏழுலகும்
      முற்றும் ஏத்தி பின்னையும்
      தானும் ஏத்தி லும்தன்னை
      ஏத்த
      தேனும் பாலும் கன்னலும்
      அமுதுமாகி தித்திப்ப
      யானு மெம்பி ரானையே
      ஏத்தி னேன்யா னுய்வானே. 4.3.10
      3155
      உய்வு பாயம் மற்றின்மை
      தேறி கண்ணன் ஒண்கழல்கள்மேல்
      செய்ய தாம ரைப்பழன
      தென்னன் குருகூர சடகோபன்
      பொய்யில் பாடல் ஆயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்
      வையம் மன்னி வீற்றிருந்து
      விண்ணும் ஆள்வர் மண்ணூடே. 2 4.3.11
      3156
      மண்ணை யிருந்து துழாவி
      வாமனன் மண்ணிது என்னும்
      விண்ணை தொழுதவன் மேவு
      வைகுந்த மென்றுகை காட்டும்
      கண்ணையுள் நீர்மல்க நின்று
      கடல்வண்ணன் என்னும் அன்னே.என்
      பெண்ணை பெருமயல் செய்தாற்
      கென்செய்கேன் பெய்வளை யீரே 2 4.4.1
      3157
      பெய்வளை கைகளை கூப்பி
      பிரான்கிட கும்கடல் என்னும்
      செய்யதோர் ஞாயிற்றை காட்டி
      சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
      நையும்கண் ணீர்மல்க நின்று
      நாரணன் என்னும்அ ன் னேஎன்
      தெய்வ வுருவில் சிறுமான்
      செய்கின்ற தொன்றறி யேனே. 4.4.2
      3158
      அறியும்செ தீயை தழுவி
      அச்சுதன் என்னும்மெய் வேவாள்
      எறியும்தண் காற்றை தழுவி
      என்னுடை கோவிந்தன் என்னும்
      வெறிகொள் துழாய்மலர் நாறும்
      வினையுடை யாட்டியேன் பெற்ற
      செறிவளை முன்கை சிறுமான்
      செய்கின்ற தென்கண்ணு கொன்றே. 4.4.3
      3159
      ஒன்றிய திங்களை காட்டி
      ஒளிமணி வண்ணனே என்னும்
      நின்ற குன்றத்தினை நோக்கி
      நெடுமாலே. வா என்று கூவும்
      நன்றுபெய் யும்மழை காணில்
      நாரணன் வந்தான் என் றாலும்
      என்றின மையல்கள் செய்தார்
      என்னுடை கோமள தையே. 4.4.4
      3160
      கோமள வான்கன்றை புல்கி
      கோவிந்தன் மேய்த்தன என்னும்
      போமிள நாகத்தின் பின்போய்
      அவன்கிட கையீ தென்னும்
      ஆமள வொன்றும் அறியேன்
      அருவினை யாட்டியேன் பெற்ற
      கோமள வல்லியை மாயோன்
      மால்செய்து செய்கின்ற கூத்தே. 4.4.5
      3161
      கூத்தர் குடமெடு தாடில்
      கோவிந்த னாம் எனா ஓடும்
      வாய்த்த குழலோசை கேட்கில்
      மாயவன் என்றுமை யாக்கும்
      ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
      அவனுண்ட வெண்ணெயீ தென்னும்
      பேய்ச்சி முலைசுவை தாற்கென்
      பெண்கொடி யேறிய பித்தே. 4.4.6
      3162
      ஏறிய பித்தினோ டெல்லா
      வுலகும்கண் ணன்படை பென்னும்
      நீறுசெவ் வேயிட காணில்
      நெடுமால் அடியார் என் றோடும்
      நாறு துழாய்மலர் காணில்
      நாரணன் கண்ணியீ தென்னும்
      தேறியும் தேறாது மாயோன்
      திறத்தன ளேயி திருவே. 4.4.7
      3163
      திருவுடை மன்னரை காணில்
      திருமாலை கண்டேனே என்னும்
      உருவுடை வண்ணங்கள் காணில்
      உலகள தான் என்று துள்ளும்
      கருவுடை தேவில்க ளெல்லாம்
      கடல்வண்ணன் கோயிலே என்னும்
      வெருவிலும் வீழ்விலும் ஓவா
      கண்ணன் கழல்கள் விரும்புமே. 4.4.8
      3164
      விரும்பி பகைவரை காணில்
      வியலிடம் உண்டானே. என்னும்
      கரும்பெரு மேகங்கள் காணில்
      கண்ணன் என் றேற பறக்கும்
      பெரும்புல ஆநிரை காணில்
      பிரானுளன் என்றுபின் செல்லும்
      அரும்பெறல் பெண்ணினை மாயோன்
      அலற்றி அயர்ப்பிக்கின் றானே. 4.4.9
      3165
      அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்
      அகலவே நீள் நோக்கு கொள்ளும்
      வியர்க்கும் மழைக்கண் துளும்ப
      வெவ்வுயிர கொள்ளும்மெய் சோரும்
      பெயர்த்தும் கண் ணா. என்று பேசும்
      பெருமானே. வா. என்று கூவும்
      மயல்பெருங் காதலென் பேதை
      கென்செய்கேன் வல்வினை யேனே. 4.4.10
      3166
      வல்வினை தீர்க்கும் கண்ணனை
      வண்குரு கூர்ச்சட கோபன்
      சொல்வினை யால்சொன்ன பாடல்
      ஆயிர துள்ளிவை பத்தும்
      நல்வினை யென்றுகற் பார்கள்
      நலனிடை வைகுந்தம் நண்ணி
      தொல்வினை தீரவெல் லாரும்
      தொழுதெழ வீற்றிரு பாரே. 2 4.4.11
      3167
      வீற்றிரு தேழுலகும் தனிக்கோல் செல்ல வீவில்சீர்
      ஆற்றல்மி காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை
      போற்றி யென்றே கைகளார தொழுது சொல்மாலைகள்
      ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே 2 4.5.1
      3168
      மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்
      செய்ய கொல தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
      மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ள பெற்றேன்
      வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. 4.5.2
      3169
      வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்
      வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
      வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
      வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே. 4.5.3
      3170
      மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்
      தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை
      நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்
      ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே. 4.5.4
      3171
      ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை அமரர்தம்
      ஏற்றை யெல்லா பொருளும் விரித்தானை எம்மான்தன்னை
      மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்
      காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே. 4.5.5
      3172
      கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்
      பெரிய கோல தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
      உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ள பெற்றேற்கு
      அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே 4.5.6
      3173
      என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும் தன்றன
      கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை
      குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்
      நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே 4.5.7
      3174
      நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
      தமக்கும் வான தவர்க்கும் பெருமானை தண்டாமரை
      சுமக்கும் பாத பெருமானை சொன்மாலைகள் சொல்லுமா
      றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே 4.5.8
      3175
      வானத்தும் வானத்துள் ளும்பரும்
      மண்ணுள்ளும் மண்ணின்கீழ
      தானத்தும் எண்டிசை யும்தவி
      ராதுநின் றான்தன்னை
      கூனற்சங் கத்தட கையவனை
      குடமாடியை வான
      கோனை கவிசொல்ல வல்லேற்
      கினிமா றுண்டோ 4.5.9
      3176
      உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
      இடந்தும் கிடந்தும்நின்றும்
      கொண்ட கோல தொடுவீற்
      றிருந்தும் மணங்கூடியும்
      கண்ட வாற்றால் தனக்கே
      யுலகென நின்றான்தன்னை
      வண்தமிழ் நூற்க நோற்றேன்
      அடியார கின்பமாரியே. 4.5.10
      3177
      மாரி மாறாத தண்ணம்மலை
      வேங்கட தண்ணலை
      வாரி வாறாத பைம்பூம்
      பொழில்சூழ் குருகூர்நகர்
      காரி மாறன் சடகோபன்
      சொல்லாயிர திப்பத்தால்
      வேரி மாறாத பூமே
      லிருப்பாள் வினைதீர்க்குமே. 2 4.5.11
      3178
      தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம்
      நாடுதும் அன்னைமீர்
      ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்
      னோயிது தேறினோம்
      போர்ப்பாகு தான்செய்தன் றைவரை
      வெல்வித்த மாயப்போர
      தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை
      துழாய்த்திசை கின்றதே. 4.6.1
      3179
      திசைக்கின்ற தேயிவள் நோயிது
      மிக்க பெருந்தெய்வம்
      இசைப்பின்றி நீரணங் காடும்
      இளந்தெய்வம் அன்றிது
      திசைப்பின்றி யேசங்கு சக்கர
      மென்றிவள் கேட்கநீர்
      இசைக்கிற்றி ராகில்நன் றேயில்
      பெறுமிது காண்மினே. 4.6.2
      3180
      இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு
      விச்சிசொற் கொண்டுநீர்
      எதுவானும் செய்தங்கோர் கள்ளும்
      இறைச்சியும் தூவேல்மின்
      மதுவார் துழாய்முடி மா
      பிரான்கழல் வாழ்த்தினால்
      அதுவே யிவளுற்ற நோய்க்கும்
      அருமரு தாகுமே. 4.6.3
      3181
      மருந்தாகும் என்றங்கோர் மாய
      வலவைசொற் கொண்டுநீர்
      கருஞ்சோறும் மற்றை செஞ்சோறும்
      களனிழை தென்பயன்
      ஒருங்காக வேயுல கேழும்
      விழுங்கி உமிழ்ந்திட்ட
      பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில்
      இவளை பெறுதிரே. 4.6.4
      3182
      இவளை பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ
      குவளை தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்
      கவள கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்
      தவள பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே. 4.6.5
      3183
      தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்
      பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்
      மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு
      அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே. 4.6.6
      3184
      அணங்கு கருமரு தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய்
      துணங்கை யெறிந்துநு தோள்குலைக்கப்படும் அன்னைமீர்
      உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்
      வணங்கீர்கள் மா பிரான்தமர் வேதம்வல் லாரையே. 4.6.7
      3185
      வேதம்வல் லார்களை கொண்டுவிண்ணோர்பெரு மான்திரு
      பாதம் பணிந்துஇவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
      ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்
      கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. 4.6.8
      3186
      கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்
      நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்
      ஏழ்மை பிறப்புக்கும் சேமமி நோய்க்குமீ தேமருந்து
      ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே. 4.6.9
      3187
      உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்
      நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்
      மன்ன படும்மறை வாணனை வண்துவ ராபதி
      மன்னனை ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே. 4.6.10
      3188
      தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
      வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன் சொல்
      வழுவாத ஆயிர துள்ளிவை பத்து வெறிகளும்
      தொழுதாடி பாடவல் லார்துக்க சீலம் இலர்களே. 4.6.11
      3189
      சீலம் இல்லா சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்
      ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று
      கால தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
      கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே. 2 4.7.1
      3190
      கொள்ள மாளா இன்ப
      வெள்ளம் கொதில தந்திடும்என்
      வள்ள லேயோ. வையங் கொண்ட
      வாமனா வோ. என்றென்று
      நள்ளி ராவும் நண்பகலும்
      நானிரு தோலமிட்டால்
      கள்ள மாயா. உன்னை
      யென்கண் காணவ தீயாயே. 4.7.2
      3191
      ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்
      தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று
      கூவி கூவி நெஞ்சுருகி கண்பனி சோர நின்றால்
      பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே. 4.7.3
      3192
      காண வந்தென கண்முகப்பே தாமரை கண்பிறழ
      ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று
      நாண மில்லா சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்
      பேணி வானோர் காணமாட்டா பீடுடை யப்பனையே 4.7.4
      3193
      அப்ப னே.அட லாழியானே
      ஆழ்கட லைக்கடைந்த
      துப்ப னேஉன் தோள்கள்
      நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று
      எப்பொ ழுதும் கண்ண
      நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து
      இப்போ ழுதே வந்தி
      டாயென் றேழையேன் நோக்குவனே. 4.7.5
      3194
      நோக்கி
      காண்பான் யானென தாவியுள்ளே
      நாக்கு நீள்வன் ஞான
      மில்லை நாடோ று மென்னுடைய
      ஆக்கை யுள்ளூ மாவி
      யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்
      நீக்க மின்றி யெங்கும்
      நின்றாய். நின்னை யறிந்தறிந்தே. 4.7.6
      3195
      அறிந்த றிந்து தேறி
      தேறி யானென தாவியுள்ளே
      நிறைந்த ஞான மூர்த்தி
      யாயை நின்மல மாகவைத்து
      பிறந்தும் செத்தும் நின்றிடறும்
      பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
      நறுந்து ழாயின் கண்ணி
      யம்மா. நானுன்னை கண்டுகொண்டே. 4.7.7
      3196
      கண்டு கொண்டென் கைக ளார
      நின்திரு பாதங்கள்மேல்
      எண்டி சையு முள்ள
      பூக்கொண் டேத்தி யுகந்துகந்து
      தொண்ட ரோங்கள் பாடி
      யாட சூழ்கடல் ஞாலத்துள்ளே
      வண்டு ழாயின் கண்ணி
      வேந்தே. வந்திட கில்லாயே. 4.7.8
      3197
      இடகி லேனோன் றட்ட
      கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்
      கடவ னாகி கால
      தோறும் பூப்பறி தேத்தகில்லேன்
      மடவன் நெஞ்சம் காதல்
      கூர வல்வினை யேன்அயர்ப்பாய்
      தடவு கின்றே னெங்கு
      காண்பன் சக்கர தண்ணலையே 4.7.9
      3198
      சக்க ரத்தண் ணலேயென்று
      தாழ்ந்து கண்ணீர் ததும்ப
      பக்கம் நோக்கி நின்ற
      லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
      மிக்க ஞான மூர்த்தி
      யாய வேத விளக்கினைஎன்
      தக்க ஞான கண்க
      ளாலே கண்டு தழுவுவனே. 4.7.10
      3199
      தழுவி நின்ற காதல்தன்னால் தாமரை கண்ணன்தன்னை
      குழுவு மாட தென்குரு கூர்மா றன்சட கோபன்சொல்
      வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்
      தழுவ பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே. 2 4.7.11
      3200
      ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
      கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
      நீறாகும் படியாக நிருமித்து படைதொட்ட
      மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. 2 4.8.1
      3201
      மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்
      அணிமான தடவரைத்தோள் அடலாழி தடக்கையன்
      பணிமானம் பிழையாமே யடியேனை பணிகொண்ட
      மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. 4.8.2
      3202
      மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி
      விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞான சிறுகுழவி
      படநாக தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
      நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. 4.8.3
      3203
      நிறையினாற் குறைவில்லா
      நெடும்பணைத்தோள் மடப்பின்னை
      பொறையினால் முலையணைவான்
      பொருவிடைஏழ் அடர்த்துகந்த
      கறையினார் துவருடுக்கை
      கடையாவின் கழிகோல்கை
      சறையினார் கவராத
      தளிர்நிறத்தால் குறைவிலமே. 4.8.4
      3204
      தளிர்நிறத்தால் குறைவில்லா
      தனிச்சிறையில் விளப்புற்ற
      கிளிமொழியாள் காரணமா
      கிளரரக்கன் நகரெரித்த
      களிமலர துழாயலங்கல்
      கமழ்முடியன் கடல்ஞாலத்து
      அளிமிக்கான் கவராத
      அறிவினால் குறைவிலமே. 4.8.5
      3205
      அறிவினால் குறைவில்லா அகல்ஞால தவரறிய
      நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞான தொருமூர்த்தி
      குறியமாண் உருவாகி கொடுங்கோளால் நிலங்கொண்ட
      கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. 4.8.6
      3206
      கிளரொளியால் குறைவில்லா
      அரியுருவா கிளர்ந்தெழுந்து
      கிளரொளிய இரணியன
      தகல்மார்பம் கிழிந்துகந்த
      வளரொளிய கனலாழி
      வலம்புரியன் மணிநீல
      வளரொளியான் கவராத
      வரிவளையால் குறைவிலமே. 4.8.7
      3207
      வரிவளையால் குறைவில்லா
      பெருமுழக்கால் அடங்காரை
      எரியழலம் புகவூதி
      யிருநிலமுன் துயர்தவிர்த்த
      தெரிவரிய சிவன்பிரமன்
      அமரர் கோன் பணிந்தேத்தும்
      விரிபுகழான் கவராத
      மேகலையால் குறைவிலமே. 4.8.8
      3208
      மேகலையால் குறைவில்லா
      மெலிவுற்ற அகலல்குல்
      போகமகள் புகழ்த்தந்தை
      விறல்வாணன் புயம்துணித்து
      நாகமிசை துயில்வான்போல்
      உலகெல்லாம் நன்கொடுங்க
      யோகணைவான் கவராத
      வுடம்பினால் குறைவிலமே. 4.8.9
      3209
      உடம்பினால் குறைவில்லா
      உயிர்பிரிந்த மலைத்துண்டம்
      கிடந்தனபோல் துணிபலவா
      அசுரர் குழாம் துணித்துகந்த
      தடம்புனல சடைமுடியன்
      தனியொருகூ றமர்ந்துறையும்
      உடம்புடையான் கவராத
      உயிரினால் குறைவிலமே. 4.8.10
      3210
      உயிரினால் குறைவில்லா
      உலகேழ்தன் உள்ளொடுக்கி
      தயிர்வெண்ணெ யுண்டானை
      தடங்குருகூர சடகோபன்
      செயிரில்சொல் லிசைமாலை
      யாயிரத்து ளிப்பத்தால்
      வயிரம்சேர் பிறப்பறுத்து
      வைகுந்தம் நண்ணுவரே. 2 4.8.11
      3211
      நண்ணாதார் முறுவலிப்ப
      நல்லுற்றார் கரைந்தேங்க
      எண்ணாரா துயர்விளைக்கும்
      இவையென்ன உலகியற்கை
      கண்ணாளா. கடல்கடைந்தாய்.
      உனகழற்கே வரும்பரிசு
      தண்ணாவா தடியேனை
      பணிகண்டாய் சாமாறே. 2 4.9.1
      3212
      சாமாறும் கெடுமாறும்
      தமருற்றார் தலைத்தலைப்பெய்து
      ஏமாறி கிடந்தலற்றும்
      இவையென்ன உலகியற்கை
      ஆமாறொன் றறியேன்நான்
      அரவணையாய். அம்மானே
      கூமாறே விரைகண்டாய்
      அடியேனை குறிக்கொண்டே. 4.9.2
      3213
      கொண்டாட்டும் குலம்புனைவும்
      தமருற்றார் விழுநிதியும்
      வண்டார்பூங் குழலாளும்
      மனையொழிய வுயிர்மாய்தல்
      கண்டாற்றேன் உலகியற்கை
      கடல்வண்ணா. அடியேனை
      பண்டேபோல் கருதாதுன்
      அடிக்கேகூ பணிகொள்ளே. 4.9.3
      3214
      கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
      பெருஞ்செல்வம் நெருப்பாக
      கொள்ளென்று தமம்மூடும்
      இவையென்ன உலகியற்கை
      வள்ளலே. மணிவண்ணா.
      உனகழற்கே வரும்பரிசு
      வள்ளல்செய் தடியேனை
      உனதருளால் வாங்காயே. 4.9.4
      3215
      வாங்குநீர் மலருலகில்
      நிற்பனவுமீ திரிவனவும்
      ஆங்குயிர்கள் பிறப்பிறப்பு
      பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்
      ஈங்கிதன்மேல் வெந்நரகம்
      இவையென்ன உலகியற்கை
      வாங்கெனைநீ மணிவண்ணா.
      அடியேனை மறுக்கேலே. 4.9.5
      3216
      மறுக்கிவல் வலைப்படுத்தி
      குமைத்திட்டு கொன்றுண்பர்
      அறப்பொருளை யறிந்தோரார்
      இவையென்ன உலகியற்கை
      வெறித்துளவ முடியானே.
      வினையேனை யுனக்கடிமை
      அறக்கொண்டாய் இனியென்னா
      ரமுதே.கூய் அருளாயே. 4.9.6
      3217
      ஆயே.இவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
      நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்
      நோயேமூ பிறப்பிறப்பு பிணியேயென் றிவையொழி
      கூயேகொள் அடியேனை கொடுவுலகம் காட்டேலே. 4.9.7
      3218
      காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்
      ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டை
      கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து
      கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே 4.9.8
      3219
      கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும்
      தொழாவகை செய்து
      ஆட்டுதிநீ யரவணையாய்.
      அடியேனும் அஃதறிவன்
      வேட்கையெல்லாம் விடுத்தெனையுன்
      திருவடியே சுமந்துழல
      கூட்டரிய திருவடிக்கள்
      கூட்டினைநான் கண்டேனே. 4.9.9
      3220
      கண்டுகே டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
      கண்டவின்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம்
      ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
      கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே. 4.9.10
      3221
      திருவடியை நாரணனைக்கேசவனை பரஞ்சுடரை
      திருவடிசேர் வதுகருதி செழுங்குருகூர சடகோபன்
      திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
      திருவடியே அடைவிக்கும் திருவடிசேர தொன்றுமினே. 2 4.9.11
      3222
      ஒன்று தேவு முலகும்
      உயிரும் மற்றும் யாதுமில்லா
      அன்று நான்முகன் தன்னொடு
      தேவ ருலகோ டுயிர்படைத்தான்
      குன்றம் போல்மணி மாடம்
      நீடு திருக்குரு கூரதனுள்
      நின்ற ஆதிப்பி ரான்நிற்க
      மற்றை தெய்வம் நாடுதிரே. 2 4.10.1
      3223
      நாடி நீர்வ ணங்கும்
      தெய்வமும் உம்மையு முன்படைத்தான்
      வீடில் சீர்ப்புக ழாதிப்பி
      ரானவன் மேவி யுறைகோயில்
      மாட மாளிகை சூழ்ந்தழ
      காய திருக்குரு கூரதனை
      பாடி யாடி பரவி
      செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. 4.10.2
      3224
      பரந்த தெய்வமும் பல்லுல
      கும்படை தன்றுட னேவிழுங்கி
      கரந்து மிழ்ந்து கடந்தி
      டந்தது கண்டும் தெளியகில்லீர்
      சிரங்க ளால்அ மரர்வ
      ணங்கும் திருக்குரு கூரதனுள்
      பரன்திற மன்றி பல்லுலகீர்.
      தெய்வம் மற்றில்லை பேசுமினே. 4.10.3
      3225
      பேச நின்ற சிவனு
      கும்பிர மன்தன கும்பிறர்க்கும்
      நாய கனவ னேக
      பாலநன் மோக்கத்து கண்டுகொள்மின்
      தேச மாமதிள் சூழ்ந்தழ
      காய திருக்குரு கூரதனுள்
      ஈசன் பாலோர் அவம்ப
      றைதலென் னாவதி லிங்கியர்க்கே 4.10.4
      3226
      இலிங்க திட்ட புராண
      தீரும் சமணரும் சாக்கியரும்
      வலிந்து வாதுசெய் வீர்களும்
      மற்றுநு தெய்வமு மாகிநின்றான்
      மலிந்து செந்நெல் கவரி
      வீசும் திருக்குரு கூரதனுள்
      பொலிந்து நின்றபி ரான்கண்டீ
      ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. 2 4.10.5
      3227
      போற்றி மற்றோர் தெய்வம்
      பேண புறத்திட்டு உம்மையின்னே
      தேற்றி வைத்ததெல் லீரும்
      வீடு பெற்றாலுல கில்லையென்றே
      சேற்றில் செந்நெல் கமலம்
      ஓங்கு திருக்குரு கூரதனுள்
      ஆற்ற வல்லவன் மாயம்
      கண்டீரது அறிந்தறி தோடுமினே. 4.10.6
      3228
      ஓடி யோடி பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்
      பாடி யாடி பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்
      கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்
      ஆடு புட்கொடி யாதி மூர்த்தி கடிமை புகுவதுவே. 4.10.7
      3229
      புக்கு அடிமையினால் தன்னை கண்ட
      மார்க்கண்டேயன் அவனை
      நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது
      நாராயணனருளே
      கொக்கலர் தட தாழை வேலி
      திருக்குருகூரதனுள்
      மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை
      தெய்வம் விளம்புதிரே 4-10-8
      3230
      விளம்பும் ஆறு சமய
      மும்அ வை யாகியும் மற்றும்தன்பால்
      அளந்து காண்டற் கரிய
      னாகிய ஆதிப்பி ரானமரும்
      வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ
      காய திருக்குரு கூரதனை
      உளங்கொள் ஞானத்து வைம்மின்
      உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 4.10.9
      3231
      உறுவ தாவ தெத்தேவும்
      எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்
      மறுவில் மூர்த்தியோ டொத்தி
      தனையும் நின்றவண் ணம்நிற்கவே
      செறுவில் செந்நெல் கரும்பொ
      டோ ங்கு திருக்குரு கூரதனுள்
      குறிய மாணுரு வாகிய
      நீள்குட கூத்தனு காட்செய்வதே. 4.10.10
      3232
      ஆட்செய்த தாழிப்பி ரானை
      சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
      நாட்க மழ்மகிழ் மாலை
      மார்பினன் மாறன் சடகோபன்
      வேட்கை யால்சொன்ன பாடல்
      ஆயிர துளிப்ப தும்வல்லார்
      மீட்சி யின்றி வைகுந்த
      மாநகர் மற்றது கையதுவே. 2 4.10.11
      திருவாய் மொழி ஐந்தாம் பத்து
      3233
      கையார் சக்கரத்தெங்கருமாணிக்க மே. என்றென்று
      பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி
      மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க்கின்று காப்பாரார்
      ஐயோ கண்ணபிரான். அறையோ இனிப்போனாலே. 2 5.1.1
      3234
      போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே
      தேனே. இன்னமுதே. என்றென்றேசில கூற்றுச்சொல்ல
      தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்
      வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே. 5.1.2
      3235
      உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி
      வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்
      கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்
      வெள்ள தணைக்கிடந்தாயினியுன்னைவி டெங்கொள்வனே 5.1.3
      3236
      என்கொள்வ னுன்னைவிட்டென்
      னும்வாசகங் கள்சொல்லியும்
      வன்கள்வ னேன்மனத்தை
      வலித்துக்கண்ண நீர் கரந்து
      நின்கண் நெருங்கவைத்தே
      என்தாவியை நீக்ககில்லேன்
      என்கண் மலினமறு
      தென்னைக்கூவி யருளாய்கண்ணனே. 5.1.4
      3237
      கண்ணபி ரானைவிண்ணோர்
      கருமாணிக்க தையமுதை
      நண்ணியும் நண்ணகில்லேன்
      நடுவேயோ ருடம்பிலிட்டு
      திண்ண மழுந்தக்கட்டி
      பலசெய்வினை வன்கயிற்றால்
      புண்ணை மறையவரி
      தெனைப்போரவை தாய்புறமே. 5.1.5
      3238
      புறமற கட்டிக்கொண்டிரு
      வல்வினை யார்குமைக்கும்
      முறைமுறை யாக்கைபுகலொழி
      கண்டு கொண்டொழிந்தேன்
      நிறமுடை நால்தடந்தோள்
      செய்யவாய்செய்ய தாமரைக்கண்
      அறமுய லாழியங்கை
      கருமேனியம் மான்தன்னையே. 5.1.6
      3239
      அம்மா னாழிப்பிரான் அவனெவ்விட தான்யானார்
      எம்மா பாவியர்க்கும்விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்
      கைம்மா துன்பொழித்தாய். என்றுகைதலை பூசலிட்டே
      மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே. 5.1.7
      3240
      மேலா தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்
      மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்
      சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்
      மேலா தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 5.1.8
      3241
      ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்
      நாவாய் போல்பிறவி கடலுள்நின்று நான்துளங்க
      தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்
      ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே. 5.1.9
      3242
      ஆனான் ஆளுடையானென்றஃதேகொண் டுகந்துவந்து
      தானே யின்னருள்செய்தென்னைமுற்றவும் தானானான்
      மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்
      கானா ரெனாமுமா கற்கியாமின்னம் கார்வண்ணனே. 5.1.10
      3243
      கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை
      ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன
      சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிர துளிப்பத்தும்
      ஆர்வண்ண தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே. 5.1.11
      3244
      பொலிக
      போயிற்று வல்லுயிர சாபம்
      நலியும் நரகமும் நைந்த
      நமனுக்கிங் கியாதொன்று மில்லை
      கலியும் கெடும்கண்டு கொள்மின்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
      மலி புகுந்திசை பாடி
      யாடி யுழிதர கண்டோ ம். 2 5.2.1
      3245
      கண்டோ ம்
      கண்ணு கினியன கண்டோ ம்
      தொண்டீர். எல்லீரும் வாரீர்
      தொழுது தொழுதுநின் றார்த்தும்
      வண்டார் தண்ணந்து ழாயான்
      மாதவன் பூதங்கள் மண்மேல்
      பண்டான் பாடிநின் றாடி
      பரந்து திரிகின் றனவே. 5.2.2
      3246
      திரியும் கலியுகம் நீங்கி
      தேவர்கள் தாமும் புகுந்து
      பெரிய கிதயுகம் பற்றி
      பேரின்ப வெள்ளம் பெருக
      கரிய முகில்வண்ண னெம்மான்
      கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
      இரி புகுந்திசை பாடி
      எங்கும் இடங்கொண் டனவே. 5.2.3
      3247
      இடங்கொள் சமயத்தை யெல்லாம்
      எடுத்து களைவன போல
      தடங்கடல் பள்ளி பெருமான்
      தன்னுடை பூதங்க ளேயாய்
      கிடந்தும் இருந்தும் எழுந்தும்
      கீதம் பலபல பாடி
      நடந்தும் பறந்தும் குனித்தும்
      நாடகம் செய்கின் றனவே. 5.2.4
      3248
      செய்கின்ற தென்கண்ணு கொன்றே
      ஒக்கின்ற திவ்வுல கத்து
      வைகுந்தன் பூதங்க ளேயாய்
      மாயத்தி னாலெங்கும் மன்னி
      ஐயமொன் றில்லை யரக்கர்
      அசுரர் பிறந்தீருள் ளீரேல்
      உய்யும் வகையில்லை தொண்டீர்.
      ஊழி பெயர்த்திடும் கொன்றே. 5.2.5
      3249
      கொன்றுயி ருண்ணும் விசாதி
      பகைபசி தீயன வெல்லாம்
      நின்றிவ் வுலகில் கடிவான்
      நேமிப்பி ரான்தமர் போந்தார்
      நன்றிசை பாடியும் துள்ளி
      யாடியும் ஞாலம் பரந்தார்
      சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்.
      சிந்தையை செந்நி றுத்தியே. 5.2.6
      3250
      நிறுத்திநும் உள்ளத்து கொள்ளும்
      தெய்வங்க ளும்மையுய் யக்கொள்
      மறுத்து மவனோடே கண்டீர்
      மார்க்கண் டேயனும் கரியே
      கறுத்த மனமொன்றும் வேண்டா
      கண்ணனல் லால்தெய்வ மில்லை
      இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
      யாயவர கேயி றுமினே. 5.2.7
      3251
      இறுக்கு மிறையிறுத்துண்ண
      எவ்வுல குக்கும்தன் மூர்த்தி
      நிறுத்தினான் தெய்வங்க ளாக
      அத்தெய்வ நாயகன் றானே
      மறுத்திரு மார்வன் அவன்றன்
      பூதங்கள் கீதங்கள் பாடி
      வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்
      மேவி தொழுதுய்ம்மி னீரே. 5.2.8
      3252
      மேவி தொழுதுய்ம்மி னீர்கள்
      வேத புனித இருக்கை
      நாவிற்கொண் டச்சுதன் றன்னை
      ஞான விதிபிழை யாமே
      பூவில் புகையும் விளக்கும்
      சாந்தமும் நீரும் மலிந்து
      மேவி தொழுமடி யாரும்
      பகவரும் மிக்க துலகே. 5.2.9
      3253
      மிக்க வுலகுகள் தோறும்
      மேவிக்கண் ணன்திரு மூர்த்தி
      நக்கபி ரானோ டயனும்
      இந்திர னும்முதலாக
      தொக்க அமரர் குழாங்கள்
      எங்கும் பரந்தன தொண்டீர்
      ஒக்க தொழுகிற்றி ராகில்
      கலியுக மொன்றுமில் லையே. 5.2.10
      3254
      கலியுக மொன்றுமின் றிக்கே
      தன்னடி யார்க்கருள் செய்யும்
      மலியும் சுடரொளி மூர்த்தி
      மாயப்பி ரான்கண்ணன் றன்னை
      கலிவயல் தென்னன் குருகூர
      காரிமா றன்சட கோபன்
      ஒலிபுக ழாயிர திப்பத்து
      உள்ளத்தை மாசறு கும்மே. 2 5.2.11
      3255
      மாசறு சோதியென் செய்ய வாய்மணி குன்றத்தை
      ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே
      பாசற வெய்தி யறிவிழ தெனைநா ளையம்
      ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே 2 5.3.1
      3256
      என்செய்யு மூரவர் கவ்வை தோழீ. இனிநம்மை
      என்செய்ய தாமரை கண்ண னென்னை நிறைகொண்டான்
      முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி
      என்செய்ய வாயும் கருங்கண் ணு பூர்ந்தவே. 5.3.2
      3257
      ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன் பேய்முலை
      சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்
      பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்
      தீர்ந்தவென் தோழீ. என்செய்யு மூரவர் கவ்வையே 5.3.3
      3258
      ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து
      ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்ச பெருஞ்செய்யுள்
      பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த
      காரமர் மேனிநங் கண்ணன் தோழீ. கடியனே. 5.3.4
      3259
      கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட
      அடியன் அறிவரு மேனிமாயத்தன் ஆகிலும்
      கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே
      துடிகொ ளிடைமட தோழீ. அன்னையென் செய்யுமே 5.3.5
      3260
      அன்னையென் செய்யிலென் ஊரென்
      சொல்லிலென் தோழிமீர்
      என்னை யினியு காசை
      யில்லை யகப்பட்டேன்
      முன்னை யமரர் முதல்வன்
      வண்துவ ராபதி
      மன்னன் மணிவண் ணன்வாசு
      தேவன் வலையுளே. 5.3.6
      3261
      வலையுள் அகப்பட்டு தென்னைநன்
      நெஞ்சம் கூவிக்கொண்டு
      அலைகடல் பள்ளி யம்மானை
      ஆழி பிரான்தன்னை
      கலைகொள் அகலல்குல் தோழீ.
      நம்கண்க ளால்கண்டு
      தலையில் வணங்க மாங்கொலோ
      தையலார் முன்பே 5.3.7
      3262
      பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடை
      போய்முதல் சாய்த்து புள்வாய் பிளந்து களிறட்ட
      தூமுறு வல்தொண்டை வாய்ப்பிரானையெ நாள்கொலோ
      யாமுறு கின்றது தோழீ. அன்னையர் நாணவே 5.3.8
      3263
      நாணும் நிறையும் கவர்ந்தென்னை
      நன்னெஞ்சம் கூவிக்கொண்டு
      சேணுயர் வான திருக்கும்
      தேவ பிரான்தன்னை
      ஆணையென் தோழீ. உலகு
      தோறலர் தூற்றிஆம்
      கோணைகள் செய்து
      குதிரியாய் மடலூர்துமே. 5.3.9
      3264
      யாமட லூர்ந்தும் எம்மாழியங்கை பிரானுடை
      தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
      யாமட மின்றி தெருவு தோறயல் தையலார்
      நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே. 5.3.10
      3265
      இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை
      விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன
      நிரைக்கொள தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்
      உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம். 2 5.3.11
      3266
      ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்
      நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
      பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்
      ஆரெல்லே. வல்வினையேன் ஆவிகா பாரினையே 2 5.4.1
      3267
      ஆவிகா பாரினியார் ஆழ்கடல்மண் விண்மூடி
      மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்
      காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்
      பாவியேன் நெஞ்சமே. நீயும்பாங் கல்லையே 5.4.2
      3268
      நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே. நீளிரவும்
      ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்
      காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்
      மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே. 5.4.3
      3269
      பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று
      ஒண்சுடரோன் வாரா தொளித்தான்இம் மண்ணளந்த
      கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்
      எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே 5.4.4
      3270
      ஆரென்னை யாராய்வார் அன்னையரும் தோழியரும்
      நீரென்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
      காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்
      பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே. 5.4.5
      3271
      பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்
      முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்
      மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்
      இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே 5.4.6
      3272
      காப்பாரார் இவ்விடத்து கங்கிருளின் நுண்துளியாய்
      சேட்பால தூழியா செல்கின்ற கங்குல்வாய்
      தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்
      தீப்பால வல்வினையேன் தெய்வங்காள். என்செய்கேன் 5.4.7
      3273
      தெய்வங்காள். என்செய்கேன்ஓரிரவேழ் ஊழியாய்
      மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்
      கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்
      தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே. 5.4.8
      3274
      வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்
      அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்
      செஞ்சுடர தாமரைக்கண் செல்வனும் வாரானால்
      நெஞ்சிடர்தீர பாரினியார் நின்றுருகு கின்றேனே. 5.4.9
      3275
      நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்
      சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்
      அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று
      ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே. 5.4.10
      3276
      உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை
      சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்
      நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்
      இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ 5.4.11
      3277
      எங்ஙனேயோ அன்னை மீர்காள்.
      என்னை முனிவதுநீர்
      நங்கள்கோல திரு குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      சங்கினோடும் நேமி யோடும்
      தாமரை கண்களொடும்
      செங்கனிவா யொன்றி னொடும்
      செல்கின்ற தென்நெஞ்சமே. 2 5.5.1
      3278
      என்நெஞ்சி னால்நோக்கி காணீர்
      என்னை முனியாதே
      தென்னன் சோலை திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      மின்னும் நூலும் குண்டலமும்
      மார்வில் திருமறுவும்
      மன்னும் பூணும் நான்குதோளும்
      வந்தெங்கும் நின்றிடுமே. 5.5.2
      3279
      நின்றிடும் திசைக்கும் நையுமென்று
      அன்னைய ரும்முனிதிர்
      குன்ற மாட திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      வென்றி வில்லும் தண்டும்
      வாளும் சக்கரமும்சங்கமும்
      நின்று தோன்றி கண்ணுள்நீங்கா
      நெஞ்சுள்ளும் நீங்காவே. 5.5.3
      3280
      நீங்கநில்லா கண்ண நீர்களென்று
      அன்னையரும் முனிதிர்
      தேன்கொள் சோலை திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      பூந்தண் மாலை தண்டுழாயும்
      பொன்முடி யும்வடிவும்
      பாங்கு தோன்றும் பட்டும்நாணும்
      பாவியேன் பக்கத்தவே. 5.5.4
      3281
      பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று
      அன்னைய ரும்முனிதிர்
      தக்ககீர்த்தி திருக்கு றுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      தொக்கசோதி தொண்டை வாயும்
      நீண்ட புருவங்களும்
      தக்கதாமரை கண்ணும் பாவியே
      னாவியின் மேலனவே. 5.5.5
      3282
      மேலும் வன்பழி நங்குடிக்கிவள்
      என்றன்னை காணக்கொடாள்
      சோலைசூழ் தண்திரு குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      கோலநீள் கொடிமூக்கும் தாமரை
      கண்ணும் கனிவாயும்
      நீலமேனியும் நான்கு தோளுமென்
      நெஞ்சம் நிறைந்தனவே. 5.5.6
      3283
      நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்
      என்றன்னை காணக்கொடாள்
      சிறந்தகீர்த்தி திருக்கு றுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த
      நீண்டபொன் மேனியொடும்
      நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்
      நேமியங் கையுளதே. 5.5.7
      3284
      கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
      அன்னைய ரும்முனிதிர்
      மைகொள் மாட திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      செய்யதாமரை கண்ணு மல்குலும்
      சிற்றிடை யும்வடிவும்
      மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
      பாவியேன் முன்னிற்குமே. 5.5.8
      3285
      முன்னின் றாயென்று தோழிமார்களும்
      அன்னைய ரும்முனிதிர்
      மன்னு மாட திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      சென்னி நீண்முடி யாதியாய
      உலப்பி லணிகலத்தன்
      கன்னல் பாலமு தாகிவந்தென்
      நெஞ்சம் கழியானே. 5.5.9
      3286
      கழியமிக்கதோர் காதல ளிவளென்
      றன்னை காணக்கொடாள்
      வழுவில் கீர்த்தி திருக்குறுங்குடி
      நம்பியை நான்கண்டபின்
      குழுமி தேவர் குழாங்கள்தொழ
      சோதிவெள் ளத்தினுள்ளே
      எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும்
      ஆர்க்கு மறிவரிதே. 5.5.10
      3287
      அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி
      நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன
      குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல்
      அறி கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே. 5.5.11
      3288
      கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
      கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
      கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
      கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
      கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்
      கடல்ஞால தீசன்வ தேற கொலோ
      கடல்ஞா லத்தீர கிவையென் சொல்லுகேன்
      கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே 5.6.1
      3289
      கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்
      கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்
      கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்
      கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
      கற்கும்கல்வி சாரமும் யானே என்னும்
      கற்கும்கல்வி நாதன்வன் தேற கொலோ
      கற்கும் கல்வியீர கிவையென் சொல்லுகேன்
      கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே 5.6.2
      3290
      காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
      காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
      காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
      காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
      காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
      காண்கின்ற கடல்வண்ண னேற கொலோ
      காண்கின்ற வுலக தீர்க்கென் சொல்லுகேன்
      காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே 5.6.3
      3291
      செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
      செய்வானின் றனகளும் யானே என்னும்
      செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்
      செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்
      செய்வார்களை செய்வேனும் யானே என்னும்
      செய்யகம லக்கண்ண னேற கொலோ
      செய்யவுல கத்தீர கிவையென் சொல்லுகேன்
      செய்ய கனிவா யிளமான் திறத்தே 5.6.4
      3292
      திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
      திறம்பாமல் மலையெடு தேனே என்னும்
      திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
      திறங்காட்டி யன்றைவரை காத்தேனே என்னும்
      திறம்பாமல் கடல்கடை தேனே என்னும்
      திறம்பாத கடல்வண்ண னேற கொலோ
      திறம்பாத வுலக தீர்க்கென் சொல்லுகேன்
      திறம்பா தென்திரு மகளெய் தினவே 5.6.5
      3293
      இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்
      இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்
      இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்
      இனவாநிரை காத்தேனும் யானே என்னும்
      இனவாயர் தலைவனும் யானே என்னும்
      இனத்தேவர் தலைவன்வ தேற கொலோ
      இனவேற்கண் நல்லீர கிவையென் சொல்லுகேன்
      இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே 5.6.6
      3294
      உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்
      உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்
      உற்றார்களை செய்வேனும் யானே என்னும்
      உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
      உற்றார்களு குற்றேனும் யானே என்னும்
      உற்றாரிலி மாயன் வந்தேற கொலோ
      உற்றீர்க கென்சொல்லி சொல்லு கேன்யான்
      உற்றென் னுடைப்பே தையுரை கின்றனவே 5.6.7
      3295
      உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
      உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
      உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
      உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
      உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
      உரைக்கின்ற முகில்வண்ண னேற கொலோ
      உரைக்கின்ற உலக தீர்க்கென் சொல்லுகேன்
      உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே 5.6.8
      3296
      கொடிய வினையாது மிலனே என்னும்
      கொடியவினை யாவேனும் யானே என்னும்
      கொடியவினை செய்வேனும் யானே என்னும்
      கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்
      கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்
      கொடியபுள் ளுடையவ னேற கொலோ
      கொடிய வுலகத்தீர கிவையென் சொல்லுகேன்
      கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே 5.6.9
      3297
      கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
      கோலமில் நரகமும் யானே என்னும்
      கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
      கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்
      கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
      கோலங்கொள் முகில்வண்ண னேற கொலோ
      கோலங்கொ ளுலக தீர்க்கென் சொல்லுகேன்
      கோல திகழ்கோ தையென்கூ தலுக்கே. 5.6.10
      3298
      கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மட தைக்கும்
      குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
      வாய்ந்த வழுதி நாடன் மன்னு
      குருகூர சடகோபன் குற்றே வல்செய்து
      ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
      இவையுமோர் பத்தும்வல் லார்உலகில்
      ஏந்து பெருஞ்செல்வ தாரா திருமால்
      அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே. 5.6.11
      3299
      நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
      இனி யுன்னைவிட்டுஒன்றும்
      ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே
      சேற்று தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்
      வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே. 5.7.1
      3300
      அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்
      உன்னை காணும் அவாவில் வீழ்ந்துநான்
      எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே
      திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை
      சங்கு சக்கர தாய்.தமி யேனு கருளாயே. 5.7.2
      3301
      கருள புட்கொடி சக்க ரப்படை
      வான நாட.எங் கார்முகில் வண்ணா
      பொருளல் லாத என்னை பொருளாக்கி
      அடிமை கொண்டாய்
      தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்
      சிரீவர மங்கலநகர்க்கு
      அருள்செய்தங்கிரு தாயறி யேனொரு கைம்மாறே. 5.7.3
      3302
      மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு
      ஆயன்று மாயப்போர் பண்ணி
      நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே
      தேறு ஞானத்தர் வேத வேள்வியறா
      சிரீவர மங்கலநகர்
      ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்த கூவுவனே 5.7.4
      3302
      எய்த கூவுதல் ஆவதே எனக்கு
      எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று
      கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே
      செய்த வேள்வியர் வை தேவரறா
      சிரீவர மங்கலநகர்
      கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே. 5.7.5
      3304
      ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே.
      கண்ணா. என்று மென்னை யாளுடை
      வானநா யகனே. மணிமா ணிக்க சுடரே
      தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கல
      தவர்க்கை தொழவுறை
      வான மாமலை யே.அடி யேன்தொழ வந்தருளே. 5.7.6
      3305
      வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர்
      கொழுந்தே உலகுக்கோர்
      முந்தை தாய்தந்தை யே.முழு ஏழுலகு முண்டாய்
      செந்தொ ழிலவர் வேத வேள்வியறா
      சிரீவர மங்கலநகர்
      அந்தமில் புகழாய். அடியேனை அகற்றேலே. 5.7.7
      3306
      அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம்
      அவை நன்கறிந்தனன்
      அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
      பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை
      வாணனே என்றும்
      புகற்கரிய எந்தாய்.புள்ளின்வாய் பிளந்தானே. 5.7.8
      3307
      புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய்.
      எருதேழ் அடர்த்தஎன்
      கள்ள மாயவனே.கருமாணிக்க சுடரே
      தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார்
      மலிதண் சிரீவர மங்கை
      உள்ளிருந்த எந்தாய். அருளாய் உய்யுமா றெனக்கே. 5.7.9
      3308
      ஆறெ னக்குநின் பாதமே சரணாக
      தந்தொழிந்தாய் உன கோர் கைம்
      மாறு நானொன் றிலேனென தாவியு முனதே
      சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும்
      மலிதண் சிரீவர மங்கை
      நாறு பூந்தண் துழாய்முடி யாய்.தெய்வ நாயகனே. 5.7.10
      3309
      தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை
      கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
      செய்த ஆயிர துள்ளிவை தண்சிரீ வரமங்கை
      மேய பத்துடன்
      வைகல் பாட வல்லார் வானோர காரா அமுதே. 5.7.11
      3310
      ஆரா அமுதே. அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
      நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே
      சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர திருகுடந்தை
      ஏரார் கோலம் திகழ கிடந்தாய். கண்டேன் எம்மானே. 5.8.1
      3311
      எம்மா னே.என் வெள்ளை மூர்த்தி. என்னை ஆள்வானே
      எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே
      செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை
      அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே. 5.8.2
      3312
      என்நான் செய்கேன். யாரே களைகண்
      என்னையென் செய்கின்றாய்
      உன்னால் அல்லால் யாவ ராலும்
      ஒன்றும் குறைவேண்டேன்
      கன்னார் மதிள்சூழ் குடந்தை கிடந்தாய்.
      அடியேன் அருவாழ்ணாள்
      சென்னா ளெந்நாள். அந்நா ளுன்தாள்
      பிடித்தே செலக்காணே. 5.8.3
      3313
      செலக்காண் கிற்பார் காணும் அளவும்
      செல்லும் கீர்த்தியாய்
      உலப்பி லானே. எல்லா வுலகும்
      உடைய ஒருமூர்த்தி
      நலத்தால் மிக்கார் குடந்தை கிடந்தாய்.
      உன்னை காண்பான்நான்
      அலப்பாய்ஆகா சத்தை நோக்கி
      அழுவன் தொழுவனே. 5.8.4
      3314
      அழுவன் தொழுவன் ஆடி காண்பன்
      பாடி அலற்றுவன்
      தழுவல் வினையால் பக்கம் நோக்கி
      நாணி கவிழ்ந்திருப்பன்
      செழுவொண் பழன குடந்தை கிடந்தாய்.
      செந்தா மரைக்கண்ணா
      தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
      வகையே சூழ்கண்டாய். 5.8.5
      3315
      சூழ்கண் டாயென் தொல்லை வினையை
      அறுத்துன் அடிசேரும்
      ஊழ்கண் டிருந்தே தூரா குழிதூர்த்து
      எனைநாள் அகன்றிருப்பன்
      வாழ்தொல் புகழார் குடந்தை கிடந்தாய்.
      வானோர் கோமானே
      யாழி னிசையே. அமுதே. அறிவின்
      பயனே. அரியேறே. 5.8.6
      3316
      அரியே றே.என் அம்பொற் சுடரே.
      செங்க கருமுகிலே
      எரியே. பவள குன்றே. நாற்றோள்
      எந்தாய். உனதருளே
      பிரியா அடிமை யென்னை கொண்டாய்
      குடந்தை திருமாலே
      தரியே னினியுன் சரண தந்தென்
      சன்மம் களையாயே. 5.8.7
      3317
      களைவாய் துன்பம் களையா தொழிவாய்
      களைகண் மற்றிலேன்
      வளைவாய் நேமி படையாய். குடந்தை
      கிடந்த மாமாயா
      தளரா வுடலம் என்ன தாவி
      சரிந்து போம்போது
      இளையா துனதாள் ஒருங்க பிடித்து
      போத இசைநீயே. 5.8.8
      3318
      இசைவி தென்னை யுன்தாள் இணைகீழ்
      இருத்தும் அம்மானே
      அசைவில் அமரர் தலைவர் தலைவா
      ஆதி பெருமூர்த்தி
      திசைவில் வீசும் செழுமா மணிகள்
      சேரும் திருக்குடந்தை
      அசைவில் உலகம் பரவ கிடந்தாய்.
      காண வாராயே. 5.8.9
      3319
      வாரா வருவாய் வருமென் மாயா. மாயா மூர்த்தியாய்
      ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
      தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய். திருக்குடந்தை
      ஊராய்.உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ 5.8.10
      3320
      உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு
      அவளை யுயிருண்டான்
      கழல்கள் அவையே சரணா கொண்ட
      குருகூர சடகோபன்
      குழலில் மலி சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
      மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே. 5.8.11
      3321
      மானேய் நோக்குநல்லீர். வைகலும்வினை யேன்மெலிய
      வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்
      தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்
      கோனா ரைஅடியேண் அடிகூடுவ தென்றுகொலோ 5.9.1
      3322
      என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலி தென்செய்தீரோ
      பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி
      தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்
      நின்றபி ரான்அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே 5.9.2
      3323
      சூடும் மலர்க்குழலீர். துயராட்டியே னைமெலிய
      பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க
      மாடுயர தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்
      நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே 5.9.3
      3324
      நிச்சலும் தோழிமீர்காள். எம்மைநீர்நலி தென்செய்தீரோ
      பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்
      மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்
      நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே. 5.9.4
      3325
      நன்னல தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை
      மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்
      கன்னலங் கட்டிதன்னை கனியையின் னமுதந்தன்னை
      என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே 5.9.5
      3326
      காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்
      பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்
      சேண்சினை யோங்குமர செழுங்கானல் திருவல்லவாழ்
      மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரை பாதங்களே 5.9.6
      3327
      பாதங்கள் மேலணிபூ தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்
      ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்
      மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
      நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோ றுமே 5.9.7
      3328
      நாடொறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்
      ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்
      மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்
      நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே 5.9.8
      3329
      கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழ கூடுங்கொலோ
      குழலென்ன யாழுமென்ன குளிர்சோலையுள் தேனருந்தி
      மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
      சுழலின் மலிசக்கர பெருமானது தொல்லருளே 5.9.9
      3330
      தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல்
      தோழிமீர்காள்
      தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்
      நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
      நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே 5.9.10
      3331
      நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்
      சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த
      நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்
      சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிற தார்பிறந்தே. 5.9.11
      3332
      பிறந்த வாறும் வளர்ந்த
      பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
      திறங்கள் சாட்டி யிட்டு செய்து போன மாயங்களும்
      நிறந்த னூடுபு கெனதாவியை நின்றுநின்று
      உருக்கி யுண்கின்றஇ
      சிறந்த வான்சுட ரே.உன்னை யென்றுகொல் சேர்வதுவே. 5.10.1
      3333
      வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
      மாய மாவினை வாய்பி ளந்ததும்
      மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்
      அதுவிது உதுவென்ன லாவன வல்ல
      என்னையுன் செய்கை நைவிக்கும்
      முதுவைய முதல்வா.உன்னை யென்று தலை பெய்வனே 5.10.2
      3334
      பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட
      பிள்ளை தேற்றமும் பேர்ந்தோர் சாடிற
      செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறு சேவகமும்
      நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள
      நீயுன் தாமரை கண்கள் நீர்மல்க
      பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே. 5.10.3
      3335
      கள்ள வேடத்தை கொண்டுபோ புறம்புக்க
      வாறும் கலந்தசுரரை
      உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்
      வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை
      விளங்க நின்றதும்
      உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே. 5.10.4
      3336
      உண்ண வானவர் கோனு காயர்
      ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்
      வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்
      மண்ணை முன்படை துண்டு மிழ்ந்துக டந்தி டந்து
      மணந்த மாயங்கள்
      எண்ணு தோறுமென் னெஞ்செரி வாய்
      மெழு கொக்குநின்றே. 5.10.5
      3337
      நின்ற வாறு மிருந்த வாறும்
      கிடந்த வாறும் நினைப்பரியன
      ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்
      நின்று நினைக்கின்
      எங்ங னம்நினை கிற்பன் பாவியேற்கு
      ஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே. 5.10.6
      3338
      ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும்
      உண்மையோ டின்மையாய் வந்துஎன்
      கண்கொ ளாவகை நீகர தென்னை செய்கின்றன
      எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய
      மாணிக்க மே.என் கண்கட்கு
      திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே. 5.10.7
      3339
      திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ
      செந்தா மரைமேல் திசைமுகன்
      கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்
      பொருவி லுந்தனி நாயகமவை கேட்கு
      தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு
      அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே. 5.10.8
      3340
      அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாம்
      கடலும் மண்ணும் விண்ணும்
      முடிய ஈரடியால் முடித்து கொண்ட முக்கியமும்
      நொடியு மாறவை கேட்கு தோறுமென்
      நெஞ்சம் நின்தன கேக ரைந்துகும்
      கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே 5.10.9
      3341
      கூடி நீரை கடைந்த வாறும்
      அமுதம் தேவர் உண்ண அசுரரை
      வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்
      ஊடு புக்கென தாவியை யுருக்கி
      யுண்டிடு கின்ற நின்தன்னை
      நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே. 5.10.10
      3342
      நாகணைமிசை நம்பிரான் சரணே
      சரண் ந கென்று நாடொறும்
      ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்
      ஆக நூற்ற அ தாதி யாயிரத்துள்
      இவையுமோர் பத்தும் வல்லார்
      மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. 5.10.11